தொகுப்பு

Posts Tagged ‘டாக்டர்’

மறந்து போன மருத்துவ உணவுகள் பகுதி-2 சித்த உணவியல் நிபுணர் அருண் சின்னையா


மருந்து சாதம்

தேவையானவை: சுக்கு – ஒரு துண்டு, வெள்ளை மிளகு – 2 டீஸ்பூன், திப்பிலி – கால் டீஸ்பூன், கறிவேப்பிலை – ஒரு கைப்பிடி. இவை அனைத்தையும் வறுத்து அரைத்துக்கொள்ளவும். வெங்காயம் – 2, பூண்டு – 5 பல், உப்பு – தேவையான அளவு, கறி மசாலாத் தூள், மஞ்சள் தூள் – தலா அரை டீஸ்பூன்.

செய்முறை: கடாயில் எண்ணெய் ஊற்றி, வெங்காயத்தை வதக்கிக்கொள்ளவும். அத்துடன், ஏற்கெனவே அரைத்துவைத்திருக்கும் பொடியைச் சேர்க்கவும். கூடவே பூண்டு போட்டு நன்றாக வதக்கியதும், உப்பு, மஞ்சள் தூள், கறி மசாலா சேர்த்து, பச்சை வாசனை போகும்வரை வதக்கவும். இதை சாதத்துடன் கலந்து பரிமாறலாம்.

மருத்துவப் பயன்: அஜீரணக் கோளாறு உள்ளவர்கள், வாரம் ஒருமுறை இதுபோல் சமைத்துச் சாப்பிட்டால், அஜீரணப் பிரச்னையே இருக்காது.

வல்லாரைக் கீரைக் கூட்டு

தேவையானவை: வல்லாரைக் கீரை – ஒரு கட்டு, தோல் நீக்கிய இஞ்சி – 50 கிராம், மிளகு – 5 கிராம், பாசிப்பருப்பு – 100 கிராம், வெங்காயம் – 2, பச்சை மிளகாய் – 3, கடுகு – அரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கீரையை ஆய்ந்து, பொடியாக நறுக்கவும். பச்சை மிளகாய், இஞ்சி, வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். பாசிப்பருப்பை வேகவைத்துக் கடைந்து, கீரை, நறுக்கிய பச்சை மிளகாய், மிளகு, வெங்காயம், இஞ்சி சேர்த்து சிறிது நேரம் வேகவைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு தாளித்து கீரைக் கலவையைக் கொட்டிக் கிளறவும்.

மருத்துவப் பயன்: மூளையின் செயல்திறனை அதிகப்படுத்தும். நினைவாற்றலைத் தூண்டும். காக்காய்வலிப்பு, நரம்புக் கோளாறுகள், இதய நோய், தூக்கமின்மை போன்ற பிரச்னைகளைத் தீர்க்கும்.

பானகம்

தேவையானவை: எலுமிச்சைச் சாறு – 200 மி.லி., மஞ்சள் வாழைப் பழம் – 10, நாட்டுச் சர்க்கரை – தேவையான அளவு, சுக்கு – ஒரு துண்டு, ஏலக்காய் – 10.

செய்முறை: வாழைப் பழங்களை நன்றாகப் பிசையவும். சுக்கு, ஏலக்காயை லேசாகத் தட்டிக்கொள்ளவும். ஒரு லிட்டர் தண்ணீரில் எலுமிச்சை பழச் சாறு உள்ளிட்ட எல்லாவற்றையும் போட்டுக் கலக்கவும். சிறிது நேரத்தில் தூசி அடியில் தங்கிவிடும். வடிகட்டிக் குடிக்கலாம்.

மருத்துவப் பயன்: தற்காலிகப் பசியைத் தணித்து, அரை மணி நேரத்தில், பசியைத் தூண்டிவிடும். பித்தத்தைத் தணிக்கும். உடல் பருமனைக் குறைக்கும். மயக்கம், களைப்பைப் போக்கும்.

அலுப்புக் குழம்பு

தேவையானவை: சுக்கு, சித்தரத்தை, பரங்கிச் சக்கை – தலா ஒரு துண்டு, மிளகு, வால் மிளகு, வெள்ளை மிளகு, மோடிக் குச்சி – தலா 10, திப்பிலி – 5, கடுகு, சீரகம், மஞ்சள் தூள் – தலா கால் டீஸ்பூன், கத்தரிக்காய் – அரை கிலோ, மொச்சை – 100 கிராம், புளி – சிறிதளவு, வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலை, கொத்தமல்லி, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: சுக்கு, சித்தரத்தை, மிளகு, பரங்கிச் சக்கை, வால் மிளகு, வெள்ளை மிளகு, திப்பிலி, மோடிக் குச்சி, சீரகம், மஞ்சள் தூள் இவற்றை லேசாக வறுத்துப் பொடிக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி, அது காய்ந்ததும், கடுகு, கறிவேப்பிலை, கொத்தமல்லி போட்டுத் தாளித்து, வெங்காயம், தக்காளி, கத்தரிக்காய், ஊறவைத்த மொச்சை, அரைத்துவைத்துள்ள பொடி ஆகியவற்றைச் சேர்த்து நன்றாக வதக்கவும். இதில் புளியைக் கரைத்து ஊற்றி, தேவையான அளவுக்குத் தண்ணீர், உப்பு சேர்த்துக் கொதிக்கவைத்து இறக்கவும்.

மருத்துவப் பயன்: உடல் வலி, அசதியைப் போக்கும். சளித் தொல்லை நீங்கும். பசியைத் தூண்டும். அடிக்கடி சாப்பிட்டால், ரத்த உற்பத்தியை ஊக்குவிக்கும். குழந்தை பெற்ற பிறகு உடம்பில் உள்ள நச்சுக் கழிவுகளை வெளித்தள்ளும். அடிவயிற்றுச் சதையைக் குறைக்கும்.

நன்றி:- சித்த உணவியல் நிபுணர் அருண் சின்னையா 

கேன்சர்.. உங்கள் கவனத்துக்கு! – டாக்டர் விஜயராகவன்


பிறந்ததிலிருந்து நாம் ஒவ்வொருவரும் எத்தனை விதமான துக்கங்களை சந்தித்திருப்போம்.. ஆனாலும் ஒவ்வொரு துக்கமுமே ‘இது நிகழாமல் இருந்திருக்கக் கூடாதா’ என்கிற ஏக்கத்தை உண்டாக்கும்தான். அப்படித்தான்..கேன்சர் சிறப்பு நிபுணர்களாகிய எங்களுக்கும் ஒவ்வொரு முறையும் ‘இது கேன்சர்தான்’ என்பதை உறுதிப்படுத்தும்போது, மனசுக்குள் துக்கம் பந்தாக உருளும். கூடவே, ‘இதுவாவது ஆரம்ப நிலையில் இருக்க வேண்டுமே’ என்கிற பிரார்த்தனையும் மனதுக்குள் எழும். ஆனால், பெரும்பாலும்.. அதாவது 88% கேன்சர் நோயாளிகள், முற்றிய நிலையில்தான் எங்களிடம் வருகிறார்கள் என்பது நீங்கள் ஒவ்வொருவரும் அறிந்து கொள்ள வேண்டிய தகவல்.

இது ஏன்?

நான் ஏற்கெனவே சொல்லியிருப்பது போல, வெளியே யார் கண்ணுக்கும் தெரியாமல் சரசரவென பரவும் தன்மை கொண்டதுதான் கேன்சர். அதிலும், குறிப்பாக, இந்த கர்ப்பப்பை கேன்சர், மற்ற கேன்சர் வகைகளை விடவும் மிக மிக அபாயம் நிறைந்தது. இதன் காரணத்தைப் பார்க்கலாம்.

பொதுவாக, ஒரு கேன்சர் செல் வெடித்து, இரண்டு செல்களாக மாறுவதற்கு, குறைந்தபட்சம் 26 நாட்களும் அதிகபட்சமாக 260 நாட்களும் தேவைப்படுகின்றன. எல்லா வகை கேன்சர் செல்களிலும் இதுதான் நிலவரம் (ரத்தப் புற்றுநோய்க்கு இது பொருந்தாது). இந்த வளர்ச்சியைப் பொறுத்து, கேன்சரை ஸ்டேஜ் 1, ஸ்டேஜ் 2, ஸ்டேஜ் 3 என்று மூன்று நிலைகளாகப் பிரிக்கிறோம். ஸ்டேஜ் 1 என்பது,வளர்ச்சியின் ஆரம்ப நிலை. ஸ்டேஜ் 2 அடுத்த கட்டம். ஸ்டேஜ் 3 என்பது இறுதிக் கட்டம்.

சில வருடங்கள் முன் வரையிலும் கர்ப்பப்பை கேன்சரையும் இந்த மூன்று நிலைகளை வைத்துத்தான் கணக்கிட்டு, வகைப்படுத்திக் கொண்டிருந்தார்கள். ஆனால், சமீபத்தில்தான் இந்த கர்ப்பப்பை கேன்சரில் மட்டும் வேறொரு விஷயத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டியிருப்பது தெரிய வந்தது. அதுதான் அந்த கேன்சர் செல்லின் வீரியம்!

வீரியத்திலும் ஏ, பி, சி என்று மூன்று வகை உண்டு. குறைவான வீரியம் கொண்டது ஏ, அடுத்த கட்டம் பி, மிகவும் வீரியம் கொண்டது சி.

‘இதென்ன டாக்டர் நிலைங்கறீங்க.. வீரியம்ங்கறீங்க.. இன்னும் தெளிவா சொல்லுங்களேன்’ என்கிறீர்களா? ஒரு சிறிய உதாரணம் சொல்கிறேன்.

தண்ணீர்ப் பாம்பு, கட்டுவிரியன் இந்த இரு வகைப் பாம்புகளையும் பற்றி உங்களுக்குத் தெரியும். தண்ணீர்ப் பாம்பில் சில வகை மிகக் குறைவான வீரியம்.. அதாவது.. விஷம் கொண்டது. கட்டுவிரியன் மிக அதிக வீரியம்.. அதாவது விஷம் கொண்டது.

சின்ன சைஸ் தண்ணீர்ப் பாம்பு கொத்தினால், அது உயிருக்கெல்லாம் ஆபத்தாகாது. ஆனால், சின்ன சைஸ் கட்டுவிரியன் கொத்தினால்? அப்படித்தான் இந்த கர்ப்பப்பை கேன்சரும்!

கேன்சர் செல்லின் வளர்ச்சி ஸ்டேஜ் 1-ல் இருந்தா லும் அதன் வீரியம் ‘சி’யாக இருந்தால், அது சின்ன சைஸ் கட்டுவிரியன் பாம்பு கொத்தியதுபோலத்தான். மிக மிக அவசரமாக அதைக் கவனிக்க வேண்டும்.

 

சிலருக்கு வளர்ச்சி ஸ்டேஜ் 3-ல் இருக்கலாம். ஆனால், வீரியம் ‘ஏ’யாக இருந்தால், அது பெரிய சைஸ் தண்ணீர்ப் பாம்பு கொத்தியதைப் போன்றதுதான். ரொம்பவும் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை.

இந்த விஷயம் வாசகிகளாகிய உங்களுக்கு மட்டுமில்லை.. மகப்பேறு மருத்துவர்கள் பலருக்குமே கூடத் தெரியாத விஷயம்தான். இதை நான் சொல்லவில்லை.. சமீபத்தில் கோவையில் நடைபெற்ற ஒரு மருத்துவக் கருத்தரங்கில் நான் கலந்து கொண்டபோது, அங்கிருந்த ‘அவள்’ வாசகிகளான மகப்பேறு மருத்துவர்கள் பலரும் என்னிடம் தெரிவித்த கருத்துதான் இது.

அதற்கு நான் இப்படி பதில் சொன்னேன்.. ”திருடன் எங்கே இருப்பான்.. எப்படி, எந்த வழியாக வருவான் என்பது அவன் மனைவிக்குத் தெரியாது. ஆனால், போலீசுக்குத் தெரியும். காரணம், அவன் மனைவியைப் பொறுத்தவரையில் அவன் திருடன்தான் என்றாலும், அவளை சந்தோஷமாக வைத்துக் கொள்கிற புருஷன்.

அப்படித்தான்.. இந்த கர்ப்பப்பையோடு மிக அதிகத் தொடர்பு வைத்திருக்கிற மகப்பேறு நிபுணர்களாகிய உங்களுக்கு ‘இதில் கேன்சர் வரலாம்’ என்பது தெரிந்தாலும், அதைப் பற்றிப் பெரிதாக யோசிப்பதில்லை. மாறாக, அதன் சந்தோஷ பக்கமான ‘சீக்கிரம் இந்த கர்ப்பப்பையில் ஒரு குழந்தை உண்டாக வேண்டுமே’ என்பது பற்றியோ, ‘கர்ப்பப்பையில் குழந்தை நன்றாக வளர்கிறதா..’ என்பது பற்றியோதான் அதிகம் யோசிக்கிறீர்கள்.

ஆனால் நாங்களோ, ‘கேன்சர் என்கிற அந்தத் திருடன் எப்படியெல்லாம் நுழைவான்.. எந்த வழியில் எல்லாம் பரவுவான்..’ என்பதைப் பற்றியே 24 மணி நேரமும் சிந்தித்துக் கொண்டிருக்கிறோம். அதனால்தான் பிடிபட்டு விடுகிறான். நீங்களும் எங்களை மாதிரி மாறினால், பல திருடன்களும் தொழிலில் கில்லாடிகளாக மாறும் முன்பாகவே பிடிபட்டு விடுவான்கள்” என்றேன்.

ஆம்! பொதுவாக, பெண்கள் தங்களுக்குப் பிரச்னை என்று முதலில் போவது மகப்பேறு மருத்துவர்களிடம்தான். கர்ப்பப்பை தொடர்பான பிரச்னை என்றாலே கேன்சரையும் சந்தேகித்து, தேவைப்பட்டால், அதற்கான பரிசோதனையும் செய்து, அதன் ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடித்து விட்டால், எத்தனையோ நோயாளிகளின் வாழ்க்கையில் சந்தோஷத்தைத் தர முடியுமே! அது மட்டுமா? அப்படி ஒரு நிலை ஏற்பட்டால், அது நம் தமிழக கேன்சர் வரலாற்றில் ஒரு இனிமையான பதிவாக அமையும்.


ர்ப்பப்பை கேன்சருக்கான சிகிச்சை பற்றி விவரிப்பதற்கு முன், சின்னதாக ஒரு தகவல்!

அமெரிக்காவில், கடந்த 2006-ஆம் ஆண்டில், கர்ப்பப்பை கேன்சருடன்இருந்தவர்கள் 90,000 பேர். இவர்களில் 6,000 பேர் அடுத்த சில ஆண்டுகளில் இறந்தனர். அவர்களும்கூட இயற்கையாகவோ அல்லது வேறு பல காரணங்களாலோதான் மரணத்தைத் தழுவினார்களே தவிர, கேன்சர் முற்றியதால் அல்ல.

இது எப்படி சாத்தியமானது தெரியுமா? முதல் காரணம்.. அவர்கள் வருடாந்திர ஹெல்த் செக்கப்பை சரியாகச் செய்து கொண்டது.. இதனால், கேன்சரை ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடித்து, அது பரவாமல் கட்டுக்குள் வைக்க முடியும். இரண்டாவது காரணம்.. அங்கு அத்தனை பேரும் ‘ஹெல்த் இன்ஷூரன்ஸ்’ செய்திருப்பது! கேன்சருக்கான சிகிச்சை அத்தனை காஸ்ட்லி. கைக்காசைப் போட்டு சிகிச்சை செய்தால் கோடீஸ்வரரேகூட விரைவில் லட்சாதிபதியாகி விடுவார். மருந்துகளின் விலையாகட்டும்.. சிகிச்சைக்கான செலவாகட்டும்.. அத்தனையுமே மிக அதிகம்!

இந்த ‘ஹெல்த் இன்ஷூரன்ஸ்’ குறித்த விழிப்பு உணர்வு இங்கேயும் வர வேண்டும் என்று விரும்புகிறேன்.

சரி.. கர்ப்பப்பை கேன்சருக்கான சிகிச்சை பற்றிப் பார்ப்போம்!

கர்ப்பப்பை கேன்சருக்கு கதிர்வீச்சு சிகிச்சை (ரேடியோ தெரபி), அறுவை சிகிச்சை (ரேடிக்கல் ஹிஸ்ட்டரெக்டமி) என்று இரண்டு விதமான சிகிச்சைகள் உண்டு. இவற்றில் கதிர்வீச்சு சிகிச்சையே மிகச் சிறந்தது.

என்ன காரணம்?

கேன்சர் செல்கள் என்பவை கோடு ஒன்றைக் கிழித்ததுபோல் நேராக இருப்பவை.. அல்லது நேராக வளர்பவை என்று பலரும் எண்ணுகின்றனர். ஆனால், உண்மையில், இவை முப்பரிமாணத் தோற்றத்தில் வளர்ந்து கொண்டே இருப்பவை. நேராகவும், இடது வலதாகவும் தன் செல்களை விரிவுபடுத்தி, பல்கிப் பெருகிக் கொண்டே இருப்பவை. ‘கர்ப்பப்பையில்தான் குடியேறி விட்டோமே.. இனி என்ன?’ என்று சோம்பலாக இருக்காமல், அடுத்து என்ன.. அருகிலேயே இருக்கிற நிணநீர்ப் பை.. அதில் இருக்கிற நிணநீர்க் கட்டிகள், அடுத்தது.. ஓவரி.. என்று தன் எல்லையை விரிவுபடுத்திக் கொண்டே செல்லக் கூடியவை.

‘கர்ப்பப்பையில்தானே கேன்சர்.. அறுவை சிகிச்சை செய்து அதை வெட்டி எடுத்து விடலாம்’ என்று சிம்ப்பிளாக முடிவு செய்து அதை வெட்டி எடுத்து விட முடியாது என்பதைத்தான் சொல்ல வருகிறேன். தீவிரவாதிகளின் தலைவனைக் கொன்று விடுவதால் தீவிரவாதத்தையே ஒழித்து விட முடிகிறதா? இல்லையே! வாரிசுகளும் தலைவனின் அடி ஒற்றி நடக்கும் தொண்டர்களும் ஒளிந்திருந்து தங்களை இன்னும் ஆக்ரோஷமாக வளர்த்துக் கொண்டு, தலைவனை விடவும் தீவிரமான அழிவுகளில் இறங்குவதில்லையா? அப்படித்தான் இந்த கேன்சர் செல்களும் புதுப் புது தொண்டர்களையும் தலைவர்களையும் உருவாக்குகிற சக்தி படைத்தவை.

அப்படியெனில், இதற்கு என்னதான் தீர்வு? ரேடியோதெரபி எனப்படுகிற கதிர்வீச்சு சிகிச்சைதான்.

முதல் கட்டமாக, இப்படி எல்லைகள் தாண்டி பரவக் கூடிய செல்களின் வீரியத்தை செயல் இழக்கச் செய்வதுதான் இந்த ரேடியோ தெரபியின் வேலை. அட்டகாசம் செய்கிற இந்த செல்களின் தலையில் தட்டி ‘கன்ட்ரோல்’ செய்து, இந்த செல்களுடைய பரவும் சக்தியை முற்றிலுமாக அழிக்கும் சக்தி படைத்தது இந்த சிகிச்சை.

”ஆனால் டாக்டர்.. கேன்சருக்கான சிகிச்சையை செய்து கொண்டால் தலைமுடியெல்லாம் கொட்டி விடுமாமே.. தோல் எல்லாம் சுருங்கி விடுமாமே..” என்று என்னிடம் வருகிற பேஷன்ட்டுகள் கேட்பதுண்டு.

உங்களுக்கு ஒரு ரகசியத்தைச் சொல்லட்டுமா? உண்மையில் இந்த ரேடியோதெரபி செய்து கொள்வதால் முடி கொஞ்சம்கூட உதிராது. சருமத்திலும் எந்த விதமான பாதிப்பும் ஏற்படாது.

இப்படியெல்லாம் சுலபமான சிகிச்சை முறைகள் இருப்பதே 90-க்குப் பிறகுதான் கண்டறியப்பட்டது. கர்ப்பப்பை கேன்சருக்கான சிகிச்சையில் பல அபரிமித மாற்றங்களும் நவீன முறைகளும் ஏற்பட்ட இந்தக் குறிப்பிட்ட காலத்தை கேன்சர் சிகிச்சையின் பொற்காலம் என்றே சொல்லலாம்.

கேன்சர்… உங்கள் கவனத்துக்கு!

டாக்டர் விஜயராகவன்

திர் வீச்சால் கேன்சர் செல்களை அழிப்பதுதான் ரேடியோதெரபி. அதைப் பற்றி சென்ற இதழில் பார்த்தோம் இல்லையா? அதே ரேடியோதெரபியின் தொடர்ச்சிதான் உள்கதிர்வீச்சு முறை.

