தொகுப்பு

Archive for the ‘ஜிம்முக்குப் போக சரியான வயசு?]’ Category

டாக்டரிடம் கேளுங்கள் 21 [கால்களில் வலி, உள்ளங்கைகள் உள்ளங்கால்களில் வியர்வை, ஜிம்முக்குப் போக சரியான வயசு?]

பிப்ரவரி 22, 2013 5 பின்னூட்டங்கள்

சிவகுமார், தூத்துக்குடி.

 

”எனக்கு வயது 15. ஜிம்முக்குச் சென்று நல்ல உடல்வாகு அடைய வேண்டும் என்று நினைக்கிறேன். ஆனால், ஜிம்முக்குச் சென்றால், உடல் வளர்ச்சி பாதிக்கப்படும் என்று நண்பர்கள் சிலர் பயமுறுத்துகிறார்கள். இது உண்மையா? எந்த வயதில் இருந்து ஜிம்முக்குச் சென்று உடற்பயிற்சி செய்ய ஆரம்பிக்கலாம்?”

 

 

 

”உடலில் உள்ள கலோரிகள் எரிக்கப்பட்டு தசைகள் வலுப் பெறவும் அழகான உடல் அமைப்பு கிடைக்கவும் வழி செய்வதுதான் உடற்பயிற்சி. அதனால், ‘ஜிம்’ செல்வதற்கு வயது வரம்பு எதுவும் கிடையாது. ஆனால், ஒவ்வொரு வயதினரும் அவரவர் உடல்வாகுக்கு ஏற்ற உடற்பயிற்சிகளை மட்டுமே மேற்கொள்ள வேண்டும் என்பது இங்கே முக்கியம்.

உடற்பயிற்சிகளில், கார்டியாக் ஃபிட்னெஸ் (Cardiac fitness), ஏரோபிக்ஸ் (Aerobics), வெயிட் லிஃப்டிங் ட்ரெயினிங் (weight lifting training) என மூன்று விதங்கள் இருக்கின்றன. சைக்கிளிங், ரெகம்பென்ட் பைக் (Recumbent Bike), ட்ரெட் மில் (Treadmill) போன்ற பயிற்சிகள் கார்டியாக் ஃபிட்னெஸ் உடற்பயிற்சிகள். ஏரோபிக்ஸ் பயிற்சிகளில், உடம்பில் உள்ள அனைத்து மூட்டுகளுக்கும் அதன் அதன் அசைவுகளுக்குத் தகுந்தாற்போன்று (எடை எதுவும் இன்றி) பல்வேறு திசைகளில் பயிற்சி மேற்கொள்ளப்படும். வெயிட் லிஃப்டிங் பயிற்சிகளில், அதிகமான எடை தூக்கி உடற்பயிற்சி செய்வார்கள். 18 வயதில் இருந்து 21 வயது வரையிலும் உடம்பில் உள்ள எலும்புகளின் வளர்ச்சி அபரிமிதமாக இருக்கும். எனவே, இத்தகையப் பருவத்தில் இருப்பவர்கள், கார்டியாக் ஃபிட்னெஸ் மற்றும் ஏரோபிக்ஸ் பயிற்சிகளை மட்டுமே மேற்கொள்வது நல்லது!”

 

டி.முருகன், புதுக்கோட்டை.

”நான் போக்குவரத்துக் காவலராகப் பணிபுரிகிறேன். வயது 38. பணிநிமித்தமாக நாள் முழுக்க நின்றுகொண்டு இருக்க வேண்டிய சூழல். கால்களில் வலி இருக்கிறது. வெரிக்கோசிஸ் பாதிப்பாக இருக்கலாம் என்று பயமுறுத்துகிறார்கள். வெரிக்கோசிஸ் யாருக்கெல்லாம் வரும்?”

 

 

 

 

”பயப்பட வேண்டாம் நண்பரே…. இது சாதாரண கால் வலியாகக்கூட இருக்கலாம். பரிசோதனை செய்து பார்க்காமல், தீர்வு சொல்வது சரியான வழிமுறையாக இருக்காது. எனவே, முதலில் மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெறுங்கள்.

