தொகுப்பு

Archive for the ‘யாருக்கு இல்லை வேலை?’ Category

யாருக்கு வேலை இல்லை? – ஆர். மோகன்ராம்


அதேபோல, மாணவர்களின் தோல்விக்குத் தாய்மொழியாம் தமிழைச் சரளமாகப் பேசத் தெரியாமல் இருப்பதும் முக்கியக் காரணமாகும். இதே நிலை தொடர்ந்தால், வரும் காலங்களில் ஆங்கில மொழிக்குச் சிறப்புப் பயிற்சி மையங்கள் செயல்படுவதைப்போல, தமிழைப் பேசவும், படிக்கவும் பயிற்சி மையங்கள் தோற்றுவிக்கும் நிலை உருவாகும். கிட்டத்தட்ட இப்போதே அந்த நிலை வந்துவிட்டதாகக்கூட கூறலாம்.
மாணவரின் முதல்கட்டத் தோல்வி மொழியில் இருந்தே தொடங்குகிறது. உலக நாடுகள் சுதந்திரக் காற்றைச் சுவாசிப்பதற்கு அடிப்படைக் காரணம் பேச்சுரிமைதான். ஆனால், சுதந்திரம் பெற்று 63 ஆண்டுகள் கடந்த பிறகும், நமது இளைஞர்கள் பேசத் தயங்கியே வாழ்க்கையை இழந்துவிட்டனர். ஆனால், வீண் பேச்சு, விவாதங்களில் மட்டும் சளைப்பதில்லை.
இதை உணராமல் – உணர முயற்சிக்காமல் படித்துவிட்டேன், எனக்கு அரசுதான் வேலை அளிக்க வேண்டும் என்று காலத்தைக் கழிப்பது சுய முன்னேற்றத்துக்கும், நாட்டின் முன்னேற்றத்துக்கும் உதவாது. எனவே, ஆக்கப்பூர்வமாகவும், அறிவுப்பூர்வமாகவும் செயல்படுவார்களேயானால், இளைஞர்கள் யாரிடமும் வேலை கேட்டு நிற்க வேண்டிய நிலை ஏற்படாது.
முதுநிலைப் பட்டம் பெற்றவருக்குக்கூட தான் வாங்கிய பட்டத்தில் இடம் பெற்றுள்ள வாசகங்களின் அர்த்தம் தெரியாமல் இருப்பது கசப்பான உண்மை. புதுக்கோட்டையில் இயங்கி வரும் ஆங்கிலப் பயிற்சி நிறுவனம், தமிழகம் முழுவதும் உள்ள தனது பயிற்சி மையங்களுக்குத் தேவையான ஆசிரியர்களைத் தேர்வு செய்ய அறிவிப்பு வெளியிட்டது. இதற்கு ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள், பட்டம் பெற்றவர்கள் உள்பட சுமார் 13 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர். ஆனால், இவர்களில் தேர்வானவர்கள் 2 பேர் மட்டும்தான் என்பதிலிருந்து, ஆங்கில மொழி அறிவில் நமது இடத்தைத் தெரிந்து கொள்ளலாம்.
நமது பள்ளிகளில் பாடங்கள் மட்டுமே போதிப்பது, தன்னம்பிக்கை, ஆளுமைத்திறன், உலக விஷயங்களைப் போதிக்காதது ஆகியனவே இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம். அந்தக் காலத்தில் இருந்ததைப்போல நீதி போதனை வகுப்புகளை பள்ளிகளில் மீண்டும் தொடங்க வேண்டும். அதில் கூறப்படும் நீதிக் கதைகளைக் கேட்காமல் பிள்ளைகள் வளர்வதால்தான் நேர்மை, நியாயம், நீதி, மனசாட்சி போன்றவை எங்கே கிடைக்கும்? என்ன விலை எனக் கேட்பதுடன், குறுக்கு வழியில் சம்பாதிப்பதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு இயங்கும் நிலை அதிகரித்துள்ளது.
பள்ளிகளில் பொது அறிவை வளர்க்கும் போக்கு அதிகரிக்க வேண்டும். தினமும் நாளிதழ்கள், வார இதழ்களைப் படித்து, அதில் உள்ள நல்ல விஷயங்களைத் தெரிந்துகொள்ள வேண்டும். இதற்கான களமாக நூலகங்களை உருவாக்க வேண்டும். அப்போதுதான் மாணவர்கள் அறிவுத் திறனுடன் ஆளுமைத் திறனையும் பெற முடியும். இந்தத் தகுதிகளை வளர்த்துக் கொண்டால்… யாருக்கும் வேலை இல்லை என்ற கேள்வி தானாகவே மறைந்துவிடும்.