தொகுப்பு

Archive for the ‘மகளீர்’ Category

குழந்தை வளர்ப்பு – தளிகா


Baby care tips

இன்றைய காலகட்டத்தில் தனிக்குடித்தனம் என்பது அதிகமாகிவிட்டது. வெளிநாடு, வெளி மாநிலங்கள், வெளியூர்களில் வேலை என்று இருப்பதால், இது தவிர்க்க இயலாததும் ஆகிவிட்டது. பெரியவர்கள் துணை மற்றும் ஆலோசனை இல்லாத காரணத்தால் நிறைய தாய்மார்களுக்கு குழந்தை வளர்ப்பில் நிறைய சந்தேகங்கள் தோன்றும். பெரும்பாலான இளம் தாய்மார்கள் வருந்துவதும், குழம்புவதும் குழந்தையின் உணவு விசயத்தில்தான். எந்தக் காலக்கட்டத்தில் என்ன உணவு கொடுப்பது என்பது அனுபவசாலியான தாய்மார்களுக்குக்கூட தடுமாற்றம் தரும் விசயமாக இருக்கிறது.

என்னதான் மருத்துவர்கள் ஆலோசனை வழங்கினாலும், சில நேரங்களில் மருத்துவர்கள் பரிந்துரைப்பது மட்டும் போதுமானதாக இருப்பதில்லை. பெரியவர்களிடம் கேட்டால், சமையல் குறிப்பில் தேவையான உப்பு என்பது போல், சிலர் “கொஞ்சமாக கொடுங்கள்” என்பார்கள், சிலர் “எல்லாமே கொடுக்கலாம்” என்பார்கள். ‘கொஞ்சமாக’ என்றால் எவ்வளவு என்பது யாருக்கு தெரியும்? எல்லாமே கொடுக்கலாம் என்றால் மட்டன் பிரியாணி கொடுக்கலாமா என்று கேட்கத் தோன்றும். எனவே, இந்த உணவு விசயத்தை இந்த பாகத்தில் கொஞ்சம் தெளிவாக விளக்கவேண்டும் என்பது எனது விருப்பம்.

Baby healthy foodகுழந்தைக்கு உணவு கொடுத்தல் என்பது சாதாரண செயல். சத்தான உணவு கொடுத்தல் என்பது பொறுப்பான செயல். வளரும் குழந்தைக்கு வெறும் உணவு என்பதைவிட சத்தான உணவு கொடுத்தல் ஒவ்வொரு தாயின் கடமை. பிற்காலத்தில் குழந்தையின் பெரும்பாலான ஆரோக்கியம் சம்பந்தமான விசயங்களை, ஆரம்ப நாட்களே முடிவு செய்கின்றன. எனவே, பிறந்த தினத்தில் இருந்து குழந்தையின் உணவு விசயத்தில் அதிக அக்கறை செலுத்துதல் மிகவும் அவசியமான ஒன்று.

குழந்தைக்கு ஒரு வருடத்திற்குள் என்னென்ன உணவைக் கொடுக்கலாம் என்பதைப் பற்றி என் அனுபவத்தில் கற்றுக் கொண்டதை, எனது குழந்தைகளின் மருத்துவர் உதவியோடு இங்கு எழுதுகிறேன். 6 மாதம் வரை தாய்பால் மட்டுமே போதுமானது. ஒருவேளை தாய்ப்பால் குழந்தைக்கு போதவில்லை என்ற சந்தேகம் எழுந்தால், மருத்துவரை சந்தித்து கேட்டால் அவர் குழந்தையின் எடை, ஆரோக்கியம் இவற்றைக் கணக்கிட்டு எப்பொழுது என்ன மாதிரியான திட உணவு கொடுக்கலாம் என்பதை சொல்வார்.

பிறந்த குழந்தைக்கு குறைந்தது நாலு மாதம் வரை தாய்ப்பால் மட்டும் போதுமானது. மருத்துவர்கள் 6 மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும் என்பதை பரிந்துரைப்பார்கள். குழந்தை பிறந்து 4 மாதங்களுக்கு அல்லது 6 மாதங்களுக்கு பின்னரே திட உணவு கொடுக்க தொடங்க வேண்டும்.

திட உணவு தயாரிக்க குழந்தைக்கு ஃபார்முலா மில்க் தேவையில்லை. பசும்பாலே போதுமானது. பசும்பாலை ஒரு வயதிற்கு மேல் தான் கொடுக்கவேண்டும் என்பதைக் கேட்டு பசும்பாலையே தவிர்க்க வேண்டிய அவசியம் இல்லை. திட உணவுக்கு சிறந்தது பசும்பால் தான் என்றாலும், விரும்பினால் ஃபார்முலாவிலும் கலந்து செய்யலாம். ஃபார்முலாவை சேர்த்தே கூழ் காய்ச்சக் கூடாது. அதிலுள்ள சத்துக்கள் நிறைய அழிந்து விடும். கூழ் காய்ச்சிய பிறகு, கடைசியாக ஃபார்முலாவை கலந்து ஊட்ட வேண்டும்.

குழந்தைக்கு முதன்முறையாக உணவை கொடுக்கும்போதே இந்த அளவு கொடுத்துவிட வேண்டும் என்று முடிவு செய்து கொண்டு திணிக்கக்கூடாது. சில குழந்தைகள் 6 மாதங்கள் வரை திட உணவு சாப்பிட தயாராகாது. குழந்தையின் விருப்பத்தை புரிந்து கொண்டு உணவு புகட்ட வேண்டும். இதற்கு கொஞ்சம் பொறுமை தேவைப்படும். ரெடிமேட் உணவுகளை விட, வீட்டில் தயாரித்துக் கொடுக்கும் உணவே எப்போதும் சிறந்தது. அரிசி கூழ் முதல் உணவாக கொடுக்க ஏற்றது. நன்கு வெந்த சாதத்தை 1/2 கப் தண்ணீரில் நன்கு அடித்து, வடிகட்டி கஞ்சி போல் செய்து முதல் நாள் ஒரு ஸ்பூன் அளவு கொடுக்கலாம். விரும்பினால் ஒரு மேசைக்கரண்டி வரை கொடுக்கலாம். அதனையே முதல் நான்கு நாட்களுக்கு கொடுத்துப் பார்க்க வேண்டும். பிறகு அதனை மெல்ல 4 மேசைக்கரண்டி என்ற அளவில் அதிகப்படுத்தி கொடுக்கலாம். முதல் சில வாரங்களுக்கு காலை வேளையில் மட்டும் கொடுத்து, பின்னர் மெல்ல இரவிலும் கொடுக்க ஆரம்பிக்கலாம்.

குழந்தையின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது கேழ்வரகு, கோதுமை கூழ் போன்றவை. கேழ்வரகை முதல் நாள் இரவே தண்ணீரில் 1/2 கப் அளவில் ஊறவிட்டு, அடுத்த நாள் கழுவி வடித்து, மிக்சியில் தண்ணீர் சேர்த்து அரைக்கவும். பின்பு அதனை வடித்தால் கேழ்வரகு பால் கிடைக்கும். இதிலிருந்து 2 ஸ்பூன் கேழ்வரகு பாலும், பசும்பாலும் கலந்து கூழ் காய்ச்சிக் கொடுக்கலாம். மீதமான கேழ்வரகு பாலை 3 நாள் வரை கூட ஃப்ரிட்ஜில் வைத்து, தேவைக்கு எடுத்து கூழ் செய்து கொள்ளலாம்.

வேக வைத்த சாதத்தை மசித்து கஞ்சி போல கொடுக்கலாம். இட்லி, தோசை சாம்பார் கொடுக்கலாம். ஓட்ஸ், சத்து மாவு, ராகிப் பொடியை பாலுடன் கலந்து கூழ் போல் காய்ச்சிக் கொடுக்கலாம். சப்பாத்தியை பாலில் ஊறவைத்து மசித்துக் கொடுக்கலாம். காய வைத்துப் பொடித்த கேரள நேந்தரன் வாழைக்காய் பொடியை பாலுடன் காய்ச்சிக் கொடுக்கலாம்.

குழந்தைக்கு 6 மாதத்திற்குப் பிறகு தயிர் கொடுக்கலாம். வேகவைத்த முட்டையின் மஞ்சள் கருவை கொடுக்கலாம். 11 மாதம் முடிவடைந்தவுடன் வெள்ளைப் பகுதியையும் கொடுக்கலாம். வேக வைத்த காய்கறி, பருப்புடன் சாதமும், நெய்யும் கலந்து மசித்துக் கொடுக்கலாம்.

Baby healthy foodபலவகையான தானியங்களை கலந்து சத்து மாவு காய்ச்சி கொடுப்பார்கள். அதனுடன் சீவி காயவைத்த மரவள்ளி கிழங்கு மற்றும் சீவி காயவைத்த நேந்தரன் காயையும் சேர்த்து பொடித்து கூழ் காய்ச்சினால் மிகவும் நல்லது. மீன், ஆட்டிறைச்சி போன்றவற்றை 7 மாதத்திற்குப் பிறகு சூப்பாக முதலில் கொடுக்கலாம். பிறகு மெல்ல மிக்சியில் அடித்துக் கொடுக்கலாம். குழந்தையின் உணவில் இனிப்பு சேர்ப்பது நல்லதல்ல. அப்படி சேர்க்க விரும்பினால் வெல்லத்தை சேர்த்துக் கொடுக்கலாம். 7 மாதம் முடிந்தபிறகு கேரள நேந்தரன் பழத்தை வேக வைத்து, நடுவில் உள்ள விதையை நீக்கி அரைத்து கொடுக்கலாம். இது மிகவும் சத்தானது.

முதன்முதலாக குழந்தைக்கு உணவு கொடும்போது மிக்ஸியில் நன்கு அடித்து விட்டு பேஸ்ட் போல் செய்து (ஆப்பம் மாவு பதத்திற்கு) கொடுக்க வேண்டும். பிறகு ஒரு 7 மாதம் ஆனவுடன் மெல்ல பேஸ்ட் போல் அடிக்காமல் கைய்யாலோ ஃபோர்காலோ மசித்து விட்டு கொடுக்கவேண்டும். குழந்தை பேஸ்டாகவே சாப்பிட்டு பழகினால் பிறகு மசிக்காமல் உணவை சாப்பிடவே செய்யாது. பிறகு ஒரு வருடம் முடிவதற்கு முன்னரே மசித்து கொடுப்பதையும் நிறுத்தி விட்டு, அப்படியே சிறிய சிறிய துண்டுகளாகக் கொடுத்து சாப்பிட பழக்க வேண்டும்.

குழந்தைக்கு ஏற்ற பழ வகைகள்

வாழைப்பழம் – ஒரு (முட்)கரண்டியால் பழத்தை கட்டியில்லாமல் நன்றாக மசித்து, சிறிது பால் கலந்து கொடுக்கலாம். முதலில் கால் பழம் அளவிற்கு கொடுத்து பழக்கப்படுத்திய பிறகு, சிறிது சிறிதாக அதிகரித்து ஒரு பழம் வரை கொடுக்கலாம்.

ஆப்பிள் – ஆப்பிளை இட்லி தட்டில் வேக வைத்து, மசித்து, பாலுடன் கலந்து அல்லது அப்படியே கொடுக்கலாம். சில குழந்தைகளுக்கு ஆப்பிள் மலச்சிக்கலை உண்டாக்கிவிடும். அந்த பிரச்சனை இருந்தால் ஆப்பிளை தவிர்த்து பப்பாளி கொடுக்கலாம்.

அவக்கோடா எனப்படும் பட்டர் ஃப்ரூட்டும் மிகவும் நல்லது. இதில் கொழுப்புச் சத்து அதிகம். நன்றாக பழுத்த பழத்தை மசித்து கொடுக்கலாம். வளரும் குழந்தைகளுக்கு கொழுப்புச் சத்து மிகவும் அவசியம்.
அதனால் குழந்தைகளுக்கு கொடுக்கும் பாலில் தண்ணீர் கலப்பது சரியல்ல.

பியர்ஸ் பழத்தையும் ஆப்பிள் போலவே வேகவைத்து மசித்து கொடுக்கலாம்.

சப்போட்டாவை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். நல்ல சத்துள்ள பழ வகை அது. அதனையும் விதை நீக்கி மசித்துக் கொடுக்கலாம். constipation க்கு பப்பாளிப் பழத்தை மசித்துக் கொடுப்பது நல்ல பலனளிக்கும்.

வேக வைத்து மசித்த காய்கறிகள்:

பழங்களைக் கொடுத்து பழக்கி, 2 வாரத்திற்குப் பிறகு காய்கறிகளை கொடுக்கலாம். காய்கறிகளை நன்கு வேக வைத்து மசித்து, வடிகட்டி நீரை மட்டும் கொடுக்க வேண்டும். குழந்தைக்கு 7 மாதம் வரை வடிகட்டித்தான் கொடுக்க வேண்டும். ஏழு மாதங்களுக்கு பிறகு அப்படியே மசித்துக் கொடுக்கலாம்.
முதலில் 2 ஸ்பூன் விகிதம் கொடுத்து குழந்தைக்கு அது ஒத்துக் கொள்கிறதா என்பதை பார்த்துவிட்டு, பிறகு சிறிது சிறிதாக அளவை அதிகரிக்கலாம். அடர் பச்சை நிறத்தில் உள்ள கீரை வகைகள் மற்றும் கேரட், பரங்கி போன்றவை மிக நல்லது. காய்கறிகளை கொடுக்கும்பொழுது உப்பு சேர்க்க அவசியம் இல்லை. அதிலேயே தேவைக்கேற்ப சோடியம் உள்ளது. காய்கறி பழங்களை இட்லிதட்டில் ஆவியில் வேகவைத்து எடுப்பது நல்லது. அப்போதுதான் அதிலுள்ள சத்துக்கள் வீணாகாது.

இரும்புச் சத்துக்கு தேவையானது வைட்டமின் சி. அதனால் திட உணவுடன் ஆரஞ்ச் ஜூஸ் கொடுக்கலாம். முதல் சில மாதங்கள் தண்ணீர் கலந்து ஆரஞ்ச் ஜூஸ் கொடுப்பது நல்லது. புளிப்புள்ள பழ வகைகளை குழந்தைக்கு பார்த்து தான் கொடுக்கவேண்டும். சில குழந்தைகளுக்கு அது ஒத்துக் கொள்ளாது. உதட்டை சுற்றிலும் சிறிய சிவப்பு நிற பருக்கள் போல் தோன்றும்.

Baby healthy foodஒரு வயதிற்குள் நாம் வீட்டில் என்னென்ன சமைப்போமோ அதையே குழந்தையையும் சாப்பிட பழக்க வேண்டும். ஒரு வயது வரை மிளகாயை அறவே சேர்க்காமல் இருப்பது நல்லது. அதற்கு பதில் மிளகையோ(pepper), குடை மிளகாயையோ சிறிதளவு சேர்க்கலாம்.

எந்த உணவை முதன்முதலாக கொடுப்பதாயினும், நான்கு நாட்கள் கழித்துதான் வேறு ஒரு புதிய உணவைக் கொடுக்க வேன்டும். அந்த நான்கு நாட்களில் குழந்தைக்கு அந்த உணவு ஒத்துகொண்டதா, இல்லையா என்று தெரிய வரும். சில குழந்தைகளுக்கு எது சாப்பிட்டாலும் வயிறு இறுகி கான்ஸ்டிபேஷன் ஆகும். அந்த குழந்தைகளுக்கு காலையில் எழுந்து பால் கொடுப்பதற்கு பதில் இளநீர் கொடுத்தால் வயிறு இளகிவிடும். பழுத்த மாம்பழம் அல்லது பப்பாளிப் பழத்தை கெட்டியாக அடித்து, கூழ் போல் ஊட்டி விடலாம். சரியாகிவிடும்.

ஒவ்வாமை

குழந்தைகளுக்கு சில சமயம் உணவுகளால் ஒவ்வாமை ஏற்படலாம். அதனால் தான் ஒரு புதிய உணவு கொடுத்து நான்கு நாட்கள் காத்திருந்து, வேறு புதிய உணவை கொடுக்க சொல்கின்றார்கள். சில குழந்தைகளுக்கு அது உயிருக்கே ஆபத்தாகக் கூடிய அளவுக்கு கூட ஒவ்வாமை ஏற்படும்.

குறிப்பாக முட்டை, பசும்பால் போன்றவை சில குழந்தைகளுக்கு சுத்தமாக சேராது. உணவு கொடுக்கும்பொழுதே அல்லது சில மணி நேரத்துக்கு பிறகு வாந்தி, வயிற்றுப்போக்கு, வயிற்றுவலி, உடம்பில் பருக்கள் அல்லது சிவப்பு நிற திட்டுக்கள் தோன்றுதல், உதடு வீக்கம், சுவாசக் கோளாறு போன்றவை தோன்றினால் என்ன உணவு கொடுத்தோம் என்று யோசிக்க வேண்டும். குழந்தை மிகவும் அசௌகரியம் காட்டத் தொடங்கினால் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும்.

உதாரணத்திற்கு எனக்கு தெரிந்த குழந்தைக்கு முட்டை சேராது. முதன் முறையாக முட்டை கொடுக்கும்போது அழத் தொடங்கி, பிறகு தொண்டை அடைத்து மூச்சு திணறத் தொடங்கிவிட்டது. அதனால் அது போன்ற உணவுகளை முதல் நாள் 1/2 ஸ்பூன் மட்டுமே கொடுத்து பார்க்க வேண்டும். தேனை குழந்தைக்கு ஒரு வயது வரை கொடுக்க கூடாது என்பார்கள். என்றாலும் நம் ஊரில் அதனை கொடுப்பார்கள். அப்படி கொடுக்கும்பட்சத்தில் சிறு தேனீயின் தேனை வாங்கி குழந்தைக்கு கொடுக்கலாம். அது குழந்தைக்கு மருந்தாகும்.

உணவு சாப்பிட மறுத்தால்

Baby healthy foodசில குழந்தைகள் உணவை விழுங்காமல் நாக்கால் வெளியே தள்ளிவிடும். இந்த செய்கையினால் சோர்ந்து போகாமல் அப்போதைக்கு நிறுத்தி விட்டு, ஒரு வாரம் கழித்து மீண்டும் முயற்சிக்கலாம். குழந்தைகள் இயல்பிலேயே வாயில் படும் பொருட்களை வெளியில் தள்ள முயற்சி செய்யும். நாளடைவில் அந்த பழக்கம் மாறிய பின்னர் உணவை முழுங்கத் தொடங்கும்.

சில குழந்தைகளுக்கு முதன்முறை ஸ்பூனால் கொடுக்கும்பொழுது பிடிக்காமல் போகலாம். உணவை சாப்பிட மறுத்தால், நமது ஆள்காட்டி விரலை நன்கு சுத்தமாக கழுகி அதில் உணவை சிறிய அளவில் தடவி குழந்தைக்கு கொடுக்கலாம். உணவு சுவை பழகிய பின்னர் ஸ்பூன் கொண்டு கொடுக்கலாம்.
ஸ்பூன்கள் கொண்டு உணவு கொடுக்கும் போது மிகவும் எச்சரிக்கையாக இருத்தல் அவசியம். சிறுகுழந்தைகள் படுவேகமாக கையால் தட்டிவிடும். அப்போது குழந்தையின் வாயில், முகத்தில் பட்டுவிட வாய்ப்புள்ளது. அதனால் கூர்மையான, வெட்டும்படி உள்ள சில்வர் ஸ்பூன்களை உபயோகித்தல் கூடாது. குழந்தைகளுக்கென்றே உள்ள பிரத்தியோக குட்டி ப்ளாஸ்டிக் ஸ்பூன்களை பயன்படுத்துவது பாதுகாப்பானது.