ஒன்றுமில்லை.. உடலுக்கு வெளியிலிருந்து கதிர் வீச்சு கொடுப்பதற்கு பதில் கர்ப்பப்பைக்கு உள்ளேயே ஒரு கருவியை நுழைத்து கேன்சர் செல்களை பக்கத்தில் சென்று அழிப்பதுதான் இந்த சிகிச்சையின் சாரம். அதாவது, சிங்கத்தை அதன் இருப்பிடத்திலேயே சந்திப்பது. இதில், ‘சீசியம் உள்கதிர்வீச்சு'(intracavitary cesium application) என்றும் ‘அதிக சக்தி கொண்ட ப்ரேகிதெரபி’ (High-dose-rate brachytherapy) என்றும் இரண்டு முறை உண்டு. முன்னது கொஞ்சம் தாமதமாகும் பின்னது சீக்கிரமே முடிந்து விடும். அதுதான் வித்தியாசம். பெரும்பாலும் ரேடியோதெரபி சிகிச்சையை அளிக்கும்போதே இந்த உள்கதிர்வீச்சு சிகிச்சையையும் அளித்தால் கேன்சர் செல்களை வேரறுப்பதில் நல்ல பலன் கிடைக்கிறது.

அடுத்து ‘கீமோதெரபி’ சிகிச்சை. கேன்சர் சிகிச்சை என்றால் முடி உதிர்ந்துவிடும் என்று பயம் பரவியிருக்கிறதே.. அதற்குக் காரணம் இந்த சிகிச்சைதான். கீமோ என்றால் ரசாயனம்.. தெரபி என்றால் சிகிச்சை. ஆக, ரசாயனம் சார்ந்த ஒரு மருந்தை உடலுக்குள் செலுத்தி அதன் மூலம் செய்யக்கூடிய சிகிச்சை இது.

நம் உடலுக்குள் உள்ள எல்லா செல்களுமே ஒன்றிலிருந்து ஒன்று பிரிந்து தனித்தனி செல்களாகி வளரும் என்பது உங்களுக்கே தெரியும். கேன்சர் செல்களும் அப்படித்தான் வளருகின்றன. ‘ஒரு செல் தன்னை உடைத்துக் கொள்ளும்போது அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி உடைந்த இரு செல்களையுமே அழித்துவிடு!’ என்பதுதான் கீமோதெரபியில் தரப்படும் மருந்துக்கு இடப்பட்டிருக்கும் கட்டளை.

ஒரு போர்வீரனைப் போல தன்னை வளர்த்துக் கொள்ள நினைக்கும் எல்லா செல்களையும் அழித்துக் கொண்டே போகும் அந்த மருந்து. நம் உடலில் உள்ள எல்லா ரோமங்களின் வளர்ச்சிக்கும் காரணம் அதற்குரிய செல்கள் தன்னை வளர்த்துக் கொள்வதுதான். நமது போர் வீரன்தான் கேன்சர் செல்களோடு சேர்த்து அவற்றையும் அழித்துவிடுவானே.. அதனால்தான் முடி உதிர்கிறது.

அப்படி என்றால் கீமோதெரபி சிகிச்சை மேற்கொண்டால் முடியைப் பறி கொடுக்க வேண்டியதுதானா? என்று நீங்கள் கேட்பது புரிகிறது. முதல் விஷயம்.. கீமோதெரபியில் உதிர்ந்த முடி அந்த ட்ரீட்மென்ட் முடிந்த உடனேயே மீண்டும் வளர்ந்துவிடும். இரண்டாவது விஷயம்.. தினமும் இளநீர், முட்டை, 2 லிட்டர் பால், 4 லிட்டர் தண்ணீர், பேரீச்சம்பழம், மாதுளை ஜூஸ் என்று ஆரோக்கியமான உணவுப் பழக்கம் உள்ளவர்களுக்கு கீமோதெரபியின் போது முடி உதிர்ந்தாலும் மீண்டும் புதிய முடி முளைத்துக் கொண்டே இருக்கும். முடி உதிர்வது போலவே தெரியாது.

சரி, கீமோதெரபிக்கும் அடுத்து என்ன சிகிச்சை? இருக்கிறது.. இம்யூனோ தெரபி (immuno therapy) என்பார்கள் அதை. விரட்டப் பட்ட கேன்சர் மீண்டும் உள் நுழையக் கூடாது என்றால், நமது உடலுக்கு எதிர்ப்பு சக்தி தேவை. செயற்கை-யாக அந்த எதிர்ப்பு சக்தியை செலுத்துவதுதான் இம்யூனோ தெரபி!

டாக்டர் விஜயராகவன்

மார்பகம் என்பது என்ன?

ந்தக் கேள்விக்கு விடை தெரிந்து கொண்டால்தான் மார்பகத்தில் ஏற்படும் புற்று நோயையும் நம்மால் புரிந்து கொள்ள முடியும். உங்களுக்கே தெரியும்.. பெண்ணின் இனப்பெருக்க உறுப்புகள் அனைத்தையும் கண்காணித்து அவற்றை செயல்படச் செய்வது ஈஸ்ட்ரோஜன், புரோடோஸ்ட்ரான் என்ற ஹார்மோன்கள்தான். நம் உடலுக்குள்ளேயே உலவும் ரதி – மன்மதன் அந்த ஹார்மோன்களே!

உடலுறவு நடப்பதற்கு அடிப்படையான பாலுணர்வைத் தூண்டுவதில் ஆரம்பித்து, கர்ப்பப்பைக்குள் கரு சுகமாகத் தங்குவதற்கு மென்மையான மெத்தையை அமைத்து வைப்பது வரை அனைத்தும் அவர்களின் ஏற்பாடுதான். குழந்தையைப் பிறக்க வைப்பதற்காக இத்தனை பாடுபடும் இந்த ஹார்மோன்கள், குழந்தை பிறந்த பிறகு அதற்கு உணவு வேண்டுமே என்று சிந்திக்காதா என்ன? அப்படி சிந்திப்பதன் பயன்தான் மார்பகம்!

நமது உடலின் எல்லா பாகத்திலும் தோல் மூடியிருக்கிறது. தோல் முழுக்க மிக நுண்ணிய வியர்வை மற்றும் எண்ணெய் சுரப்பிகள் நீக்கமற நிறைந்திருக்கின்றன என்பதெல்லாம் உங்களுக்கே தெரியும். ஒரு குறிப்பிட்ட பகுதியில் இருக்கும் அந்த வியர்வை / எண்ணெய் சுரப்பிகளை எல்லாம் பிரெய்ன் வாஷ் செய்து, பால் சுரப்பிகளாக மாற்றி விடுகிறது ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன். ஒவ்வொரு மார்பகத்திலும் சுமார் 20 முதல் 22 சுரப்பிகள் வரை இப்படி பால் சுரப்பிகளாக மாற்றப்படுகின்றன. பால் பயணிப்பதற்காக ஒவ்வொரு சுரப்பியும் தனக்கென ஒரு குழாயை ஏற்படுத்திக் கொள்கின்றன. அந்தக் குழாய்களின் முடிவில் ஒரு பை போன்ற அமைப்பும் உருவாக்கப்படுகிறது. இங்குதான் பால் சேமித்து வைக்கப்படும். வெளியில் உள்ள வெப்பநிலைகளால் பால் பாதிக்கப்பட்டுவிடக் கூடாதே.. அதனால், அந்த சுரப்பிகளைச் சுற்றிலும் கொழுப்பு சூழ்ந்து கொள்கிறது. இதுதான் ஒரு மார்பகத்தின் ஜாதகம்!

சரி.. இந்த மார்பகத்தில் உள்ள செல்கள் கேன்சர் செல்களாக மாறக் காரணம் என்ன?

இறுக்கமான உள்ளாடைகள், புகைப்பழக்கம், வலிநிவாரண மாத்திரைகள், எண்ணெய்ப் பதார்த்தங்கள் என்று இதற்குப் பல காரணங்கள் இருந்தாலும் மிக முக்கியமானது மன நிம்மதியின்மை, அதாவது, மன அழுத்தம். ஆம்.. எப்போதும் சோகம், கவலை என்று மௌனமாகவே இருக்கும் பெண்கள் மார்பகப் புற்று நோயை நோக்கி மெள்ள நகர்கிறார்கள் என்பதுதான் உண்மை. கேன்சர் நோயாளிகளில் 70 சதவிகிதம் பேருக்கு அந்நோய் வரக் காரணமாக இருப்பது மன அழுத்தம்தான் என்று ஆராய்ச்சிகள் சொல்கின்றன.

டாக்டர் விஜயராகவன்

மார்பகம் என்பது என்ன? – இந்தக் கேள்விக்கு  விளக்கமாகவே பதில் சொல்லியிருந்தேன். அங்கு எப்படி கேன்சர் உண்டாகிறது என்பதுதான்அடுத்த கேள்வி. அதையும் விளக்கிவிட நான் தயார். ஆனால், அதற்கு முன்னால் எனக்கு ஒரு கடமை இருக்கிறது. மார்பகப் புற்றுநோய் என்றவுடன் ‘ஐயோ.. ஒரு பக்க மார்பகத்தையே வெட்டி எடுத்துவிடுவார்களே’ என்ற பயம் பரவலாக இருக்கிறது இல்லையா? அந்த பயத்தைப் போக்கும் பளிச் தகவல்களை இங்கு  தரப்போகிறேன்..

முதல் விஷயம்.. மார்பகத்தில் சின்னதாக ஒரு கட்டி வந்ததுமே அது கேன்சரோ என்று கலவரமடையத் தேவையில்லை. மார்பகக் கட்டிகள் கேன்சராக இருக்க 20 சதவிகிதமே வாய்ப்பு உள்ளது. ஆக, 80 சதவிகிதம் அது ஆபத்தில்லாத கட்டியாக இருக்கலாம்.

‘சும்மா இருக்கும் மனம் சாத்தானின் இருப்பிடம்’ என்பார்கள். நம் உடல் உறுப்புகளுக்கும் அது பொருந்தும். குழந்தைக்குப் பாலூட்டுவது என்பதுதான் மார்பகத்துக்கு விதிக்கப்பட்ட வேலை. அந்த வேலையைச் சரிவரச் செய்யாத மார்பகங்களுக்கே கேன்சர் வரும் ஆபத்து அதிகம். ஏழெட்டுக் குழந்தைகள் பெற்று அவர்களுக்கு போதுமான அளவு பால் கொடுத்திருக்கும் பெண்ணுக்கு மார்பகத்தில் சாதாரண கட்டி வருவதே அரிது.

‘தாயாருக்கு மார்பகப் புற்றுநோய் வந்துள்ளது. எனவே எனக்கும் வருமா..?’ – இது பல பெண்களது சந்தேகம். மார்பகப் புற்றுநோய் அப்படி மரபு வழியில் ஏற்பட 5 சதவிகிதம்தான் வாய்ப்பு இருக்கிறது. பாலூட்டாத தன்மையே பெரும்பாலும் இதற்குக் காரணமாக அமைகிறது.

மாதவிலக்கு சுழற்சியில் பிரச்னைகள் இருந்தாலோ, பால் சுரப்பிகளில் உள்ள குழாய்களில் அடைப்பு ஏற்பட்டிருந்தாலோ மார்பகத்தில் கட்டிகள் தோன்றலாம். பருவமடையும் வயதில் மார்பகம் உருவாகும்போது, பால் சுரப்பிகளில் ஏதேனும் ஒன்று உருவாவதில் ஏதேனும் குளறுபடி நடந்திருந்தால் அது கட்டியாகலாம். ஆனால், இவை எதுவுமே கேன்சர் கட்டிகள் அல்ல.

வந்திருப்பது கேன்சர் கட்டிகளாக இல்லையென்றாலும் அவற்றுக்கு முறையான சிகிச்சை தருவதும். தேவைப்பட்டால் அகற்றி விடுவதும் முக்கியம். அப்படிப்பட்ட கட்டிகள் இருக்கும்போது கருவுறுதல், நிலைமையை இன்னும் ஆபத்தாக்கும்.

பொதுவாகவே பெண்களுக்கு சொல்கிற அட்வைஸ்.. சுயபரிசோதனை செய்து கொள்ளுங்கள் என்பதுதான்! ஒருவேளை மார்பகத்தில் ஏதேனும் ஒரு கட்டி இருப்பது தட்டுப்பட்டால், மாதவிடாய் முடிந்து ஐந்திலிருந்து ஏழாவது நாளில் அந்தக் கட்டியை மெள்ள நாலாபுறமும் அழுத்தி, தடவி அதன் அளவை நன்றாக உணருவதற்கு முயற்சி செய்ய வேண்டும். அடுத்தடுத்த மாதங்களுக்குள் அதன் அளவில் மாற்றங்கள் ஏற்பட்டால்.. உடனே டாக்டரை அணுக வேண்டும்.

கட்டி என்றவுடன் கேன்சர் என்று பயந்துவிடக் கூடாது என்பது உண்மைதான். அதற்காக நமக்கெல்லாம் கேன்சர் வராது என்ற நினைப்பில் நோயை முற்ற விடுவதும் கூடாது. ஆக, கட்டி என்று ஒரு வந்தாலே அது கேன்சரா இல்லையா என்பதை பரிசோதித்து அறிய முற்படுங்கள். கேன்சரை ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடித்து விரட்டிவிடலாம்.

கேன்சர் கட்டிகளைப் பற்றி, ஆதி முதல் அந்தம் வரை விளக்குவதற்கு முன்னால் கேன்சரைப் போலவே மிக முக்கியமானதாகக் கருதப்படும் இன்னொரு கட்டியைப் பற்றி நான் சொல்லியாக வேண்டும். அதன் பெயர் ஃபைப்ரோமா. கேன்சர் கட்டி புலி என்றால், இந்த ஃபைப்ரோமா கட்டி பசு மாதிரி. ரொம்ப சாது. மார்பகத்தில் வலியையோ வேறு ஆபத்தான விளைவுகளையோ இது ஏற்படுத்துவதில்லை. அக்கடா என்று அது மார்பகத்தின் ஒரு ஓரமாக காலம் முழுக்க வாழ்ந்துவிட்டுப் போய்விடும். அதனால் அதற்கென்று தனியாக சிகிச்சை அளிக்க வேண்டிய அவசியம் கூட இல்லை. ஆனால்.. கேன்சருக்கும் இந்த ஃபைப்ரோமாவுக்கும் ஒரு மெல்லிய தொடர்பு உண்டு. இந்த விவரம் தெரிந்த பிறகு விட்டுவிட முடியுமா அந்த வில்லனை? அதன் ஜாதகத்தை அலசுவோம் வாருங்கள்..

ஒரு பெண்ணுக்குக் குழந்தை பிறந்த பிறகுதான் மார்பகம் தனது வேலையையே துவங்குகிறது என்று பலரும் நினைக்கிறார்கள். அது உண்மை இல்லை. அவள் பருவம் அடைந்த நாளில் இருந்தே மார்பகம் தன் வேலையைச் செய்வதற்கான ஒத்திகையைத் துவங்கி விடுகிறது.

அது என்ன ஒத்திகை?
பெண்ணின் உடலுக்குள் உள்ள ஹார்மோன்கள் ஒவ்வொரு மாதமும் அவள் கருப்பைக்குள் மெத்தை போன்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தி கருவுக்காகக் காத்திருப்பதும்.. பிறகு கரு தங்காததால் ஏமாற்றம் அடைந்து அதை ரத்தக் கண்ணீராக வடிப்பதும் நானே பலமுறை சொல்லிவிட்ட மெக்கானிஸம்.

இந்த மெக்கானிஸம் கருப்பைக்குள் நடக்கும்போதே, மார்பகத்திலும் இதேபோன்ற ஒரு மெக்கானிஸம் நடக்கிறது. கருப்பைக்குள் மெத்தை அமைக்கும் அதே ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன், மார்பகத்தில் உள்ள பால் சுரப்பிகளைத் தூண்டுகிறது.

அந்தத் தூண்டுதலால், பால் சுரப்பிகளில் உள்ள ஒவ்வொரு செல்லும் ஒருவித நிறமற்ற திரவத்தை சுரக்கிறது. இப்படி கோடானுகோடி செல்களில் இருந்து சுரக்கும் திரவம், வந்து தங்குவதற்காக மார்பகத்திலேயே தனித்தனி ‘ஜங்ஷன்’கள் இருக்கின்றன. இந்த ஜங்ஷனுக்கு வரும் திரவம் அடுத்தடுத்த ஜங்ஷன்களுக்குப் பயணப்பட்டுப் பயணப்பட்டு, பால் நாளங்களை அடையும். இதற்குள் 28 நாட்கள் ஓடியிருக்கும்.

 

இறுதியாக, மாதவிலக்கு ஏற்படும் அதே ஐந்து நாட்களில் மார்பகக் காம்பு வழியாக இந்த திரவமும் வெளியேறிவிடும். அப்படி வெளியேறும் திரவத்தின் அளவு மிக மிகக் குறைவு என்பதால், கண்ணுக்கே தெரியாமல்.. ஏன், சம்பந்தப்பட்ட பெண்ணுக்கே தெரியாமல் இந்த செயல் நடந்தேறி விடுகிறது. ஒரு தாயின் மார்பகத்தில் பால் சுரப்பதற்கும் இதே நடைமுறைதான். அதனால்தான் இதை ஒத்திகை என்றேன். மாதவிலக்கு நெருங்கும் நேரங்களில் இந்த திரவம் மார்பகத்துக்குள் திரண்டு நிற்பதால்தான் மார்பகம் சற்று கனத்தது போன்ற உணர்வு இருக்கிறது. இப்போது எல்லாமும் ‘டேலி’ ஆகிறதா? சரி, இனி அடுத்த கட்டத்துக்குப் போவோம்..

ஒருவேளை, மார்பகத்தில் உள்ள 22 முதல் 24 சுரப்பிகளில் ஏதாவது ஒன்றில் இந்த திரவம் சுரப்பதில் சிக்கல் இருந்தால்.. அதாவது, திரவம் சுரக்காமல் போனாலோ, திரவம் வந்து சேரும் ஜங்ஷன் பகுதியில் ஏதேனும் அடைப்பு இருந்து திரவம் எங்கேயாவது தங்கி விட்டாலோ, அல்லது, அந்த சுரப்பிக்கான பால் நாளத்தில் ஏதேனும் அடைப்பு ஏற்பட்டு விட்டாலோ என்ன ஆகும்?

ஒன்றும் கவலைப்பட வேண்டாம். நம் உடலே ஒரு பஞ்சாயத்தைக் கூட்டி, பிரச்னைக்குரிய அந்தக் குறிப்பிட்ட பகுதியை ஊரை (உடம்பை) விட்டு ஒதுக்கி வைத்துவிடும். அதாவது, அடுத்த மாதவிடாய் சுழற்சியின்போது அந்த திரவத்தை சுரந்து வெளியேற்றும் விளையாட்டில் அந்தக் குறிப்பிட்ட பகுதியை சேர்த்துக் கொள்ளாது. இந்த நிலையை ‘அடினாஸிஸ்’ என்பார்கள். உடலின் ஒரு பகுதி தனக்கான வேலையைச் செய்யாமல் சும்மா கிடந்தால், உடனே உடலின் ராணுவத் துறையான வெள்ளை அணுக்களுக்குத் தகவல் சென்று விடும்.

சட்டென்று கோடிக்கணக்கான வெள்ளை அணுக்கள் ஸ்பாட்டுக்கு வந்து, பிரச்னைக்குரிய இடத்தை தசை நார்களைக் கொண்டு ஒரு மூட்டை போல நன்றாகக் கட்டி விடும். இந்த நிலையில் மார்பகத்துக்குள் ஏதோ கட்டியாகத் தட்டுப்படுவதை உணர முடியும். இதை ‘ஃபைப்ரோ அடினாஸிஸ்’ என்பார்கள்.

இப்படி கட்டப்பட்ட பின், அடுத்த கட்ட நடவடிக்கையைத் தொடங்குகின்றன வெள்ளை அணுக்கள். அதாவது, வேலை செய்யாமல் இருக்கும் அந்தப் பகுதியை திரவமாக்கி அழிப்பதுதான் அந்த நடவடிக்கை. அப்படி வெள்ளை அணுக்களால் ஒரு பகுதி திரவமாக்கப்பட்டிருக்கும் நிலையை ‘ஃபைப்ரோ சிஸ்டிக்’ என்பார்கள்.

காலப்போக்கில் இப்படி திரவமாக்கப்பட்ட பகுதி, பக்கத்தில் உள்ள செல்களுக்கு உணவாகி காணாமல் போய்விடும். நார் தசைகளால் கட்டப்பட்ட அந்த முடிச்சு மட்டும் அப்படியே இருக்கும். இதைத்தான் ஃபைப்ரோமா என்கிறோம். ஆக, இது ஆபத்தே இல்லாதது. சொல்லப் போனால் இது ஒரு பிரச்னையே இல்லை.. மார்பகத்தில் ஒரு பிரச்னை இருந்து, நம் உடலே அதை சரி செய்துவிட்டதற்கான அடையாளம்தான் இது.

சரி, இதற்கும் கேன்சருக்கும் என்ன மெல்லிய சம்பந்தம்?

இருக்கிறது.

