தொகுப்பு

Archive for the ‘காலாவதியாவதற்கு முன்’ Category

காலாவதியாவதற்கு முன் – யாசர் அரஃபாத்


காலாவதியாவதற்கு முன்

கடல் கடந்து என்

கரம் சேர்ந்து இருக்கும் உன்

கடிதம்!

அழிந்த எழுத்துகளும் உன்

அழுகைதான் காரணம் என

சொல்லாமல் சொல்ல;

கனத்த இதயமோ

ரணமானது மெல்ல!!

வழியில்லாமல்

வளைகுடாவில் நானும்;

விதியே என வீட்டிற்குள் நீயும்!

என் சொந்தங்களை கரையேற்ற

உன் சோகம் பணயமாக

பயணம் வந்தேன்

பாலைவனத்திற்க்கு!

என்னோடு சேர்ந்து

இன்னுமொரு கூட்டம்

வலியோடு இருந்தாலும்

வாய் விட்டு சிரிப்போம்!

கலகலப்பாக

கட்டிலுக்கு சென்றாலும்

கணப் பொழுதில்

கனமாகும் நெஞ்சம்;

உன் நினைவோடு

கனவுக்கு காலடிவைத்தாலும்

அங்கேயும் நீ கேட்பது என்னவோ

என் விடுமுறையைப் பற்றிதான்!!

பசியோடு இருந்தாலும் என்

பக்கத்தில் நீ வேண்டும்;

நடத்தியதுப் போதும் குடும்பம் பாலையோடு

முடித்துவிட்டு வந்துவிடு நாளையோடு என்று!

வெகுளியாய் உன் கையெழுத்திற்கு முன்

வெறுப்பாய் என் கண் முன்னே வெளிநாடு;

காலத்தோடு வந்துவிடுகிறேன்

காலாவதியாவதற்கு முன்னே

வருத்தப்பட்டு பிரயோஜனம் இல்லை

காலம் போனப் பின்னே!

நன்றி:–யாசர் அரஃபாத்