சில குழந்தைகள் கூழாகவே சாப்பிட விரும்புவார்கள். சிறிய கட்டிகள் தென்பட்டால் அல்லது சிறிது கட்டியாக இருந்தாலும் சாப்பிட மறுப்பார்கள். மெல்ல அரைத்து ஊட்டுவதை நிறுத்த வேண்டும் என்றாலும், கெட்டியான உணவை விடாப்பிடியாக ஊட்ட முயன்றால் குழந்தைக்கு சாப்பிடுவதில் ஆர்வம் இல்லாமல் போய்விடும். அது சாப்பிட மறுத்து, அதனால் அதற்கு போதிய சத்துக்கள் கிடைக்காமல் போய்விடும் அபாயம் உள்ளது. எனவே எதையும் கட்டாயப்படுத்தாமல், அதன் போக்கிலேயே சென்று கொஞ்சம் கொஞ்சமாக மாற்ற வேண்டும். இப்போது அரைத்த உணவையே கொடுத்து மூன்று நாட்களுக்கொருமுறை ஒவ்வொரு ஸ்பூன் கெட்டியாக மசித்ததையும் கொடுத்து பழக்க வேண்டும்.

Baby healthy foodநன்றாக சாப்பிடும் சில குழந்தைகள் திடீரென சாப்பிடாமல் இருப்பது அல்லது விரும்பி சாப்பிட்டுக் கொண்டிருக்கும் ஒன்றை திடீரென சாப்பிட மறுப்பது என்பது குழந்தையின் சுபாவம். குழந்தை மறுத்து தலையை திருப்பவோ, துப்பவோ, அழுகவோ செய்தால் நிறுத்தி விட்டு சிறிது நேரத்திற்கு பிறகு கொடுத்து பார்க்க வேண்டும். உணவில் ஆர்வமில்லாத குழந்தைகளை நாம் சாப்பிடும்பொழுது பக்கத்தில் அமர வைத்து சாப்பிட்டால், அதை பார்த்து அவர்களுக்கும் சாப்பிடும் ஆர்வம் வரும்.

குழந்தைகளுக்கு திட உணவு கொடுக்க தொடங்கும் வரை தண்ணீரே தேவையில்லை என்றாலும், முன்பே தண்ணீர் அடிக்கடி கொடுக்காமல் விட்டால் பின்னாளில் தண்ணீர் குடிக்கவே மாட்டார்கள். எனவே நன்கு காய்ச்சி ஆற வைத்த நீரை அவ்வபோது கொடுத்து பழக்க வேண்டும்.

30 வகை திடீர் சமையல் – ஆதிரை வேணுகோபால்


வேலைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி… காலையில் கண் விழித்த உடனேயே, ‘சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வதற்கும் என்ன சமையல் செய்வது’ என்ற பரபரப்புடன் ஆரம்பித்துவிடுகிறது… கடிகாரத்துடனான ஓட்டப் பந்தயம்! இந்தப் பந்தயத்தில் நீங்கள் வெற்றிக் கோட்டை தொடுவதற்கு உதவும் வகையில், மிகவும் குறைந்த நேரத்தில் தயாரிக்கக்கூடிய ’30 வகை திடீர் சமையல்’ ரெசிபிகளுடன் வந்து உதவிக்கரம் நீட்டுகிறார் சமையல் கலை நிபுணர் ஆதிரை வேணுகோபால். 

”உடனடியாக செய்யக்கூடிய இந்த ரெசிபிகளை, முடிந்த அளவு உடலுக்கு ஊட்டச் சத்து தரும் பொருட்களை கொண்டு தயாரித்து அளித்திருக்கிறேன். இவற்றை செய்து பரிமாறுங்க… நீங்களும் தேவையான அளவு சாப்பிட மறந்துடாதீங்க” என்று பரிவுடன் கூறும் ஆதிரையின் ரெசிபிகளை, பிரமாதமாக அலங்கரித்திருக்கிறார் செஃப் ரஜினி. 


மீல்மேக்கர் டிக்கிஸ்

தேவையானவை: மீல்மேக்கர் – 20, இஞ்சி – சிறு துண்டு (சுத்தம் செய்து கொள்ளவும்), பூண்டு – 6 பல், பச்சை மிளகாய் – 3, வெங்காயம் – ஒன்று, மைதா மாவு – ஒரு டேபிள்ஸ்பூன், பிரெட் தூள், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் மூன்றையும் மிகவும் பொடியாக நறுக்கி கொள்ளவும். மீல்மேக்கரை கொதி நீரில் 2 நிமிடம் போட்டு எடுத்து, பச்சைத் தண்ணீரில் இருமுறை நன்கு அலசி தண்ணீரை நன்றாகப் பிழிந்து எடுக்கவும். இதனுடன் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், உப்பு சேர்த்து கெட்டியாக அரைத்து கொள்ளவும். பிறகு, பொடியாக நறுக்கிய வெங்காயம், மைதா சேர்த்து நன்கு பிசைந்து, விரும்பிய வடிவத்தில் தட்டி, பிரெட் தூளில் புரட்டிக் கொள்ளவும். தவாவில் சிறிதளவு எண்ணெய் விட்டு, புரட்டி எடுத்த  டிக்கிஸை போட்டு இருபுறமும் பொன்னிறமானதும் எடுக்கவும்.


கீரை  தால் கிரிஸ்பி

தேவையானவை: கடலைப்பருப்பு – 100 கிராம், காய்ந்த மிளகாய் – 2, பெருஞ்சீரகம் – ஒரு டீஸ்பூன், பூண்டு – 2 பல், முருங்கைக்கீரை – ஒரு கப் (ஆய்ந்தது), பொட்டுக்கடலைப் பொடி – ஒரு டேபிள்ஸ்பூன், கடுகு – அரை டீஸ்பூன், வெங்காயம் – ஒன்று (மிகவும் பொடியாக நறுக்கவும்), நறுக்கிய கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கடலைப்பருப்பை அரை மணி நேரம் ஊற வைத்து… காய்ந்த மிளகாய், பெருஞ்சீரகம், பூண்டு, உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு தாளித்து… வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கி, அரைத்த கடலைப்பருப்பு விழுது, பொட்டுக்கடலைப் பொடி சேர்த்து நன்கு கிளறி, ஆய்ந்த கீரையை சேர்த்து ஒரு நிமிடம் நன்கு புரட்டி… பிறகு இறக்கி, சுடச்சுட பரிமாறவும்.


மூங்தால்  பனீர் சப்பாத்தி

தேவையானவை: கோதுமை மாவு – 2 கப், நெய் – ஒரு டேபிள்ஸ்பூன், பாசிப்பருப்பு – முக்கால் கப், பனீர் துருவல் – 2 டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய், பூண்டு – தலா 2 (மிக்ஸியில் விழுதாக அரைத்து கொள்ளவும்), எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: பாசிப்பருப்பை குக்கரில் 2 விசில் வரும் வரை வேக விட்டு எடுத்து, ஆறியதும் மிக்ஸியில் சற்று கொரகொரப்பாக அரைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு… பூண்டு – பச்சை மிளகாய் விழுதை நன்கு வதக்கவும். பிறகு, அரைத்த பாசிப்பருப்பு விழுது, பனீர் துருவல், உப்பு சேர்த்துக் கிளறி இறக்கவும்.

கோதுமை மாவில் நெய் மற்றும் தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்து மெல்லிய சப்பாத்திகளாக திரட்டவும். ஒரு சப்பாத்தியின் நடுவே பாசிப்பருப்பு – பனீர் கலவையை வைத்து அதன் மேலே இன்னொரு சப்பாத்தி வைத்து ஓரங்களை நன்கு ஒட்டி, தவாவில் போட்டு, இருபுறமும் எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும்.


ஆலு ஸ்டஃப்டு சப்பாத்தி

தேவையானவை: கோதுமை மாவு – 2 கப், நெய் – ஒரு டேபிள் ஸ்பூன், உருளைக்கிழங்கு – 2, சீரகம், மிளகாய்த்தூள் – தலா ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், பச்சை மிளகாய், வெங்காயம் – தலா ஒன்று (மிகவும் பொடியாக நறுக்கவும்), எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: வேக வைத்து, நன்கு மசித்த உருளைக்கிழங்கு, சீரகம், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், பச்சை மிளகாய், வெங்காயம், சிறிதளவு உப்பு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்துப் பிசைந்து கொள்ளவும். கோதுமை மாவில் நெய், தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்துப் பிசைந்து கிண்ணங்களாக செய்து, நடுவே உருளைக்கிழங்கு கலவையை வைத்து மூடி, சப்பாத்திகளாக திரட்டி, தவாவில் போட்டு, எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும்.


ஓட்ஸ் அடை

தேவையானவை: புழுங்கல் அரிசி, ஓட்ஸ், துவரம்பருப்பு, பாசிப்பருப்பு – தலா அரை கப், வெங்காயம் – 3 (மிகவும் பொடியாக நறுக்கவும்), காய்ந்த மிளகாய் – 4, தேங்காய் துருவல் – ஒரு டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: அரிசியை தனியாகவும், பருப்புகளை ஒன்று சேர்த்தும் 2 மணி நேரம் ஊற வைத்து… காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து சற்று கொரகொரப்பாக அரைக்கவும். ஓட்ஸை அரை மணி நேரம் ஊற வைத்து இதனுடன் சேர்க்கவும். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு வெங்காயம், கறிவேப்பிலையை வதக்கி மாவில் சேர்க்கவும். தேங்காய் துருவல் சேர்த்து நன்கு கலக்கவும். தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு, மாவை அடைகளாக வார்த்து, இருபுறமும் சிவந்த பின் எடுக்கவும்.


ஸ்வீட் சோயா

தேவையானவை: சோயா உருண்டைகள் – 20 (வேக வைத்து, நீரைப் பிழிந்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றவும்), பொடித்த பனங்கற்கண்டு – 100 கிராம், மைதா – கால் கப், தேங்காய் துருவல் – 2 டேபிள்ஸ் பூன், நெய், ஏலக்காய்த்தூள் – சிறிதளவு,  எண்ணெய் – தேவையான அளவு, உப்பு – ஒரு சிட்டிகை.  

செய்முறை: மைதாவை தண்ணீர் விட்டுக் கரைத்துக் கொள்ளவும். வாணலியில் சிறிது நெய் சேர்த்து, சோயாவை போட்டு லேசாக வதக்கி, பொடித்த பனங்கற்கண்டை சேர்த்து நன்கு சுருள கிளறவும். இதனுடன் ஏலக்காய்த்தூள், உப்பு, தேங்காய் துருவல் சேர்த்துக் கிளறி… ஆறியதும் உருண்டைகளாக பிடிக்கவும். மைதா கரைசலில் உருண்டகளைத் தோய்த்து, எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.


புதினா மசாலா சப்பாத்தி

தேவையானவை: கோதுமை மாவு – 2 கப், பொடியாக நறுக்கிய புதினா, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி – தலா ஒரு கைப்பிடி, இஞ்சி – சிறு துண்டு (சுத்தம் செய்து கொள்ளவும்), பூண்டு – 3 பல், பச்சை மிளகாய் – 2, நெய் – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: புதினா, கொத்தமல்லி, இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், சிறிதளவு உப்பு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். கோதுமை மாவுடன் அரைத்த விழுது, நெய், கொஞ்சம் உப்பு மற்றும் தேவையான தண்ணீர் சேர்த்து நன்கு தளர பிசையவும். மாவை சின்னச் சின்ன சப்பாத்திகளாக திரட்டி, தோசைக்கல்லில் போட்டு, சுற்றிலும் எண்ணெய் விட்டு, வேகவிட்டு எடுக்கவும்.


வாழைப்பூ  வெங்காய அடை

தேவையானவை: புழுங்கல் அரிசி – ஒரு கப், துவரம்பருப்பு, கடலைப்பருப்பு – தலா அரை கப், இஞ்சி – சிறு துண்டு (சுத்தம் செய்யவும்), பூண்டு – 4 பல்,  காய்ந்த மிளகாய் – 6, பெருஞ்சீரகம் – ஒரு டீஸ்பூன், சிறிய வாழைப்பூ –  ஒன்று (நரம்புகளை எடுத்துவிட்டு, சுத்தம் செய்து, பொடியாக நறுக்கிக் கொள்ளவும்), வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்), துருவிய சீஸ் – ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: அரிசியை தனியாகவும், பருப்புகளை ஒன்று சேர்த்தும் 2 மணி நேரம் ஊறவிடவும். முதலில் அரிசியை மிக்ஸியில் போட்டு சிறிது நேரம் ஓடவிட்டு, பிறகு பருப்புகள், இஞ்சி, பூண்டு, காய்ந்த மிளகாய், பெருஞ்சீரகம், உப்பு சேர்த்து சற்று கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு வெங்காயத்தை வதக்கி, பிறகு வாழைப்பூ சேர்த்து வதக்கி… இதை மாவில் கொட்டி கலந்து கொள்ளவும்.

தோசைக்கல்லில் மாவை அடைகளாக ஊற்றி, மேலே சிறிது சீஸ் சேர்த்து, சுற்றிலும் எண்ணெய் விட்டு, பொன்னிறமாக சுட்டு எடுக்கவும்.


பிரெட் வித் ஸ்வீட் கார்ன் கிரேவி

தேவையானவை: பிரெட் ஸ்லைஸ் – 10, ஸ்வீட் கார்ன் – 2, பெரிய வெங்காயம் – 2 (மிகவும் பொடியாக நறுக்கவும்), இஞ்சி – பூண்டு விழுது, மிளகாய்த்தூள் – தலா ஒரு டீஸ்பூன், தக்காளி சாஸ் – அரை கப், வெண்ணெய், ஃப்ரெஷ் க்ரீம் – தலா 2 டேபிள்ஸ்பூன், சர்க்கரை, உப்பு – சிறிதளவு.

செய்முறை: ஸ்வீட் கார்னுடன் சிறிது உப்பு சேர்த்து வேகவிடவும். முத்துக்களை உதிர்த்துக் கொள்ளவும். வாணலியில் சிறிதளவு வெண்ணெய் விட்டு, உருகியதும் இஞ்சி – பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு வெங்காயம் சேர்த்து வதக்கவும். இதனுடன் மிளகாய்த்தூள், தக்காளி சாஸ், சர்க்கரை, உப்பு, உதிர்த்த கார்ன் சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு இறக்கி (தேவைப்பட்டால் சிறிது நீர் சேர்த்துக் கொள்ளலாம்), ஃப்ரெஷ் க்ரீம் சேர்க்கவும்.

பிரெட் ஸ்லைஸில் வெண்ணெய் தடவி தவாவில் டோஸ்ட் செய்து, அதன்மேல் கார்ன் கிரேவியை பரவலாக சேர்த்துப் பரிமாறவும்.


மேத்தி சப்பாத்தி

தேவையானவை: கோதுமை மாவு – 2 கப், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், கடலை மாவு – ஒரு டேபிள்ஸ்பூன், வெந்தயக் கீரை – 2  சிறிய கட்டு (இலைகளை மட்டும் ஆய்ந்து, சுத்தம் செய்யவும்), மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன், அம்சூர் பவுடர் (மாங்காய்த்தூள்) – 2 டீஸ்பூன், நெய் சிறிதளவு, எண்ணெய்,  உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கொடுக்கப்பட்டுள்ள அனைத்துப் பொருட்களையும் (எண்ணெய் நீங்கலாக) ஒன்று சேர்த்து தேவையான தண்ணீர் விட்டு நன்கு பிசைந்து கொள்ளவும். பிசைந்த மாவை சின்னச் சின்ன சப்பாத்திகளாக திரட்டி, தோசைக்கல்லில் போட்டு, சுற்றிலும் எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும்.

இதற்கு ஆனியன் ராய்தா சிறந்த காம்பினேஷன்.


காரசார வேர்க்கடலை பொடி

தேவையானவை: வறுத்து, தோல் நீக்கிய வேர்க்கடலை – 2 கப், வறுத்த வெள்ளை எள் – ஒரு டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் – 6 (வெறும் வாணலியில் லேசாக வறுக்கவும்), பூண்டு – 6 பல், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் ஒன்று சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைத்தெடுக்கவும். சூடான சாதத்தில் சிறிது நெய் விட்டு வேர்க்கடலைப் பொடியைப் போட்டு பிசைந்து சாப்பிட… சுவை அள்ளும்!


ஆந்திரா பருப்பு பொடி

தேவையானவை: பொட்டுக்கடலை – ஒரு கப், காய்ந்த மிளகாய் – 6, சீரகம் – அரை டேபிள்ஸ்பூன், பூண்டு – 4 பல், உப்பு – சிறிதளவு.

செய்முறை: வெறும் வாணலியில் காய்ந்த மிளகாய், சீரகத்தை வறுத்தெடுக்கவும். முதலில் மிக்ஸியில் மிளகாயை பொடித்து, பிறகு அதனுடன் சீரகம், பூண்டு, பொட்டுக்கடலை, உப்பு சேர்த்து நைஸாக அரைக்கவும். சூடான சாதத்தில் இந்த பொடியைப் போட்டு சிறிது நெய் சேர்த்து சாப்பிட்டால்… சூப்பர் சுவையில் இருக்கும்.


மசாலா இட்லி

தேவையானவை: இட்லி – 10, வெங்காயம், தக்காளி – தலா 2, கேரட் துருவல் – 2 டேபிள்ஸ்பூன், இஞ்சி – பூண்டு விழுது, மிளகாய்ப் பொடி, சாம்பார் பொடி, கரம்மசாலா பொடி – தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கவும்,  இட்லிகளை ஓர் அங்குல சதுர துண்டுகளாக நறுக்கி, எண்ணெயில் பொரித்து தனியே எடுத்து வைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் வெங்காயம், தக்காளி, கேரட் துருவல், இஞ்சி – பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு மிளகாய்ப் பொடி, சாம்பார் பொடி, கரம்மசாலா பொடி, உப்பை சேர்த்து வதக்கவும் (கொஞ்சம் நீர் தெளித்துக் கொள்ளலாம்). இதனுடன் பொரித்த இட்லி துண்டுகளை சேர்த்து ஒரு புரட்டு புரட்டி… சுடச்சுட பரிமாறவும்.


மல்ட்டி கிரெய்ன்ஸ் பொடி

தேவையானவை: பச்சைப்பயறு, வேர்க்கடலை, கறுப்பு உளுந்து, வெள்ளை சோளம், கடலைப்பருப்பு, பச்சரிசி, புழுங்கல் அரிசி – தலா கால் கப்,  காய்ந்த மிளகாய் – 8, பெருங்காயத்தூள் – அரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு,

செய்முறை: தானிய வகைகளை வெறும் வாணலியில் தனித்தனியே நன்கு வறுத்தெடுக்கவும். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்ததும்… காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் சேர்த்து வறுத்து, அனைத்து தானியங்கள் மற்றும் உப்பு சேர்த்து மிக்ஸியில் நைஸாக பொடிக்கவும்.

இந்தப் பொடியை சூடான சாதத்துடன் சேர்த்து, சிறிது நெய் விட்டு கலந்து சாப்பிடலாம்.


ஹனி சப்பாத்தி

தேவையானவை: கோதுமை மாவு – 2 கப், தேன் – ஒரு கப், வெள்ளை எள் – ஒரு டேபிள்ஸ்பூன், நெய் – 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு  – தேவையான அளவு.

செய்முறை: வெள்ளை எள்ளை வெறும் வாணலியில் லேசாக வறுத்தெடுக்கவும். கோதுமை மாவுடன் தேன், நெய், வறுத்த எள், தேவையான உப்பு, தண்ணீர் சேர்த்து நன்கு பிசையவும். பிசைந்த மாவை சின்னச் சின்ன சப்பாத்திகளாக திரட்டி, தோசைக்கல்லில் போட்டு எண்ணெய் விட்டு பொன்னிறமாக சுட்டு எடுக்கவும்.