வேலை செய்யாத பகுதியை வெள்ளை அணுக்கள் திரவமாக்கி அழிக்கும் என்றேனே.. அந்த செயல் மார்புக்குள் நடக்கும்போது, நிச்சயமாக வலி இருக்கும். அந்த வலியைப் பொறுத்துக் கொண்டாலோ அல்லது டாக்டரை அணுகி, அது என்ன வலி என்பதை சரியாகக் கண்டுபிடித்து, அதன் பிறகு அதைக் கண்டுகொள்ளாமல் விட்டாலோ பிழைத்தார்கள். அதை விட்டுவிட்டு நெஞ்சு வலிக்கிறது என்று பெயின் கில்லர் மாத்திரைகளையோ, வேறு ஏதாவது பிரச்னையாக இருக்கும் என்று ஹார்மோன் மாத்திரைகளையோ எடுத்துக் கொண்டால், இந்த பிரச்னை அடுத்த நிலையான ஃபைப்ரோமாவுக்குப் போகாமல் கேன்சரை நோக்கிச் செல்ல 20 சதவிகிதம் வாய்ப்பு இருக்கிறது. இப்படிப்பட்ட ஆபத்தான வாய்ப்பு 20 வருடங்கள் வரை அந்தப் பெண்ணைத் தொடரும்.

மார்பகப் புற்றுநோய்களில் 80 சதவிகித புற்றுநோய், மார்பில் உள்ள பால் குழாய்களில்தான் தோன்றி வளர்கின்றன. முதன்முதலாக அங்கே புற்றுநோய்க் கட்டி எப்படி உருவாகிறது என்று பார்ப்போமா..

திருமணம் ஆகாத பெண்ணுக்குக்கூட மார்பகத்தில் நிறமற்ற திரவம் ஒன்று சுரக்கும்.. அவளுக்கே தெரியாமல் அது மார்பகக் காம்புகள் வழியாக வெளியேறிவிடும் என்று சென்ற அத்தியாயத்தில் சொல்லியிருந்தேன். அந்த நிறமற்ற திரவத்துக்கு ‘லாக்டிக் அமிலம்’ என்று பெயர்.

பால் சுரப்பிகளில் சுரக்கிற இந்த அமிலம், ‘டக்ட்’ எனப்படும் பால் குழாய்களின் மூலம்தான் மார்பகத்தின் நுனியை அடைகிறது. அந்தக் குழாய்களும் சுரப்பிகளும் இணையும் பகுதி இருக்கிறதே.. அதுதான் மார்பகத்திலேயே மிக முக்கியமான இடம்.

வளைந்து செல்லும் ஆற்றைப் பாருங்கள்.. ஆற்றின் பாதை வளையுமே தவிர தண்ணீர் அவ்வளவு எளிதாக வளையாது. ‘நேராகத்தான் செல்வேன்’ என்று அடம்பிடித்து, வளையும் கரையை வேகமாக ஒரு அடி அடித்துவிட்டுத்தான் திரும்பும். அதே போலத்தான் இங்கும் நடக்கிறது. ஒரே திசையை நோக்கி சீரான வேகத்தில் சுரப்பிகளில் இருந்து புறப்பட்டு வரும் லாக்டிக் அமிலத்தை பால் குழாய்கள்தான் வேறு திசைக்கு அழைத்துச் செல்கின்றன. எனவே, குழாய்ப் பகுதியைத் தொட்டதுமே அந்த இடத்தை வேகமாக மோதுகிறது அமிலம்.

குழாய்களும் பாவம்.. எல்லா திசுக்களையும் போல அவையும் கோடானுகோடி செல்களால் கட்டமைக்கப்பட்டவைதானே. ஏற்கெனவே, லாக்டிக் அமிலத்தின் தன்மையால் அந்த செல்கள் இறந்து கொண்டே இருக்கும். இறந்து போன செல்களை உடனடியாக அகற்றிவிட்டு அந்த இடத்தில் புது செல்களை அமர்த்தும் வேலையை மூளை இடையறாது செய்து கொண்டே இருக்கும். இதில், தினம்தோறும் நடக்கும் இந்தத் தாக்குதலால் அந்தக் குறிப்பிட்ட இடத்தில் உள்ள செல்கள் மட்டும் நிறைய இறந்து போகும். ஒரு பெண் மொனோபாஸ் நிலையை அடையும்வரை இந்தப் போர்க்களம் ஓய்வதில்லை.

இப்படி, ‘எவ்வளவு அடித்தாலும் தாங்கிக் கொள்ளும்’ அந்த செல்களுக்கு நாமும் எத்தனை நெருக்கடிகளைத் தருகிறோம் தெரியுமா?

 

மாதவிடாயைத் தள்ளிப் போடும் ‘ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் மாத்திரை’களை அடிக்கடி பயன்படுத்துகிறார்கள் சில பெண்கள். பால் சுரப்பிகளைத் தூண்டி லாக்டிக் அமிலத்தைச் சுரக்கச் செய்வதே இந்த ஹார்மோன்தான் என்பதை நாம் அறிவோம். ஆக, இந்த ஹார்மோன் மாத்திரைகளால் அந்த லாக்டிக் அமிலம் அளவுக்கு அதிகமாக சுரந்து, ஏற்கெனவே அடிபட்டுக் கொண்டிருக்கும் செல்களை இன்னும் வேகமாக அழிக்கத் துவங்குகிறது. இதனால் அந்தப் பகுதியே லேசாக வீங்கிப் போகும்.

இதனால் மார்பகத்தில் வலியை உணரும் பெண்கள், கடைகளில் கிடைக்கிற வலி நிவாரணி மாத்திரைகளை வாங்கிப் போடுவார்கள். அவை வீக்கத்தை சற்று நேரம் குறைத்து வைத்திருக்குமே தவிர, நிரந்தரத் தீர்வைத் தராது. அதனால் தொடர்ந்து அந்த மாத்திரைகளுக்கு அவர்கள் அடிமையாகிப் போவார்கள். பொதுவாகவே வலி நிவாரணி மாத்திரைகளில் இருக்கும் வேதிப் பொருட்கள் சும்மா இருக்கும் சங்கை ஊதிக் கெடுக்கக் கூடியவை. நம் உடலின் எந்த மூலையில் அடிபட்ட புலிகளாக செல்கள் புலம்பிக் கொண்டு இருந்தாலும் அவற்றை கேன்சர் செல்களாக மாற்றக் கூடிய தன்மை அவற்றுக்கு உண்டு.

இது தவிர, மார்பகத்தில் உற்பத்தியாகும் பால் சரியான வெப்ப நிலையில் இருப்பதற்காக அதைச் சுற்றிலும் கொழுப்பு ஒட்டியிருப்பது உங்களுக்கே தெரியும். நாம் உண்ணும் ஃபாஸ்ட் ஃபுட் போன்ற வெளி உணவுகளில் நம் உடலுக்கு சற்றும் தேவையில்லாத.. சில தவறான கொழுப்புச் சத்துக்களும் இருக்கும். ஆரம்பத்தில் அந்தக் கொழுப்பையும் மார்பகத்தில் தக்க வைத்துக் கொள்கிறது நம் உடல். தாமதமாக இதை உணரும் நம் உடலின் எதிர்ப்பு சக்தி (வெள்ளை அணுக்கள்), அந்தத் தேவையில்லாத கொழுப்பை கட்டம் கட்டி வெளியேற்றத் துடிக்கும்.

இந்த உள்நாட்டுப் போரால் மார்பகத்தில் வீக்கம் ஏற்படும். இந்த வீக்கம் பால் குழாய்களை அழுத்தி லாக்டிக் அமிலம் பயணிப்பதைத் தடை செய்யும். இப்போது நிலைமை என்ன..? அந்த அமிலம் உரசிச் செல்வதையே குழாயின் செல்கள் தாங்க முடியாமல் இருந்தன. இப்போது பயணிக்க வழியின்றி அவை அங்கேயே தங்கிவிடுவதால், ஏராளமான செல்கள் அழிகின்றன. அழிந்த செல்களும் லாக்டிக் அமிலத்தோடு கலந்து, ஒரு பேஸ்ட் போலாகி, பால் குழாயை நிரந்தரமாக அடைத்துக் கொள்ளும். ஆக, நெருக்கடி இன்னும் அதிகரிக்கிறது.

சிலருக்கு, மார்பகத்தில் கொழுப்புச் சத்து அதிகம் இருக்கும். அது போதாதென அவர்கள் மிக இறுக்கமான உள்ளாடைகளை அணிவார்கள். கொழுப்புப் பகுதியை மட்டுமல்ல.. அது பால் சுரப்பிகள், அதில் இணைந்திருக்கும் குழாய்கள், அதில் அடிவாங்கிக் கொண்டிருக்கும் செல்கள் என்று எல்லாவற்றையும் நசுக்கும். ஏற்கெனவே, தினம் தினம் அடிவாங்கி செத்துப் போகும் பால் குழாயின் செல்கள், இப்படி வரிசை கட்டி நிற்கும் நெருக்கடிகளால் இன்னும் வேகமாக அழிகின்றன.

செல்கள் செத்துப் போனால் அதே வேகத்தில் உடனடியாக வேறு செல்களை அங்கே உருவாக்க வேண்டுமே! முடிந்தவரை அந்த வேலையை நம் மூளை கச்சிதமாக செய்து முடித்து விடும். தப்பித் தவறி.. எப்போதாவது.. மூளை கொஞ்சம் அசட்டையாக இருந்துவிட்டால், அந்த செல்கள் தங்களைத் தாங்களே வளர்த்துக் கொள்ள ஆரம்பிக்கின்றன. இதுதான் மார்பகப் புற்றுநோய் என்று அழைக்கப்படுகிறது.

மேற்சொன்ன காரணங்கள் அனைத்துமே இருந்தால்தான் ஒரு பெண்ணுக்கு மார்பகப் புற்று நோய் வரும் என்று அர்த்தமில்லை. ஏதேனும் ஒரு காரணம் வலுவாக இருந்தாலே வரலாம். அதேபோல, எல்லா காரணங்களும் இருந்தும் அது கேன்சராக உருப்பெறாமலும் இருக்கலாம்.

எனவேதான் டாக்டர்களான நாங்கள் சொல்கி றோம்.. ஒரு பெண்ணின் மார்பகத்தில் வீக்கம் ஏற்பட்டிருந்தால், சில தேவையான பரி சோதனை களைச் செய்து அது கேன்சர்தானா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். அவை என் னென்ன பரிசோதனைகள்?

மார்பகப் புற்றுநோய்ப் பரிசோதனையை பெண்கள் அத்தியாவசியமாக செய்துகொள்ள வேண்டியது எப்போது தெரியுமா?

தொட்டு உணரும்படியான கட்டி, மார்பகத்துக்குள் இருந்தால்..

வேறு ஏதேனும் பரிசோதனை செய்யும்போது மிகச் சிறிய அளவிலான கட்டி மார்பகத்தில் இருப்பது தெரிய வந்தால்..

மார்பகத்தின் இயல்பான வடிவம் மாறியிருந்தால்.. அல்லது ஒரு மார்பகத்தின் வளர்ச்சி மட்டும் கவனிக்கத்தக்கபடி பாதிக்கப்பட்டிருந்தால்..

மார்பகம் கனமாகி, தொட்டால் வலிக்கும் அளவுக்கு இறுகிப் போயிருந்தால்..

மற்றும்..

அக்குளுக்குள் கட்டிகள் வந்தால்..

”என்ன.. அக்குளுக்குள்ள கட்டி வந்தாக்கூட கேன்சர் டெஸ்ட் பண்ணிக்கணுமா டாக்டர்?” – பெரும்பாலான பெண்கள் பயந்தபடி கேட்கும் கேள்வி இது.

‘தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் நெறி கட்டுமா?’ என்றால், ‘மார்பகப் புற்றுநோய் விஷயத்தில் கட்டும்’ என்றுதான் சொல்ல வேண்டும். அக்குளுக்கும் மார்பகத்துக்கும் அத்தனை நெருக்கமான சம்பந்தம் இருக்கிறது. அதென்ன சம்பந்தம்?

கேன்சரை விளக்கும்போது, நான் ஏற்கெனவே சொன்ன சில தகவல்களை நினைவுபடுத்திப் பாருங்கள்..

உடலில் உள்ள எல்லா செல்களுக்கும் உணவைக் கொண்டு போய்ச் சேர்ப்பது ரத்த ஓட்டம்தான். ஆனால், ரத்த நாளங்கள் சென்றடைய முடியாத இடங்களில் உள்ள செல்களுக்கும் உணவு வேண்டுமே. அதற்காகத்தான் ரத்த நாளங்களும் வெளிச் சுவரில் இருந்து நிணநீர் என்ற திரவத்தைச் சுரக்கின்றன. நம் வெளிப்புறத் தோலில் உள்ள செல்களுக்கு உணவு தருவதும் இந்த நிணநீர்தான்.

இப்படி எல்லா செல்களுக்கும் உணவு தந்து அந்த செல்களின் கழிவையும் ஏற்றுக் கொள்ளும் நிணநீரானது தனக்கென தனியே அமைந்திருக்கும் பாதை வழியே வெளியேறி விடுகிறது. உடல் முழுக்கப் பயணிக்கும் இந்த நிணநீருக்கு ஆங்காங்கே சில சர்வீஸ் ஸ்டேஷன்கள் உண்டு. அவற்றைத்தான் நிணநீர் கட்டிகள் (Nodes)என்கிறோம். அங்கெல்லாம் சுத்திகரிக்கப்பட்டு ரீ-சார்ஜ் செய்துகொண்ட பிறகுதான், மேலும் பல செல்களுக்கு உணவு தர நிணநீர் புறப்படும்.

அப்படிப்பட்ட சர்வீஸ் ஸ்டேஷன்கள்.. அதாவது, நிணநீர்க் கட்டிகள்.. நம் உடலில் எத்தனை இருக்கும் தெரியுமா? அதற்கென்று தனியாக எண்ணிக்கையெல்லாம் இல்லை. நம் உடலில் எத்தனை சுரப்பிகள் உண்டோ அதே எண்ணிக்கையில் நிணநீர்க் கட்டிகளும் உண்டு. நம் உடலெங்கும் உள்ள லட்சோப லட்சம் வியர்வை சுரப்பிகள் அனைத்துக்கும் தனித் தனியே நிணநீர்க் கட்டிகள் உண்டு.

சுமார் 22 வியர்வை சுரப்பிகள் பால் சுரப்பிகளாக மாறி வளர்வதற்குப் பெயர்தானே மார்பகம்? அந்தப் பால் சுரப்பிகளுக்கும் தனித் தனியே 22 நிணநீர்க் கட்டிகள் இருக்க வேண்டும் அல்லவா? அவை அமைந்திருக்கும் பகுதிதான் அக்குள் பகுதி. இடது மார்பகத்துக்கான நிணநீர்க் கட்டிகள், இடது அக்குளிலும்.. வலது மார்பகத்துக்கானவை வலது அக்குளிலும் அமைந்திருக்கும்.

பால் சுரப்பிகளில் உள்ள செல்கள் கேன்சர் செல்களாக மாறி, தனக்கான உணவைத் தானே தேடிக் கொண்டு விட்டால், அவற்றுக்கு உணவு தருவதற்கென்று இருக்கும் சர்வீஸ் ஸ்டேஷனில் பிரச்னை வருமா.. வராதா? அதனால்தான் அக்குளில் வரும் கட்டிகளை மதிக்க வேண்டும் என்கிறேன்.

 

மேலும், மார்பகப் புற்றுநோய் ஒரு பெண்ணுக்கு இருப்பதாகத் தெரிந்தால், அந்தப் பெண்ணின் சகோதரிகளுக்கும் சகோதரர்களின் பெண் குழந்தைகளுக்கும் புற்றுநோய் பரிசோதனை செய்ய வேண்டியது கட்டாயம். மரபு வழியாக கேன்சர் ஏற்பட 5 சதவீதம்தான் வாய்ப்பு உள்ளது என்றாலும், அந்த வாய்ப்பை நாம் புறக்கணித்துவிட முடியாது அல்லவா?

‘பரிசோதனை வேண்டும்.. வேண்டும் என்கிறீர்களே.. அது என்ன பரிசோதனை?’ என்றுதானே கேட்கிறீர்கள்? நான் எப்போதும் சொல்வதுபோல.. வந்திருப்பது கேன்சர்தான் என்று துல்லியமாக உறுதி செய்ய பயாப்ஸி பரிசோதனை ஒன்றே வழி. ஆனால், அதற்கு முந்தைய படி நிலையாக சில பரிசோதனைகள் உள்ளன.

உதாரணத்துக்கு, மார்பில் வலி அதிகமாக இருந்தால், கட்டி ஏதேனும் இருக்கிறதா என்பதை அறிந்து கொள்ள எக்ஸ்-ரே மெமோகிராபி அல்லது எம்.ஆர் மெமோகிராபி போன்ற பரிசோதனைகள் உள்ளன. அந்தக் கட்டியின் அளவு, வடிவம் போன்றவற்றைத் துல்லியமாக அளக்க ‘அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன்’ உள்ளது (கேன்சர் கட்டி என்றால், அது முறையான வடிவத்தில் இருக்காது).

அடுத்து, அந்தக் கட்டி மென்மையாக இருக்கிறதா.. கேன்சர் கட்டியைப் போல இறுகிப் போயிருக்கிறதா என்பதை அறிய ‘எலாஸ்டோகிராபி’ என்ற பரிசோதனை உள்ளது. கேன்சர் கட்டிகளின் மேல் உஷ்ணம் அதிகம் இருக்கும். எனவே, மார்புக்குள் உள்ள கட்டியின் வெப்ப நிலையைக் கண்டறியும் ‘தெர்மாகிராபி’ என்ற பரிசோதனையையும் செய்வது உண்டு. இவை எல்லாவற்றையும் விட நவீன பரிசோதனையான ‘பெட் ஸ்கேன்’ என்ற பரிசோதனையும் இப்போது செய்யப்படுகிறது.

சிலர் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனை மட்டும் எடுத்துப் பார்த்துவிட்டு, ‘அய்யய்யோ.. கேன்சர்!” என்று பயந்து விடுவார்கள். மார்பில் வரும் கட்டிகளில் 20 சதவீதக் கட்டிகள் மட்டுமே கேன்சராக இருக்கின்றன. மீதி 80 சதவீதம் சாதாரணக் கட்டிகளாகவே இருக்கின்றன. எனவே, பதட்டப்படாமல் எதையும் உறுதி செய்து கொள்வது அவசியம். இந்தப் பரிசோதனைகளில் எந்தக் கட்டத்தில், கேன்சருக்கான அபாய மணி ஓங்கி அடித்தாலும், சந்தேகத்துக்குரிய திசுக்களை விசேஷக் கருவிகள் மூலம் எடுத்து பயாப்ஸிக்கு அனுப்புவதுதான் அடுத்த வேலை.
இன்னொரு முக்கியமான விஷயத்தையும் சொல்லியே தீர வேண்டும்..

‘கேன்சராக இருக்குமோ?’ என்ற பயத்தோடு டாக்டரை நாடும் சில பெண்களுக்கு எக்ஸ்-ரே மெமோகிராபி உள்ளிட்ட பரிசோதனைகளை செய்தாக வேண்டியிருக்கிறது. ‘கேன்சர் இல்லை’ என்று அதில் தெரிய வந்தால், ‘இன்னும் ஆறு மாதத்துக்கு எந்த டெஸ்ட்டும் எடுத்துக் கொள்ளாதீர்கள்’ என்று எங்கள் பேஷன்ட்டுகளிடம் நாங்கள் சொல்லி விடுகிறோம். காரணம் என்ன தெரியுமா? இப்படிப்பட்ட பரிசோதனைகளில் உடலின் மீது பாய்ச்சப்படும் கதிர்வீச்சின் காரணமாகவே கேன்சர் வர வாய்ப்பு உள்ளது. அட, சாதாரண எக்ஸ்-ரே கூட ஆபத்தை விளைவிக்கும் என்றால் நம்புவீர்களா?

கதிர்வீச்சின் தாக்கத்தைப் பரவலாக ‘ரெம்’ என்ற அளவையால் அளக்கிறார்கள். சட்டப்படி, ஒரு நோயாளி ஒரு ஆண்டுக்குள் சந்திக்க வேண்டிய அதிகபட்ச கதிர் வீச்சின் அளவே 100 மில்லி ரெம்தான். ‘அதைத் தாண்டினால் கேன்சர் வரலாம்’ என்கிறது மருத்துவ அறிவியல். பரிசோதனைக் கூடத்திலேயே வேலை பார்க்கும் எங்களைப் போன்ற மருத்துவர்களுக்கும் லேப் டெக்னீஷியன்களுக்கும் கூட ஓராண்டுக்கு 300 மில்லி ரெம் வரைதான் அனுமதி உண்டு. ஆனால், இன்று தைராய்டு போன்ற பிரச்னைகளுக்காக எடுக்கப்படும் நியூக்ளியர் ஸ்கேன் என்ற பரிசோதனையில் மட்டும் நோயாளியின் மீது 380 முதல் 900 மில்லி ரெம் வரை, கதிர்வீச்சு பாய்ச்சப்படுகிறது. ‘நியூக்ளியர் சர்குலேஷன் ஸ்டடி’ என்ற பரிசோதனையில் இந்த அளவு 1500-ஐத் தாண்டும்.

