ஆழ்கடலுக்குள் அதிசய உயிரினங்கள்!


மனிதன் நிலப்பரப்பில் அனேக விஷயங்களை ஆராய்ந்துவிட்டான். பூமியில் 70 சதவீதம் உள்ள கடல் பரப்பில் அவன் அறியாத பல விஷயங்கள் மூழ்கி கிடக்கின்றன.

உயிரினங்களின் தாய் என கடல் போற்றப்படுகிறது. நிலத்தில் இருப்பதுபோல எரிமலைகள், மலைகள் போன்றவையும் கடலுக்குள் உண்டு. தற்போது உலகின் மிக ஆழமான கடல் எரிமலைப் பள்ளம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

இந்த எரிமலை பள்ளத்துக்குள் ஒரு ரோபோ இறங்கி ஆய்வு செய்ததில் வியப்பூட்டும் சில தகவல்கள் வெளிவந்துள்ளன. ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட ரோபோவின் பெயர் `ஆட்டோ சப்6000`. இங்கிலாந்தின் `ராயல் ரிசர்ச் சிப்‘ அமைப்பு இந்த ரோபோவை வடிவமைத்து ஆராய்ச்சி செய்தது. ஆய்வில் வெளிவந்த சில தகவல்கள் வருமாறு…

* தென் அமெரிக்கா அருகே உள்ள கரீபியன் கடல் பகுதியில் கேமேன் ட்ரோ என்ற இடத்தில் இந்த எரிமலைப்பள்ளம் உள்ளது. இது 5 கிலோமீட்டர் ஆழம் கொண்டது. 400 டிகிரி சென்டிகிரேடு வெப்பநிலை உடையது.

* இதுவரை 30 ஆண்டுகளுக்கு முன் கண்டறியப்பட்ட பசிபிக் கடலில் உள்ள ஒரு எரிமலைப் பள்ளமே அதிக வெப்பநிலையை (270 டிகிரி) கொண்டதாக இருந்தது.

* குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் இந்த வெப்பநிலையிலும் உருகாத வகையில் ரோபோ தயாரிக்கப்பட்டு இருந்தது. காப்பர் மற்றும் இரும்பு கொண்டு இது உருவாக்கப்பட்டது.

* ஆய்வில் இன்னொரு விஷயம் விஞ்ஞானிகளையே ஆச்சரியப்பட வைத்துள்ளது. அதாவது இந்த அதிக வெப்பநிலையிலும் கடல் எரிமலை அடியில் உயிரினங்கள் வாழ்கின்றன என்பது தான் அந்த வியப்புக்குரிய விஷயம். இவை இதுவரை அறியப்படாத அதிசய உயிரினங்களாகும்.

* ஒரு வேளை இங்கு உயிரினங்களின் தோற்றத்திற்கான தடயங்கள் கிடைக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகிறார்கள். இதுகுறித்த ஆய்வுகள் தொடர உள்ளன.

நன்றி:-தினத்தந்தி

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

  1. இன்னமும் ஒரு பின்னூட்டமும் இல்லை
  1. No trackbacks yet.

பின்னூட்டமொன்றை இடுக