கிரீன்  ரெட் சாண்ட்விச்

தேவையானவை: பிரெட் ஸ்லைஸ்கள் – 10, புதினா சட்னி – 2 டேபிள்ஸ்பூன், டொமெட்டோ சாஸ் – 2 டேபிள்ஸ்பூன், வெண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: பிரெட்டின் இருபக்கமும் நன்கு பரவலாக வெண்ணெய் தடவவும். ஒரு பக்கம் புதினா சட்னி தடவி, இன்னொரு பிரெட் ஸ்லைஸால் மூடி, அந்த பிரெட் ஸ்லைஸின் மேல் வெண்ணெய் தடவி அதன் மறுபக்கத்தில் டொமெட்டோ சாஸ் தடவி இன்னொரு பிரெட் ஸ்லைஸால் மூடி விரும்பிய வடிவத்தில் கட் செய்து பரிமாறவும்.


கேழ்வரகு  முருங்கைக்கீரை அடை

தேவையானவை: கேழ்வரகு மாவு – ஒரு கப், ஆய்ந்த முருங்கைக்கீரை (ஃப்ரெஷ்) – அரை கப், வெங்காயம், பச்சை மிளகாய் – தலா ஒன்று, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: வெங்காயம், பச்சை மிளகாயை மிகவும் பொடியாக நறுக்கவும், வாணலியில் எண்ணெய் விட்டு… வெங்காயம், பச்சை மிளகாயை நன்கு வதக்கி, கேழ்வரகு மாவுடன் சேர்க்கவும். அடுப்பை அணைத்த பிறகு வாணலியின் அந்த சூட்டிலேயே முருங்கைக் கீரையைப் போட்டு, அதையும் ஒரு புரட்டு புரட்டி மாவில் சேர்க்கவும். பிறகு, உப்பு சேர்க்கவும். மாவில் கொஞ்சம் தண்ணீர் விட்டு சற்று தளர பிசைந்து, தவாவில் மெல்லிய அடைகளாகத் தட்டி, இருபுறமும் எண்ணெய் விட்டு வேகவிடவும். வெந்த பின் சுடச்சுட பரிமாறவும்.


நியூட்ரிஷியஸ் நூடுல்ஸ்

தேவையானவை: நூடுல்ஸ் – ஒரு பாக்கெட், வெங்காயம், கேரட் – தலா ஒன்று, பீன்ஸ் – 6, வேக வைத்த பச்சைப் பட்டாணி – ஒரு கைப்பிடி, சோயா சாஸ் – ஒரு டீஸ்பூன், டொமெட்டோ சாஸ் – 2 டீஸ்பூன், பூண்டு – 2 பல் (நன்கு தட்டி கொள்ளவும்), காய்ந்த மிளகாய் – ஒன்று (ஒன்றிரண்டாக பொடித்து கொள்ளவும்), எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: வெங்காயம், கேரட், பீன்ஸை மிகவும் பொடியாக நறுக்கி கொள்ளவும். காய்ந்த மிளகாயை ஒன்றிரண்டாக பொடித்து கொள்ளவும். கொதிக்கும் நீரில் நூடுல்ஸைப் போட்டு வேக வைத்து நீரை நன்கு வடித்து விடவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு வெங்காயம், கேரட், பீன்ஸ், பச்சைப் பட்டாணி சேர்த்து நன்கு வதக்கி, அத்துடன் சோயா சாஸ்,

டொமெட்டோ சாஸ், பூண்டு, காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து மேலும் வதக்கி… கடைசியாக நூடுல்ஸை சேர்த்து நன்கு கிளறி, சுடச்சுட பரிமாறவும்.


முந்திரி பொடி

தேவையானவை: முந்திரி – 20, பாதாம் – 10, வெள்ளரி விதை, பொட்டுக்கடலை, கொப்பரைத் துருவல் – தலா கால் கப், காய்ந்த மிளகாய் – 6, பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன், கறிவேப்பிலை – 2 ஆர்க்கு, உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: வெறும் வாணலியில் வெள்ளரி விதை, கொப்பரைத் துருவல் இரண்டையும் தனித்தனியே வறுத்தெடுக்கவும் பொட்டுக்கடலையை வாணலியில் லேசாக ஒரு புரட்டு புரட்டி எடுக்கவும். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, காய்ந்ததும் பெருங்காயம், காய்ந்த மிளகாயை நன்கு வறுக்கவும். பிறகு முந்திரி, பாதாமை வறுத்தெடுக்கவும். அதன்பின் கறிவேப்பிலையையும் வறுத்து எடுக்கவும். அனைத்துப் பொருட்களையும் ஒன்று சேர்த்து, உப்பு போட்டு, மிக்ஸியில் சற்று கொரகொரப்பாக பொடிக்கவும்.

இந்தப் பொடியை சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட்டால்… அசத்தலான டேஸ்ட்டில் இருக்கும்.


பட்டாணி ஊத்தப்பம்

தேவையானவை: தோசை மாவு – 4 கப், துருவிய கேரட், வேக வைத்த  பச்சைப் பட்டாணி – தலா அரை கப், பொடியாக நறுக்கிய வெங்காயம், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் – தலா ஒன்று, கடுகு – அரை டீஸ்பூன்,  கொத்தமல்லி, எண்ணெய், உப்பு – சிறிதளவு.

செய்முறை: வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு தாளித்து… வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்துக் கிளறி, தோசை மாவில் கொட்டி, சிறிது உப்பு சேர்த்துக் கலந்து கொள்ளவும். தவாவில் மாவை சற்று தடிமனாக வார்த்து… மேலே கேரட் துருவல், வெந்த பட்டாணி, கொத்தமல்லி தூவவும். சுற்றிலும் எண்ணெய் விட்டு, இருபுறமும் வெந்த பின் எடுத்து, சூடாக பரிமாறவும்.


மூங்தால் பெசரட்

தேவையானவை: பாசிப்பருப்பு – ஒரு கப், இஞ்சி – சிறிய துண்டு (சுத்தம் செய்யவும்), பச்சை மிளகாய் – 2, கொத்தமல்லி – சிறு கட்டு, உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: இஞ்சி, கொத்தமல்லியை சுத்தம் செய்யவும். பாசிப்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். எண்ணெய் தவிர மற்ற எல்லாவற்றையும் மிக்ஸியில் சேர்த்து, தோசை மாவு பதத்தில் அரைக்கவும். மாவை தோசைக்கல்லில் சற்று தடிமனான அடைகளாக வார்த்து, சுற்றிலும் எண்ணெய் விட்டு, சுட்டு எடுத்து பரிமாறவும்.


ஸ்வீட் கார்ன் சப்பாத்தி

தேவையானவை: கோதுமை மாவு – 2 கப், அமெரிக்கன் ஸ்வீட் கார்ன் முத்துக்கள் (டிபார்ட்மென்ட் கடைகளில் கிடைக்கும்) – ஒரு கப், இஞ்சி (சுத்தம் செய்யவும்) – சிறு துண்டு, பச்சை மிளகாய் – 3, எலுமிச்சை சாறு – 2 டேபிள்ஸ்பூன், கொத்தமல்லி தழை – ஒரு கைப்பிடி அளவு, நெய் – ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: ஸ்வீட் கார்னை மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றி… பிறகு இஞ்சி, பச்சை மிளகாய், கொத்தமல்லி சேர்த்து கொரகொரப்பாக அரைத்து, எலுமிச்சை சாறு சேர்க்கவும். அதனுடன் கோதுமை மாவு, உப்பு, நெய், மற்றும் தேவையான தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்து, சின்னச் சின்ன சப்பாத்திகளாகத் திரட்டவும். தவாவை சூடாக்கி, சப்பாத்தியை போட்டு, எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும்.


ஸ்பைஸி ரவா கிச்சடி

தேவையானவை: வறுத்த ரவை – ஒரு கப், பெரிய வெங்காயம் – ஒன்று, பச்சை மிளகாய் – 2, பச்சைப் பட்டாணி – அரை கப், இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன், புதினா, கொத்தமல்லி – சிறிதளவு, தேங்காய்ப் பால் – ஒன்றரை கப், எலுமிச்சைச் சாறு – 2 டீஸ்பூன், பட்டை – சிறு துண்டு, கிராம்பு, ஏலக்காய் – தலா ஒன்று, நெய், எண்ணெய், உப்பு – சிறிதளவு.

செய்முறை: பெரிய வெங்காயத்தை நீளநீளமாக மெல்லிதாக நறுக்கவும். புதினா, கொத்தமல்லியை பொடியாக நறுக்கவும். அடி கனமான வாணலியில் நெய் மற்றும் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் தாளித்து, வெங்காயம், கீறிய பச்சை மிளகாய், பச்சைப் பட்டாணி சேர்த்து வதக்கவும். வெங்காயம் சிறிது வதங்கியதும் இஞ்சி – பூண்டு விழுது, புதினா, கொத்தமல்லி, உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு தேங்காய்ப் பால், ஒரு கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். கொதி வந்ததும் வறுத்த ரவை, எலுமிச்சைச் சாறு சேர்த்து நன்கு கிளறி, அடுப்பை ‘சிம்’மில் வைத்து 10 நிமிடம் கழித்து இறக்கிப் பறிமாறவும்.


ஆலு  பாலக் கட்லெட்

தேவையானவை: பசலைக்கீரை – ஒரு சிறு கட்டு, உருளைக்கிழங்கு – 2 (வேக வைத்து மசித்துக் கொள்ளவும்), பிரெட் ஸ்லைஸ்கள் – 4, பச்சை மிளகாய் – இஞ்சி அரைத்த விழுது – ஒரு டேபிள்ஸ்பூன், பிரெட் தூள் – சிறிதளவு, மைதா மாவு – அரை கப், சீஸ் துருவல் – 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கீரையை நன்கு சுத்தம் செய்து பொடியாக நறுக்கி 2 கப் கொதி நீரில் 2 நிமிடம் போட்டு மூடி வைக்கவும். பிறகு நீரை வடிகட்டி, ஆறியதும் மிக்ஸியில் அரைத்தெடுக்கவும். மைதா மாவை சிறிது தண்ணீர் சேர்த்து கரைக்கவும். வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு, நீரில் நனைத்து பிழிந்தெடுத்த  பிரெட் ஸ்லைஸ்கள், கீரை விழுது, பச்சை மிளகாய் – இஞ்சி விழுது, சீஸ் துருவல், உப்பு ஆகியவற்ரை அகலமான பாத்திரத்தில் சேர்த்து நன்கு பிசைந்து விரும்பிய வடிவத்தில் தட்டிக் கொள்ளவும். தட்டிய கட்லெட்களை மைதா கரைசலில் தோய்த்து, பிரெட் தூளில் புரட்டி, சூடான எண்ணெயில் பொரித்தெடுத்து… டொமெட்டோ சாஸுடன் பரிமாறவும்.


ஓட்ஸ்  காலிஃப்ளவர் உப்புமா

தேவையானவை: ஓட்ஸ் – ஒரு கப், பெரிய வெங்காயம் – 2, பச்சை மிளகாய் – 2, கடுகு, உளுத்தம்பருப்பு – தலா அரை டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு,  பொடியாக நறுக்கிய காலிஃப்ளவர் – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: பெரிய வெங்காயத்தையும், பச்சை மிளகாயையும் மிகவும் பொடியாக நறுக்கவும். அடி கனமான வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து… வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி, காலிஃப்ளவர் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் ஒன்றரை கப் தண்ணீர், தேவையான உப்பு சேர்க்கவும். தண்ணீர் கொதித்ததும், ஓட்ஸை சேர்த்து 2 நிமிடம் நன்கு கிளறி (அடுப்பை ‘சிம்’மில் வைக்கவும்) மூடி, 5 நிமிடத்துக்குப் பிறகு இறக்கிப் பரிமாறவும்.


சோயா  ஆனியன் பெசரெட்

தேவையானவை: சோயா உருண்டைகள் – 10 (வேக வைத்து நீரைப் பிழிந்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றவும்), பச்சைப்பயறு – ஒன்றரை கப், வெங்காயம் – 2, இஞ்சி – சிறு துண்டு (சுத்தம் செய்யவும்), மிளகு, சோம்பு, சீரகம் – தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை – 2 ஆர்க்கு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: பச்சைப்பயறை 3 மணி நேரம் ஊறவிடவும். பிறகு அதனுடன் மிளகு, சோம்பு, சீரகம், உப்பு, இஞ்சி சேர்த்து சற்று கொரகொரப்பாக அரைக்கவும். மாவை எடுக்கும் சமயம் சோயாவை சேர்த்து மேலும்  சுற்று சுற்றி எடுத்துக் கொள்ளவும், வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, பொடியாக நறுக்கிய வெங்காயம், நறுக்கிய கறிவேப்பிலையை வதக்கி, மாவில் கலந்து கொள்ளவும். தோசைக்கல்லை சூடாக்கி, மாவை விட்டு, சுற்றிலும் எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும்.


பூண்டு துவையல்

தேவையானவை: உரித்த பூண்டு – 20 பல், காய்ந்த மிளகாய் – 2, புளி – சிறிதளவு, கறிவேப்பிலை – ஒரு கைப்பிடி, கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம் – தலா கால் டீஸ்பூன், உப்பு, நல்லெண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: வாணலியில் சிறிது நல்லெண்ணெய் விட்டு பூண்டு, காய்ந்த மிளகாய், புளி, கறிவேப்பிலை, உப்பு சேர்த்து நன்கு வதக்கி மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். இன்னொரு வாணலியில் கொஞ்சம் நல்லெண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம் தாளிக்கவும். அரைத்த துவையலில் தாளித்தவற்றை சேர்த்து ஒரு கிளறு கிளறி பரிமாறவும்.


பிரெட் வெஜ் புலாவ்

தேவையானவை: சாண்ட்விச் பிரெட் ஸ்லைஸ் – 6, வெங்காயம், கேரட் – தலா ஒன்று, பீன்ஸ் – 6,  பச்சைப் பட்டாணி – ஒரு கைப்பிடி அளவு, குடமிளகாய் – ஒன்று (நீளநீளமாக நறுக்கவும்), இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன், கரம்மசாலாத் தூள் – கால் டீஸ்பூன், டொமெட்டோ சாஸ் – 2 டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: பிரெட் ஸ்லைஸ்களை நீளநீளமாக ‘கட்’ செய்து கொள்ளவும். வெங்காயம், கேரட், பீன்ஸை நீளநீளமாக ஒரு இன்ச் அளவுக்கு ‘கட்’ செய்து கொள்ளவும். பச்சைப் பட்டாணியை வேக வைத்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் வெங்காயம், இஞ்சி – பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பிறகு கேரட், பீன்ஸ், பச்சைப் பட்டாணி, குடமிளகாய் சேர்த்து நன்கு வதக்கி… மிளகாய்த்தூள், கரம்மசாலாத் தூள் சேர்க்கவும். அதன் பின் டொமெட்டோ சாஸ், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். அதில் பிரெட் துண்டுகளைச் சேர்த்து ஒரு புரட்டு புரட்டி, சூடாக பரிமாறவும்.


 வெஜ் சாண்ட்விச்

தேவையானவை: சாண்ட்விச் பிரெட் ஸ்லைஸ் – 10, புதினா – கொத்தமல்லி சட்னி – அரை கப், துருவிய பனீர், துருவிய கேரட், துருவிய கோஸ் – தலா கால் கப், சில்லி சாஸ், தக்காளி சாஸ் – தலா 2 டேபிள் ஸ்பூன், வெண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: துருவிய கேரட், துருவிய கோஸ், துருவிய பனீர், சில்லி சாஸ், தக்காளி சாஸ்  ஆகியவற்றை ஒன்றாக கலந்து வைத்துக் கொள்ளவும். பிரெட் ஸ்லைஸின் இருபுறமும் வெண்ணெயை தடவவும். அதன்மேல் புதினா – கொத்தமல்லி சட்னியை தடவவும். இதற்கு மேல் வெஜ் கலவையை வைத்து, நன்கு பரத்தி அதன்மேல் மற்றொரு வெண்ணெய் தடவிய பிரெட் ஸ்லைஸை வைத்து மூடி, தோசைக்கல்லில் போட்டு, இருபுறமும் பொன்னிறமாக சுட்டு எடுத்துப் பரிமாறவும்.


 பட்டாணி சீஸ் பன்

தேவையானவை: பன் – 4, சீஸ் துருவல் – அரை கப், வேக வைத்து மசித்த பச்சைப் பட்டாணி – கால் கப், கேரட் துருவல் – 2 டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் – ஒன்று (மிகவும் பொடியாக நறுக்கவும்), வெண்ணெய் – தேவையான அளவு, உப்பு – சிறிதளவு.

செய்முறை: சீஸ் துருவல், வேக வைத்து மசித்த பச்சைப் பட்டாணி, கேரட் துருவல், பச்சை மிளகாய், உப்பு ஆகியவற்றை  ஒன்றாக கலந்து வைத்துக் கொள்ளவும். பன்னின் மேல் பகுதியை மெதுவாக வெட்டி எடுத்துவிட்டு, கீழ்ப்பகுதியின் நடுவில் உள்ள பாகத்தை கத்தியால் கீறி எடுத்து குழி செய்து கொள்ளவும். அதனுள் சீஸ் கலவையை ஸ்டஃப் செய்து கொள்ளவும். எல்லா பன்னிலும் இதே முறையில் ஸ்டப் செய்து வைத்து… மேல் பக்க பன்னால் மூடிக் கொள்ளவும். தோசைக் கல்லை காய வைத்து பன்னை அதன்மேல் வைத்து சுற்றிலும் சிறிது வெண்ணெய் சேர்க்கவும். லேசாக பொன்னிறமானதும் மறுபுறமும் திருப்பி போட்டு சூடானதும் எடுத்து பரிமாறவும்.

நன்றி:-சமையல் கலை நிபுணர் ஆதிரை வேணுகோபால்.

நன்றி:- .வி

பிரிவுகள்:30 வகை திடீர் சமையல், மகளீர் குறிச்சொற்கள்:, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

தாய்ப்பால் அதிகம் சுரக்க என்ன சாப்பிடலாம்?



தா
ய்ப்பாலைவிட நோய் எதிர்ப்புச் சக்தி கொண்ட சிறந்த உணவோ மருந்தோ குழந்தைகளுக்கு வேறு எதுவுமே இல்லை. இது எல்லோருக்கும் தெரிந்த விஷயமே என்றாலும், எல்லாத் தாய்மார்களாலும் குழந்தைக்குத் தேவையான அளவு தாய்பால் ஊட்ட முடிவதில்லை. அவர்கள் எந்த மாதிரியான உணவுகளைச் சாப்பிட்டால் தாய்ப்பால் போதிய அளவு சுரக்கும் என்பதைப் பற்றி தெளிவாக விளக்குகிறார் சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து மற்றும் தாய்ப்பால் ஆலோசகர் திவ்யா கிருஷ்ணமூர்த்தி.