கேன்சர் பரிசோதனைகளில்கூட எம்.ஆர்.மெமோகிராம் தவிர மற்றவற்றில் கதிர்வீச்சின் தாக்கம் அதிகம் உண்டு. எக்ஸ்-ரே மெமோகிராபி பரிதோதனையில் 70 மில்லி ரெம் வரையிலும் பெட் ஸ்கேன் பரிசோதனையில் 1400 மில்லி ரெம் வரையிலும் கதிர்வீச்சு உள்ளது. இதெல்லாம் என்ன.. ஒரு மனிதன் ஓராண்டுக்குள் ஆறு முறை மார்புப் பகுதியை சாதாரண எக்ஸ்-ரே படம் எடுத்துக் கொண்டால் கூட அவன் அபாய வளையத்துக்குள் வந்து விடுகிறான்.

இனியாவது ”ஒரு எக்ஸ்ரே எடுத்துப் பார்த்துடலாமா டாக்டர்?” என்று நீங்களாகக் கேட்கும் முன், கொஞ்சம் யோசிப்பீர்கள் அல்லவா?

இனி, கேன்சரை இனங்காண்பது பற்றி..

மார்பகப் புற்றுநோய் வந்தாலே மார்பகத்தை எடுத்துவிடுவார்கள் என்ற பயம் மட்டுமல்ல.. மார்பகத்தை எடுத்துவிடுவதுதான் நல்லது.. இல்லையென்றால் கேன்சர் திரும்பவும் வந்துவிடும் என்ற தேவையற்ற நம்பிக்கையும் நம் ஊரில் இருக்கிறது.

வெளிநாட்டுப் பெண்களுக்கு இதே புற்றுநோய் வந்தால், ‘முழு மார்பகத்தையும் எடுத்துடாம ட்ரீட்மென்ட் பண்ண முடியாதா டாக்டர்?’ என்று கெஞ்சுகிறார்கள். ஆனால், நம் ஊரிலோ மார்பகத்தை எடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்று நாங்களே சொன்னால் கூட, ‘எதுக்கு டாக்டர் வம்பு? எடுத்துடுங்க!’ என்று அடம்பிடிக்கிறார்கள்.
இந்த நிலையை மாற்றுவதற்காகத்தான் இப்போது பேசப் போகிறேன்..

கேன்சருக்கான சிறப்பு மருத்துவர்களுக்கு ஆன்காலஜிஸ்ட் (Oncologist) என்று பெயர். இதை சென்ற இதழிலேயே சொல்லியிருந்தேன். அவர்களிலும் மூன்று பிரிவினர் உண்டு.

ஒன்று.. மெடிக்கல் ஆன்காலஜிஸ்ட் – மருந்துகளால் செய்யப்படும் கீமோதெரபி சிகிச்சையின் மூலம் கேன்சருக்கு எதிராகப் போரிடுபவர்.

இரண்டு.. சர்ஜிக்கல் ஆன்காலஜிஸ்ட் – அறுவை சிகிச்சையின் மூலம் கேன்சருக்கு எதிராகப் போரிடுபவர்.

மூன்று.. கிளினிக்கல் ஆன்காலஜிஸ்ட் – ரேடியோதெரபி என்னும் கதிர்வீச்சு சிகிச்சையின் மூலம் கேன்சருக்கு எதிராகப் போரிடுபவர்.

இவர்களில் யாரையுமே ‘கேன்சரை குணப்படுத்துபவர்’ என்று சொல்லாமல், கேன்சரை எதிர்த்துப் போரிடுபவர் என்று சொல்லியிருக்கிறேனே ஏன் தெரியுமா? கடற்படை, விமானப்படை, காலாட்படை என்று மூன்று பிரிவும் சேரும்போதுதானே ஒரு நாடு முழுமையான பலம் பெறுகிறது. அதுபோல, இந்த மூன்று விதமான மருத்துவங்களும் ஒன்று சேரும்போதுதான் கேன்சரை முற்றிலுமாக விரட்டியடிக்க முடியும்!


ஆரம்ப காலகட்டத்தில் மூன்று அல்லது நான்கு விதமான மருந்துகள் மட்டுமே கீமோதெரபியில் பயன்படுத்தப்பட்டன. ஆனால், இப்போதோ 40 முதல் 65 விதமான நவீன மருந்துகள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டன. இவற்றைப் பயன்படுத்தி எத்தனை பெரிய கட்டியையும் மெள்ள மெள்ள கரைத்துவிடலாம். அதன் பின் ரேடியேஷன் கதிர்வீச்சு மூலமும் அந்தக் கட்டியை ஒரு கை பார்த்துவிட்டால் அறுவை சிகிச்சையை மிக மிக எளிதாக்கிவிடலாம். அறுவை சிகிச்சையில் கேன்சர் கட்டியையும் அதன் வேரையும் மார்பகத்திலிருந்து தனியே வெட்டி எடுத்த பின் தொடர்ந்து சில வாரங்களுக்கு ரேடியோதெரபி தரப்பட்டு வந்தால் போதும்.. அதே கேன்சர் மீண்டும் அங்கே தலையெடுக்காமல் காப்பாற்றிவிடலாம். இதுதான் மார்பகத்தை இழக்காமல் மார்பகப் புற்றுநோய்க்கு சிகிச்சை செய்யும் வழிமுறை!
உலக அளவில் இந்த மூன்று வகை மருத்துவர்களுக்கு இடையேயும் ஆரோக்கியமான போட்டி இருப்பதால் சமீப காலங்களில் இந்த மூன்று விதமான மருத்துவமுமே மிக மிக வேகமாக வளர்ச்சி அடைந்திருக்கின்றன. முக்கியமாக கீமோதெரபி!

சரி, முதலில் கீமோதெரபிதான் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று டாக்டர்களாகிய நாங்கள் எப்படி முடிவெடுக்கிறோம்?

1. மார்பகத்தில் உள்ள ஒரு கேன்சர் கட்டியின் அளவு 4 சென்டிமீட்டருக்கு மேல் இருந்தாலே ஆபத்துதான். அந்தக் கட்டியில் இருந்து இடப்பாற்றாக்குறையால் வெளியேறிய செல்கள், வேறு ‘நல்ல இடம்’ தேடி, ஏற்கெனவே உடல் முழுக்க பயணித்துக் கொண்டிருக்கும். இப்படிப்பட்ட நிலையில் இந்தியாவிலிருந்து சராசரி 70 முதல் 80% நோயாளிகள் வருகிறார்கள். இந்த நிலைக்கு எல்.ஏ.பி.சி (L.A.B.C -Locally advanced breast cancer) என்பார்கள் இந்த நிலையைக் கண்டால், உடனே கீமோதெரபிதான்.

2. மார்பகத்தில் கேன்சர் இருந்தால் அது அக்குள் பகுதியில் பிரதிபலிக்கும் என்று முன்பே சொல்லியிருக்கிறேன் அல்லவா? அந்த பிரதிபலிப்புக் கட்டிகள் அக்குளில் மூன்றுக்கு மேல் இருந்தாலும் அது ஆபத்தான கட்டம்தான். கீமோதெரபிக்குப் பின்தான் எந்த சிகிச்சையையுமே தொடங்க முடியும்.

3. சென்ற இதழில் சொல்லியிருந்தேனே.. மார்பக கேன்சர் வகைகளிலேயே மிக மிக வேகமாக வளர்ந்து ஆளையே கொன்றுவிடும் கேன்சர் ‘லாக்டேஷனல் மாஸ்டைடிஸ்’தான் (Lactational mastitis) என்று! பால் புகட்டும் தாய்மார்களைத் தாக்கும் இந்த கேசருக்கும் முதல் சிகிச்சை கீமோதெரபிதான்.

4. எந்த வகை கேன்சராக இருந்தாலும் அது நான்காம் நிலையை எட்டிவிட்டால்.. அதாவது, பக்கத்து உறுப்புகளுக்கும் பரவிவிட்டால் கீமோதெரபிதான் முதல் தேர்வு!

நரம்புக்குள் செலுத்தப்படும் மருந்துகளால் உடலில் வளரும் நார்மல் செல்களும், தேவையற்ற கேன்சர் செல்களும் ஒன்றாக அழிக்கப்படுவதுதான் கீமோதெரபி என்று உங்களுக்கே தெரியும். அதனால்தான் வளர்ந்து கொண்டிருக்கும் கூந்தல், நகம் போன்றவற்றின் செல்களும் அழிக்கப்பட்டு அவை உதிர்ந்து விடுகின்றன.

ஆனால், தற்போது கேன்சர் செல்களை மட்டுமே அழிப்பதற்கு புதிய மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு விட்டன. இதனைப் பயன்படுத்தும்போது முடி உதிர்தல் போன்ற சிறு பிரச்னைகள் கூட இருக்காது. ஆனால் இந்த மருந்துகளின் விலை ரொம்பவே அதிகம். சாதாரண கீமோதெரபி மருந்துகள் ஆயிரம் ரூபாய் என்றால் இது அறுபதாயிரம் வரை இருக்கும். அவ்வளவு காஸ்ட்லி சிகிச்சையெல்லாம் எடுக்க முடியாது.. ஆனால், எனக்கு முடியும் உதிரக் கூடாது.. என்று எங்களுக்கே சவால் விடும் நோயாளிகளும் இருக்கிறார்கள். அவர்கள் விருப்பத்தை நிறைவேற்றவும் ஒரு மந்திரம் உள்ளது. அதுதான் டயட் மந்திரம்.

கீமோதெரபியின்போது நம் உடலே ‘குருஷேத்திர களம்’ போலத்தான் இருக்கிறது. பஞ்ச பாண்டவர்களைப் போல் கீமோதெரபி மருந்துகள் செயல்பட்டு, கோடிக்கணக்கான கெட்ட செல்கள்.. அதாவது கௌரவர்களை அழிக்கின்றன.

தினம் தினம் போர் முடிந்தவுடன் போர்க்களத்தை செப்பனிட வேண்டும் அல்லவா? அந்தப் பணியை நம் உடலே செய்துவிடுகிறது. என்ன.. அப்படி செப்பனிடுவதற்கு நல்ல சத்தான ஆகார முறை தேவை. அதை மட்டும் மிகச் சரியாகக் கடைப்பிடித்துவிட்டால், கீமோதெரபி சிகிச்சை நிச்சயம் நோயாளியை பாதிக்காது. டாக்டர் தரும் டயட்டின்படி சத்துள்ள உணவுகளை எடுத்துக் கொண்டால் முடி உதிரும் பிரச்னை கூட பலருக்கும் இருப்பதில்லை.

கீமோதெரபியோடு ஒரு மெடிக்கல் ஆன்காலஜிஸ்ட்டின் வேலை முடிந்துவிடவில்லை.. ஹார்மோன் தெரபி என்ற நவீன சிகிச்சையையும் அவரே தருவார். அது என்ன தெரபி? அதையும் பார்ப்போம்..

ஹார்மோன் தெரபி என்றால் என்னவென்று பார்ப்போம்…

ஏற்கெனவே நான் சொன்னதுபோல, பெண்களின் உடலில் உள்ள ஹார்மோன்களின் அளவு ஒரே சீராக இல்லாமல் ஏற்ற, இறக்கத்தோடு ஓர் ஒழுங்கின்றி இருப்பதுதான் கேன்சருக்கான விதையாக அமைந்து விடுகிறது. பெண்ணுக்கான ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனின் தூண்டுதலால் கேன்சர் செல்கள் உருவாகும். இவை தொடர்ந்து வளர, தனக்கான உணவை எடுத்துக் கொள்ள ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் கண்டிப்பாகத் தேவை. இந்த ஹார்மோனுக்கு எதிரான ‘ஆன்ட்டி ஈஸ்ட்ரோஜன்’ மருந்தின் மூலம் இப்படிப்பட்ட செல்களை அழிக்க முடியும். இன்னும் உடலில் உள்ள கொஞ்ச நஞ்ச ஈஸ்ட்ரோஜனையும் கேன்சர் செல்களுக்குக் கிடைக்காமல் செய்வதற்கு சில மருந்துகள் உள்ளன. அவற்றையும் செலுத்தி, கேன்சர் செல்களைப் பட்டினி போட்டுக் கொல்வதுதான் ஹார்மோன் தெரபி!

கடைசியாக இன்னொரு தெரபி…

மிக மிக அரிதாக, சில கேன்சர் செல்கள் தாங்கள் வளர்வதற்கு ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனை நம்பி இருக்காது. நம் தோல் உள்ளிட்ட அனைத்து உடல் உறுப்புகளும் வளர்வதற்குத் தேவையான ‘எபிடெர்மல் குரோத் ஃபேக்டர்’ என்ற இயல்பான நடைமுறையில் இருந்தே அவை தங்களுக்கான உணவை எடுத்துக் கொள்ளும். இந்த வகை செல்களால் ஏற்படும் கேன்சரை ‘ஹெர்2நியூ’ (பிமீக்ஷீ2ஸீமீஷ்) என்பார்கள். இந்த செல்களை அழிக்க, உலகிலேயே இன்றுவரை ஒரே ஒரு நிறுவனம்தான் மருந்து தயாரிக்கிறது. இந்த மருந்தை செலுத்தி செய்யும் சிகிச்சைக்குப் பெயர் ‘இம்யூனோ தெரபி’. தற்போதைக்கு நாம் நினைத்துப் பார்க்க முடியாத விலையில்தான் இந்த மருந்து கிடைக்கிறது என்றாலும், விரைவிலேயே நம் நாட்டுக்குள், இந்த மருந்தைக் குறைந்த விலையில் தயாரிக்க தீவிர முயற்சிகள் நடந்து வருகின்றன.

‘கீமோதெரபி’ என்னதான் நவீன வளர்ச்சிகளைக் கண்டிருந்தாலும் அதனால், நூறு சதவிகிதம் கேன்சரை குணமாக்கிவிட முடியாது. அறுவை சிகிச்சை உள்ளிட்ட மற்ற துறைகளும் வளர்ந்திருப்பதால்தான் கேன்சரால் பாதிக்கப்பட்ட மார்பகத்தை முற்றிலுமாக நீக்கிவிடாமல் காப்பாற்ற நம்மால் முடிகிறது.

அறுவை சிகிச்சைத் துறை, கேன்சரை குணப்படுத்துவதில் மட்டும் தனியே வளர்ச்சி அடைந்துவிடவில்லை. உடல் திசுக்களை நுணுக்கமாகக் கத்தரிக்கக் கூடிய நேர்த்தியான கருவிகள் பலவும் அறிமுகப்படுத்தப்பட்ட பின், எல்லா விதமான அறுவை சிகிச்சைகளுமே இன்று மிகத் துல்லியமாக செய்து முடிக்கப்படுகின்றன.

மார்பகத்துக்குள் சுமார் 22 பால் சுரப்பிகள் இருக்கின்றன. இவற்றில் ஏதேனும் ஒன்றில்தான் கேன்சர் செல்கள் வேர் பரப்பியிருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். மற்ற பால் சுரப்பிகள் காயப்பட்டுவிடாமல், குறிப்பிட்ட சுரப்பியை மட்டும் தனியே வெட்டி எடுத்துவிடுவதுதான் அறுவைசிகிச்சை நிபுணரின் திறமை.

”அப்படியா சங்கதி? ஆனா, என் உறவுக்காரப் பெண்ணுக்கு மார்பக கேன்சர் வந்தப்போ அந்த டாக்டர் மார்பை நீக்கிடணும்னு சொன்னாரே..?” என்று பல பெண்கள் கேள்வி கேள்வி எழுப்பலாம். அவர்களுக்காகச் சொல்கிறேன்… எவ்வளவு பெரிய நிபுணராக இருந்தாலும் சில தவிர்க்க முடியாத சமயங்களில் மார்பகத்தைக் காப்பாற்ற முடியாமல் போவதுண்டு. அது என்ன தவிர்க்க முடியாத சமயங்கள்?


இன்ன இடம்தான் என்று குறிப்பிட்டுச் சொல்ல முடியாத அளவுக்கு மார்பகத்தில், பல இடங்களில் (Multi centricity) கேன்சர் வேர் விட்டிருந்தாலும் மார்பகத்தைக் காப்பாற்ற முடியாது.
மார்பகத்தின் மொத்த அளவு எவ்வளவோ… அந்த அளவோடு போட்டி போடும் அளவுக்கு கேன்சர் கட்டியின் அளவு பெரிதாக இருக்கும்போது மார்பகத்தை முற்றிலுமாக எடுத்துவிடத்தான் வேண்டும்.

தோன்றிய இடத்திலேயே மீண்டும் மீண்டும் தோன்றக் கூடிய ‘இன்ஃப்ளமேட்டரி கார்ஸினோமா’ (Inflammatory carcinoma) என்ற கேன்சர், மார்பகத்தில் தோன்றியிருந்தால் முழு மார்பகத்தையும் எடுத்துவிடுவதுதான் நல்லது.

மார்பக கேன்சருக்காக ஏற்கெனவே அறுவை சிகிச்சை செய்து கொண்ட பெண்மணிக்கு, மீண்டும் அதே மார்பகத்தில் கேன்சர் வந்திருந்தாலும் அந்த மார்பகத்தை எடுக்க வேண்டிவரும்.

மார்பகத்தில் கேன்சர் உள்ள இடத்தைத் தவிர மற்ற இடங்களிலும் அதாவது, மார்பகம் முழுவதிலும் கடுமையான வலியை நோயாளி உணரும்போது (Painfull breast) அந்த மார்பகத்தை முழுவதுமாக நீக்கிவிடுவதுதான் நல்லது.

இந்த மாதிரியான பிரச்னைகள் ஏதும் இல்லை என்றால், நிச்சயமாக முழு மார்பகத்தையும் நீக்காமலேயே மார்பக கேன்சரை வெட்டியெறிந்துவிட ஒரு அறுவைசிகிச்சை நிபுணரால் முடியும்.

சரி, இந்த வெற்றிகரமான சிகிச்சையில், ஒரு கிளினிகல் ஆன்காலஜிஸ்டின் கதிர்வீச்சு சிகிச்சைக்கு எங்கே இடம் இருக்கிறது?

அதைத்தான் பார்க்கப் போகிறோம்…

அறுவை சிகிச்சைக்கு முன் கேன்சர் கட்டியின் வீரியத்தைக் குறைத்து, அதன் அளவை சிறியதாக்கவும் கதிர்வீச்சு சிகிச்சை (ரேடியேஷன் தெரபி) தரப்படுகிறது. அறுவை சிகிச்சையில் கேன்சர் செல்களை வேரோடு கிள்ளியெறிந்து விடுவார்கள் என்றாலும், மிச்ச சொச்சமாக சில கேன்சர் செல்கள் அங்கே உயிர்வாழ வாய்ப்பிருக்கிறது. அப்படிப்பட்ட ஆபத்தான செல்களை முற்றிலுமாக அழிக்கவும் இதே கதிர்வீச்சு சிகிச்சை தரப்படுகிறது.

சாதாரண எக்ஸ்ரே கருவியில் இருந்துகூட இதே கதிர்வீச்சு வெளிப்படுகிறது என்பதை சென்ற இதழ்களில் பார்த்தோம். எனவே, ஆரம்பகட்டத்தில் ‘எக்ஸ்-ரே’ போன்ற ஒரு கருவியால்தான் இந்த சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ஆனால், சாதாரண ‘எக்ஸ்-ரே’வில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சை விட, ரேடியேஷன் தெரபிக்காக பயன்படுத்தப்படும் கருவி வெளியிடும் கதிர்வீச்சு ஒன்றரை லட்சம் மடங்கு அதிகம்.

காலம் செல்லச் செல்ல இந்தக் கருவி நவீன மயமானது. ‘கோபால்ட்’ என்ற உலோகத்தில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சைக் கொண்டு, கேன்சர் செல்களை அழிக்கும் ‘டெலி கோபால்ட்’ என்ற கருவி கண்டுபிடிக்கப்பட்டது.

கதிர்வீச்சை வெளிப்படுத்தும் இன்னும் சில உலோகங்களைப் பயன்படுத்தி சிகிச்சை அளிக்கும் ‘ப்ரேக்கி தெரபி’ (Brachy theraphy) என்ற முறை, மெள்ள பயன்பாட்டுக்கு வந்தது.

கேன்சர் செல்களால் பாதிக்கப்பட்ட இடத்தை கதிர்வீச்சால் மிகத் துல்லியமாக தாக்குவதற்கு ஏற்றாற்போல ‘லீனியர் ஆக்சிலேட்டர்’ என்ற கருவி அதன்பிறகு கண்டுபிடிக்கப்பட்டது. இன்று அதே கருவி பல முன்னேறங்களைக் கண்டுவிட்டது.

நோயாளி மூச்சு விடும்போது மார்பகம் லேசாக அசைவது இயல்பு. அந்த அசைவுக்கு ஏற்ப தானும் அசைந்து கொடுத்து, துல்லியமாக இலக்கைத் தாக்கும் கதிர்வீச்சுக் கருவி கூட இந்தக் காலத்தில் உண்டு (IMRT, IGRT).

