தொகுப்பு

Archive for the ‘மெழுகுவர்த்தி’ Category

மெழுகுவர்த்தி – பீ.எம். கமால், கடையநல்லூர்


இருளைத் தின்னும்
ஒற்றை நாவு !

அணையப்போகும்
தீபத்திற்கு
மெழுகுக் குச்சியின்
கண்ணீர் அஞ்சலி!

மெழுகுக் கணவனின்
வரதட்சணைக் கொடுமை
வாட்டியதால்
திரியின் தற்கொலைத்
தீவிரத்தாக்குதல் !

காதலித்த மெழுகு
கைவிட்ட காரணத்தால்
திரி குளிக்கும்
தீக்குளிப்பு !

வானம் பார்த்து
எரியும் சுடர்
ஞானம் தேடும்
உயிரின் தவம் !

இந்த
ஒற்றை இறகுப் பறவை
உட்கார்ந்து பறக்கிறதோ ?

இருட்டுக் குருடனை
வழி நடத்திச்
செல்லுகின்ற
சுடர்க்கோல்!

திரியே ! நீ
எதைத்தேடி
ஒற்றைக்காலில்
ஊர்கோலம் போகிறாய் ?

உன்னைத்தேடியா ?
உன் மறுபக்க
இருளைத் தேடியா ?

சுந்தர நிலவும்
சூரிய ஒளியும்
கண்டு நாணும்
கண்மணி நபியைக்
காணத்தான் நீயும்
கடுந்தவம் செய்கிறாயோ ?

நன்றி:-பீ.எம். கமால், கடையநல்லூர்

=======================