”தாய் என்ன  சாப்பிடுகிறாரோ அதுதான் குழந்தைக்குச் சத்தாக சென்று சேரும். அதனால், தாய்மார்கள் குழந்தைகளுக்காகவாவது தாங்கள் சாப்பிடும் உணவில் அதிக கவனம் செலுத்த வேண்டும். அதிலும் குறிப்பாக, எடுத்துக் கொள்ளும் உணவை மொத்தமாக ஒரே சமயத்தில் சாப்பிட்டுவிடாமல், இரண்டு மணி நேர இடைவெளியில், நாள் ஒன்றுக்கு ஏழு முறை என்று உணவைக் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்துக் கொள்ளலாம். அது மட்டுமின்றித் தினமும் வேக வைத்த முட்டை, மீன் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். கோழி இறைச்சிக்குப் பதிலாக ஆட்டு இறைச்சியைச் சாப்பிடலாம். முள்ளங்கி, பீட்ரூட், தக்காளி போன்றவற்றை எடுத்துக் கொள்வதால் குழந்தைக்குச் சளிப் பிடிக்க வாய்ப்பு உள்ளது. எனவே இவற்றைத் தவிர்த்து கேரட், அவரைக்காய், சுரைக்காய், புடலங்காய் போன்ற நார்ச்சத்து மிகுந்த உணவுகளைத் தினமும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

கீரை வகைகளில் பொன்னாங்கண்ணிக் கீரையில் அதிக அளவில் புரதமும், மாவுச்சத்தும், வைட்டமின்களும் இருக்கின்றன. வாரம் இருமுறை இந்த கீரையை சேர்த்துக் கொள்ளலாம். இது பெண்களின் ஹார்மோன்களின் உற்பத்தியைப் பெருக்கித் தாய்ப்பாலை அதிகம் சுரக்க செய்யும். பேரீச்சம்பழம், திராட்சை, கேழ்வரகு, அவல், கோதுமை, சோயாபீன்ஸ் போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொண்டால் தாய்ப்பால் அதிகம் சுரக்கும்.” என்கிறார் திவ்யா விளக்கமாக.

சென்னை மகப்பேறு மருத்துவர் ருக்மணியும் தாய்ப்பால் பற்றிச் சில ஆலோசனைகள் கூறினார். ”இன்றைய தாய்மார்கள் பலர் அழகு போய்விடும் என்கிற காரணத்திற்காகத் தாய்ப்பாலைத் தவிர்த்து, தங்கள் பிள்ளைகளுக்குப் பசும்பால் கொடுக்கிறார்கள். ஆறு மாத காலம்வரை குழந்தைகளின் சிறுநீரகம் உரிய வளர்ச்சியைப் பெறாத நிலையில் இருக்கும். அதனால், பசும்பாலில் காணப்படும் அதிகப்படியான புரதச் சத்து சில பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடும். தாய்ப்பாலில் குறைந்த அளவு கலோரிகளும் புரதச்சத்தும் உள்ளதால் குழந்தைகளின் வளர்ச்சி உரிய விகிதத்தில் இருக்கும்.

பெரும்பாலும் அசைவ உணவு வகைகளை மிகவும் குறைந்த காரத்துடன் அல்லது காரமே இல்லாமல் எடுத்துக் கொள்வதுதான் சிறந்தது. இல்லையென்றால்  குழந்தைக்கு வயிற்றுபோக்கு ஏற்படுவதுடன் எரிச்சலும் உண்டாகும். பழ வகைகளைப் பொறுத்த வரையில் ஆப்பிள், கொய்யா போன்றவற்றை ஜூஸ் செய்து குடிக்காமல் அப்படியே  சாப்பிட  வேண்டும். ஏனென்றால், ஜூஸாக எடுத்துக் கொள்ளும் போது தாய்ப்பாலின் தன்மைத் திடமாக இல்லாமல் நீர்த்துவிடும். தாய்ப்பால் சிறந்த நோய் எதிர்ப்பு மருந்தாகவும் செயல்படக் கூடியது.”   என்கிறார் ருக்மணி.

தாய்ப்பாலைத் தவிர்க்காதீங்க தாய்மார்களே!

நன்றி:- Dr. திவ்யா கிருஷ்ணமூர்த்தி.

நன்றி:-  Dr. மகப்பேறு மருத்துவர் ருக்மணி.

நன்றி:- .வி

பிரிவுகள்:தாய்ப்பால் அதிகம் சுரக்க என்ன சாப்பிடலாம்?, மகளீர் குறிச்சொற்கள்:, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

வில்லங்கத்தை விலைக்கு வாங்கும் விபரீத பொழுதுபோக்கு

செப்ரெம்பர் 21, 2010 2 பின்னூட்டங்கள்

“கல்லூரிப் பெண்களே… விட்டில் பூச்சிகளாகாதீர்கள்!”

_________________________________________________________________________

பொது இடங்களில் கயவர்களின் செல்போன் கேமராக்கள், பெண்களை அநாகரிகமாக விழுங்குவதும், அதனால் ஏற்படும் விளைவுகளும் நாம் ஏற்கெனவே அறிந்ததே. ஆனால், சைபர் உலகின் இப்போதைய முக்கிய, பெருகி வரும் பிரச்னை… தங்களைத் தாங்களே செல்போனில் அந்தரங்கமாக படம் எடுத்து, பிரச்னைகளில் மாட்டிக்கொள்ளும் இளம் பெண்கள்! விட்டில் பூச்சிகளாகும் இந்த யுவதிகள் கல்லூரிக்கு பத்து பேராவது இருக்கிறார்கள் என்பதுதான் சோகம்!

கோவை பொறியியல் கல்லூரி ஒன்றின் மூன்றாமாண்டு மாணவியான பவித்ராவுக்கு (பெயர் மாற்றப்பட்டுள்ளது) பொறியியலோடு வாழ்க்கை யில் மற்றொரு இலக்கும் இருந்தது. கல்லூரி அளவில் கொண்டாடப்படும் தன்னுடைய அழகை நாடே ஆராதிக்கும் வகையில் மாடலிங் துறையில் புகுந்து கலக்க வேண்டும் என்பது!

இந்த ஆர்வத்தால் தன்னிடமிருந்த கேமரா மொபை லில் தன்னைத் தானே விதவிதமாக, அழகழகாக புகைப்படம் எடுத்து, அவற்றைத் தோழிகளுக்கும் குடும்பத்தினருக்கும் அவ்வப்போது காட்டி, “ஏய் நல்லாயிருக்குப்பா…” என்று அவர்களிடமிருந்து காம்ப்ளிமென்ட் வாங்கி சந்தோஷப்படுவது அவரது ஹாபியாகிப் போனது. இந்தப் பொழுதுபோக்கே… விபரீத பொறியில் அவரை சிக்கவைக்கும் என்று எவர்தான் நினைத்திருப்பார்கள்?!

அன்று அப்படித்தான் புதிதாக தான் வாங்கிய உள்ளாடையை அணிந்து பார்த்த பவித்ராவுக்கு, அந்த பிராண்ட் உள்ளாடையை அணிந்து போஸ் தந்து கொண்டிருக்கும் மாடல் பெண்ணைவிட, அது தனக்கு எடுப்பாக இருப்பதாகப் பட்டது. தனது தரப்பை தோழிகள் நம்ப வேண்டுமே?! எடுத்தார் கேமரா மொபலை. க்ளிக்கினார் உள்ளாடையோடு பல படங்கள்! இம்முறை இந்தப் படங்களை வீட் டில் உள்ளவர்களுக்கு காட்டவில்லை பவித்ரா. தன் கிளாஸ் ஃப்ரெண்ட்ஸான நான்கு தோழிகளிடம் மட்டும் காட்டினார்.

அதில் ஒரு விஷம மாணவி, புளூடூத் மூலம் அந்தப் படத்தை சுட்டு, சுற்றுக்குவிட, இன்றைக்கும் அந்தப்படங்கள் இணையத்திலும், விவஸ்தை கெட்டவர்களின் செல்போன்களிலும் வலம் வந்து கொண்டிருக்கிறது. பொறியியல், மாடலிங் இரண்டு கனவுகளும் கானலாகி விட, வெளியில் தலைகாட்ட முடியாத பவித்ராவின் குடும்பம், தொடர்புகளை அறுத்துக்கொண்டு இப்போது எங்கோ ஒரு ஊரில் இருக்கிறது.

நம்மூர் கல்லூரி மாணவிகள் மத்தியில் பவித்ராவின் உதா’ரணங்கள்’ ஏராளம். தமிழகத்தின் கட்டுப்பெட்டியான தென் மாவட்ட பெண்கள் கல்லூரி ஒன்றிலிருந்து கோவா டூர் சென்றார்கள். ஆர்வக்கோளாறு மாணவிகள் கூட்டமொன்று ஆளரவமற்ற இடத்தில் நீச்சல் போட்டு, குறைந்த, நனைந்த உடைகளுடன் இருந்த தங்களை ஜாலியாக செல்போனிலும் பதிவு செய்துகொண்டது. அந்த செல்போன் சர்வீசுக்குப் போன இடத்தில், அந்தக் காட்சிகள் சி.டி-யில் பதியப்பட்டு மதுரையில் கன்னாபின்னாவென்று நாறியது.

“இந்த உதாரணங்கள் வெகு சாதாரணமானவை. தங்களின் ஆர்வக்கோளாறால் எழுதவே கூசும் அளவுக்கு சைபர் உலகின் விஷப்பசிக்கு இரையாகும் மாணவிகள் ஏராளம். எம்.எம்.எஸ், வெப்காம் என நவீன தொழில்நுட்பத்தின் எதிர்மறை நிழலில் இளம்பெண்கள் தெரிந்தே செய்யும் அலட்சியத் தவறுகள் பல…” என்று ஆரம்பித்த திருவள்ளூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வனிதா, அப்படி தான்னைத் தானே ‘க்ளிக்கி’ பரிதாப நிலைக்கு ஆளான அந்தப் பெண்ணைப் பற்றிக் கூறினார்.

“கண்ணியமான கல்லூரிப் பெண்ணான அவளை காதலிப்பதாகச் சொன்ன தன் கிளாஸ்மேட்டை ‘ஸாரி’ என்று சிம்பிளாக புறக்கணித்தாள் அவள். கல்லூரிப் படிப்பு முடிந்தது. வேலைக்காக வெளிநாடு சென்றவன், நண்பர்களிடம் இவளின் மொபைல் நம்பர் வாங்கிப் பேச, முன்பு ‘நோ’ சொன்னவள், ‘ஃபாரின் போயும்கூட நம்மளையே நினைச்சுட்டு இருக்கானே’ என்று உருகி, அவன் காதலுக்கு இப்போது ‘யெஸ்’ சொல்லியிருக்கிறாள்.

பரஸ்பர பேச்சுப் பகிர்தல்கள் ஒரு கட்டத்தில் பரஸ்பர புகைப்பட பகிர்தல்களாகி இருக்கிறது. இறுதியில், தன் அந்தரங்கப் புகைப்படங்களைத் தானே எடுத்து, அவனுக்கு மெயில் அனுப்பியிருக்கிறாள் இவள்… ‘இவன்தானே என் புருஷனாகப் போறான்’ என்ற நம்பிக்கையில். ஆனால், அவனுக்கு அங்கேயே வசதியான என். ஆர்.ஐ. பெண் கிடைக்க, இவளின் நச் சரிப்பை அடக்க தன் கைவசமிருந்த அவளது ஏடா கூட படங்களை துருப்புச் சீட்டாக்கினான் அவன். அந்தப் படங்களை இன்டர்நெட்டில் வெளியிடுவேன் என்று அவன் மிரட்ட, மனமொடிந்து தற்கொலை முயற்சி வரை சென்றவளை உயிர்த்தோழிகள் அரவணைத்து போலீஸில் புகார் கொடுக்க வைத்தனர். அவன் மீது நடவடிக்கை எடுக்கப்பட, சுப திருப்பமாக இப்போது அவனே முன் வந்து இவளை மணந்துள்ளான்” என்ற வனிதா,

“இப்போது பல கல்லூரி மாணவிகளும் ஆசைக்காகவும், பொழுதுபோக்குக்காகவும், தோழி களுடனான ஜாலி தருணங்களுக்காகவும், காதல னிடம் பகிர்ந்து கொள்வதற்காகவும் என, தங்கள் செல்போனில் தங்களைத் தாங் களே இப்படி அந்தரங்கமாக புகைப்படம் எடுத்துக்கொள்வது, பெருகி வருகிறது. சட்டத்தின் பார்வையில் இப்படி கேமராவில் தவறான படங் களை எடுப்பதும் அதை பரப்பு வதும், பகிர்ந்து கொள்வதும் குற்றமே. அப்படிப் பார்த்தால், இதில் முதல் குற்றவாளிகள் சம்பந்தப்பட்ட பெண்களே.

எம்.எம்.எஸ், புளூடூத் மற்றும் இணையத்தின் ஆக்டோ பஸ் கரங்களில் இம்மாதிரியான அந்தரங்கப்படங்கள் கிடைக்கும்போது அவற்றால் ஏற்படும் விளைவுகளை ஒருகணம் உணர்ந்தார்கள் எனில் இந்தச் சகதியில் எந்த இளம்பெண்ணும் கால் வைக்க மாட்டார்கள்” என்றவர், ஒரு வேளை தாங்கள் எடுத்த புகைப் படங்களால் சைபர் க்ரைமின் பிடியில் சிக்கிவிட்டவர்கள், அதிலிருந்து மீள்வதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகளையும் குறிப்பிட்டார்.

“பிரச்னை என்றால், உடனடியாக காவல் துறையை அணுகி புகார் கொடுக்க சம்பந்தப்பட்ட பெண்கள் தயங்கக்கூடாது. சைபர் க்ரைம் சிறப்புப் பிரிவு, நிபுணர்கள், விஷேச உபகரணங்கள் எல்லாம் காவல்துறையிடம் இருக்கின்றன. அதை வைத்து குற்றவாளிகளை அடக்க முடியும். பாதிக்கப்படுபவர்கள் வாய் மூடி மௌனிப்பது விஷமிகளை தூண்டி விடுவதாக அமையும்” என்று திடம் ஊட்டி முடித்தார் வனிதா.

விஷமிகளை சட்டமும் காவல்துறையும் கட்டுப்படுத்தும் என்பது ஒருபுறமிருக்க, தன்னுடைய அழகை மெச்சி அரைகுறையாக படம் எடுத்து, இந்த விஷமிகளுக்கு சிவப்புக் கம்பளம் விரித்து வைக்கும் பெண்களின் மனநிலை பற்றியும், அதைக் கட்டுப்படுத்துவது பற்றியும் பேசினார் திருச்சி, ‘ஆத்மா’ மனநல மைய தலைமை மருத்துவரான ராமகிருஷ்ணன்.

“நார்சிஸம் (Narcism) எனப்படும் நம்மை நாமே அழகு பார்ப்பதும், ரசிப்பதுமான மனப்பான்மை மனிதர்கள் மத்தியில் பொதுவானது; சாதாரணமானதும்கூட… எல்லாம் ஒரு அளவு வரை. ஆனால், இந்த ரசனையின் இன்னொரு யுக்தியான எக்ஸிபிஷனிஸம் (Exhibitionism) எனப்படும் தனது அழகையோ, பாலின அவயங்களையோ மற்றவர்களுக்குக் காட்சிப்படுத்தி அதை ரசிக்கும் மனநிலை, தடம் புரளவே வைக்கும்.

பொழுதுபோக்குக்காகவோ, ஆர்வக்கோளாறினாலோ அப்படித் தங்களை அழகாக, அந்தரமாக புகைப்படங்கள் எடுத்து ரசிக்கும் பெண்கள், நாளடைவில் அப்ஸஷன் (Obsession) எனப்படும், குறிப்பிட்ட அந்த எண்ணத்திலிருந்து திரும்ப முடியாத பிடியில் சிக்கிக்கொண்டு அவதிப்படுவார்கள்.

நான்கு சுவர்களுக்குள் எடுக்கப்படும் புகைப்படங்கள்தானே என நினைத்து உங்கள் எதிர்காலத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் எந்தச் செயலிலும் இறங்காதீர்கள். விபத்தைத் தவிர்க்க சாலையில் இருக்கும் மஞ்சள்கோட்டைப் போல, நமது வாழ்க்கையிலும் எதிர்படும் பல்வேறு மஞ்சள் கோடுகளை மதித்து நடக்க வேண்டும்” என்றார் ராமகிருஷ்ணன்.

கோவையை சேர்ந்த மருத்துவ உளவியல் நிபுண ரான சுஜிதா இந்த பிரச்னை தொடர்பாக பேசியபோது, “இணையதளத்தின் சமூக தளங்களில் உலவும் இளம் பெண்கள், அங்கு கூடியிருக்கும் கூட்டத்துக்கு இடையில் தனக்கென ஓர் இடம் பிடிப்பது, இணைய நண்பர் களை எப்போதும் தன் பிடியிலேயே வைத்திருக்கும் பிரயத்தனம், அதன் நீட்சியாக தங்களை வித்தியாச படமெடுத்துப் பதியும் முயற்சி என தங்கள் நிலையில் இருந்து எளிதில் கீழிறங்கத் தலைப்படுகிறார்கள். டிஜிட்டல் பதிவாக எடுக்கப்படும் புகைப்படங்களை, அவை ஸ்டோர் செய்யப்பட்ட உபகரணங்களில் இருந்து அழித்த பின்னரும் நவீன மென்பொருள்கள் உதவியால் மீட்கப் படவும் வழியிருக்கிறது. இந்த உண்மை தெரிந்த பெண், நிச்சயம் தன்னை அரைகுறையாக படமெடுக்க முயல மாட்டார்” என்று சொன்ன சுஜிதா,

”செல்போன் கேமரா, 3ஜி தொழில்நுட்பம், வெப்காம் போன்ற இந்த நவீன நுட்பங்கள் எல்லாம் இருமுனைக் கத்திபோல. கவனமாக கையாளவிட்டால் நமக்கு பெருத்த சேதத்தை தராமல் விடாது!” என்ற எச்சரித்தார்!

நன்றி:- எஸ்.கே.நிலா

நன்றி:- அ.வி

ஆசை ஆசையாய் 30 வகை தோசை – கருப்பட்டி முதல் ஓட்ஸ் வரை


தோசையம்மா தோசை அம்மா சுட்ட தோசை…

தலைமுறை தாண்டியும் தவறாமல் நம் குழந்தைகளுக்குப் போய்ச் சேர்ந்து கொண்டிருக்கும் ஒரு சில பழம் பாடல்களில் இதுவும் ஒன்று.

இதற்குக் காரணம்… ‘தோசை’ என்கிற உணவின் மீது குழந்தைகளுக்கு இருக்கும் ஆர்வமும்… ஆசையும்தான்!

”இன்னிக்கு என்ன டிபன் பண்ணட்டும்?” என்று கேட்டதுமே பெரும்பாலான குழந்தைகள் ஏகோபித்த குரலில் சொல்வது… ”தோசை” என்பதைத்தானே!

“ம்ஹ¨ம்… எனக்கு மம்மு வேண்டாம்” என அடம்பிடிக்கும் குழந்தைகூட, “தோசை செஞ்சு தர்றேண்டா செல்லம்”னு கொஞ்சினா… அடுத்த நிமிஷமே சரண்டராகி விடுமே!

ஆக, தோசைக்கு எப்போதுமே நூற்றுக்கு நூறு மார்க்தான்.

இதோ… பாட்டியின் கருப்பட்டி தோசையிலிருந்து, ‘மாடர்ன் வேர்ல்டு’ கற்றுக் கொடுத்திருக்கும் பீட்சா தோசை வரை வகை வகையாக செய்து அசத்தி, ஆச்சரியப்படுத்தியிருக்கும் சமையல்கலை வல்லுநர் உஷாதேவி, “ஒவ்வொரு வகை தோசைக்கும் அரிசியை ஊற வைக்கறதுல இருந்து, தோசை மாவை கல்லுல வார்க்குறது வரைக்கும் நிறைய வரைமுறைகள் இருக்கு. அதையெல்லாம் சரியா செஞ்சாத்தான் தோசை ருசிக்கும்… கல்லுல ஒட்டிக்கிட்டு அடம் பிடிக்காம, அழகா பெயர்ந்து வரும்” என்று உத்தரவாதம் தருகிறார்.

பிறகென்ன… எப்போது பார்த்தாலும் ஒரே மாதிரியான தோசையை சுட்டுப்போட்டு போரடிக்காமல்… ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தோசை என்று வீட்டில் ‘தோசைத் திருவிழா’வைக் கொண்டாடுங்க தோழிகளே!