இப்படிப்பட்ட நவீன வசதிகள் அனைத்தையும் பயன்படுத்திக் கொண்டால், மார்பக கேன்சரை மட்டுமல்ல… எந்த வகையான கேன்சரையும் விரட்டி விடலாம் என்பதைத்தான் இத்தனை இதழ்களாக நாம் பார்த்தோம். பெண்களைத் தாக்கும் புற்றுநோய்கள் பலவற்றையும் பார்த்துவிட்டோம்.

ப: ”ஒரு பயங்கர கொலைகாரன் போலீஸ் கையில் பிடிபட்டால் என்ன செய்வார்கள்? கோர்ட்டில் நிறுத்துவார்கள். அங்கே அவனுக்கு கடுமையான தண்டனையை விதிக்கப்படும். உதாரணத்துக்கு பத்து வருடக் கடுங்காவல் என்றே வைத்துக் கொள்ளுங்களேன். அதை அனுபவித்த பிறகு அவனை சாதாரணமாக வெளியே அனுப்பி விட மாட்டார்கள். மீண்டும் அவன் பழையபடி கொலைகாரனாகிவிடக் கூடாதல்லவா? அதற்காக தகுந்த மனநல ஆலோசகர் மூலம் பல ஆலோசனைகளை, அறிவுரைகளை அளித்து, சமூகத்தில் அவன் வாழ்வதற்குத் தேவையான தொழிற்கல்வியையும் கொடுத்துதான் அனுப்புவார்கள்.கே: ”சென்ற இதழில், மார்பக கேன்சரைப் பற்றி விளக்கும்போது, அங்குள்ள கேன்சர் செல்களுக்கு உணவு தர ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் தேவை என்றும், அந்த ஹார்மோனுக்கு எதிரான ஆன்டி ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனைக் கொடுப்பதன் மூலம் கேன்சர் செல்களைப் பட்டினி போட்டு கொல்ல முடியும் என்றும் சொல்லியிருந்தீர்கள். இதுவே நல்ல வழி முறையாகத் தெரிகிறதே… கீமோதெரபிக்கு பதில் இந்த ஹார்மோன்தெரபி சிகிச்சையையே ஆரம்பம் முதல் கொடுத்தால் என்ன? இது ஏன் கடைசியாகத் தரப்படுகிறது?”

இதையெல்லாம் ஆரம்பத்திலேயே அவனுக்குத் தந்து, அப்போதே விடுதலையும் செய்ய முடியும். ஆனால், அப்படிச் செய்தால்… தான் செய்த தவறுக்காக அவன் வருந்தவும் மாட்டான் கொலை செய்யும் மனப்பாங்கை மாற்றிக் கொள்ளவும் மாட்டான். தவறு செய்தால் தண்டனை இல்லை என்றாகிவிட்டால், பலருக்கும் பயம் விட்டுப் போய்விடும்.

ஆக, கடுமையான தண்டனைக்குப் பின் தரப்படும் மன ரீதியிலான ஆலோசனையைப் போன்றதுதான் ஹார்மோன் தெரபியும். கேன்சர் நம் உடலை ஆட்சி செய்து கொண்டிருக்கும்போது சக்தி வாய்ந்த கீமோதெரபி மருந்துகள் மற்றும் ரேடியேஷன் தெரபி மூலம் போர் தொடுத்து, கேன்சர் செல்களை வீழ்த்துவதுதான் முதல் வேலை. அதில் தன் வலிமையை இழந்துவிட்ட கேன்சர் கட்டியை, அறுவை சிகிச்சையின் மூலம் நீக்கிவிடுவது இரண்டாவது வேலை. வேரோடு வெட்டி விட்டாலும் அந்த இடத்தில் ஒன்றிரண்டு கேன்சர் செல்கள் மிச்சம் இருக்க வாய்ப்பு உண்டு. அவற்றை அழிக்கவும் மற்ற நல்ல செல்கள் திசை மாறாமல் பார்த்துக் கொள்ளவும் தரப்படும் சிகிச்சைக்கு ‘மெயின்டெனன்ஸ் தெரபி’ என்று பெயர். அதில் ஒரு பகுதிதான் ஹார்மோன்தெரபியே தவிர, அது முதல் சிகிச்சை ஆகாது.”

 

———————————-

கே: ” ‘மார்பக கேன்சருக்காக ஏற்கெனவே அறுவைசிகிச்சை செய்து கொண்ட பெண்மணிக்கு மீண்டும் அதே மார்பகத்தில் கேன்சர் வந்தால், மார்பகத்தையே எடுக்க வேண்டி வரும்’ என்று சொல்லியிருந்தீர்கள். மார்பகத்தை அகற்றிவிடக்கூடாது என்பதற்காகத்தான் பார்த்துப் பார்த்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. அப்படிஇருந்தும் திரும்பவும் கேன்சர் வர வாய்ப்பு உண்டா?”

ப: ”சிகிச்சைக்குப் பிறகு மட்டுமல்ல, அறுவை சிகிச்சையின் மூலம் மார்பகத்தையே நீக்கிவிட்டாலும்கூட அதே இடத்தில் மீண்டும் கேன்சர் வர 2 சதவிகிதம் வாய்ப்பு இருக்கிறது. இதனை ‘லோக்கல் ரீ அக்கரன்ஸ்’ என்பார்கள். வியர்வை சுரப்பிகள் என்பதே நம் தோலோடு நெருங்கிய தொடர்பு கொண்டவை. அந்தச் வியர்வை சுரப்பிகள்தான் பால் சுரப்பிகளாக மாறி மார்பகங்களாக மாறுகின்றன என்பதால், மார்பகத்துக்கும் அதன் மேல் தோலுக்கும்கூட நிறைய தொடர்பு உண்டு. மார்பகம் நீக்கப்பட்டுவிட்டாலும் நெஞ்சுப்பகுதியில் உள்ள தசைகளும் மேல் தோலும் அப்படியேதான் இருக்கும். அவற்றில் ஒன்றிரண்டு கேன்சர் செல்கள் உயிரோடு இருந்தாலும், ஆபத்துதான். மிச்சம் உள்ள மார்புத் தசையில் கேன்சர் செல்கள் பரவி வளர்ந்து விடலாம்.

இதே ஆபத்துதான் நான் சொல்லும் சிகிச்சையிலும் உள்ளது. அறுவை சிகிச்சையின் மூலம் முழு மார்பகத்தையும் எடுத்துவிடாமல் கேன்சரால் பாதிக்கப்பட்ட பகுதியை மட்டும் நீக்கி விடுவதுதான் நவீன சிகிச்சை. இதிலும் ஒன்றிரண்டு கேன்சர் செல்கள் உயிர்வாழ வாய்ப்பிருக்கிறது. ஆதனால்தான், அவற்றை அழிக்க தொடர்ந்து ஹார்மோன்தெரபி மற்றும் ரேடியேஷன்தெரபி போன்ற சிகிச்சைகள் தரப்படுகின்றன. இவற்றையெல்லாம் மீறி மீண்டும் கேன்சர் வளர்ந்தால்தான் மார்பகத்தைக் காப்பாற்ற முடியாது என்று சொல்லியிருக்கிறேன். அதற்கான வாய்ப்பு மிகக்குறைவு. எனவே, கவலை வேண்டாம்.

அப்படியே மீண்டும் ‘லோக்கல் ரீ அக்கரன்ஸ்’ ஏற்பட்டு மார்பகத்தை எடுக்க வேண்டி வந்தால், மார்பகத்தை முழுவதுமாக நீக்கிவிட்டு அந்தப் பகுதியில் உள்ள தோலையும் எடுத்துவிட்டு, உடலில் வேறு ஏதேனும் பகுதியில் இருந்து தோலை எடுத்து அந்த இடத்தில் தைத்து விடுவோம். எனவே, மீண்டும் கேன்சர் வாய்ப்பு மிகவும் குறைந்து விடுகிறது!”

———————————-

கே: ”கடைகளில் கிடைக்கும் ‘ஜங்க் ஃபுட்’ போன்றவற்றில் உள்ள தேவையற்ற கொழுப்புகளால் கேன்சர் வரலாம் என்று முன்பு ஒரு முறை நீங்கள் சொல்லியிருந்தீர்கள். உணவுப் பழக்கத்துக்கும் கேன்சர் வருவதற்கும் சம்பந்தம் உண்டா? உணவுப் பழக்கங்களை முறையாக அமைத்துக் கொண்டால் கேன்சரே வராமல் நம்மைப் பாதுகாத்துக் கொள்ள முடியுமா?”

ப: ”நிச்சயம் முடியும். ஹார்மோன்களின் தூண்டுதலால், சாதாரண செல்கள் கேன்சர் செல்களாக மாறக் கூடும் என்று நான் முன்பே சொல்லியிருந்தேன். நமது செல்களும் குழந்தைகள் போலத்தான். ஆரோக்கியமாகவும், சுகாதாரமான சூழ்நிலையிலும் அவை வளர்க்கப்பட்டிருந்தால் ஹார்மோனின் பேச்சைக் கேட்டு அது கெட்டு சீரழிந்து போகாது. நம் செல்களை ஆரோக்கியமான சூழ்நிலையில் வைத்துக் கொள்ள, சில உணவுகள் உள்ளன.

ல்ல உணவுப் பழக்கத்தால் கேன்சரே வராமல் தடுத்துவிட முடியுமா?” என்ற கேள்விக்கு, ‘முடியும்’ என்று சென்ற இதழில் பதில் தந்திருந்தேன். அது எப்படி முடியும்?

உணவு வகைகளை மூன்றாகப் பிரிக்கலாம்.

* கேன்சரை உண்டாக்கக் கூடிய மோசமான உணவுகள்.

* கேன்சர் அபாயமற்ற நல்ல உணவுகள்.

* கேன்சரைத் தடுக்கும்/ குணமாக்கும் அற்புத உணவுகள்.

கேன்சரை உண்டாக்கும் உணவுகள்…

பலமுறை உபயோகித்த எண்ணெயிலயே மீண்டும் வறுக்கப்பட்ட/ பொறிக்கப்பட்ட பதார்த்தங்கள், அதிக காரம்/ எண்ணெய்ப்பசை கொண்ட கவர்ச்சிகர உணவுகள், துரித உணவு வகைகள், ‘ஜங்க் ஃபுட் நொறுக்குத் தீனிகள்’ என விரிகிறது பட்டியல்.

சுருக்கமாகச் சொல்வதானால், ஜீரணிக்கக் கடினமான ‘ஹெவி’ உணவுகள் அனைத்துமே கேன்சரை விளைவிக்கக்கூடிய ஆபத்து உள்ளவைதான். உடலுக்குத் தேவையற்ற கொழுப்புகள் இந்த உணவுகளில் நிறைந்துள்ளன. உணவில் உள்ள எல்லா சத்துக்களையும் பயன்படுத்திக் கொள்ள நினைக்கும் நம் உடல், இந்தக் கொழுப்பு விஷயத்தில் மட்டும் குழப்பம் அடைந்து, அவற்றை தனியே சேர்த்து வைக்கிறது. அத்துமீறி ஒரு நாட்டுக்குள் அந்நியர் புகுந்துவிட்டால், நாட்டுக்கு கெடுதல்தான் செய்வார்கள். அதையேதான் அந்தக் கொழுப்புகளும் நம் உடலுக்குச் செய்கின்றன. கேன்சர் வரைக்கும் போய்விடுகிறது.

எளிதாக ஜீரணம் ஆகக் கூடிய பச்சைக் காய்கறிகள், பழங்கள், எண்ணெய் குறைவாகப் பயன்படுத்தப்பட்ட சமையல், நீராவியில் வேக வைக்கப்பட்ட பதார்த்தங்கள் போன்றவை கேன்சர் ஆபத்தற்ற உணவாகக் கொள்ளலாம்.

கேன்சரைத் தடுக்கும் அற்புத உணவுகள்…

இவற்றைப் பற்றிச் சொல்லும் முன்னர் கேன்சர் எப்படித் தோன்றுகிறது என்பதை நான் சொல்லியாக வேண்டும். ‘அதைத்தான் பல முறை சொல்லிவிட்டீர்களே… ஹார்மோன்களின் தூண்டுதலால் அல்லது உடலுக்குத் தேவையற்ற கொழுப்பு மற்றும் புகையிலையில் இருந்து வரும் நிக்கோடின் என்ற பொருளின் தூண்டுதலால் கேன்சர் வரும். அவ்வளவுதானே?’ என்று உங்களில் பலர் என்னை மடக்கலாம்.

ஹார்மோன் உள்ளிட்ட விஷயங்கள் தூண்டுகிறதென்றால், அவை நம் உடலில் உள்ள கோடானுகோடி செல்களையும் தூண்டிக் கொண்டுதான் இருக்கின்றன. அவற்றில் குறிப்பிட்ட சில செல்கள் மட்டும் பாதை மாறி கேன்சர் செல்களாக மாறிவிடக் காரணம்? அதைத்தான் பார்க்கப் போகிறோம்.

நம் உடலின் செல்கள் அனைத்தும் ஒன்றோடு ஒன்று நெருக்கமாகத்தான் இருக்கும். ஆனால், ஒன்றுக்கொன்று ஒட்டிக் கொண்டிருக்காது. அவற்றுக்கு இடையே இன்டர் செல்லுலர் மேட்ரிக்ஸ் (Inter cellular matrix) எனப்படும் திடப்பொருள் சூழ்ந்திருக்கும். வானத்தில் இறைந்து கிடக்கும் நட்சத்திரங்களைப் போல இந்த திடப்பொருளில் செல்கள் இறைந்து கிடக்கின்றன. எனவே, செல்களைக் ‘கட்டி’க் காப்பது இந்த இன்டர் செல்லுலர் மேட்ரிக்ஸ்தான். அன்பான கூட்டுக் குடும்பத்தில் பிறந்த ஒரு பிள்ளை, பாதை மாறி தவறான காரியங்களில் ஈடுபடுவது அரிது இல்லையா? அப்படித்தான்… இந்த இன்டர் செல்லுலர் மேட்ரிக்ஸ் ஆரோக்கியமானதாக இருந்தால் அவற்றில் கலந்துள்ள செல்களும் பாதை மாறி கேன்சர் செல்களாக மாறாது. அதை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள சில உணவுகள் உதவுகின்றன.

இன்டர் செல்லுலர் மேட்ரிக்ஸ் என்ற அந்தப் பொருள், 1. விட்டமின் ‘ஏ’ 2. விட்டமின் ‘சி’ 3. விட்டமின் ‘ஈ’ 4. செலேனியம் 5.கால்ஷியம் என ஐந்து விதமான தாதுப்பொருட்களால் கட்டமைக்கப்பட்டுள்ளது.

இவற்றில் நான்காவதாகச் சொல்லப்பட்டிருக்கும் செலேனியம்தான் மிக முக்கியமான பொருள். சொலேனியம் போதுமான அளவு ஒருவர் உடலில் இருந்தால், அவருக்கு எந்தக் கட்டத்திலும் கேன்சரே வராது என அடித்துச் சொல்லலாம். உலக அளவில் ‘பிரேசில் நட்’ எனப்படும் ஒரு வகை பருப்பில்தான் அதிக அளவில் செலேனியம் இருக்கிறது. அதனாலேயே அதன் விலை மிக அதிகம். நம் நாட்டில் கிடைக்கக் கூடிய காய்கறிகளில் காலிஃப்ளவர் அதிக செலேனியம் கொண்டது. காலிஃப்ளவர் அதிகமாக உண்டு வந்தால் கான்சர் செல்களே தென்படாது.

செலேனியம் தவிர, கேரட்டில் உள்ள பீட்டாகெரோட்டின் (Betacarotene) என்ற பொருளில் விட்டமின் ‘ஏ’ அதிகம் உள்ளது. ஆப்பிள், தக்காளி, நெல்லிக்காய், இஞ்சி, பயத்தம் பருப்பு போன்றவற்றில் விட்டமின் ‘சி’ உள்ளது. பீட்ரூட், ஆல்மண்ட் அல்லது பாதாம் ஆயில், மஞ்சள், வெங்காயம் போன்றவற்றில் விட்டமின் ‘ஈ ‘ உள்ளது. முருங்கைக் காய் / முருங்கைக் கீரை, கறிவேப்பிலை, சப்போட்டா பழம் போன்றவற்றில் கால்ஷியம் உள்ளது.

 

இவற்றையெல்லாம் மனதில் கொண்டு நாம் நம் உணவுப் பழக்கத்தை அமைத்துக் கொண்டால், உலகில் கேன்சர் என்ற சொல்லே இருக்காது!

(நிறைவடைந்தது)

-தொகுப்பு ரா.கோகுலவாசநவநீதன், ம.பிரியதர்ஷினி, வி.ராம்ஜி

 

மாத்திரை, #மருந்துகள் உட்கொள்ளும்போது தவிர்க்கவேண்டிய உணவுகள்! – ஜி.லட்சுமணன் #HealthTips


ஆரோக்கியம் குறித்த விழிப்புஉணர்வு இன்று அதிகமாகிவிட்டது… உண்மை! உடல்நலம் குறித்த அக்கறையோடு பார்த்துப் பார்த்து காய்கறிகளைத் தேர்ந்தெடுத்து, அளவு பார்த்துச் சாப்பிடுகிறவர்களும் இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களில் பெரும்பான்மையானவர்களேகூட ஒரு விஷயத்தில் கோட்டை விட்டுவிடுவார்கள். அது, மாத்திரை, மருந்துகள் சாப்பிடும் தருணம். `இவற்றில் சிலவற்றை உட்கொள்ளும்போது, சில உணவுகளைச் சாப்பிடக் கூடாது. அப்படிச் சாப்பிடும்போது, மாத்திரை, மருந்தின் தன்மை பாதிக்கப்படும்; அவற்றின் பணி தடைப்படும்; சில நேரங்களில் நோய்க்கு மருந்தாவதற்கு பதிலாக, ஆபத்தான விளைவுகளையும் ஏற்படுத்திவிடும்.  

மாத்திரை

அதேபோல காபி, குளிர்ப்பானங்களைக்கூட மாத்திரை சாப்பிடும் நேரத்தில் அருந்தக் கூடாது. அதனால், மாத்திரை பயனற்றதாகிவிடும்; சில நேரங்களில் பக்கவிளைவுகள் ஏற்படும்’ என மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். அப்படி, எந்தெந்த உணவுகளுடன் எந்தெந்த மருந்து, மாத்திரைகளை உட்கொள்ளக் கூடாது என்பது குறித்து பொதுநல மருத்துவர் எம்.அருணாச்சலம் விவரிக்கிறார்.டாக்டர் அருணாச்சலம்

ஆன்டிபயாடிக் மாத்திரைகள் – பால் பொருள்கள்
பாக்டீரியா தொற்றுக்காக உட்கொள்ளும் பென்சிலின் (Penicillin) டெட்ராசைக்லின் (Tetracycline), சிப்ரோஃப்ளாக்ஸின் (Ciprofloxacin) போன்ற ஆன்டிபயாடிக் மருந்துகளுடன், பால் மற்றும் பால் பொருள்களைச் சாப்பிடக் கூடாது.  இவை மருந்து செயல்படும் தன்மையை குறைத்துவிடக்கூடியவை.

வலி நிவாரணி மருந்துகள் – குளிர்ப்பானங்கள்
தலைவலி, தசைபிடிப்பு,  தசை வீக்கத்துக்காக உட்கொள்ளும் இபுப்ரோஃபென் (Ibuprofen) மருந்தை உட்கொள்ளும்போது, கண்டிப்பாக சர்க்கரை சேர்க்கப்பட்ட குளிர்ப்பானங்களைத் தவிர்க்க வேண்டும். இவற்றில் கார்பன் டை ஆக்ஸைடு மற்றும் அமிலங்கள் சேர்க்கப்பட்டுள்ளதால், மருந்தை உடல் உறிஞ்சுக்கொள்ளும் தன்மையைப் பாதிக்கும். மேலும், நச்சுச்தன்மை அதிகம் இருப்பதால், சிறுநீரகத்தையும் பாதிக்கக்கூடும்.

அதே போல வலிநிவாரணிகளுடன் (NSAID- Nonsteroidal Anti-inflammatory Drugs) ரத்த அழுத்திற்காக சாப்பிடக்கூடிய மாத்திரைகளை (HTN drugs- Blood Pressure) உட்கொண்டாலும் அதன் செயல் திறனை குறைத்துவிடும்.

குளிர்ப்பானம் 

நுரையீரல் பாதிப்பு தொடர்பான மருந்துகள் – காஃபின் பானங்கள்
ஆஸ்துமா, மூச்சுக்குழாய் அழற்சி (Broncities) மற்றும் நுரையீரல் பிரச்னைக்கு  தியோபைலின் (Theophylline), அல்புட்ரால் (Albuterol) போன்ற மருந்துகளை உட்கொள்ளும்போது, குளிர்ப்பானங்களை குடிக்கக் கூடாது. இவற்றில் உள்ள ‘காஃபின்’ நச்சுத்தன்மையை ஏற்படுத்தக்கூடியது. 