வெரிக்கோசிஸ் பாதிப்பு என்பது கெட்ட ரத்த நாளங்களில் ஏற்படும் பிரச்னை. எனவே, இந்தத் துறையில் உள்ள சிறப்பு மருத்துவர்களை நாடும் பொழுதுதான், உடனடியாக உரிய சிகிச்சை கிடைக்கும். பொதுவாகத் தொழில்நிமித்தம் அதிக நேரம் நின்றுகொண்டு இருப்பவர்களுக்கு, வெரிக்கோசிஸ் தாக்குதல் அதிகமாக இருக்கும். சிலருக்கு மரபு ரீதியாகவும் இந்த நோய் வரலாம். ஒரே இடத்தில், அசைவுகள் இல்லாமல் நின்றுகொண்டே இருப்பதைத் தவிர்க்க வேண்டும். உட்கார்ந்த நிலையிலேயே வேலை பார்க்கும் அலுவலகச் சூழலில் அவ்வப்போது கால்களின் நிலையை மாற்றிக் கொண்டு உட்காரப் பழகலாம்.”

 

ம.ராகுல், செருபாலக்காடு.

”என்னுடைய உள்ளங்கைகள் மற்றும் உள்ளங்கால்களில் எல்லா நேரமும் வியர்த்துக்கொண்டே இருக்கிறது. எழுதும்போது பேப்பரே நனைந்துவிடும் அளவுக்கு வியர்க்கிறது. இதனால் எந்த வேலையிலும் என்னால் கவனம் செலுத்த முடியவில்லை. வியர்வையை நிறுத்த ஏதேனும் வழி இருக்கிறதா டாக்டர்?”

 

 

 

 

”உள்ளங்கை மற்றும் உள்ளங்கால்களில் வியர்ப்பதற்கு மூன்று விதமான காரணங்கள் உள்ளன. ஒன்று, பிறப்பிலேயே ஒருவரின் உடல் அமைப்பு அப்படி அமைந்திருக்கலாம். இரண்டாவது, ‘ஹைபர் தைராய்டு’ எனப்படும் தைராய்டு அதிகமாகச் சுரந்தாலும் உள்ளங்கையும் உள்ளங்காலும் எந்த நேரமும் வியர்க்கும். மூன்றாவது, அளவுக்கு அதிகமான கவலை (Anxiety). குறிப்பாக, தேர்வு சமயத்தில் சிலருக்கு அதீதக் கவலை மற்றும் பதட்டத்தால் அளவுக்கு அதிகமாக வியர்த்து, தேர்வு எழுதும் பேப்பரே ஈரமாகிவிடும். மற்றவர்களுடன் கை குலுக்கக்கூட முடியாது. இதைக் கட்டுப்படுத்த மருந்துகள் உள்ளன. இயல்பாகவே இதுபோன்ற உடல் அமைப்புகொண்டவர்கள், மருத்துவரின் ஆலோசனையின் பேரில் தினமும் இரவு படுக்கும் முன்பு உள்ளங்கை மற்றும் உள்ளங்கால்களில் இந்த மருந்துகளைத் தடவிக்கொண்டு படுக்கலாம்.

காலையில் எழுந்ததும் கை, கால்களை சோப்பு போட்டுக் கழுவ வேண்டும். இந்த மருந்துகள் ஓரளவு மட்டுமே நிவாரணம் தரும். இவற்றைப் பயன்படுத்தியும் வியர்வை கட்டுப்படாவிட்டால், ‘அயன்டோபோரேசிஸ்’ (Iontophoresis) என்ற சிகிச்சையை மேற்கொள்ளலாம். உள்ளங்கை மற்றும் உள்ளங்கால்களில் குறிப்பிட்ட அளவு மின்சாரத்தைச் செலுத்தி வியர்வைத் துளைகளை அடைப்பதுதான் இந்தச் சிகிச்சை. மொத்தம் 40 நிமிடங்கள் மேற்கொள்ளப்படும் இந்தச் சிகிச்சையைத் தினமும் எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு மாதத்தில் ஓரளவு
வியர்வை குறைய ஆரம்பித்ததும், வாரத்துக்கு இரண்டு முறை மட்டும் சிகிச்சை எடுத்துக்கொண்டால் போதும். இந்தச் சிகிச்சை எடுக்க முடியாதவர்களுக்கு ‘போடோக்ஸ்’ (Botox) என்ற மருந்து உள்ளது. இதை ஊசி மூலம் கையில் செலுத்த வேண்டும். ஒரு முறை இந்த ஊசி போட்டால் சுமார் ஆறு மாதம் வரை வியர்வைத் தொந்தரவு இருக்காது. ஆனால், இதற்கான செலவு சற்று அதிகம். தைராய்டு, பதட்டம் மற்றும் கவலையால் இந்தத் தொந்தரவுக்கு ஆளானவர்கள், முதலில் இந்தப் பாதிப்புகளுக்கான சிகிச்சையை எடுத்துக்கொண்டாலே,  பிரச்னையைச் சரி செய்து விடலாம்!’

நன்றி:- 

நன்றி:- டாக்டர் விகடன்.