ரவா தோசை

தேவையானவை: மைதா மாவு – ஒரு கப், அரிசி மாவு – கால் கப், வறுத்த ரவை – இரண்டரை கப், பச்சை மிளகாய் – 3, இஞ்சி – சிறிய துண்டு, சீரகம் – ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: பச்சை மிளகாய், இஞ்சி இரண்டையும் நசுக்கிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, அரிசி மாவு, ரவை, சீரகம், உப்பு, நசுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து, தண்ணீர் விட்டுக் கட்டியில்லாமல் கரைக்கவும். தோசைக் கல்லை சூடாக்கி, எண்ணெய் விட்டு, கல்லின் ஓரத்தில் இருந்து உள்பக்கம் வரும் வகையில் மாவை விட வேண்டும். இருபக்கமும் எண்ணெய் விட்டு, முறுகலாக வெந்ததும் எடுக்கவும். இதனை திருப்பிப் போடத் தேவையில்லை. இதற்குத் தொட்டுக்கொள்ள தேங்காய் சட்னி நன்றாக இருக்கும்.

மிக்ஸட் தோசை

தேவையானவை: துவரம்பருப்பு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு (கலந்தது) – ஒரு கப், பச்சரிசி – ஒன்றரை கப், புழுங்கலரிசி – ஒரு கப், தேங்காய் துருவல் – அரை கப், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

தாளிக்க: பெரிய வெங்காயம் – ஒன்று, பச்சை மிளகாய் – 4, சீரகம் – ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை – சிறிதளவு.

செய்முறை: அரிசி, பருப்பை தனித்தனியாக இரண்டு மணி நேரம் ஊற வைத்து கரகரப்பாக அரைக்கவும். கடைசியாக உப்பு, தேங்காய் துருவல் போட்டு ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். கடாயில் கொஞ்சம் எண்ணெய் விட்டு, பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை போட்டு வதக்கி.. சீரகம், பெருங்காயத்தூள் சேர்த்து மீண்டும் வதக்கி, மாவில் கொட்டவும். மாவை, தோசைக் கல்லில் மெல்லியதாக விட்டு, இருபுறமும் எண்ணெய் விட்டு, வேகவிட்டு, பரிமாறவும்.

அவியல், இதற்கு சூப்பரான சைட் டிஷ்!

தோசை முறுகலாக வருவதற்கு… முதலில் அரிசியைப் போட்டு, பாதி அரைத்தவுடன் ஊற வைத்த பருப்புகளைப் போட்டு அரைக்கவும். இந்த மாவை புளிக்க வைக்காமல் உடனே செய்ய வேண்டும். மாவானது, இட்லி மாவு பதத்தில் இருக்க வேண்டும்.

கோதுமை தோசை

தேவையானவை: கோதுமை மாவு – ஒரு கப், பொடியாக நறுக்கிய வெங்காயம் – ஒன்று, பச்சை மிளகாய் – 2 (பொடியாக நறுக்கியது), கறிவேப்பிலை பொடி, புதினா பொடி – தலா அரை டீஸ்பூன், சீரகம் – ஒரு டீஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: ஒரு பாத்திரத்தில் எண்ணெய் தவிர, எல்லா பொருட்களையும் போட்டு, தண்ணீர் விட்டு தோசை மாவு பதத்தில் கரைத்து, சிறிது நேரம் வைத்திருக்கவும். தோசைக் கல்லை சூடாக்கி, ஒரு கரண்டி மாவு எடுத்து சிறிது கனமாக இட்டு, இருபுறமும் எண்ணெய் விட்டு, வெந்தவுடன் எடுக்கவும்.

தக்காளித் தொக்குடன், சுடச்சுட சாப்பிட சுவையாக இருக்கும்.

பருப்பு தோசை (இனிப்பு)

தேவையானவை: பாசிப் பருப்பு அல்லது பச்சைப் பயறு – ஒரு கப் பச்சரிசி – கால் கப், தேங்காய் துருவல் – 2 டேபிள்ஸ்பூன், வெல்லம் (அ) பனை வெல்லம் – ஒன்றேகால் கப், ஏலக்காய் – 2, நெய் (அ) எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: பருப்பு, அரிசியை தனித் தனியாக இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு, தனித்தனியாக கரகரவென கெட்டியாக அரைத்து, ஒன்றாகக் கலந்து கொள்ளவும். வெல் லம் அல்லது பனை வெல்லத்தை சிறிதளவு தண்ணீர் விட்டுக் கரைத்து வடிகட்டி… மாவுடன் சேர்த்து, தோசை மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும். பொடித்த ஏலக்காய், தேங்காய் துருவல் போட்டு நன்கு கலக்கவும். சூடான தோசைக் கல்லில் எண்ணெய் தேய்த்து, ஒரு கரண்டி மாவு விட்டு, தோசையாக வார்க்கவும். இருபுறமும் நெய் (அ) எண்ணெய் விட்டு, வெந்தவுடன் எடுத்து சூடாகப் பரிமாறவும். விருப்பப்பட்டால், வறுத்த வேர்க்கடலையை ஒன்றிரண்டாக பொடித்து தோசையை எடுக்கும் சமயத்தில் தூவிப் பரிமாறலாம்.

கேழ்வரகு தோசை

தேவையானவை: கேழ்வரகு – கால் கிலோ, உளுத்தம்பருப்பு – கைப்பிடியளவு, பச்சரிசி – கால் கப், முருங்கைக் கீரை – கைப்பிடியளவு, உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: கேழ்வரகு, உளுத்தம்பருப்பு, பச்சரிசி ஒவ்வொன்றையும் தனித்தனியாக இரண்டு மணி நேரம் ஊறவிடவும். பிறகு, தனித்தனியாக நன்றாக அரைத்துக் கொள்ளவும். மாவை ஐந்து மணி நேரம் புளிக்க விடவும். பிறகு, அவற்றை ஒன்றாக சேர்த்து உப்பு, முருங்கைக் கீரை சேர்த்து, நன்கு கலக்கவும். தோசைக் கல்லை சூடாக்கி, எண்ணெய் தேய்த்து, கனமான தோசையாக வார்க்கவும். இருபுறமும் எண்ணெய் விட்டு வெந்தவுடன் எடுத்துப் பரிமாறலாம்.

காரக்குழம்புடன் சாப்பிட, சுவை அபாரமாக இருக்கும்!

சோள தோசை

தேவையானவை: வெள்ளைச் சோளம், பச்சரிசி – தலா ஒரு கப், உளுத்தம்பருப்பு – இரண்டு டேபிள்ஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: வெள்ளைச் சோளம், பச்சரிசி, உளுத்தம்பருப்பு ஆகியவற்றை தனித்தனியாக இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு, தனித்தனியாக அரைக்கவும். பிறகு, எல்லா மாவையும் ஒன்றாக கலந்து, உப்பு சேர்க்கவும். இந்த மாவை, 10 முதல் 12 மணி நேரம் வரை புளிக்க வைக்கவும். சூடான தோசைக் கல்லில், எண்ணெய் தேய்த்து, ஓரத்தில் இருந்து உள்பக்கம் வரும் வகையில் மாவை விடவும். இருபுறமும் எண்ணெய் விட்டு, திருப்பிப் போட்டு, வெந்ததும் எடுக்கவும்.

இதற்குத் தொட்டுக்கொள்ள காய்கறி குருமா சூப்பராக இருக்கும்!

ஜவ்வரிசி தோசை

தேவையானவை: ஜவ்வரிசி – ஒரு கப், புழுங்கல் அரிசி – ஒன்றரை கப், வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கியது), பச்சை மிளகாய் – 5 (பொடியாக நறுக்கியது), இஞ்சி – சிறிய துண்டு (பொடியாக நறுக்கியது), கறிவேப்பிலை – சிறிதளவு, உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: ஜவ்வரிசியைக் கழுவி, தண்ணீரை நன்கு வடிகட்டி இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும். அவ்வப்போது இதனைக் கிளறினால்தான் முழுமையாக ஊறும். புழுங்கல் அரிசியை இரண்டு மணி நேரம் ஊற வைத்து, நன்கு கழுவி அரைக்கவும். அரிசி நன்கு அரைபட்டவுடன்… ஜவ்வரிசி, உப்பு சேர்த்து நைஸாக அரைத்தெடுக்கவும். மாவை இரண்டு மணி நேரம் புளிக்க விடவும். கடாயில் எண்ணெய் விட்டு… நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, மாவில் கொட்டிக் கலக்கவும்.

தோசைக் கல் சூடானதும் எண்ணெய் தேய்த்து, மாவை மெல்லிய தோசைகளாக வார்த்து, வெந்தவுடன் எடுத்துப் பரிமாறவும்.

புதினா சட்னியுடன் சாப்பிட்டால், டேஸ்ட் கூடுதலாக இருக்கும்!

சோயாபீன்ஸ் தோசை

தேவையானவை: சோயாபீன்ஸ் – ஒரு கப் (10 மணி நேரம் ஊற வைக்கவும்), புழுங்கல் அரிசி – ஒரு கப் (ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்), வெந்தயம் – ஒரு டீஸ்பூன் (அரிசியுடன் சேர்த்து ஊற வைக்கவும்), உப்பு – தேவையான அளவு.

செய்முறை: ஊறிய சோயாபீன்ஸை அரைக்கவும். பிறகு… அரிசி-வெந்தயத்தை அரைத்துக் கொள்ளவும். இரண்டு மாவையும் ஒன்றாகக் கலந்து, உப்பு சேர்த்து ஒரு இரவு முழுவதும் புளிக்க வைக்கவும். சூடான தோசைக் கல்லில் எண்ணெய் தேய்த்து, மாவை விட்டு தோசைகளாக வார்த்து, இருபுறமும் எண்ணெய் விட்டு எடுக்கவும்.

இதற்குத் தொட்டுக்கொள்ள தேங்காய் சட்னி சிறந்த காம்பினேஷன்!

வெங்காய தோசை

தேவையானவை: பச்சரிசி – ஒரு கப், உளுத்தம்பருப்பு – அரை கப், புழுங்கல் அரிசி – 3 கப், வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கியது), பச்சை மிளகாய் – 4, கடுகு – கால் டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: பச்சரிசி, உளுத்தம்பருப்பு, புழுங்கல் அரிசி ஆகியவற்றை தனித்தனியாக 2 மணி நேரம் ஊற வைக்கவும். அவற்றை தனித்தனியாக அரைத்து, ஒன்றாக்கி, உப்பு சேர்த்துக் கலக்கவும். இந்த மாவை ஒரு இரவு புளிக்க விடவும்.

பிறகு, கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளித்து… நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கி, மாவில் கொட்டிக் கலக்கவும். சூடான தோசைக் கல்லில் எண்ணெய் தேய்த்து, மாவை ஊத்தப்பம் போல் வார்த்து, எண்ணெய் விட்டு, வெந்தவுடன் எடுக்கவும்.

தேங்காய் சட்னியுடன் பரிமாறினால், சுவை தூக்கலாக இருக்கும்.

செட் தோசை

தேவையானவை: பச்சரிசி, புழுங்கல் அரிசி – தலா ஒரு கப் (இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும்), உளுத்தம்பருப்பு – அரை கப் (இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும்), தேங்காய் துருவல் – அரை கப், கேரட் துருவல் – அரை கப், நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு, இட்லி மிளகாய்ப்பொடி – தேவையான அளவு, உப்பு, நெய் (அ) எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: பச்சரிசி, புழுங்கல் அரிசி, உளுத்தம்பருப்பை தனித்தனியாக தோசை மாவு பதத்தில் அரைத்து, ஒன்றாக்கி, உப்பு சேர்த்துக் கலக்கவும். 10 முதல் 12 மணி நேரம் வரை புளிக்க விடவும். தோசைக் கல்லை சூடாக்கி, எண்ணெய் தேய்த்து, சிறிது கனமாக தோசை வார்க்கவும். அதன் மீது தேங்காய் துருவல் தூவி, மூடி போட்டு மூடவும். சுற்றிலும் நெய் (அ) எண்ணெய் விட்டு வாசனை வந்ததும், மூடியைத் திறந்து தோசையை எடுத்து தட்டில் வைக்கவும். இதேபோல் மற்றொரு தோசை செய்து, அதில் கேரட் துருவலைத் தூவி மூடி… வெந்தவுடன் மூடியை எடுக்கவும். அதன் மீது இட்லி மிளகாய்ப்பொடி, நறுக்கிய கொத்தமல்லி ஆகியவற்றை தூவி, ஏற்கெனவே செய்து வைத்துள்ள தோசை மேல் வைக்க… செட் தோசை ரெடி!

இதனை தேங்காய் சட்னியுடன் பரிமாறலாம்.

அவல் தோசை

தேவையானவை: அவல், தயிர் – தலா 2 கப், பச்சரிசி, புழுங்கல் அரிசி – தலா ஒரு கப், சாதம்-கையளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: அவலை சுத்தம் செய்து கழுவி, கடைந்த தயிரில் சிறிது நேரம் ஊற வைக்கவும். இரண்டு வகை அரிசியையும் ஒரு மணி நேரம் ஊற வைத்து அரைக்கவும். பிறகு, தயிரில் ஊற வைத்த அவலுடன் சாதம் மற்றும் உப்பு சேர்த்து, தோசை மாவு பதத்தில் அரைத்தெடுக்கவும். அதனை 5 முதல் 6 மணி நேரம் வரை புளிக்க விடவும். தோசைக் கல்லை சூடாக்கி, எண்ணெய் தேய்த்து, மாவை எடுத்து ஓரத்தில் இருந்து உள்பக்கம் வரும் வகையில் வார்த்து, இருபுறமும் எண்ணெய் விட்டு வேக விடவும்.

இதற்கு காரச் சட்னி அருமையான காம்பினேஷன்.

குறிப்பு: மாலையில் தோசை செய்யத் திட்டமிட்டால், காலையிலேயே மாவை அரைத்து தயார் செய்துகொள்ள வேண்டும்.

கம்பு தோசை

தேவையானவை: கம்பு, புழுங்கல் அரிசி – தலா ஒரு கப், உளுத்தம்பருப்பு – அரை கப், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: கம்பு, புழுங்கல் அரிசி, உளுத்தம்பருப்பு மூன்றையும் தனித்தனியாக 2 மணி நேரம் ஊற வைக்கவும். அவற்றை தோசை மாவுக்கு அரைப்பது போல் தனித்தனியாக அரைத்து, ஒன்றாக்கி, உப்பு போட்டு 10 முதல் 12 மணி நேரம் வரை புளிக்க விடவும். சூடான தோசைக் கல்லில் எண்ணெய் தேய்த்து, மாவை தோசைகளாக வார்த்து, இருபுறமும் சுட்டு எடுக்கவும்.

தேங்காய் சட்னியுடன் பரிமாறினால் அபாரமாக இருக்கும்.

ஓட்ஸ் தோசை

தேவையானவை: ஓட்ஸ் – ஒரு கப், அரிசி மாவு, வறுத்த ரவை, கோதுமை மாவு – தலா கால் கப், பச்சை மிளகாய் – 2, இஞ்சி – சிறிய துண்டு, கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு,

செய்முறை: பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை ஆகியவற்றை ஒன்றிரண்டாக தட்டிக் கொள்ளவும். இவற்றை ஒரு பாத்திரத்தில் போடவும். அதில் ஓட்ஸ், அரிசி மாவு, ரவை, கோதுமை மாவு, உப்பு ஆகியவற்றையும் சேர்த்து, தண்ணீர் விட்டு ரவா தோசைக்கு மாவு கரைப்பது போல் கரைத்துக் கொள்ளவும். சிறிது நேரம் கழித்து, தோசைக் கல்லில் எண்ணெய் தேய்த்து, மெல்லியதாக மாவை வார்த்து, இருபுறமும் சுட்டு எடுக்கவும்.

கீரை தோசை

தேவையானவை: புழுங்கல் அரிசி, பச்சரிசி – தலா ஒரு கப், உளுத்தம்பருப்பு – கால் கப், பாலக் கீரை – ஒரு கப், பச்சை மிளகாய் (விழுதாக அரைக்கவும்) – 3, சீரகம் – ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: இரண்டு வகை அரிசி, உளுத்தம்பருப்பு ஆகியவற்றை இரண்டு மணி நேரம் தனித்தனியாக ஊற வைத்து, தனித்தனியாக அரைத்து, ஒன்றாக்கி, உப்பு சேர்த்துக் கலக்கவும். பாலக்கீரையை ஆய்ந்து, சுடு தண்ணீரில் வேக வைத்து அரைத்துக் கொள்ளவும். அரைத்த கீரை, சீரகம், பச்சை மிளகாய் எல்லாவற்றையும், அரைத்த மாவுடன் சேர்க்கவும். தோசைக் கல்லில் எண்ணெய் தேய்த்து, மாவை வார்த்தெடுத்தால்… கீரை தோசை தயார்.

ஊறுகாயுடன் பரிமாறினால் சுவையாக இருக்கும்!

குறிப்பு: பாலக் கீரைக்கு பதிலாக, வல்லாரைக் கீரையும் சேர்க்கலாம்.

பீட்ரூட் தோசை

தேவையானவை: தோசை மாவு – இரண்டு கப், அரைத்த பீட்ரூட் விழுது – அரை கப், எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: தோசை மாவுடன் பீட்ரூட் விழுதைச் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். தோசைக் கல்லில் ஊத்தப்பத்தை விட மெல்லியதாக வார்த்து, இருபுறமும் எண்ணெய் விட்டு வெந்தவுடன் எடுத்துப் பரிமாறவும்.

சட்னி எதுவும் இல்லாமலே சாப்பிடலாம்.

கேரட் தோசை

தேவையானவை: தோசை மாவு – இரண்டு கப், கேரட் விழுது – அரை கப், பொடித்த காய்ந்த மிளகாய் – தேவைப்படும் காரத்துக்கு ஏற்ப, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: தோசை மாவில் கேரட் விழுது, பொடித்த காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். தோசைக் கல்லில் சிறிது கனமாக மாவை வார்த்து, இருபுறமும் எண்ணெய் விட்டு வேகவிட்டு எடுக்கவும். விருப்பப்பட்டால் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை மாவில் சேர்த்தும் செய்யலாம்.

இந்த தோசையை எந்த சட்னியுடனும் பரிமாறலாம்.

தக்காளி தோசை

தேவையானவை: பச்சரிசி – ஒரு கப், புழுங்கல் அரிசி – அரை கப், நறுக்கிய தக்காளி – கால் கிலோ, காய்ந்த மிளகாய் – 6, வெங்காயம் – ஒன்று, உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: இரண்டு அரிசியையும் தனித்தனியாக ஒரு மணி நேரம் ஊற வைத்து அரைத்துக் கொள்ளவும். பிறகு, இரண்டு மாவையும் ஒன்றாக்கவும். கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு… தக்காளி, காய்ந்த மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கி, ஆற வைத்து, மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும். மாவு மற்றும் தக்காளி கலவையை ஒன்றாக்கி, உப்பு போட்டு தோசை மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும். சூடான தோசைக் கல்லில் எண்ணெய் தேய்த்து, மாவை மெல்லிய தோசைகளாக வார்த்து, இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும்.

குறிப்பு: இந்த மாவை புளிக்க வைக்கத் தேவையில்லை.

புதினா – கொத்தமல்லி தோசை

தேவையானவை: தோசை மாவு – 2 கப், நறுக்கிய புதினா, கொத்தமல்லி (சேர்ந்தது) – ஒரு கப், எலுமிச்சைச் சாறு – ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் – 3, பூண்டு – 2 பல்.