சிறுநீரகக் கோளாறு மருந்துகள் – வாழை, கீரை, தக்காளி, சோயா
சிறுநீரகக் கோளாறுகளுக்காக உட்கொள்ளும் கேட்டோப்ரில் (Captopril), எனாலாப்ரில் (Enalapril), ராமிப்ரில் (Ramipril) போன்ற மாத்திரைகளுடன் வாழைப்பழம், சோயா, தக்காளி, கீரைகளைச் சாப்பிடக்கூடாது.  இவற்றில் பொட்டாசியம் அதிகம் என்பதால், ரத்தத்தில் பொட்டாசியம் அதிகரித்து பாதிப்பை ஏற்படுத்திவிடும். மருத்துவர் ஆலோசனையுடன் மருந்துகளை உட்கொள்வது நல்லது.

இதய பிரச்னை 

இதயநோய் தொடர்பான மருந்துகள் – மதுப்பழக்கம்
ஐசோசோபைடு டினிட்ரேட் ( Isosorbide dinitrate), நைட்ரோகிளிசரின் (Nitroglycerine) போன்ற மாத்திரைகளை, கார்டியாக் அரெஸ்ட், இதயத் துடிப்பில் பாதிப்பு போன்ற இதயநோய் பிரச்னைகளுக்காக கொடுக்கப்படுபவை. ‘ஆன்டி ஆர்த்திமிக் மருந்து’ என்னும் இந்த வகை மருந்துகளை மது அருந்திய பிறகு உட்கொண்டால், குறைந்த ரத்த அழுத்த நிலையை உருவாகும். இந்த நிலை ஆபத்தான சூழ்நிலைகளைதலைவலி மாத்திரை  உருவாக்கலாம். இந்த மாத்திரைகள் மட்டுமல்ல எந்த மாத்திரையை உட்கொண்டாலும் மது அருந்துவதை அவசியம் தவிர்க்க வேண்டும். நார்ச்சத்து உணவுகளையும் சாப்பிட்டிருந்தாலும், மருந்தின் செயல்படும் தன்மையைக் குறைக்கும். எனவே, நார்ச்சத்துள்ள உணவுகளை சாப்பிடுவதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்னதாகவோ அல்லது பின்னரோ சாப்பிடலாம்.

கொழுப்பைக் குறைக்கும் மருந்து – திராட்சைப்பழம்
கொழுப்பைக் குறைப்பதற்கு உட்கொள்ளும் ஆட்ரோவாஸ்டேட்டின்,(Atorvastatin) ஃப்ளூவாஸ்டட்டின் (Fluvastatin) லோவஸ்டட்டின் (Lovastatin), சிம்வஸ்ட்டட்டின் (Simvastatin), ரோசுவஸ்டட்டின் (Rosuvastatin), ப்ராவஸ்டாட்டின் (Pravastatin) போன்ற மருந்துகளை உட்கொள்ளும்போது, அவற்றுடன் திராட்சைப்பழ ஜூஸ் சாப்பிடக் கூடாது; சிட்ரஸ் பழங்களைத் தவிர்ப்பது நல்லது. இந்த மருந்துகளை உட்கொள்ளும்போதும் மருத்துவர் ஆலோசனை அவசியம்.

தைராய்டு ஹார்மோன் சுரக்கும் மருந்துகள் – சோயா, நார்ச்சத்துகள்
தைராய்டு பிரச்னைகளுக்காக உட்கொள்ளும் லிவோதைராக்ஸின் (Levothyroxine) போன்ற உணவுகளுடன் சோயா மற்றும் நார்ச்சத்துள்ள உணவுகளைச் சாப்பிட்டால், உடல் மருந்தை உறிஞ்சிக்கொள்ளும் தன்மையை பாதிக்கும்.

மீன்

மனஅழுத்த மருந்துகள் – பாலாடைக்கட்டி, மீன், இறைச்சி, கொத்தமல்லி 
`மோனோஅமைன் ஆக்சிடேஸ் தடுப்பான்கள்’ (Monoamine oxidase inhibitor) என்றழைக்கப்படும் டிரானில்சைப்ரோமின் (Tranylcypromine), பினில்ஸைன் (Phenelzine), நிலாமைடு (Nialamide) போன்ற மருந்துகளுடன் கொத்தமல்லி, பாலாடைக்கட்டி, மீன், இறைச்சி போன்றவற்றை உண்ணக் கூடாது.  

ரத்தம் தொடர்பான நோய்கள் – பூண்டு, இஞ்சி, மசாலா
ரத்தம் உறைதல் போன்ற ரத்தம் தொடர்பான நோய்களுக்கு வார்ஃபாரின் (Warfarin) மருந்துகளை உட்கொள்ளும்போது, பூண்டு, இஞ்சி மற்றும் சில மசாலாப்  பொருள்கள்  (சிவப்பு மிளகு, பட்டை, மஞ்சள்) சேர்க்கப்பட்ட உணவுகளை உண்ணக் கூடாது.
அதேபோல வைட்டமின் கே சத்துள்ள கீரை, முட்டைக்கோஸ் மற்றும் புரோக்கோலி போன்ற உணவுகளை உட்கொள்ளக் கூடாது. இவை மருந்தின் வீரியத்தை குறைத்துவிடும். 

மாத்திரை

பொதுவாக நோய்க்காக மருந்து, மாத்திரைகள் உட்கொள்ளும்போது, சாப்பிடக் கூடாதவை…
* பழச்சாறு, சோடா கலந்த பானம், காஃபின் கலந்த குளிர்பானத்துடன் மாத்திரை சாப்பிடுவதைத் தவிர்த்து, தண்ணீரைப் பயன்படுத்த வேண்டும்.
* மருந்து, மாத்திரை உட்கொள்ளும்போது, மது அல்லது புகை பிடித்தல் கூடவே கூடாது.
*  மருந்தை, உணவு சாப்பிடும் முன்னர் சாப்பிட வேண்டுமா அல்லது உணவுக்கு பிறகு சாப்பிட வேண்டுமா என்பது குறித்த மருத்துவர்களின் அறிவுரைகளைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்.

நன்றி:- விகடன். & பொதுநல மருத்துவர் எம்.அருணாச்சலம்

நன்றி:- ஜி.லட்சுமணன் 

 

பிரிவுகள்:கட்டுரைகள், மருத்துவம் குறிச்சொற்கள்:, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

ஸ்பெஷல் ரெசிபிகள் சர்க்கரை நோயாளிகளுக்கு! – பிரேமா நாராயணன்,


இன்றைய தலைமுறையினரைப் பாடாய்ப்படுத்திவரும் மிக முக்கிய நோய்களில் ஒன்று… சர்க்கரை நோய். இந்த நோய்க்கான அறிகுறிகள் தென்பட்ட உடனேயே, பலரும் பெருங்குழப்பத்துக்கு ஆளாவது உணவு பற்றித்தான். 

”இனிமே இனிப்பையே தொடக் கூடாதோ? அரிசி, உருளைக்கிழங்கு கிட்டக்கூட நெருங்கக் கூடாதாமே. வெறும் பாகற்காய்தான் சேர்த்துக்கணுமா?” என்பது போன்று பல சந்தேகங்கள் மனதில் எழும்.

”சர்க்கரை நோயைக் கட்டுப்பாட்டில் வைக்க, எதை சாப்பிடலாம், எதை சாப்பிடக் கூடாது என்று தெரிந்து கொள்வது மிக முக்கியம்.

உணவுப்பழக்கத்தின் மூலமே சர்க்கரை நோயைப் பெரும்பாலும் கட்டுப்படுத்திவிடலாம்” என்று சென்னை எம்.வி.டயபடீஸ் சென்டரில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக உணவு மற்றும் ஊட்டச்சத்து நிபுணராகப் பணிபுரியும் ஷீலா பால் கூறுகிறார்.

”சர்க்கரை நோயாளிகள், மூன்று வேளை உணவை, ஆறு வேளையாக சிறுசிறு பகுதிகளாகப் பிரித்துச் சாப்பிட வேண்டும். எதையுமே அளவோடு கொஞ்சமாக சாப்பிட வேண்டும். சர்க்கரை, இனிப்பைத் தவிர உடலுக்கு வேறு எந்தப் பலனையும் தருவது இல்லை. இனிப்புகளை நிறைய சாப்பிடுவதால்தான், உடலில் சர்க்கரைச் சத்து சேர்ந்துவிடுகிறது. எனவே, தவிர்ப்பது முக்கியம்” என்கிற ஷீலா பால், சர்க்கரை நோய்க்கான சில ஸ்பெஷல் ரெசிபிகளைச் சொல்ல, அவற்றைச் செய்து காட்டி அசத்தினார் சமையல் கலை நிபுணர் ரேவதி சண்முகம்.

சத்துமாவு பாசிப்பருப்பு அடை

தேவையானவை: எல்லாத் தானியங்களும் சேர்த்து அரைத்த சத்து மாவு, பாசிப்பருப்பு – தலா அரை கப், பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் – கால் கப், பொடியாக நறுக்கிய பூண்டு, கொத்துமல்லித் தழை – தலா ஒரு டேபிள்ஸ்பூன், மிளகு, சீரகத்தூள் – ஒரு டீஸ்பூன், உப்பு,  எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: பாசிப் பருப்பை அரை மணி நேரம் ஊறவைத்து, கரகரப்பாக அரைக்கவும். அரைத்த மாவுடன், சத்துமாவையும் சேர்த்துக் கரைத்துக்கொள்ளவும். அதில் வெங்காயம், பூண்டு, கொத்துமல்லி, மிளகு, சீரகத்தூள் எல்லாவற்றையும் சேர்த்துக் கலக்கவும். தோசைக்கல்லைக் காயவைத்து, சிறிய அடைகளாக ஊற்றி, சுற்றிலும் எண்ணெய்விட்டு இரண்டு பக்கமும் வேகவைத்து எடுக்கவும். அடைக்குத் தொட்டுக்கொள்ள, காரச்சட்னி அருமையாக இருக்கும்.

 கம்பு தயிர் சாதம்

தேவையானவை: கம்பு – ஒரு கப், தண்ணீர் – 5 கப், பால் – ஒன்றரை கப், தயிர் – ஒரு கரண்டி, தாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய் – தலா 2, இஞ்சி – ஒரு துண்டு, பெருங்காயம் – ஒரு சிட்டிகை, கறிவேப்பிலை, உப்பு – சிறிதளவு, எண்ணெய் – 2 டீஸ்பூன்.

செய்முறை: கம்பை சிறிது தண்ணீர் தெளித்துப் பிசறி வைக்கவும். சிறிது நேரம் கழித்து, மிக்ஸியில் போட்டு, ‘விப்பர்’ பட்டன் கொண்டு, இரண்டு முறை அடித்து எடுத்துப் புடைத்து, தோலை நீக்கிக்கொள்ளவும். (கம்பை ஒரு தட்டில் பரத்தி ஊதினால், தோல் போய்விடும்).  பிறகு, மீண்டும் மிக்ஸியில் போட்டு ரவைப் பதத்தில் உடைத்துக்கொள்ளவும். பச்சை மிளகாய், இஞ்சியைப் பொடியாக நறுக்கவும்.

உடைத்த கம்புடன் 5 கப் தண்ணீர் சேர்த்து, குக்கரில் மிதமான தீயில் வைக்கவும். நாலைந்து விசில் வந்ததும் இறக்கி, பிரஷர் போனதும் திறந்து, பால் சேர்த்து நன்கு கிளறவும்.

பிறகு, கடாயைக் காயவைத்து, எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம் தாளித்து, பொன்னிறமானதும், கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் கிள்ளிப்போட்டு, பச்சை மிளகாய், இஞ்சியை வதக்கி, கம்பு சாதத்தில் சேர்க்கவும். கடைசியாக, உப்பு, தயிர், தேவையான தண்ணீர் சேர்த்து நன்றாகக் கிளறிப் பரிமாறவும்.  

 மாங்காய் இஞ்சி   நெல்லிக்காய்த் துவையல்

தேவையானவை: பெரிய நெல்லிக்காய் – 4, மாங்காய் இஞ்சி – 50 கிராம், கொத்துமல்லித் தழை – கைப்பிடி, பச்சை மிளகாய் – 2, புளி – சிறு அளவு, துருவிய தேங்காய் – ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு – தேவையான அளவு, எண்ணெய் – 2 டீஸ்பூன்.

செய்முறை: மாங்காய் இஞ்சியைத் தோல் நீக்கி, துண்டுகளாக நறுக்கவும். நெல்லிக்காயையும் கொட்டை நீக்கி, நறுக்கிக்கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் இஞ்சி, நெல்லிக்காயுடன் மற்ற பொருட்களையும் போட்டு ஐந்து நிமிடம் வதக்கி, ஆறவைத்து, தண்ணீர் சேர்க்காமல் அரைத்து எடுக்கவும்.

சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிடவும், பிரெட், தோசையின் மேலே தடவி சாப்பிட சுவையாக இருக்கும்.

குறிப்பு: இந்தத் துவையலை சாதத்தில் கலந்து கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, ஒரு துளி நெய்விட்டுக் கலந்தால், சுவையான ‘மாங்காய் இஞ்சி – நெல்லிக்காய் சாதம்’ தயார்.

 கலர்ஃபுல் குடமிளகாய் சாலட்

தேவையானவை: சிவப்பு, மஞ்சள், பச்சை குடமிளகாய்கள் – தலா பாதி அளவு, லெட்டூஸ் இலை – சிறிதளவு, தக்காளி – 1, ஆலிவ் ஆயில் – 2 டேபிள்ஸ்பூன், வினிகர் (அல்லது) எலுமிச்சைச் சாறு, பொடியாக நறுக்கிய புதினா – தலா ஒரு டேபிள்ஸ்பூன், சர்க்கரை – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: மூன்று நிற குடமிளகாய்களையும் நீளவாக்கில், மெல்லியதாக நறுக்கவும். தக்காளியையும் மெல்லிய நீள வில்லைகளாக நறுக்கவும். லெட்டூஸ் இலைகளைக் கிழித்துப் போடவும்.    

ஒரு சிறிய பாத்திரத்தில் ஆலிவ் ஆயில், உப்பு, சர்க்கரை, வினிகர் (அல்லது) எலுமிச்சைச் சாறு, பொடியாக நறுக்கிய புதினா சேர்த்து, நறுக்கி வைத்திருக்கும் காய்களை சேர்த்து நன்றாகக் கலந்து பரிமாறவும்.

குறிப்பு: நகரங்களில் உள்ள டிபார்ட்மென்டல் ஸ்டோர்களில் ‘ஓரிகானா’ என்னும் பதப்படுத்திய, வாசனை இலை கிடைக்கிறது. புதினாவுக்குப் பதிலாக இந்த இலை அரை டீஸ்பூன் சேர்க்கலாம். சாலட்டின் மணமும் சுவையும் இன்னும் தூக்கலாக இருக்கும்.

 முளைகட்டிய பாசிப்பயறு சூப்

தேவையானவை: முளைகட்டிய பாசிப்பயறு – அரை கப், பெரிய வெங்காயம் – 1, பூண்டு – 4 பல், தனியாதூள் – 2 டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், பொடியாக நறுக்கிய புதினா, கொத்துமல்லி, எண்ணெய் – தலா ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு – தேவையான அளவு, தேங்காய்ப்பால் – ஒரு கரண்டி.

செய்முறை: வெங்காயம், பூண்டைத் தோலுரித்து பொடியாக நறுக்கவும். பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், நறுக்கிய பூண்டு, வெங்காயத்தைச் சேர்த்து நன்றாக வதங்கியதும், புதினா, கொத்துமல்லி சேர்த்து வதக்கவும். 3 டம்ளர் தண்ணீரில், தனியாதூளைக் கரைத்து வடிகட்டி, வதக்கிய கலவையில் சேர்க்கவும்.  நன்றாகக் கொதிக்கும்போது, முளைகட்டிய பயறைச் சேர்த்து, வேகவிடவும். அரை வேக்காடு வெந்ததும் இறக்கி, தேவையான உப்பு சேர்த்து, தேங்காய்ப்பாலை ஊற்றிக் கலந்து பரிமாறவும். தனியா வாசத்துடன், வித்தியாசமான சுவையில் இருக்கும் இந்த சூப்.

விருப்பப்பட்டால் அரை டீஸ்பூன் மிளகுத்தூளை, கொதிக்கும்போது சேர்க்கலாம். சிறிது கெட்டியாக வேண்டும் என்பவர்கள், பாதி வெந்த நிலையில் இருக்கும் பயறை ஒரு டேபிள்ஸ்பூன் எடுத்து, அரைத்து, சூப்பில் சேர்த்துக் கலக்கிக்கொள்ளலாம்.

நச்சுக்கொட்டைக் கீரை மிளகுப் பொரியல்

தேவையானவை: கழுவி நறுக்கிய நச்சுக்கொட்டைக் கீரை – 2 கப், பெரிய வெங்காயம் – 1, பூண்டு – 6 பல், வறுத்துப் பொடித்த மிளகுத்தூள், கடுகு – தலா ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு. தாளிக்க: எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன், சீரகம் – அரை டீஸ்பூன்.

செய்முறை: பூண்டு, வெங்காயம் இரண்டையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். எண்ணெயைக் காயவைத்து, கடுகு, சீரகம் தாளித்து, பூண்டு சேர்த்து வதக்கவும். பிறகு வெங்காயத்தையும் சேர்த்து வதக்கி, கீரையைச் சேர்க்கவும். தேவையான உப்பு சேர்த்து, மூடி வைக்கவும். தண்ணீர் சேர்க்க வேண்டாம்.

கீரை நன்கு வெந்ததும், மிளகுத்தூள் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும். விருப்பப்பட்டால் ஒரு டேபிள்ஸ்பூன் தேங்காய்த்துருவல் சேர்த்துக் கொள்ளலாம்.

பொரியலில் மிளகு வாசம் மூக்கைத் துளைக்கும்.

குறிப்பு: நச்சுக்கொட்டைச் செடி எல்லா இடத்திலும் பரவலாக வளர்ந்து கிடக்கும். பொதுவாக யாரும் தேடாமல் கிடக்கும் இந்த இலைகள், அதிக சத்து நிரம்பியவை. அடிக்கடி செய்து சாப்பிடலாம். உடலுக்கும் நல்லது.

படங்கள்: எம்.உசேன்

 

 

பிரிவுகள்:30 வகை டயட் சமையல், கட்டுரைகள், சமையல் குறிச்சொற்கள்:, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

சிறுவர் உள நல மருத்துவ ஆலோசனைகள் – ஹஸன் பஷரி, உளவியல் ஆலோசகர்

திசெம்பர் 20, 2015 1 மறுமொழி

kids1. உங்கள் குழந்தைகளை உறக்கத்திலிருந்து எழுப்பாட்டுவதற்கு 5 நிமிடங்களுக்கு முன்னிருந்தே அவர்கள் அருகே அமர்ந்து அவர்களை தொட்டு எழுப்பாட்டுங்கள்.

2. அவர்கள் தூங்குமிடத்திற்கு சென்று அவர்களோடு நாளைய அவர்களது வேலைகளை ஞாபகப்படுத்தி அவர்களது உள்ளங்களை குளிரச் செய்து அவர்களை தூங்க வையுங்கள் அது அவர்கள் காலை வேளையில் உற்சாகமாகமாகவும் சுருசுருப்புடனும் எழும்புவதற்கு துணை புரியும்.

3. உங்கள் பிள்ளைகளுக்கு அருகில் அமர்ந்து அவர்களிடம் நான் உங்களை அதிகம் நேசிக்கிறேன் உன்னால் நான் அதிகம் பெருமைப் படுகிறேன் உனக்கு ஏதாவது நான் உதவிகள் செய்து தரவேண்டுமா? நீ நல்ல ஒரு திறமை சாலி ஆற்றல் மிக்கவன் என்று சொல்லுங்கள் அவர்களை அன்பாக அணைத்து முத்தமிடுங்கள்.

4. காலையில் நித்திரையிலிருந்து எழும்பிய உடன் டீவி பார்ப்பதையோ ஐபேட் மொபைல் போன்ஸ் போன்றவைகள் பாவிப்பதையோ ஒருகாலமும் அனுமதித்து விடாதீர்கள். ஏனெனில் அதன் கதிர்கள் தூங்கி எழும்பிய நிலையில் இருக்கும் கண்களுக்கு பாதிப்பை உண்டு பண்ணிவிடும்.

5.உங்கள் குழந்தைகள் உறங்கும் முன் அவர்களது முதுகை தடாவி விடுங்கள். அது உங்களுக்கும் உங்கள் குழந்தைகளுக்குமிடையில் ஓர் உணர்வு பூர்வமான தொடர்பை உண்டு பண்ணும். சிறந்த முறையில் குழந்தை நித்திரை கொள்வதற்கும், சாப்பிட்ட உணவு விரைவில் செமிபாடடைவதற்கும் காரணமாய் அமைந்து விடும்.

6.குழந்தைகள் சற்று வளர்ந்து விட்டாலும் வாரத்தில் ஒரு நாளாவது குடும்பமாக கணவன் மனைவி குழந்தைகள் என்று ஒரே இடத்தில் உறங்குங்கள். அது உங்கள் குழந்தைகளின் உள்ளத்திலிருக்கும் பாரத்தை மனக் கவலைகளை நீக்கி உங்கள் மீது அவர்களையறியாத ஓர் உள்ளார்ந்த பிணைப்பை ஏற்படுத்தி விடும்.

7. குழந்தைகளின் வேண்டுதல்கள் தேவைகள் நிறைவேறாத பொழுது அவர்கள் அழுது மன்றாடி ஒரு பொருளை அடைய முயற்சிப்பதை தடுத்து நிறுத்துங்கள். ஏனெனில் அழுதால் ஒரு பொருள் கிடைக்கும் என்ற மனப்பதிவை அது அவர்களுக்கு உண்டு பண்ணி பிடிவாதத்தால் சாதிக்க நினைக்கின்ற எண்ணம் அவர்களிடம் உண்டாகி விடும்.

8. உண்மை, நேர்மை, துணிவு, விட்டுக் கொடுத்தல், மன்னித்தல், அன்பு காட்டல் போன்ற நல்ல பண்புகள் மீது அவர்களுக்கு ஆர்வத்தை ஊட்டுங்கள்.

9. பொய், ஏமாற்று, திருட்டு, அநீதியிழைத்தல், பெருமை, பொறாமை, சூழ்ச்சி செய்தல் போன்ற கெட்ட குணங்களை வளரவிடாமல் அவர்களை எச்சரித்து வையுங்கள்.

10. பாதை ஒழுங்குகளைக் கற்றுக்கொடுங்கள். பாதையில் செல்லும் போது அமைதியாகவும், நிதானமாகவும் நடந்து கொள்ளப் பழக்குங்கள்.
உங்கள் குழந்தைகள் உங்களை அப்படியே பின்பற்ற முயற்சிப்பர். எனவே, நீங்கள் நல்ல முன்மாதிரியாக நடந்து அவர்களை வழிநடத்துங்கள்.

11. குழந்தைகளை படிக்கும் படி திணிக்காதீர்கள். கல்வியின் முக்கியத்துவம், ஏன் கற்க வேண்டும் என எடுத்துறைங்கள்.

12. பிறருக்கு மத்தியில் குழந்தைகளை திட்டாதீர்கள். பெற்றோர்களாகிய நீங்கள் குழந்தைகளுக்கு முன் சண்டை பிடிக்காதீர்கள். அது உளவியல் பிரிவினைகளை ஏற்படுத்தும்.

13. அவர்களின் விளையாட்டு, ஓய்வு நேரம், மகிழ்ச்சிகரமான நேரங்களில் நீங்களும் அவர்களுடன் பங்கெடுங்கள். அவர்கள் பூரண பாதுகாப்புடனும், அன்பான அரவணைப்புடனும் வாழ்கின்றனர் என்பதை அவர்கள் உணரும் வண்ணம் நடந்துகொள்ளுங்கள்.

14. பிள்ளைகளின் அறிவை கண்ணியப்படுத்துங்கள்; அவர்கள், பிரச்சினைகளை எப்படி எதிர்கொள்கின்றனர் என்பதை அவதானியுங்கள்.

15. குழந்தைகள் நவீன தொழில் நுற்பத்தைக் கற்றுக்கொள்ள உதவுங்கள்; கணினி-இணையப் பயன்பாட்டை அவர்கள் அறிந்துகொள்ளவும், அதன் மூலம் பயன்பெறவும் வழிகாட்டுங்கள்.kids_ph3

16. சிறு வயதிலிருந்தே குழந்தைகளுக்கு நீதிக்கதைகளை போதிக்க வேண்டும். அது எதிர்காலத்தில் நேர்மையானவர்களாக வாழ்வதற்கு உதவியாக இருக்கும்.

17. அவர்கள் உடல் ஆரோக்கியம் மிக்க விளையாட்டுக்களில் ஈடுபட வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுங்கள்.

18. இயற்கை உபாதைகளை அடக்கி வைக்க கூடாது என்பதை கற்றுக்கொடுங்கள். குறிப்பாக சிறுநீரை அடக்கி வைப்பது ஆபத்தானது (பயந்த சுபாவத்தையும் தாழ்வு மனப்பான்மையையும் உண்டுபண்ணும், சிறுநீரகத்தில் மற்றும் சிறுநீர்ப் பாதையில் கற்கள் உருவாகும்) என்பதை புரியவையுங்கள்.

இப்படி தொடர்ந்து பழக்கப்படுத்திக் கொண்டால் பிள்ளைகளிடம் நல்லவிதமான மாற்றங்களை விரைவில் காண்பீர்கள்.

குறிப்பு:

நம் தவறான வாழ்கைமுறையால் ஏற்படும் தொந்தரவுகளுக்கு எந்த மருந்துக்களாலும் மருத்துவமுறைகளாலும் நிரந்தராமான தீர்வை தர இயலாது.

இரத்த அழுத்தத்தைக் குணமாக்கும் செலரி – Celery (Medical Tips)


இரத்த அழுத்தத்தைக் குணமாக்கும் செலரி !!!! ( Celery )

celery

இரத்த அழுத்தத்தைக் குணமாக்கும் செலரி என்னும் அரிய காய்கறி செலரி (Celery) என்பது சாலட் கீரை வகையைச் சேர்ந்ததாகும். இதைச் சமைக்காமலேயே சாப்பிடலாம்.

செலரியின் இலை, இலைத் தண்டு, இலைக்  காம்பு முதலியவை உணவாக உபயோகப் படுத்தப்படுகின்றன. இந்தியாவில் கீரைத்தண்டு மாதிரி அடிக்கடி இதைச் சமைத்துச் சாப்பிடும் காலம் ஆரம்பமாகிவிட்டது.

காளானைப் போலவே இதுவும் ஓர் அரிய காய்கறியாகும். 1994 ஆம் ஆண்டு லாஸ்ஏஞ்சல்ஸைச் சேர்ந்த மின்க்லீ என்பவர் இரத்த அழுத்த நோயால் அவதிப்பட்டார். தினமும் அவர் இரண்டு செலரித் தண்டுகள் வீதம் ஒரு வாரம் வரை சாப்பிட்டு, அத்தொல்லையிலிருந்து குணமாகி இயல்பான நிலைக்கு வந்துவிட்டார். இவர் மகன் குலாங் டிலீ, ஒரு மருத்துவக் கல்லூரி மாணவர். இவர் செலரியிலிருந்து தயாரிக்கப்பட்ட ஒரு வித இரசாயனப் பொருளை ஊசி மூலம் எலிகளுக்கு ஊட்டினார். அந்த எலிகளின் இரத்த அழுத்தம் 12 முதல் 14 சதவிகிதம் வரை குறைந்திருந்தது. இரத்த அழுத்தம் குறைகிறதே என்று இதை அதிகமாகச் சாப்பிடவும் கூடாது. இந்த உண்மையையும் இவர் கண்டுபிடித்துள்ளார். அளவுடன் செலரியை சாப்பிட்டு வந்தால் இரத்த அழுத்த நோயைப் பரிபூரணமாகக் குணமாக்கிக் கொள்ளலாம்.

குணமாகும் நோய்கள்!

உணவு செரிமானமின்மை, ஆஸ்துமா, இரத்த சோகை, சாகேமியா, உடற் பலவீனம், இதய நோய்கள், சிறுநீரகத்தில் கற்கள் உருவாதல், தூக்கமின்மை, மூட்டு வாதம், ஊளைச்சதை, நரம்புக் கோளாறுகள், உயர் இரத்த அழுத்தம் முதலிய நோய்களை செலரித் தண்டுகள் குணப்படுத்துகின்றன.

‘திடீர்’ நெஞ்சுவலி இனி இல்லை!

இதில் உள்ள மக்னீசியமும், இரும்புச் சத்தும் குறிப்பிடத்தக்கவை. அவ்விரண்டும் அதிக அளவில் இருப்பதால் இரத்த சோகை, லூகேமியா முதலிய நோய்கள் உடனே குணமாகின்றன. இரத்த விருத்தியும் விரைந்து ஏற்படுகிறது.

இதயமும், இதயத்திற்குச் செல்லும் நரம்புகளும் தடையின்றி இயங்க மக்னீசியம் கூடுதலாகத் தேவை. அந்தத் தேவையை செலரியில் உள்ள மக்னீசிய உப்புகள் பூர்த்தி செய்துவிடுகின்றன. இதனால் நெஞ்சுவலி, மாரடைப்பு போன்றவை ஏற்படாமல் முன்கூட்டியே தடுக்கப்படுகின்றன.

100 கிராம் செலரியில் கிடைக்கும் கலோரி 37 ஆகும். இதன் இலைகளில் 88% ஈரப்பதமாகும்; புரதம் 6.3%, கொழுப்பு 0.6%, நார்ச்சத்து 1.4%, கார்போஹைடிரேட் 1.6%, தாது உப்புகள் 2.1% ஆகும். தாது உப்புகளும் வைட்டமின்களும் அதிக அளவில் உள்ளன. கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து ஆகியவற்றுடன் வைட்டமின் – ‘ஏ’, வைட்டமின் – ‘பி’ வைட்டமின் – ‘சி’ போன்றவையும் இருப்பதால் இது ஓர் அடிப்படை உணவும் ஆகிறது.

உடல் வளர்ச்சிக்குப் புரதம் தேவை. பிற காய்கறிகளில் அதிக பட்சம் 2% முதல் 3% வரை புரதம் உள்ளது. ஆனால், அது செலரியில் 6.3% ஆக இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்தக் காரணங்களால் (தாது உப்புகளால்) இரத்தத்தில் புளிப்பு ஏற்பட்டு இரத்தம் கெட்டுவிடுவது தடுக்கப்படுகிறது. அத்துடன் இரத்தத்தில் நஞ்சுப் பொருள்கள் சேர்வதும் தடை செய்யப்படுகிறது. மேலும் கீல் வாதம், ???????????????????????????????ஊளைச் சதை நோய் போன்றவையும் குணப்படுத்தப்படுகின்றன.

செலரியின் தண்டுகளையும் இலைகளையும் சூப்பாகத் தயார் செய்து சாப்பிடலாம்; இல்லை எனில் சாறாக மாற்றி அருந்தலாம். செலரியின் விதையும் மருத்துவக் குணங்கள் நிரம்பியது. அதைக் சாறாக்கி வாத நோய்க்காரர்கள் அருந்தலாம்.

நரம்புக் கோளாறுகளுக்கு….

வலிப்பு நோயால் ஏற்பட்ட இசிப்பு நோய், நரம்புத் தளர்ச்சி நோய் முதலியவை குணமாகும். இதற்காகச் செலரித் தண்டு, இலை ஆகியவற்றின் சாற்றை காரட் சாறுடன் சேர்த்து அருந்த வேண்டும். இந்த முறையில் தினமும் ஒரு வேளை அருந்தினால் நரம்பு நோய்கள் குணமாகும்.

புற்றுநோய், நுரையீரல் அழற்சி, ஆஸ்துமா, தொண்டை தொடர்பான நோய்கள் ஆகியன குணமாகச் செலரி சூப் அருந்த வேண்டும். அல்லது இலை, தண்டு ஆகியவற்றுடன் சிறிதளவு நீர் சேர்த்து வதக்கி அடுப்பிலிருந்து இறக்கிச் சாப்பிட வேண்டும்.

சிறுநீரில் கற்கள் உருவாகாமல் இருக்கவும் இத்தண்டு பயன்படுகிறது. வாரத்திற்கு நான்கு நாள்களாவது செலரியைச் சமையலில் சேர்த்தால் சிறுநீரகத்தில் கற்கள் ஏற்படா. கற்கள் இருந்தாலும் இது கரைத்துவிடும்.

யுனானி வைத்தியத்தில் செலரி வேரைச் celery-natural-healing-foodசிறுநீரகக் கற்களைக் கரைக்க மருந்தாகப் பயன்படுத்துகின்றனர்.

சோடியம் உப்பு அதிகமாய் இருப்பதால் இது மூட்டு வீக்க நோய்களுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது. இலைகளையும் மெல்லிய தண்டுகளையும் சாறாக்கி அருந்த வேண்டும். இந்த முறையில் அருந்தினால் மூட்டு வீக்கம் குணமாகும்.

சத்துணவு டானிக்!

உடல் பலவீனமானவர்களுக்கும் சத்துணவுக் குறைவால் ஊட்டம் இல்லாமல் இருப்பவர்களுக்கும் எளிய டானிக் ஒன்று இருக்கிறது. அது இதுதான்.

செலரியின் வேரைக் காய வைத்துப் பொடியாக இடித்து வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு தேக்கரண்டி பொடியுடன் அதே அளவு தேனும் சேர்த்துச் சாப்பிட வேண்டும். தினமும் இரண்டு வேளை இப்படிச் சாப்பிட்டால் உடல் பலன் பெறும்.

‘சாலட்’ செய்வது உண்டா?

மிகவும் நறுமணமுள்ள காய்கறி இது. எனவே, இதை மற்றக் காய்கறிகளுடன் சேர்த்துச் சமைத்தால் மணமும் ருசியும் முன்னணியில் நிற்கும்.

வெள்ளரிக்காய், தக்காளி, முள்ளங்கி, காரட் போன்றவற்றை சிறு துண்டுகளாக வெட்டிப் போட்டு சாலட் (Salad) செய்வார்கள். இதில் செலரியின் இலைகளையும், தண்டுகளையும் வெட்டிப் போட்டு எலுமிச்சைச் சாற்றையும் கலக்க வேண்டும். பச்சைக் காற்கறிகள் சேர்த்த இந்த சாலட் சத்துணவாக ஆகிவிடுகிறது.

செலரியின் கொட்டைகள் சிறுநீர் நன்கு பிரிய பயன்படுகின்றன. வயிற்றுப் பொருமலைக் குணமாக்குகின்றன. தாம்பத்திய வாழ்க்கையில் ஆர்வத்தைத் தூண்டுகின்றன. நரம்புத் கோளாறுகளைக் குணமாக்குகின்றன. இந்த விதைகளைக் காயவைத்து இடித்துத் தூளாக வைத்துக்கொண்டு தேனுடன் கலந்து சாப்பிட வேண்டும்.

இவ்வளவு சிறப்புகள் கொண்ட செலரியின் தாயகம் சீனாதான். கி.மு. 5ஆம் நூற்றாண்டில் இருந்தே செலரியை இவர்கள் அறிந்திருக்கிறார்கள். ஐரோப்பாவிலும் இதே காலகட்டத்தில் செலரியைப் பயிர் செய்திருக்கிறார்கள்.

உலகம் முழுவதும் செலரியின் மருத்துவக் குணங்களுக்காகத் தோட்டங்களில் வளர்க்க ஆரம்பித்து முந்நூறு ஆண்டுகளுக்கு முன்புதான்.

செலரியை அடிக்கடி உணவில் சேர்த்து உடல் உறுதி பெறுவோம்.

பிரிவுகள்:இரத்த அழுத்தத்தைக் குணமாக்கும் செலரி Celery, கட்டுரைகள் குறிச்சொற்கள்:, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

ஏலக்காயின் மருத்துவ குணங்கள்

செப்ரெம்பர் 22, 2014 பின்னூட்டமொன்றை இடுக

ஏலக்காய்cardamom என்பது நம் அடுக்களையில் இனிப்பு காரம் என்கிற எவ்வகை உணவுக்கும் மணம் சேர்ப்பதற்குத் தான் பயன்படுகிறது என்று நம்மில் பலர் இது நாள் வரை எண்ணி வந்தோம். இந்தக் கட்டுரையின் மூலம் அதன் மகத்தான மருத்துவ குணங்களையும் நாம் தெரிந்து கொள்வோம். 

ஏலக்காய் ஒரு அகட்டு வாய்வு அகற்றி ஆகும். வாந்தியை மற்றும் குமட்டலைப் போக்கக் கூடியது. பசியைத் தூண்ட கூடியது. அல்லது அதிகரிக்கச் செய்வது. பிடிப்பைப் போக்கக் கூடியது. அல்லது கடுப்பைக் கண்டிக்கக் கூடியது. நுண்கிருமிகளைஅழிக்க வல்லது. மூச்சிரைப்பைத் தணிக்க கூடியது.

வயிற்றுக் கோளாறுகளைப் போக்க கூடியது. ஏலக்காயினின்று பெறப்படும் எண்ணெய் வயிற்றுக் கடுப்பைத் தணிக்க வல்லது. மேலும் கிருமி நாசினியாக விளங்கக் கூடியது. கால் பிளாடர் என்னும் பித்தப் பையைத் தூண்டி பித்தத்தைச் சுரக்கச் செய்வது.

ஏலக்காயில் கார்போ ஹைட்ரேட்ஸ் எனப்படும் மாவுச்சத்து, புரோட்டீன் எனப்படும் புரதச் சத்து பைபர் எனப்படும் நார்சத்து விட்டமின் சத்துக்களான விட்டமின் சி, நியாசின், பெரிடாக்ஸின், ரிபோபிளேவின், மற்றும் தயாமின் ஆகியன உள்ளன. தாது உப்புக்களான பாஸ்பரஸ், செம்பு, இரும்புச்சத்து, சுண்ணாம்புச் சத்து, மெக்னீசியம், மாங்கனீஸ் மற்றும் துத்தநாகம் ஆகியன மலிந்துள்ளன.

ஏலக்காயை உணவில் சேர்ப்பதற்கான காரணம் அதன் மணந்தரும் தன்மைக்காக மட்டுமல்ல அது வாயுவை வெளியேற்றக் கூடியது. செரிமானத்தை துரிதப்படுத்தக் கூடியது. குடலின் சளிப் படலத்தை குளிர்விக்கச் செய்வது, இதனால் சீரண உறுப்புகள் செம்மையாகச் செயல்பட ஏதுவாகின்றது.

ஆயுள் வேத நூல்களின் படி ஏலக்காய் குடலிலுள்ள வாயுச் சத்தையும் நீர்ச்சத்தையும், கட்டுக்குள் வைத்து உண்ட உணவை விரைவிலும் முற்றிலுமாகவும் சீரணிக்க உதவுகின்றது என்பது தெரிய வருகின்றது ஏலக்காயில் நுண்கிருமிகளைக் கொல்லும் சக்தியும் நறுமணம் தருவதாகவும் இருக்கிறது.

வாய் துர்நாற்றத்துக்கு முக்கியமான காரணங்களான போதிய செரிமானமின்மை மற்றும் குடற்புண்களைச் சரி செய்யும் வல்லமை ஏலக்காய்க்கு உள்ளது. வாய் துர்நாற்றத்துக்கான வேறு எக்காரணம் ஆனாலும் அவற்றைக் கண்டிக்க கூடியதும் ஏலக்காய் மட்டும் ஆகும். குடல்புண் (அல்சர்) என்பது மிகச் சாதாரணமாக இன்று எல்லோராலும் சொல்லப்படுவதாக உள்ளது.

இது மிகத் துன்பம் தருவது மட்டுமின்றி பல அறுவைச் சிகிச்சைக்கும் நம்மை ஆளாக்குகிறது. ஏலக்காயில் உள்ள எண்ணெய்ச் சத்துக்கள் வயிற்றின் உட்சுவர் பகுதிகளுக்கு பலத்தைத் தருகிறது. மேலும் வாயினுள் ஊறும் எச்சிலை அதிகமாக சுரக்கச் செய்வதால் அமிலத்தன்மை குறைக்கப்படுகிறது.

ஏலக்காயில் உள்ள எண்ணெய் சத்து ஒருவகை குளிர்ந்த தன்மையை உண்டு பண்ணி வயிற்றெரிச்சலைத் தணிக்கும் தன்மை வாய்ந்தது. ஏலக்காய் நுரையீரலின் ரத்த ஓட்டத்தை தூண்டிச் செம்மைபடுத்த வல்லது. இதனால் நுரையீரலைச் சரியாக இயக்கி சுவாச நாளங்களையும் ஒழுங்குபடுத்துகிறது.

ஆஸ்துமா என்னும் மூச்சிறைப்பு, சளி, இருமல் ஆகியவற்றினின்று நிவாரணம் தருகின்றது. நெஞ்சுச் சளியைக் கரைத்து வெளித்தள்ளவும் ஏலக்காய் உதவுகின்றது. ஏலக்காயில் பொட்டாசியம், கால்சியம், மக்னீசியம் ஆகியவை நிறைந்திருப்பதால் உடலுக்கு சக்தியைத் தரும் ஒரு புதையலாகக் கருதப்படுகிறது.

உடலிலுள்ள ரத்தம், நீர்மம் திசுக்கள் ஆகியவற்றுக்கு முக்கியமான பொட்டாசியம் ஆகும். ஏலக்காயில் மிகுந்துள்ள இச்சத்து இதயத்துடிப்பை சீராக்கி ரத்த ஓட்டத்தை (பி.பி) சமப்படுத்த உதவுகின்றது. ஏலக்காயில் உள்ள செம்புச் சத்து, இரும்புச் சத்து, ரிமோபிளேவின், விட்டமின் சி, நியாஸின் ஆகியவை சிகப்பு அணுக்கள் உற்பத்திக்கு முக்கியமானவை.