செய்முறை: புதினா, கொத்தமல்லி, பச்சை மிளகாய், பூண்டை மிக்ஸியில் போட்டு அரைத்து, எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலக்கவும். இந்தக் கலவையை தோசை மாவுடன் கலந்து கொள்ளவும். இதை தோசைக் கல்லில் எண்ணெய் தேய்த்து, தோசைகளாக வார்த்து சுட்டெடுக் கவும்.

இது, வித்தியாசமான சுவையுடனும் மணத்துடனும் இருக்கும்.

பப்பாளி தோசை

தேவையானவை: தோசை மாவு – இரண்டு கப், பப்பாளிப்பழத் துண்டுகள் – ஒரு கப், பச்சை மிளகாய் (அ) காய்ந்த மிளகாய் – 3, வெங்காயம் – ஒன்று, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் (அ) காய்ந்த மிளகாய் போட்டு வதக்கவும். கடைசியாக, பப்பாளிபழத் துண்டுகளைப் போட்டு இரண்டு நிமிடம் வதக்கவும். ஆறியதும் உப்பு சேர்த்து அரைத்து, தோசை மாவில் கலந்து… தோசைகளாக வார்த்தெடுக்கவும்.

பனீர் தோசை

தேவையானவை: தோசை மாவு – இரண்டு கப், பனீர் துருவல் – ஒரு கப், நறுக்கிய பச்சை மிளகாய் – 3, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு, சீரகம் – ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: பனீர் துருவலுடன் பச்சை மிளகாய், கொத்தமல்லி, சீரகம், உப்பு சேர்த்து நன்கு கலந்து வைத்துக் கொள்ளவும். தோசைக் கல்லில் மாவை தோசையாக வார்த்து, சுற்றிலும் எண்ணெய் விட்டு பாதி வெந்ததும் பனீர் கலவையை அதன் மேலே தூவி, சிறிது நேரம் மூடி வைக்கவும். பிறகு மூடியைத் திறந்து தோசையை திருப்பி போட்டு, வெந்தவுடன் எடுத்து சூடாகப் பரிமாறவும்.

மசாலா தோசை

தேவையானவை: தோசை மாவு – இரண்டு கப், உருளைக்கிழங்கு – கால் கிலோ, நறுக்கிய வெங்காயம் – ஒரு கப், இஞ்சி – சிறு துண்டு, பூண்டு – 3 பல், நறுக்கிய பச்சை மிளகாய் – 4, கடுகு, உளுத்தம்பருப்பு – தலா கால் டீஸ்பூன், மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, கறிவேப்பிலை – சிறிதளவு, பொட்டுக்கடலை மாவு – ஒரு டேபிள்ஸ்பூன், காரச்சட்னி – சிறிதளவு, எண்ணெய், நெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, பச்சை மிளகாய், நசுக்கிய இஞ்சி, பூண்டு, நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை ஆகியவற்றை ஒவ்வொன்றாக சேர்த்து நன்கு வதக்கவும். ஒரு கப் தண்ணீர் விட்டு மஞ்சள்தூள், உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும். வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு சேர்த்து நன்கு கிளறவும். அடுப்பிலிருந்து இறக்குவதற்கு முன், பொட்டுக்கடலை மாவு தூவி, கெட்டியானதும் இறக்கி ஆற விடவும். மசாலா ரெடி!

தோசைக் கல் சூடானதும், எண்ணெய் விட்டு, தோசை மாவை மெல்லியதாக வார்த்து, பாதி வெந்ததும் ஒரு பாதியில் காரச்சட்னி தடவி… மறு பாதியில் கிழங்கு மசாலா வைத்து, நெய் விட்டு மடிக்கவும். அதே போல் ஒவ்வொரு தோசையையும் தயார் செய்யவும்.

இந்த தோசையை சூடான சாம்பாருடன் பரிமாறினால் ருசியாக இருக்கும்.

புளிப்பு-கார தோசை

தேவையானவை: புழுங்கல் அரிசி, பச்சரிசி – தலா ஒரு கப், கடலைப்பருப்பு – அரை கப், புளிக் கரைசல் – ஒரு டேபிள்ஸ்பூன், தேங்காய் துருவல் – ஒரு டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் – 4, கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு,

செய்முறை: புழுங்கல் அரிசி, பச்சரிசி, கடலைப்பருப்பைத் தனித்தனியாக இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும். அவற்றை ஒன்றாக்கி, தேங்காய் துருவல், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து அரைக்கவும். கடைசியாக, உப்பு, புளிக் கரைசல் சேர்த்து, 20 முதல் 30 நிமிடங்கள் வரை புளிக்க வைத்து, தோசைக்கல்லில் எண்ணெய் தேய்த்து, தோசைகளாக வார்த்து எடுக்கவும்.

இதற்குத் தொட்டுக் கொள்ள சட்னி தேவையில்லை

பருப்புப் பொடி தோசை

தேவையானவை: தோசை மாவு – இரண்டு கப், நெய் – தேவையான அளவு.

பருப்புப் பொடிக்கு: உளுத்தம்பருப்பு – ஒரு கப், கடலைப்பருப்பு – அரை கப், காய்ந்த மிளகாய் – 10, கறிவேப்பிலை – சிறிதளவு, பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை, எள் – ஒரு டேபிள்ஸ்பூன், பூண்டு – 5 பல், உப்பு – தேவையான அளவு.

செய்முறை – பருப்புப் பொடி: வெறும் கடாயில் உளுத்தம்பருப்பு போட்டு வறுத்து தனியே வைக்கவும். கடலைப்பருப்பைபையும் வறுத்து தனியே வைக்கவும். காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்து வறுத்து தனியே வைக்கவும். எள், பூண்டு வறுத்து ஆற விடவும். ஆறியவுடன், வறுத்த பருப்புகள், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, உப்பு, பெருங்காயத்தூள் ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு பொடி செய்யவும். அதனுடன் வறுத்த எள், பூண்டு சேர்த்து சிறிது நேரம் சுற்றி எடுத்தால்… பருப்புப் பொடி ரெடி! ஆறியவுடன், காற்றுப்புகாத டப்பாவில் அடைத்து வைக்கவும்.

தோசைக் கல்லில் எண்ணெய் தேய்த்து, மாவை சற்று கனமாக விட்டு, பருப்புப் பொடியை மேலே தூவி அதன்மேல் சிறிதளவு நெய் விட்டு மூடி வைக்கவும். இதனை, திருப்பிப் போட வேண்டாம். வெந்ததும் எடுத்துப் பரிமாறவும்.

இந்த தோசைக்கு, சாம்பார் அல்லது தேங்காய் சட்னி சரியான சைட் டிஷ்!

கல் தோசை

தேவையானவை: தோசை மாவு – இரண்டு கப்.

செய்முறை: சூடான தோசைக் கல்லில், மாவை சற்று கனமாக விட்டு, சுற்றிலும் எண்ணெய் விட்டு மூடி, மிதமான தீயில் வேக விடவும். அப்போதுதான் ஓரத்தில் முறுகலாகவும், நடுவில் ‘மெத்’தென்றும் இருக்கும். இதனை ஒரு பக்கம் மட்டுமே வேக வைக்க வேண்டும்.

எந்த சட்னி வைத்து பரிமாறினாலும் சுவையாக இருக்கும்.

பீட்சா தோசை

தேவையானவை: இட்லி மாவு – 2 கப், நறுக்கிய வெங்காயம், குடமிளகாய், தக்காளி – தலா ஒன்று, பச்சை மிளகாய் – 2, சீஸ் துருவல் – 2 டேபிள்ஸ்பூன், தக்காளி கெட்சப் – ஒரு டேபிள்ஸ்பூன், வெண்ணெய் – ஒரு டீஸ்பூன், பூண்டு – 2 பல், மிளகுத்தூள் – அரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கடாயில் வெண்ணெய் விட்டு நறுக்கிய பூண்டு, வெங்காயம், குடமிளகாய், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், உப்பு, மிளகுத்தூள் போட்டு வதக்கி… தக்காளி, சிறிதளவு சீஸ் துருவல் சேர்த்து இறக்கவும்.

தோசைக் கல் சூடானதும் எண்ணெய் தேய்த்து, சற்று தடிமனாக மாவை வார்த்து மூடி வைத்து, அடுப்பை மிதமான தீயில் வைக்கவும். பிறகு, மூடியைத் திறந்து.. தோசை மீது தக்காளி கெட்சப் விட்டு, வதக்கிய காய்கறியைப் பரப்பி, கடைசியாக வெண்ணெய், சிறிதளவு சீஸ் துருவல் ஆகியவற்றைத் தூவி, வாசனை வந்ததும் எடுத்துப் பரிமாறவும்.

நெய் தோசை

தேவையானவை: புழுங்கல் அரிசி – கால் கிலோ, பச்சரிசி – 100 கிராம், உளுந்து – 75 கிராம், வெந்தயம் – ஒரு டீஸ்பூன், எண்ணெய், நெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: புழுங்கல் அரிசி, பச்சரிசி, உளுந்து-வெந்தயம் ஆகியவற்றை இரண்டு மணி நேரம் தனித்தனியாக ஊற வைக்கவும். பிறகு, நன்கு கழுவி தனித்தனியாக அரைத்து, ஒன்றாக்கி, உப்பு போட்டு 10 முதல் 12 மணி நேரம் வரை புளிக்க விடவும்.

தோசைக் கல்லை சூடாக்கி, எண்ணெய் தேய்த்து, ஒரு கரண்டி மாவு எடுத்து, மெல்லியதாக வார்க்கவும். சுற்றிலும் எண்ணெய் விடவும். வெந்தவுடன், நெய் விட்டு மடித்து சூடாகப் பரிமாறவும்.

தோசை வெந்தவுடன், அதன் நடுவிலிருந்து ஓரம் வரை தோசை கரண்டியால் நீளவாக்கில் வெட்டி (ஒரு பக்கம் மட்டும்), மடித்தால், ஹோட்டல்களில் நெய் தோசை கொடுப்பது போலவே, வீட்டிலும் கோன் வடிவில் குழந்தைகளுக்கு பரிமாறலாம்.

இந்தத் தோசைக்கு எந்த வகை சட்னியும் சுவை சேர்க்கும்.

காளான் தோசை

தேவையானவை: தோசை மாவு – இரண்டு கப், காளான் – ஒரு கப், நறுக்கிய வெங்காயம் – கால் கப், மிளகுத்தூள், சீரகத்தூள், குழம்புப் பொடி – தலா ஒரு டீஸ்பூன், நசுக்கிய பூண்டு – 2 பல், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு, வெங்காயத்தை நன்கு வதக்கவும். நசுக்கிய பூண்டு, மிளகுத்தூள், குழம்பு பொடி, உப்பு சேர்த்து… பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். சுத்தம் செய்து நறுக்கிய காளான் சேர்த்து மீண்டும் நன்கு வதக்கி கொஞ்ச நேரம் மூடி வைக்கவும். தண்ணீர் முழுவதும் வற்றியவுடன் சீரகத்தூள் தூவி கிளறி இறக்க… காளான் ரெடி!

தோசைக் கல் சூடானதும், எண்ணெய் தேய்த்து, தோசை வார்த்து, காளான் கலவையை, அதன் மீது வைத்து, நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி தூவி சிறிது நேரம் மூடி வைத்தால், தோசை தயார். இதேபோல் ஒவ்வொரு தோசையையும் தயார் செய்து பரிமாறவும்.

முட்டைகோஸ் தோசை

தேவையானவை: தோசை மாவு – இரண்டு கப், நறுக்கிய முட்டைகோஸ் – கால் கிலோ, காய்ந்த மிளகாய் – 6, நறுக்கிய வெங்காயம் – ஒன்று, உளுத்தம்பருப்பு – ஒரு டீஸ்பூன், கொத்தமல்லி – சிறிதளவு, தக்காளி – 2, உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு உளுத்தம்பருப்பு சேர்த்து வறுக்கவும். பிறகு… வெங்காயம், முட்டைகோஸ், கிள்ளிய காய்ந்த மிளகாய், நறுக்கிய தக்காளி, கொத்தமல்லி, உப்பு போட்டு வதக்கவும். ஆறியவுடன், மிக்ஸியில் சேர்த்து கெட்டியாக அரைக்க… முட்டைகோஸ் மசலா தயார்!

கல்லில் எண்ணெய் தேய்த்து, தோசை மாவை மெல்லியதாக வார்த்து, முட்டைகோஸ் மசாலாவை அதன்மேல் தடவி, சிறிது நேரம் வேகவிட்டு, சூடாகப் பரிமாறவும்.

வெஜிடபிள் மிக்ஸ் தோசை

தேவையானவை: தோசை மாவு – இரண்டு கப், கேரட், பீன்ஸ், பட்டாணி, நறுக்கிய காலிஃப்ளவர் (கலந்தது) – ஒரு கப், சாம்பார் பொடி – ஒரு டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் – அரை டீஸ்பூன், முந்திரி, திராட்சை – தலா 5, கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா – சிறிதளவு, வெங்காயம்-2, காரச்சட்னி – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: சுத்தம் செய்து நறுக்கிய காய்கறிகளை உப்பு சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம் போட்டு வதக்கவும். அதனுடன் முந்திரி, திராட்சை, சாம்பார் பொடி, கரம் மசாலாத்தூள், நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா, வேக வைத்த காய்கறிகள் என ஒவ்வொன்றாகச் சேர்த்து, தண்ணீர் கொஞ்சம்கூட இல்லாமல் வதக்கி எடுத்துக் கொள்ளவும்.

தோசைக்கல்லில் எண்ணெய் தேய்த்து, மாவை மெல்லியதாக வார்க்கவும். லேசாக வெந்ததும், கெட்டியான காரச்சட்னியை கொஞ்சம் போல தோசை மீது தடவி, நடுவில் காய்கறி கலவையை வைத்து சுருட்டவும். இதேபோல் ஒவ்வொரு தோசையையும் தயார் செய்து பரிமாறவும்.

கருப்பட்டி தோசை

தேவையானவை: புழுங்கல் அரிசி, பச்சரிசி – தலா ஒரு கப், உளுத்தம்பருப்பு – கால் கப், வெந்தயம் – ஒரு டீஸ்பூன், கருப்பட்டி – கால் கிலோ, தேங்காய் துருவல் – அரை கப், ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன், சுக்குப்பொடி – அரை டீஸ்பூன், வறுத்து, ஒன்றிண்டாகப் பொடித்த வேர்கடலை – ஒரு கப்.

செய்முறை: புழுங்கல் அரிசி, பச்சரிசி, உளுத்தம்பருப்பு, வெந்தயம் ஆகியவற்றை இரண்டு மணி நேரம் தனித்தனியாக ஊற வைத்து, அரைத்து ஒன்றாகக் கலக்கவும். பிறகு, 10 முதல் 12 மணி நேரம் வரை புளிக்க வைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் பொடித்த கருப்பட்டி சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு, கரைத்து வடிகட்டவும். அந்தக் கரைசலை லேசாக கொதிக்க வைத்து, ஆற வைத்து.. தேங்காய் துருவல், ஏலக்காய்த்தூள், சுக்குப்பொடி சேர்த்துக் கலந்து தோசை மாவில் விட்டு நன்கு கலந்து கொள்ளவும்.

தோசைக் கல் சூடானதும் எண்ணெய் தேய்த்து, மாவை கனமாக வார்த்து, பொடித்த வேர்க்கடலையை அதன் மீது போட்டுப் பரப்பி, மூடவும். தீயை மிதமாக வைத்து, வேகவிட்டு எடுக்கவும். இதேபோல் ஒவ்வொரு தோசையையும் தயார் செய்து பரிமாறவும்.

-தொகுப்பு: நாச்சியாள், படங்கள்: வி.செந்தில்குமார்

நன்றி:- சமையல்கலை வல்லுநர் உஷாதேவி

நன்றி:- அ.வி

மற்ற சமையல் படைப்புக்கள்

அட்டகாசமான சுவையில் 30 நாள்… 30 மசாலா குருமா! – ரேவதி சண்முகம்

30 நாள் 30 பொரியல் வாவ்! கலக்கல் வெரைட்டிங்க! – ரேவதி சண்முகம்.

30 வகை டயட் சமையல் வெரைட்டியா சாப்பிடலாம். வெயிட்டையும் குறைக்கலாம்.- கா.கதிரவன்

கோடையை குளிர்ச்சியாக்கும் ஜூஸ், ஸ்குவாஷ் மில்க் ஷேக்!-சமந்தகமணி

30 நாட்களுக்கும் தினம் ஒரு கலந்த சாதம் – சமையல் திலகம் ரேவதி சண்முகம்

PART-1 கிராமத்து கைமணம்! சோளச்சோறு சுக்கு மோர்க்குழம்பு கொள்ளு துவையல் – ரேவதி சண்முகம்

PART-2 கிராமத்து கைமணம்! நவதான்ய உருண்டை கம்புரொட்டி எள்ளுப்பொடி காராமணி கீரைத்தண்டு குழம்பு- ரேவதி சண்முகம்

PART-3 கிராமத்து கைமணம்! மாங்காய் பாசிப் பருப்பு பச்சடி பால் கொழுக்கட்டை காப்பரிசி – ரேவதி சண்முகம்

PART-4 கிராமத்து கைமணம்! முள் முருங்கை அடை, பாசிப்பருப்பு சீயம், சீம்பால் திரட்டு- ரேவதி சண்முகம்

PART-5 கிராமத்து கைமணம்! மரவள்ளிக் கிழங்கு புட்டு, தட்டைப் பயிறு அடை,கருப்பட்டி பணியாரம், உளுந்து பலகாரம் – ரேவதி சண்முகம்

பகுதி-06 கிராமத்து கைமணம்! பருப்பிட்ட பணியாரம், சர்க்கரைவள்ளிக் கிழங்கு சீயம், புழுங்கல் அரிசி கொழுக்கட்டை, பப்பாளிக்காய் வடை

பகுதி-07 கிராமத்து கைமணம் நவரத்தின குருமா, கருப்பட்டி ஆப்பம், ஜவ்வரிசி பொரி, நீர் கொழுக்கட்டை

30 வகை வாழை சமையல் – பொரியல் முதல் போண்டா வரை… சூப் முதல் கேக் வரை…


திருமணம் தொடங்கி நம்முடைய அத்தனை மங்களகரமான நிகழ்வுகளிலும் ஓர் அங்கமாகவே வந்து கொண்டிருப்பதில் வாழைக்கு நிகர் வாழைதான். அதுமட்டுமல்ல… பல்வேறு நோய் தீர்க்கும் மூலிகையாகவும் அது செயல்படுவது, அதன் சிறப்புத் தகுதியாகும். அதனால்தான், ‘கற்பக விருட்சம்’ என்று மிக உயரிய இடத்தில் வைத்து வாழையைப் போற்றுகிறார்கள்.

வாழையின் இந்தப் பாகம்தான் என்றில்லாமல்… இலை, தண்டு, பூ, காய், பழம் என அத்தனை பாகங்களும் முழுமையாக சமையலுக்குப் பயன்-படுவது… சிறப்போ சிறப்பு!

இதோ… வாழைத்தண்டு சூப், வாழைத்தண்டு பொரியல் என உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்களுக்கான ரெசிபிகள்; வாழைக்காய் போண்டா, கட்லெட் என மாலை நேர நொறுக்குத் தீனி பிரியர்களுக்கான ரெசிபிகள்; வாழைப்பழ அல்வா, பனானா கேக் என குட்டீஸ்களை குதூகலிக்க வைக்கும் ரெசிபிகள் என்று விதம்-விதமாக சமைத்து ஆச்சரியமூட்டுகிறார் ‘சமையல் கலை நிபுணர்’ வசந்தா விஜயராகவன்.