சிவப்பு அணுக்களை அதிகரிக்கச் செய்து ரத்த சோகையிலிருந்து விடுதலை தருகிறது. ஏலக்காயில் நல்ல ஊட்டச்சத்தும் (டானிக்) தூண்டும் சத்து இருப்பதால் உடலுக்கு பலம் தருவதோடு உடல் உறவுக் குறைபாடுகளை போக்கக் கூடியது. விந்து முந்துதல் மற்றும் இயலாமை ஆகிய குறைபாடுகளைப் போக்கும் மருந்தாகக் கூடியது, உடல் உறவில் வன்மையும் நீண்ட நேரத்தையும் தரக் கூடியது.

இரண்டு அல்லது மூன்று ஏலக்காய்களைப் பொடித்து எடுத்துக் கொண்டு அத்துடன் சிறுதுண்டு இஞ்சி, நான்னைகந்து இலவங்கப்பூ (கிராம்பு) சிறிது தனியா (கொத்துமல்லி விதை) ஆகியவற்றை சேர்த்து அரைத்து வெந்நீருடன் உள்ளுக்குச் சாப்பிடுவதால் செரிமான மின்மைக்கும் வயிற்றை நிரப்பிய வாயு வெளியேறுவதற்கும் உதவும்.

ஏலக்காய் டீ தலைவலியையும் போக்கும். ஒரு கப் தேனீர் எனில் வழக்கமான தேயிலை தூளைச் சற்று குறைத்து பதிலாக இரண்டு ஏலக்காய் பொடித்து சேர்த்து தேனீர் வைத்துக் குடிக்க சீரணமின்மையால் வரும் தலைவலியோடு சாதாரணமாக வரும் மன அழுத்தம் தணியும்.

நான்கைந்து ஏலக்காயும் சிறிது புதினா இலைகளும் சேர்த்து அரை தம்ளர் நீரில் காய்ச்சி வடிகட்டிப் போதிய சுவை சேர்த்து மிதமான சூட்டோடு குடிப்பதில் விக்கல் உடனே நிற்கும்.

வெறும் ஏலக்காயை மட்டும் நான்கு போட்டு கொதிக்க வைத்து அத்துடன் பனைவெல்லம் சேர்த்து குடிக்க தலை கிறுகிறுப்பு, வெயிலில் அலைந்ததால் வந்த மயக்கம் போகும்.

அடிக்கடி வாயு வெளியேறுவது எனக்கு அவமானமாக இருக்கிறது என்னால் அலுவலகத்துக்குப் போகவே வெட்கமாக இருக்கிறது என்று சொல்பவர்கள் ஏலக்காய் இருக்க ஏன் அஞ்சுவது, ஏலக்காயை நன்கு காய வைத்து பொடித்து வைத்துக் கொண்டு வேண்டும்போது அரை தேக்கரண்டி பொடியை எடுத்து 150 மி.கி நீரிலிட்டு கொதிக்க வைத்து உணவு உண்ணும் முன் இதைப் பருகி வர வாயுத்தொல்லை வேறோடு வெட்டி எடுக்கப்படும்.

குழந்தைகளுக்கு செரிமானமின்மையாலோ வேறு காரணங்களாலோ வாந்தி ஏற்பட்டால் இரண்டு ஏலக்காய்களைப் பொடித்து அதைத் தேனில் குழைத்து தினம் இரண்டு அல்லது மூன்று வேளை நாவில் தடவி வர உடனே வாந்தி ஆவது நிற்கும்.

நான்கைந்து ஏலக்காய்களை நெருப்பிலிட்டுப் புகைக்கச் செய்து அப்புகையை நுகரச் செய்வதால் குழந்தைகளின் ஜலதோஷம், மூக்கடைப்பு குணமாகும். ஏலரிசி, சுக்கு, லவங்கம், சீரகம் இவை நான்கையும் ஓரெடையாய்க் கொண்டு பொடித்து தூளாக்கி வேளைக்கு 17கிராம் வீதம் கொடுத்து வர வயிற்று வலி குன்மம் இவை நீங்கும்.

இரண்டு அல்லது மூன்று ஏலக்காயைப் பொடித்து அத்துடன் அரை ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து பாலோடு காய்ச்சி போதிய சுவை சேர்த்து இரவு படுக்குமுன் குடிப்பதால் உடல் சோர்வு நீங்கி சோகையும் நீங்கும்.

நன்றி:- மாலை மலர்

பிரிவுகள்:ஏலக்காயின் மருத்துவ குணங்கள் குறிச்சொற்கள்:, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

சளி இருமல் போக்கும் இயற்கை மருந்துகள்

செப்ரெம்பர் 18, 2014 பின்னூட்டமொன்றை இடுக

 

நான்கு வால் மிளகைச் சிறிதளவு புழுங்கலரிசியுடன் வாயில் போட்டு மென்று அதன் ரசத்தை பருகினால் இருமல் குணமாகும்.zதூய்மையான அருகம்புல்லை எடுத்து நன்றாக மென்று பற்களில் வலியுள்ள பகுதியில் ஓதுக்கினால் பல்வலி உடனே குணமாகும்.பல் துலக்கி பின் தேனை ஈறு முழுவதும் தடவவேண்டும். சிறிது நேரம் கழித்து வாயைக்கொப்பளித்தால் பற்களில் உள்ள கிருமிகள் அழியும்.தேங்காய் எண்ணெயை நாள்தோறும் பலமுறை உதட்டில் தடவினால் உதடு வெடிப்பு உதட்டு புண், தோல் உரிதல் ஆகியன குணமாகும்.

அரிசியையும் திப்பிலியையும் சிறிதளவு எடுத்து தேனில் பத்து நாட்கள் ஊறவைத்து தினம் ஒரு திப்பிலியை வாயில் போட்டு அடக்கிக்கொண்டால் ஞாபக சக்தி அதிகரிக்கும்.

மழைக்காலத்தில் ஒ1486901_812454452109716_6686413115477420806_nரு தம்ளர் பாலில் சிறிதளவு சுக்கு பொடி கலந்து இரவு குடித்து வந்தால் காலையில் புத்துணர்வு பெறலாம்.

துளசி இலையை நன்றாக வெயிலில் காய வைத்து பொடி செய்து டீத்தூளில் சேர்த்து டீ தயாரித்து குடித்து வந்தால் நன்கு பசி எடுக்கும். குளிர்காலத்தில் ஏற்படக்கூடிய சளி, கபம் நீங்கும்.

அரிசி பொரியைத் தண்ணீரில் வேகவைத்து சாப்பிட்டால் ரத்த கொதிப்பினால் வரக்கூடிய தலை சுற்றல் குணமாகும். தலை சுற்றலுடன் வாந்தி ஏற்பட்டால் வெங்காயத்தினை சாறெடுத்து அதனுடன் தேன் கலந்து சாப்பிடலாம்.

துளசி இலைச்சாறு, 150 மிலி கற்கண்டு இவை இரண்டையும் கலந்து சர்ப்பத்தாகக் காய்ச்ச வேண்டும். அதில் வேளைக்கு ஒரு டீஸ்பூன் அளவு தினசரி இருவேளை உட்கொண்ட பின் பசும்பால் அருந்தலாம்.

இந்த சர்பத் சர்வரோக நிவாரணியாகும். மூளை, நரம்பு, இதயம், இரைப்பை ஆகியவற்றைப் பலப்படுத்தும். ஞாபகசக்தியை அதிகரிக்கும்.

கண்களில் நீர்வடியும் பிரச்சனை உள்ளவர்கள் தினந்தோறும் வெறும் வயிற்றில் சில பாதாம் பருப்புகளை மென்று தின்றால் நீர் வடிதல் குணமாகும்.

தூய்மையான தாய்ப்பாலில் இருதுளியைக் கண்களில் விட்டால் கண் சூடு, கண் எரிச்சல் ஆகியன குணமாகும். மாதுளை இளைச்சாற்றில் சில துளிகளை மூக்கில் விட்டால் மூக்கில் இருந்து ரத்தம் வடிவது நிற்கும்.

சித்தரத்தையைச் சிறிதளவு எடுத் துப்பொடித்து, பசும்பாலில் கலந்து உட்கொண்டால் தும்மல், மூக்கில் நீர்வடிதல் குணமாகும். பூண்டுத் தோல், மிளகு, ஓமம், ஆகியவற்றை இடித்து நெருப்பு அனலில் இட்டுப்புகையைப் பிடித்தால் மூக்கடைப்பு மூக்கில் நீர்வடிதல் முதலிய நோய்கள் குணமாகும்.

எலுமிச்சை பழத்தை பிழிந்து சாறு எடுத்து அதை சூடு படுத்தி சிறிது தேன் கலந்து நாள் ஒன்றுக்கு 3வேளை வீதம் உள்ளங்கையில் விட்டு உட்கொள்ள வேண்டும்.

இதனால் தொண்டை வலி தொண்டை தொடர்பான நோய்கள் குணமாகும்.

வெறும் வயிற்றில் பச்சை திராட்சை பழத்தின் சாற்றை பருகினால் வறட்டு இருமல் குணமாகும்.

தேனையும், எலுமிச்சை பழசாற்றையும் சமஅளவில் உட்கொண்டால் சளி இருமல் ஆகியன குணமாகும். நீர்கோவை விலகும்.

பிரிவுகள்:சளி இருமல் போக்கும் இயற்கை மருந்துகள், மருத்துவம் குறிச்சொற்கள்:, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

பேரிக்காய் சர்க்கரை நோயைத் தடுக்கும்!

மார்ச் 16, 2014 1 மறுமொழி

உண்ணும் விஷயத்திலும் ஆப்பிளுக்கு இணையான சத்துக்களைக் கொண்டது பேரிக்காய். ஆனால், அதன் துவர்ப்பு சுவை காரணமாக பலரும் அதை விரும்புவது இல்லை. சுவையாக இருக்கிறது என்று அயல்நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பேரிக்காயை வாங்கிச் சாப்பிடுபவர்கள் அதிகம். அது சரியல்ல… பேரிக்காய் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள் குறித்து திண்டுக்கல்லைச் சேர்ந்த சித்த மருத்துவர் ஆர்.பாலமுருகனிடம் கேட்டோம். 

‘நம் மக்கள் மறந்த கனிகளில், அதிக மருத்துவக் குணம் கொண்டது பேரிக்காய்தான். இது நம் உடலின் துப்புரவுத் தொழிற்சாலையைத் பழுதுபார்க்கும் ஆற்றல் கொண்டது. சிறுநீரகக் குறைபாடு உள்ளவர்களுக்கு இது மிகச்சிறந்த கனி. சிறுநீரை வெளியேற்றவும், பலவீனமான சிறுநீரகச் செயல்பாட்டைச் சரிசெய்யவும், உடலின் அதிகப்படியான நீரை வெளியேற்றி சுத்தப்படுத்தவும் உதவுகிறது.  


ஆண்களுக்கு 60 வயதைத் தாண்டும்போது இனப்பெருக்க மண்டலத்துக்குத் தொடர்புடைய ப்ராஸ்டேட் சுரப்பி வீக்கம் அடையும். இதனால் சிறுநீர் குழாயின் அளவு சுருங்கி, சிறுநீர் வெளியேறுவதில் சிக்கல் ஏற்படும். சிறுநீர் கழிக்கவே பெரிதும் அவதிப்படுவார்கள். இந்தநிலையில் இவர்களுக்கு ப்ராஸ்டேட் மற்றும் சிறுநீரகப் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பும் அதிகரிக்கிறது. அந்தக் குறைபாட்டைப் போக்கும் மிகச்சிறந்த மருந்து பேரிக்காய். உடல் எடையைக் குறைக்கும் ஆற்றலும் இதற்கு உள்ளது. உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பைக் கரைத்து உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்க பேரிக்காய் மிகவும் சிறந்தது!

பேரிக்காய் தோலின் துவர்ப்புத் தன்மைதான் இதன் பலமே! பேரிக்காயைத் தோலுடன் சாப்பிடும்போது அது இதயநோயை கட்டுப்படுத்துகிறது. இதில் நார்ச்சத்து நிறைந்துள்ளதால், டைப் 2 சர்க்கரை நோய்க்கான வாய்ப்பை குறைக்கிறது. இதிலுள்ள ஃபிளவனாய்ட்ஸ் மற்றும் ரசாயணங்கள் இன்சுலின் உணர்திறனை (சென்சிவிட்டி) மேம்படுத்துகிறது. மேலும், மலச்சிக்கல் தொடர்பான நோய்களுக்கும், குடல் புண்ணுக்கும் இது சிறந்த மருந்து. அதேபோல, செல்களின் வளர்ச்சியில் பேரிக்காய் முக்கிய பங்கு வகிக்கிறது.

யூரிக் அமிலம் உடலில் அதிகமாக சுரந்து, அது உடலிலிருந்து வெளியேறுவதில் சிரமம் ஏற்பட்டால் கணுக்காலில் வீக்கம் ஏற்படும். இந்த யூரிக் அமிலத்தை வெளியேற்றும் ஆற்றல் பேரிக்காய்க்கு உள்ளது.

குழந்தைகள் மற்றும் பெண்களின் பருவ மாற்றங்களின்போது ஏற்படும் நரம்பியல் சம்பந்தமான நோய்களுக்கும், எலும்பு வீக்கம் அடையாமல் இருப்பதற்கும் இது நல்ல மருந்தாகும். இதிலுள்ள ‘பாலி அன்சாச்சுரேட் அமிலம்’ செல்கள் புதுப்பித்துக் கொள்வதற்கும், பாக்டீரியா, வைரஸ் போன்ற நோய்க்கிருமி தாக்கதலில் இருந்தும் உடலுக்குப் பாதுகாப்பு அளிக்கிறது.

பேரிக்காய் மட்டுமல்ல, பேரிக்காய் மரத்தின் பட்டையும் கூட மருத்துவப் பயன்மிக்கதுதான்! பேரிக்காய் மரப் பட்டை வலி நிவாரணியாகச் செயல்படுகிறது. பட்டையைக் களிம்பாக்கி தசை பிடிப்பு, தசை வீக்கம் உள்ள இடங்களில் தேய்த்தால் வீக்கம் குறையும்.

பேரிக்காயில் நிறைய ஒட்டு ரகங்கள் உருவாக்கப்படுகின்றன. இவற்றைத் தவிர்த்து நாட்டுப்பழங்களை உண்பது மிகவும் சிறந்தது. தற்போது பூச்சிக்கொல்லி மருந்துகள் அதிக அளவில் பயன்படுத்தப்படுவதால், பழங்களை சாதாரணமாகக் தண்ணீரில் கழுவுவதற்குப்பதில், வெந்நீரில் கழுவி உண்பது மிகவும் அவசியம்’ என்றார்.

நன்றி:- டாக்டர் விகடன்.

நன்றி:-  மருத்துவர் ஆர்.பாலமுருகன்.

 

பிரிவுகள்:கட்டுரைகள், பேரிக்காய் குறிச்சொற்கள்:, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

உடல் எடையை குறைக்க வேண்டுமா?… அப்போ சூப் குடிங்க பாஸ்!…


ஒவ்வொரு மனிதருக்கும் தங்கள் உடலை கட்டுடலாக, ஒல்லியாக மற்றும் கவர்ச்சியாக வைத்திருக்க வேண்டும் என்பதே விருப்பமாக இருக்கும். இந்த கட்டுடலைப் பெறுவதற்காக பட்டினியும் கிடப்போம், விதவிதமான உணவுகளையும் சாப்பிட முயற்சி செய்வோம். நாம் எதை சாப்பிட்டாலும், அது நமது உடலில் கொழுப்பாக இருந்து வேலை செய்யும் என்பதே உண்மை.

எனவே, நம் உடலிலுள்ள தேவையற்ற கொழுப்புகளை நீக்கவும் மற்றும் எடையை குறைக்கவும் நாம் செய்ய வேண்டிய ஒரு ஸ்பெஷல் உணவு முறை உள்ளது – அது தான் சூப்! சூப்களை உணவுகளில் சேர்த்துக் கொள்வதன் மூலமாக உடலில் அதிகபட்ச கலோரிகள் கூடுவதை புத்திசாலித்தனமாக தவிர்க்க முடியும்.

வெள்ளை பீன்ஸ் சூப்

குறைவான சர்க்கரை, கொழுப்பு மற்றும் சோடியம் ஆகியவற்றைக் கொண்டிருக்கும் இந்த சுவைமிக்க பானம் எடையையும் குறைக்கும். நல்ல சுவையும், எளிதில் தயாரிக்கக் கூடியதாகவம் மற்றும் நிறைய புரதங்களை கொண்டிருப்பதும் இந்த சூப்பின் சிறப்பாகும்.

ப்ராக்கோலி சூப்

உங்களுக்கு ப்ராக்கோலியை பிடிக்காவிட்டாலும் கூட, எடை குறைப்பில் அதன் பலன்கள் அபரிமிதமானவை என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும். 100 கிராம் ப்ராக்கோலியில் 1.2 கிராம் கொழுப்பு மட்டுமே உள்ளது. ஆனால் நிறைய நார்ச்சத்தும், அவசியமான பிற ஊட்டச்சத்துக்களும் இதில் உள்ளன.

பரங்கிக்காய் சூப்

பரங்கிக்காய் சூப் சாப்பிடுவதன் மூலமாக உடலிலுள்ள தேவையற்ற கொழுப்புகளை உங்களால் வேகமாக குறைக்க முடியும். கொழுப்பும், சர்க்கரையும் குறைவாக இருந்தாலும், உடலுக்குத் தேவையான புரதங்களும், நார்ச்சத்தும் நிரம்பியிருக்கும் பானமாக இது உள்ளது.

கைக்குத்தல் அரிசியுடன் சிக்கன் சூப்

வேகமாக எடையைக் குறைக்க உதவும் சூப்களில் ஒன்றான இதில், குறைவான அளவு சோடியமும், அதிக அளவு புரதங்களும் உள்ளன. 100 கிராம் பழுப்பு அரிசி சிக்கன் சூப்பில் 0.7 கிராம் மட்டுமே கொழுப்பு உள்ளது.

உருளைக்கிழங்கு சூப்

இந்த சூப்பை தேர்ந்தெடுப்பதன் மூலம் உங்கள் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை கொடுப்பதுடன், எடையையும் உங்களால் குறைக்க முடியும். இந்த பானத்துடன் பல்வகை தானியங்களையும் சேர்த்துக் கொண்டு, குறைவான கொழுப்புடைய பண்டமாக சாப்பிடலாம்.

கேரட் சூப்

சுவைமிக்க கேரட் சூப்பில் கொத்தமல்லியை போட்டு குடிக்கும் போது அது குறைவான சர்க்கரையை கொண்டிருக்கும். 100 கிராம் அளவிற்கு இந்த சூப் உணவை சாப்பிடுபவர்களுக்கு 1.2 கிராம் அளவிற்கே கொழுப்புச் சத்து கிடைக்கும்.

பட்டாணி சூப்

நீங்கள் தினந்தோறும் பட்டாணியுடன், உங்களுக்குப் பிடித்த காய்கறிகளை சேர்த்து சூப்பாக குடித்து வந்தால் உடலின் எடையைக் குறைத்து ஆரோக்கியமாக இருக்க முடியும். புரதங்கள் நிரம்பியதாகவும், குறைவான கொழுப்பு, சர்க்கரை மற்றும் சோடியம் கொண்டதாகவும் இருக்கும் பட்டாணி சூப் ஆரோக்கியமான தேர்வாகவே இருக்கும்.

காளான் சூப்

100 கிராம் உணவில் 1.2 கிராம் அளவிற்கே கொழுப்பைத் தரும் குணம் கொண்ட காளான் சூப் எடையை குறைக்க தேர்ந்தெடுக்க வேண்டிய மிகச்சிறந்த சூப்களில் ஒன்றாகும். இது உடலுக்குத் தேவையான புரதங்களை கொடுப்பதுடன், தேவையற்ற எடையையும் திறமையுடன் குறைக்கிறது.

பருப்பு சூப்

மிகவும் ஆரோக்கியமானதாகவும், வைட்டமின்கள் மற்றும் நார்ச்சத்துகள் நிரம்பியதாகவும் உள்ள பருப்பு சூப் நீங்கள் எடையைக் குறைக்க தேர்ந்தெடுக்க வேண்டிய சரியான சூப் ஆகும். 100 கிராமில் 0.8 கிராம் அளவிற்கே கொழுப்பு உள்ள உணவாக இது உள்ளது.

தக்காளி சூப்

எளிமையாக தயாரிக்கவும் மற்றும் சுவையாக இருக்கவும் கூடிய தக்காளி சூப்பினால் எடையைக் குறைக்க முடியும் என்பது ஆச்சரியமான விஷயமாக தோன்றுகிறதா? இந்த சூப் உங்களுக்குத் தேவையான பொட்டாசியம், புரதங்கள் மற்றும் நார்ச்சத்துக்களை வழங்குகிறது. குறைவான கொழுப்பு மற்றும் சர்க்கரையைக் கொண்டிருக்கும் இந்த சூப்பில் வைட்டமின் சி உள்ளது.

விலைவாசியை சமாளிக்க 30 வகை ரெசிபி

பிரிவுகள்:கட்டுரைகள், சூப் குடிங்க, மருத்துவம் குறிச்சொற்கள்:, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,