“சாயந்திரம் வீட்டுக்குத் திரும்பும்போது, அப்பா ஒரு டஜன் வாழைப்பழம் வாங்கி வர, ‘அட, மதியமே நம்ம பழவண்டிக்காரர்கிட்ட ரெண்டு டஜன் வாங்கி வச்சுட்டேனே…’ என்று நொந்து கொள்வார் அம்மா. பிறகென்ன, டேபிளிலேயே அழுகி, கொசு மொய்த்துக் கொண்டிருக்கும். ஆனால், வாழைப்பழ கஸ்டர்டு, வாழைப்பழ பஜ்ஜி என செய்து கொடுத்தால் நிமிடத்தில் அத்தனை டஜனும் காணாமல் போய்விடும்” என்றபடி பார்த்துப் பார்த்து பரிமாறுகிறார் வசந்தா.

பிறகென்ன… நீங்களும் அசத்துங்க!

வாழைப்பழ ஜாம் ரோல்ஸ்

தேவையானவை: கெட்டியான ரஸ்தாளி (அ) பச்சை வாழைப்பழம் – 2, ஏதேனும் ஒரு ஃப்ரூட் ஜாம் – அரை கப், முந்திரி, பாதாம் (பொடித்தது) – ஒரு கப்.

செய்முறை: பழத்தை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். ஃப்ரூட் ஜாமில் சிறிதளவு சுடுதண்ணீர் விட்டு நன்கு கலந்து கொள்ளவும். நறுக்கிய வாழைப்பழத்தை அந்தக் கலவையில் தோய்த்து எடுக்கவும். பிறகு, பொடித்து வைத்துள்ள முந்திரி, பாதாமில் ஒருமுறை உருட்டி எடுத்துப் பரிமாறவும்.

இது, திடீர் விருந்தாளிகளுக்கான உடனடி டெஸர்ட்!

வாழைத்தண்டு சூப்

தேவையானவை: பொடியாக நறுக்கிய வாழைத்தண்டு – ஒரு கப், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி – கால் கப், மிளகுத்தூள், சீரகத்தூள் – தலா ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: வாழைத்தண்டு, கொத்தமல்லி இரண்டையும் மிக்ஸியில் போட்டு, சிறிதளவு தண்ணீர் விட்டு அரைத்து வடிகட்டவும். அதனை, அடுப்பில் வைத்து 5 நிமிடம் கொதிக்க விடவும். உப்பு, மிளகுத்தூள், சீரகத்தூள் சேர்த்துக் கலந்து பரிமாறவும்.

வாரத்தில் இரண்டு நாட்கள் இந்த சூப்பை பருகி வர, எடை குறையும்; சிறுநீரகக் கல் கரையும்.

வாழைத்தண்டு மோர்க்கூட்டு

தேவையானவை: பொடியாக நறுக்கிய வாழைத்தண்டு – 2 கப், துவரம்பருப்பு – 2 டீஸ்பூன், சீரகம் – ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 3, கடுகு, மஞ்சள்தூள் – தலா கால் டீஸ்பூன், தேங்காய் துருவல் – 2 டேபிள்ஸ்பூன், கெட்டித் தயிர் – அரை கப், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: வாழைத்தண்டுடன் மஞ்சள்தூள் சேர்த்து வேக வைக்கவும். துவரம்பருப்பை 10 நிமிடம் தண்ணீரில் ஊற விடவும். பிறகு, தண்ணீரை வடித்து, சீரகம், தேங்காய் துருவல், காய்ந்த மிளகாய் சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். அரைத்த விழுதுடன், வேக வைத்த வாழைத்தண்டு, உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும். இரண்டு கொதி வந்தவுடன் அடுப்பில் இருந்து இறக்கி, நன்றாகக் கடைந்த கெட்டித் தயிரை விட்டுக் கலந்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு தாளித்துக் கொட்டி பரிமாறவும்.

பாசிப்பருப்பு – வாழைத்தண்டு கூட்டு

தேவையானவை: பொடியாக நறுக்கிய வாழைத்தண்டு – 2 கப், பாசிப்பருப்பு – கால் கப், மஞ்சள்தூள், கடுகு – தலா கால் டீஸ்பூன், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன், தேங்காய் துருவல் – 2 டேபிள்ஸ்பூன், நீளவாக்கில் நறுக்கிய பச்சை மிளகாய் – 3, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: பாசிப்பருப்பை 10 நிமிடம் தண்ணீரில் ஊற வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, பச்சை மிளகாய் தாளித்து… உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு சேர்த்து சிவக்க வறுக்கவும். அதனுடன், வாழைத்தண்டு, ஊற வைத்த பாசிப்பருப்பு, உப்பு, மஞ்சள்தூள் போட்டு கொஞ்சம் தண்ணீர் தெளித்து, மூடி வைத்து வேக விடவும். அவ்வப்போது கிளறி விடவும். வெந்ததும் இறக்கி, தேங்காய் துருவல் சேர்த்துக் கலந்து பரிமாறவும்

வாழைப்பூ வடை

தேவையானவை: ஆய்ந்து, பொடியாக நறுக்கிய வாழைப்பூ – ஒரு கப், கடலைப்பருப்பு – 2 கப், சோம்பு – ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 4, பொடியாக நறுக்கிய வெங்காயம் – 2 டேபிள்ஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: வாழைப்பூவை குக்கரில் போட்டு, ஒரு விசில் வந்ததும் இறக்கவும். கடலைப்பருப்பை தண்ணீரில் அரை மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும். ஊறிய பருப்புடன் சோம்பு, காய்ந்த மிளகாய் சேர்த்து மிக்ஸியில் போட்டு வடை பதத்தில் அரைத்துக் கொள்ளவும். அதனுடன், வேக வைத்த வாழைப்பூவை மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். அரைத்த கலவையுடன் வெங்காயம், உப்பு சேர்த்துப் பிசைந்து கொள்ளவும். அந்த மாவிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து வடையாகத் தட்டி, எண்-ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.

இதற்கு, தேங்காய் சட்னி சூப்பர் சைட் டிஷ்!

வாழைப்பூ உசிலி

தேவையானவை: ஆய்ந்து, பொடியாக நறுக்கிய வாழைப்பூ – 2 கப், துவரம்பருப்பு, கடலைப்பருப்பு (கலந்தது) – கால் கப், காய்ந்த மிளகாய் – 4, பெருங்காயத்தூள், மஞ்சள்தூள், கடுகு – தலா கால் டீஸ்பூன், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன் எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: துவரம்பருப்பு, கடலைப்பருப்பு கலவையுடன் காய்ந்த மிளகாய் சேர்த்து அரை மணி நேரம் ஊற வைக்கவும். தண்ணீரை வடித்து, கெட்டியாக, கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். வாழைப்பூவை மஞ்சள்தூள் சேர்த்து வேக வைக்கவும். கடாயில் எண்-ணெய் விட்டு கடுகு, பெருங்காயத்தூள் தாளித்து… உளுத்தம்பருப்பு, கடலைப்-பருப்பு போட்டு பொன்னிறமாக வறுக்க-வும். அதனுடன், அரைத்த பருப்புக் கலவையைச் சேர்த்து நன்கு கிளறிக் கொண்டே இருக்கவும். உதிரியாக வந்ததும், வேக வைத்த வாழைப்பூ, உப்பு சேர்த்து நன்கு உதிரியாக வரும் வரை கிளற.. வாழைப்பூ உசிலி தயார்!

தக்காளி-வாழைப்பூ கிரேவி

தேவையானவை: ஆய்ந்து, பொடியாக நறுக்கிய வாழைப்பூ – 2 கப், தக்காளிச் சாறு – ஒரு கப், மஞ்சள்தூள், கடுகு – தலா கால் டீஸ்பூன், தேங்காய் துருவல் – 2 டேபிள்ஸ்பூன், சீரகம் – ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் – 3, நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து… வாழைப்பூ, மஞ்சள் தூள் சேர்த்து வேக விடவும். தேங்காய் துருவல், சீரகம், பச்சை மிளகாயை மிக்ஸியில் போட்டு அரைக்கவும். அரைத்த கலவையை வெந்து கொண்டிருக்கும் வழைப்பூவுடன் சேர்த்து நன்கு கிளறவும். பிறகு… தக்காளிச் சாறு, உப்பு போட்டு 5 நிமிடம் கொதிக்க விடவும். கெட்டியாக வந்ததும் இறக்கி, கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

வாழைக்காய்-கசகசா பொரியல்

தேவையானவை: நறுக்கிய வாழைக்காய்த் துண்டுகள் – 2 கப், கசகசா – 3 டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் – 2, சீரகம் – ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 2, மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு, வாழைக்காய்த் துண்டுகளைப் போட்டு பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும். கசகசாவை பொன்னிறமாக வறுத்து, ஆற வைத்து, பச்சை மிளகாய் சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு சீரகம் தாளித்து… காய்ந்த மிளகாய், மஞ்சள் தூள், அரைத்த கசகசா கலவை போட்டு நன்கு கிளறவும். மணம் வந்ததும், பொரித்து வைத்துள்ள வாழைக்காய்த் துண்டுகள், உப்பு ஆகியவற்றைச் சேர்க்கவும். கொஞ்சம் தண்ணீர் விட்டு, மிதமான தீயில் வைத்து சில நிமிடங்-கள் கிளறி, கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

வாழைக்காய் பொடிமாஸ்

தேவையானவை: வாழைக்காய் – 2, நறுக்கிய பச்சை மிளகாய் – 2, முந்திரித் துண்டுகள் – 2 டீஸ்பூன், மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன், இஞ்சி – ஒரு சிறிய துண்டு, நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை – சிறிதளவு, எலுமிச்சைச் சாறு – ஒரு டீஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: வாழைக்காயை இரண்டாக நறுக்கி வேக விடவும். வெந்ததும், ஆற வைத்து, தோல் உரித்து, உதிர்த்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து… உளுத்தம்பருப்பு, கடலைப்-பருப்பு, முந்திரித் துண்டுகள் போட்டு பொன்னிறமாக வறுக்கவும். அதனுடன் பச்சை மிளகாய், நறுக்கிய இஞ்சி, மஞ்சள்-தூள், உதிர்த்து வைத்துள்ள வாழைக்காய், உப்பு சேர்த்து 2 நிமிடம் நன்றாகக் கிளறவும். கறிவேப்பிலை, கொத்தமல்லி தூவி, எலுமிச்சைச் சாறு விட்டுக் கலந்து பரிமாறவும்.

வாழைக்காய் மிளகு கூட்டு

தேவையானவை: தோல் சீவி, பொடியாக நறுக்கிய வாழைக்காய் – 2 கப், புளி – 50 கிராம், தேங்காய் துருவல் – அரை கப், மிளகு – ஒரு டேபிள்ஸ்பூன், சின்ன வெங்காயம் – ஒரு கப், காய்ந்த மிளகாய் – 4 , மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், உப்பு, தேங்காய் எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: ஒன்றரை கப் தண்ணீரில் புளியை ஊற வைத்து, கரைத்து வடிகட்டவும். புளிக் கரைசலில் வாழைக்காய், மஞ்சள் தூள் சேர்த்து வேக வைக்கவும். கடாயில் ஒரு டீஸ்பூன் தேங்-காய் எண்ணெய் விட்டு மிளகு, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை வறுத்தெடுக்கவும். இதை மிக்ஸியில் போட்டு, அரை கப் சின்ன வெங்காயம், தேங்காய் துருவல் சேர்த்து அரைக்கவும். அதே கடாயில் எண்ணெய் விட்டு, மீதமுள்ள அரை கப் சின்ன வெங்காயத்தை நறுக்கி சேர்த்து வதக்கி, மிக்ஸியில்அரைத்த கலவை, புளித் தண்ணீரில் வேக வைத்த வாழைக்காய், உப்பு போட்டு கொதிக்க வைத்து, இறக்கிப் பரிமாறவும்.

பனானா கேக்

தேவையானவை: கெட்டியான வாழைப்பழம் – 1, அரிசி மாவு – முக்கால் கப், சர்க்கரை – 2 டேபிள்ஸ்பூன், தேங்காய்ப்பால் – ஒன்றரை கப், வாழை இலை, செர்ரிப்பழம் – தேவையான அளவு, உப்பு – ஒரு சிட்டிகை.

செய்முறை: தேங்காய்ப்பாலில் உப்பு, சர்க்கரை, அரிசி மாவு சேர்த்து நன்கு கலந்து, அடுப்பை ‘சிம்’மில் வைத்து கொதிக்க விடவும். இட்லி மாவு பதம் வரும் வரை கிளறிக் கொண்டே இருக்கவும். வாழைப்பழத்தை, 2 இஞ்ச் நீளத்துக்கு துண்டுகளாக நறுக்கவும். அவற்றை, ஒவ்வொன்றாக மாவு கலவையில் நனைக்கவும். அந்தத் துண்டுகளை வாழை இலையில் வைத்து மெதுவாக மடித்து, இட்லி பாத்திரத்தில் வேக வைத்து எடுக்கவும். செர்ரிப் பழம் வைத்து அலங்கரித்துப் பரிமாறவும்.

வாழைக்காய் போண்டா

தேவையானவை: வேக வைத்து, தோல் உரித்து, மசித்த வாழைக்காய் – 2 கப், தோசை அல்லது இட்லி மாவு – 2 கப், எலுமிச்சைச் சாறு, நறுக்கிய பச்சை மிளகாய் – தலா 2 டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு, பச்சைப் பட்டாணி – கால் கப், நறுக்கிய இஞ்சி – ஒரு டீஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு,

செய்முறை: வேக வைத்து மசித்த வாழைக்காய், பச்சைப் பட்டாணி, இஞ்சி துண்டுகள், நறுக்கிய பச்சை மிளகாய், கொத்தமல்லி, எலுமிச்சைச் சாறு, உப்பு ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் சேர்த்து கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும்.

தோசை அல்லது இட்லி மாவை அகலமான பாத்திரத்தில் விடவும். பிசைந்து வைத்துள்ள வாழைக்காய் கலவையிலிருந்து கொஞ்சம் எடுத்து உருண்டையாக உருட்டி, மாவில் தோய்த்து எடுத்துக் கொள்ளவும். இதே போல் ஒவ்வொரு உருண்டையையும் செய்யவும். கடாயில் எண்ணெய் விட்டு உருட்டிய உருண்டைகளைப் போட்டு, வெந்ததும் எடுக்க.. வாழைக்காய் போண்டா தயார்!

இதற்கு, தக்காளி சட்னி சரியான ஜோடி!

வாழைக்காய் பெப்பர் ரோஸ்ட்

தேவையானவை: கெட்டியான வாழைக்காய் – 2, மிளகுத்தூள் – 2 டீஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: வாழைக்காயை வேக வைத்து, தோல் உரித்து, சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, வாழைக்காய்த் துண்டுகளைப் போட்டு பொரித்து எடுக்கவும். உப்பு, மிளகுத்தூள் தூவிக் கலந்து பரிமாறவும்.

ரெகுலரான வாழைக்காய் சிப்ஸில் இருந்து இது வித்தியாசமாக இருக்கும்.

வாழைப்பழ அல்வா

தேவையானவை: நன்கு பழுத்த வாழைப்பழம் – 4, சர்க்கரை – அரை கப், நெய் – 2 டேபிள்ஸ்பூன், – முந்திரித் துண்டுகள் – 2 டீஸ்பூன்.

செய்முறை: அடி கனமான பாத்திரத்தில் நெய் விட்டு, முந்திரியை வறுத்தெடுக்கவும். அதே பாத்திரத்தில், நறுக்கிய வாழைப்பழத் துண்டுகளை சேர்த்து மிதமான தீயில் நன்கு வதக்கவும். நிறம் மாறியதும், சர்க்கரை சேர்த்து அடிபிடிக்காமல் நன்கு கிளறி, முந்திரி சேர்க்கவும். விருப்பப்பட்டால், மற்ற பழங்களையும் சேர்க்கலாம்.

விருந்தாளிகளுக்கு உடனடியாக செய்து கொடுக்கக்கூடிய சுவையான டிஷ் இது!

வாழைப்பூ துவையல்

தேவையானவை: ஆய்ந்து, சுத்தம் செய்த வாழைப்பூ – ஒரு கப், உளுத்தம்பருப்பு – அரை கப், காய்ந்த மிளகாய் – 4, புளி – 50 கிராம், தேங்காய் துருவல் – 3 டேபிள்ஸ்பூன், மிளகு – ஒரு டீஸ்பூன், சீரகம் – அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு உளுத்தம்பருப்பு, மிளகு, பெருங்காயத்தூள், காய்ந்த மிளகாய், சீரகம், ஆகியவற்றைப் போட்டு பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும். ஆறியதும் புளி, உப்பு, தேங்காய் துருவல், வாழைப்பூ சேர்த்து மிக்ஸியில் போட்டு கெட்டியாக அரைக்க… வாழைப்பூ துவையல் ரெடி! விரும்பினால், வாழைப்-பூவை வதக்கி அரைக்கலாம்.

இதை சாதத்துடன் சேர்த்து பிசைந்தும் சாப்பிடலாம்.

பனானா ஜெல்லி

தேவையானவை: வாழைப்பழத் துண்டுகள் – அரை கப், சர்க்கரை – முக்கால் கப், சைனா கிராஸ் பவுடர் ( டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் கிடைக்கும்) – ஒரு டீஸ்பூன்.

செய்முறை: ஒரு பாத்திரத்தில் சைனா கிராஸ் பவுடரைப் போட்டு, சிறிதளவு தண்ணீர் விட்டு 5 நிமிடம் ஊற விடவும். பிறகு, அதனை மிதமான தீயில் வைத்து, 2 கப் தண்ணீர் சேர்த்து சுட வைக்கவும். அதில், சர்க்கரையைப் போட்டு மெதுவாக கரைய விடவும். பாத்திரத்தை இறக்கி லேசாக ஆற வைத்து, இளம் சூட்டில் இருக்-கும் போது, வாழைப்-பழத் துண்டுகளைச் சேர்த்துக் கலந்து, கிண்ணங்களில் விட்டு, ஃப்ரிட்ஜில் ஒரு மணி நேரம் வைக்கவும். பிறகு, ‘ஜில்’லென்று பரிமாறவும்.

சீரக வாழைக்காய்

தேவையானவை: துண்டுகளாக நறுக்கி, வேக வைத்த வாழைக்காய் – 2 கப், பொடியாக நறுக்கிய வெங்காயம் – 2 டேபிள்ஸ்பூன், இஞ்சி-பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன், கடுகு – கால் டீஸ்பூன், சீரகம் – 2 டீஸ்பூன், தனியாத்தூள், மிளகாய்த்தூள் – தலா ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு, உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, சீரகம், வெங்காயம் சேர்த்து வதக்கவும். மஞ்சள்தூள், இஞ்சி- பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கிளறவும். தனியாத்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து நன்கு கலந்து, வாழைக்காய் துண்டுகளைச் சேர்த்து 2 நிமிடம் நன்றாகக் கிளறவும், கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

வாழைத்தண்டு சாலட்

தேவையானவை: பொடியாக நறுக்கிய வாழைத்தண்டு – 1 கப், நறுக்கிய வெள்ளரிக்காய், குடமிளகாய் – தலா கால் கப், எலுமிச்சைச் சாறு – ஒரு டீஸ்பூன், வறுத்துத் தோல் நீக்கிய வேர்க்கடலை – 2 டேபிள்ஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு, கடுகு – கால் டீஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை: கடுகு, எண்ணெய், கொத்தமல்லி தவிர, மற்ற அனைத்துப் பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் போட்டு நன்கு கலந்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு தாளித்து, வாழைத்தண்டு கலவையில் கொட்டி, மீண்டும் ஒருமுறை கலந்து, கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

‘சிக்’கென்ற உடல் வேண்டும் என விரும்புவர்கள் காலை உணவாக இதனை சாப்பிடலாம்.

வாழைத்தண்டு பச்சடி

தேவையானவை: பொடியாக நறுக்கிய வாழைத்தண்டு – 1 கப், மாதுளை முத்துக்கள் – கால் கப், பச்சை மிளகாய், இஞ்சி அரைத்த விழுது – ஒன்றரை டீஸ்பூன், புளிப்பில்லாத கெட்டித் தயிர் – 2 கப், கடுகு – கால் டீஸ்பூன், கொத்தமல்லி – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கடுகு, எண்ணெய், கொத்தமல்லி தவிர, மற்ற அனைத்துப் பொருட்களையும் கடைந்த தயிரில் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு தாளித்துக் கொட்டி, கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

வாழைக்காய் குணுக்கு

தேவையானவை: வேக வைத்து மசித்த வாழைக்காய் – 2 கப், துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, அரிசி மாவு – தலா 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 3, பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன், சிறு பல்லாக நறுக்கிய தேங்காய் – 2 டீஸ்பூன், கொத்தமல்லி, கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: மூன்று வகை பருப்புடன் காய்ந்த மிளகாய் சேர்த்து அரை மணி நேரம் ஊற வைக்கவும். தண்ணீரை வடித்து மிக்ஸியில் போட்டு, கெட்டியாக அரைக்கவும். அதனுடன்… மசித்த வாழைக்காய், அரிசி மாவு, தேங்காய்ப்பல், பெருங்காயத்தூள், நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி, உப்பு சேர்த்துப் பிசைந்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிப் போட்டு, பொன்னிறமாக வெந்ததும் எடுத்துப் பரிமாறவும்.

வாழைப்பழ ஸ்மூத்தி

தேவையானவை: பால், தயிர் – தலா ஒரு கப், வாழைப்பழம் – 2, பாதாம்பருப்பு – 8, சர்க்கரை – 2 டேபிள்ஸ்பூன்.

செய்முறை: கொடுக்கப்பட்டுள்ள அனைத்துப் பொருட்-களையும் மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்தெடுக்க.. நுரை பொங்க வரும். அதனை உடனே பரிமாறவும்.

குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்; எதிர்பாராத விருந்தி-னர்களுக்கு உடனடியாக தயார் செய்து கொடுக்கலாம்.

பனானா பஜ்ஜி

தேவையானவை: மைதா, சர்க்கரை – தலா 100 கிராம், வாழைப்பழம் – 4, சீரகம் – கால் டீஸ்பூன், எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: மைதாவில் சீரகம், சர்க்கரை சேர்த்து, தண்ணீர் விட்டு, பஜ்ஜி மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும். வாழைப்பழத்தை நீளவாக்கிலோ அல்லது வட்டமாகவோ நறுக்கவும். வாழைப்பழத் துண்டுகளை மாவில் தோய்த்து எண்ணெயில் போட்டு பொரித்து, பரிமாறவும்.

வித்தியாசமான சுவையுடன் இருக்கும் இந்த பனானா பஜ்ஜி.

வாழைத்தண்டு ஊறுகாய்

தேவையானவை: மெல்லியதாக, நீளவாட்டில் நறுக்கிய வாழைத்தண்டு – 1 கப், மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு – 2 டீஸ்பூன், நீளவாக்கில் நறுக்கிய பச்சை மிளகாய் – 3, கடுகு – கால் டீஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: எண்ணெய், கடுகு தவிர, மற்ற அனைத்துப் பொருட்களையும் நன்கு கலந்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு தாளித்துக் கொட்டிக் கலந்து பயன்படுத்தவும்.

‘நறுக் நறுக்’ என்று வித்தியாசமான சுவையுடன் இருக்கும் இந்த ஊறுகாய்.

வாழைக்காய் கோஃப்தா

தேவையானவை – உருண்டைக்கு: வாழைக்காய் – 6, நறுக்கிய இஞ்சி, நறுக்கிய பச்சை மிளகாய், பெருங்காயம், கரம் மசாலாத்தூள் – தலா கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

கிரேவிக்கு: சீரகம், பெருங்காயத்தூள், மஞ்சள்தூள், கரம் மசாலாத்தூள் – தலா கால் டீஸ்பூன், தயிர் – ஒன்றரை கப், நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சித் துருவல் – தலா அரை டீஸ்பூன், கிராம்பு – 4, மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன், பிரிஞ்சி இலை – 3, உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை – உருண்டைக்கு: வாழைக்காய்களைத் தோலுடன் குழையாமல் வேக விடவும். ஆறியதும், தோல் உரித்து கொடுக்கப்பட்டுள்ள எல்லாப் பொருட்களையும் சேர்த்துப் பிசைந்து, சிறு சிறு உருண்டைகளாக உருட்டவும். கடாயில் எண்ணெய் விட்டு, உருட்டிய உருண்டைகளை ஒவ்வொன்றாக மெதுவாகப் போட்டு பொரித்து எடுக்கவும்!

கடாயில் எண்ணெய் விட்டு சீரகம், கிராம்பு, பிரிஞ்சி இலை தாளித்துக் கொள்ளவும். பிறகு… மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள், பச்சை மிளகாய், இஞ்சித் துருவல், கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கி, தயிர் சேர்க்கவும். அதில், பொரித்த உருண்டைகளைப் போட்டு ‘சிம்’மில் சில நிமிடங்கள் வைத்து இறக்கிப் பரிமாறவும்.

வாழைக்காய் புளிக் கூட்டு

தேவையானவை: சிறு சிறு சதுரங்களாக நறுக்கிய வாழைக்காய் – 2 கப், புளி – 50 கிராம், மஞ்சள்தூள், கடுகு – தலா கால் டீஸ்பூன், வேக வைத்த கடலைப்பருப்பு, துவரம்பருப்பு (கலந்தது) – கால் கப், கொத்தமல்லி, கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

அரைக்க: கடலைப்பருப்பு – 2 டீஸ்பூன், தனியா – 4 டீஸ்பூன், வெந்தயம் – அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 4, தேங்காய் துருவல் – கால் கப்.

செய்முறை: புளியை ஊற வைத்து, கரைத்து வடிகட்டிய கரைசலை, அடி கனமான பாத்திரத்தில் விடவும். வாழைக்காய்த் துண்டுகள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து மிதமான தீயில் வேக வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து வறுத்து, ஆற வைத்து, மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும். அதனை கொதித்துக் கொண்டிருக்கும் புளிக் கரைசலில் சேர்த்து, 2 நிமிடம் கொதிக்க விடவும். வேக வைத்த பருப்புகளைச் சேர்த்து, மீண்டும் 5 நிமிடம் கொதிக்க வைத்து கொத்தமல்லி, கறிவேப்பிலை தூவி, கடுகு தாளித்துக் கொட்டிக் கலந்து இறக்கவும்.

இது சாதம், சப்பாத்தி, தோசைக்குத் தொட்டுக்கொள்ள ஏற்றது.

வாழைக்காய் க்ரிஸ்பீஸ்

தேவையானவை: வேக வைத்து மசித்த வாழைக்காய் – 1 கப், அரிசி மாவு – 2 கப், நெய் – 2 டேபிள்ஸ்பூன், மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன், எள் – 2 டீஸ்பூன், இஞ்சி- பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: அரிசி மாவு, மசித்த வாழைக்காய் எள், உப்பு, இஞ்சி-பூண்டு விழுது, மிளகாய்த்தூள், நெய் சேர்த்துக் கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும். தேவைப்பட்டால், சிறிதளவு தண்ணீர் சேர்த்துப் பிசையலாம். அந்தக் கலவையை விரல் நீள உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, உருட்டியவற்றை ஒவ்வொன்றாகப் போட்டு, பொரித்து எடுக்கவும்.

இது, மாலை நேரத்துக்கு ஏற்ற ஸ்நாக்ஸ்.

வாழைப்பழ கஸ்டர்டு

தேவையாவை: பால் — ஒரு லிட்டர், வாழைப்பழத் துண்டுகள் – 2 கப், வெனிலா கஸ்டர்டு பவுடர் – 2 டேபிள்ஸ்பூன், சர்க்கரை – தேவையான அளவு.

செய்முறை: சிறிதளவு குளிர்ந்த பாலில் கஸ்டர்டு பவுடரைக் கரைத்துக் கொள்ளவும். மீதி பாலை, மிதமான தீயில் காய்ச்சவும். சிறிதளவு வற்றியதும், கரைத்து வைத்துள்ள கஸ்டர்டு பவுடரை சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விடவும். அப்போது பால் கெட்டியாகும். உடனே இறக்கி சர்க்கரை சேர்க்கவும். நன்றாக ஆறியதும், வாழைப்பழத் துண்டுகள் சேர்த்து ஃப்ரிட்ஜில் வைத்து ‘ஜில்’ என்று பரிமாறவும்.

வாழைக்காய் புளி கொத்சு

தேவையானவை: வேக வைத்த பாசிப்பருப்பு – 1 கப், வேக வைத்து, சிறு துண்டுகளாக நறுக்கிய வாழைக்காய் – 2 கப், கெட்டியான புளிக் கரைசல் – கால் கப், மஞ்சள்தூள், கடுகு – தலா கால் டீஸ்பூன், பெருங்காயத்தூள் – அரை டீஸ்பூன், கீறிய பச்சை மிளகாய் – 3, மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கடாயில் புளிக் கரைசல், மஞ்சள்தூள், வாழைக்காய்த் துண்டுகள், பாசிப்பருப்பு, உப்பு சேர்த்து நன்றாகக் கொதிக்க விடவும். அதனுடன், மிளகாய்த்தூள் போட்டுக் கலந்து மீண்டும் கொதிக்க விடவும். இன்னொரு கடாயில் எண்ணெய் விட்டு… கடுகு, பச்சை மிளகாய், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை தாளித்துக் கொட்டி, கலந்து பரிமாறவும்.

இதனை தோசை, உப்புமா போன்ற டிபன் வகைகளுக்கு தொட்டுக் கொள்ளலாம்.

வாழைக்காய் பராத்தா

தேவையானவை: வேக வைத்து மசித்த வாழைக்காய் – 1 கப், கோதுமை மாவு – 2 கப், பச்சை மிளகாய்-பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன், உப்பு, நெய் அல்லது எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: அகலமான பாத்திரத்தில் கோதுமை மாவு, மசித்த வாழைக்காய், பச்சை மிளகாய்-பூண்டு விழுது, உப்பு ஆகியவற்றைச் சேர்த்து, தண்ணீர் விட்டு கெட்டியாகப் பிசைந்து, அரை மணி நேரம் ஊற விடவும். மாவிலிருந்து சிறிது சிறிதாக எடுத்து, சப்பாத்திக் கல்லில் இட்டு சப்பாத்திகளாகத் தேய்த்துக் கொள்ளவும். இதேபோல் ஒவ்வொன்றையும் தயார் செய்து கொள்ளவும். அவற்றை தோசைக் கல்லில் போட்டு, இருபுறமும் சிறிதளவு நெய் அல்லது எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்.

வாழைக்காய் கட்லெட்

தேவையானவை: வேக வைத்து, மசித்த வாழைக்காய் – 2 கப், பிரெட் ஸ்லைஸ் – 4, வறுத்துப் பொடித்த வேர்க்கடலை – கால் கப், நறுக்கிய பச்சை மிளகாய் – 2 டீஸ்பூன், பொடித்த அவல் – 1 கப், பொடியாக நறுக்கிய வெங்காயம் – 2 டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: சிறிதளவு தண்ணீரில் பிரெட் ஸ்லைஸை ஒவ்வொன்றாக அமிழ்த்தி நன்றாகப் பிழிந்து எடுத்துக் கொள்ளவும். அவற்றுடன் மசித்த வாழைக்காய், பொடித்த வேர்க்கடலை, வெங்காயம், உப்பு, பச்சை மிளகாய், கொத்தமல்லி சேர்த்து கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும். அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து வட்டம், சதுரம் என பிடித்த வடிவங்களில் செய்து, அவல் பொடியில் இருபுறமும் புரட்டவும்.

கடாயில் எண்ணெய் விட்டு, தயார் செய்தவற்றை ஒவ்வொன்றாகப் போட்டு பொரித்து எடுக்க… வாழைக்காய் கட்லெட் ரெடி!

நன்றி:- சமையல் கலை நிபுணர்’ வசந்தா விஜயராகவன்

நன்றி:- அ.வி

மற்ற சமையல் படைப்புக்கள்

அட்டகாசமான சுவையில் 30 நாள்… 30 மசாலா குருமா! – ரேவதி சண்முகம்

30 நாள் 30 பொரியல் வாவ்! கலக்கல் வெரைட்டிங்க! – ரேவதி சண்முகம்.

30 வகை டயட் சமையல் வெரைட்டியா சாப்பிடலாம். வெயிட்டையும் குறைக்கலாம்.- கா.கதிரவன்

கோடையை குளிர்ச்சியாக்கும் ஜூஸ், ஸ்குவாஷ் மில்க் ஷேக்!-சமந்தகமணி

30 நாட்களுக்கும் தினம் ஒரு கலந்த சாதம் – சமையல் திலகம் ரேவதி சண்முகம்

PART-1 கிராமத்து கைமணம்! சோளச்சோறு சுக்கு மோர்க்குழம்பு கொள்ளு துவையல் – ரேவதி சண்முகம்

PART-2 கிராமத்து கைமணம்! நவதான்ய உருண்டை கம்புரொட்டி எள்ளுப்பொடி காராமணி கீரைத்தண்டு குழம்பு- ரேவதி சண்முகம்

PART-3 கிராமத்து கைமணம்! மாங்காய் பாசிப் பருப்பு பச்சடி பால் கொழுக்கட்டை காப்பரிசி – ரேவதி சண்முகம்

PART-4 கிராமத்து கைமணம்! முள் முருங்கை அடை, பாசிப்பருப்பு சீயம், சீம்பால் திரட்டு- ரேவதி சண்முகம்

PART-5 கிராமத்து கைமணம்! மரவள்ளிக் கிழங்கு புட்டு, தட்டைப் பயிறு அடை,கருப்பட்டி பணியாரம், உளுந்து பலகாரம் – ரேவதி சண்முகம்

பகுதி-06 கிராமத்து கைமணம்! பருப்பிட்ட பணியாரம், சர்க்கரைவள்ளிக் கிழங்கு சீயம், புழுங்கல் அரிசி கொழுக்கட்டை, பப்பாளிக்காய் வடை

பகுதி-07 கிராமத்து கைமணம் நவரத்தின குருமா, கருப்பட்டி ஆப்பம், ஜவ்வரிசி பொரி, நீர் கொழுக்கட்டை

அன்புக் குழந்தைகளே! உங்களிடம் நாங்கள் எதிர்பார்ப்பது – பிரசன்னம்

ஜூலை 26, 2010 1 மறுமொழி

உங்களை உலகிற்குத் தந்த எங்களின் பெருமையையும் கண்ணியத்தையும் பாதுகாக்கும் வண்ணம் நடந்து கொள்ளுங்கள்; பெரியவர்கள் அனுபவசாலிகள். ஆகவே (உங்களது நன்மைக்காகவே) அவர்கள் சில அறிவுரைகளைச் சொல்வார்கள் என்பதை நம்புங்கள். உங்களை நாங்கள் மிகவும் நேசிப்பதை வெளியில் பலரிடமும் காட்டுவதில் எங்களுக்கு மகிழ்ச்சி. அதற்காக நீங்கள் கோபம் கொள்ளாதீர்கள். உங்கள் திறமையை நாங்கள் மதிக்கிறோம். இருந்தாலும் உங்களுக்குச் சிரமம் தர வேண்டாம் என்றுதான் நாங்களே தலையிட்டுச் சில செயல்களைச் செய்துவிடுகிறோம். அது தவறா? பாசத்தின் வெளிப்பாடு என்று தெரிந்து கொள்ளுங்கள். விளையாடுங்கள். முதல் எட்டில் ஆடாதது விளையாட்டல்ல. ஆனால், உங்களுக்கு அதிலேயே பொழுது கழிந்துவிடக்கூடாது என்பதால்  நாங்கள் அவ்வப்போது குறுக்கிடுகிறோம். பொறுத்துக்கொள்ளுங்களேன்!

செய்,சரி, நல்லது என்பதைச் சொல்ல நாங்கள் தயார். இடையிலேயே சில வேண்டாம், கூடாது போன்ற கட்டளைகள் வருவது இயல்புதான். அதைப் பெரிதுபடுத்தாதீர்கள் ! எல்லா இடத்திற்கும் உங்களை அழைத்துச் செல்ல இயலாமல் போகலாம். அதற்காக வருத்தப்பட வேண்டாமே ! நீங்கள் தனிமையை விரும்பலாம். ஆனால் உங்கள் தனிமை உங்களுக்கு நன்மை தராவிட்டால் என்ன செய்வது? அதனால் நாங்கள் பக்கத்தில் வந்து துணைக்கு நிற்கிறோம். எங்கள் கவலை எங்களுக்கு. எங்கள் பெற்றோர் எங்களுக்கு நாங்கள் கேட்டதையெல்லாம் தரவில்லை. அந்த ஏக்கம் இன்றுவரை இருப்பதால் நீங்கள் கேட்டதுமே வாங்கிக் கொடுத்து நிறைவு காண்கிறோம்.

நீங்கள் சொல்லும் பதிலை நாங்கள் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறோம். நம்புங்கள். வேறு எங்கு பார்த்திருந்தாலும் கவனம் எங்கள் பிள்ளைகள் மீதுதான். நம் வீட்டுத் தொலைபேசியை நீங்கள் பயன்படுத்துவது தவறு என்று நாங்கள் சொல்லவில்லை. ஆனால், காலம் மாறும் பணத்தின் அருமையைக் கருதி சற்று யோசித்துப் பாருங்கள்.

உன் சகோதரன், சகோதரி உண்மையே பேசி நீ பொய் பேசி வந்தால் ஒப்பீடு செய்ய மாட்டோமா? பலருக்கும் உதவி செய்யும் உன் நண்பனைக் குறித்து ஒருவருக்கும் உதவாமல் சுயநலத்தோடு இருக்கும் உன்னிடம் சொல்லிக் காட்ட மாட்டோமா? இது உன்னைத் திருத்தத்தானே தவிர உன்னை வருந்த வைக்க இல்லை. நல்ல பொருளைத் தொலைத்துவிட்டு வந்தால் கொஞ்சவா முடியும்? திட்டுவோம். அடுத்து அது மாதிரி நிகழாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றுதான் அவ்வாறு செய்கிறோம். பாசமில்லாத கொடியவர்களா நாங்கள்?

உங்களுக்கு பிடித்த சில உடைகளை வாங்கித் தருகின்றோம். எங்கள் ஆசைக்கு நாங்கள் விரும்பும் சில உடைகளையும் அணிந்தால் என்ன? சற்று யோசித்துப் பாருங்களேன் ! உங்களை அரவணைப்பதை விடத் தழுவுவதைவிட உங்கள் இனிய பேச்சைக் கேட்பதை விடவா உலகில் எங்களுக்குப் பேரின்பம் இருக்கிறது. அந்த வாய்ப்பை அவ்வப்போது தாருங்கள்.

உங்களுக்கு உயர்ந்த இலட்சியத்தைக் காட்டவும் நற்பண்புகளை உணர்த்தவும் நாங்கள் முன்மாதிரியாக இருக்கிறோம் என்பதை மறவாதீர்கள். தொலைக்காட்சி பாருங்கள் ; வேண்டாமென்று தடுக்கவில்லை. அதே நேரத்தில் மனதைக் கெடுத்துவிடும் சிலவற்றை நீங்கள் பார்த்துவிடலாகாதே என்ற பயம் எங்களுக்கு உள்ளது. அதனால்தான் சதா தொலைக்காட்சி பார்க்காதே என்று எச்சரிக்கிறோம்.

உங்களிடம் சுறுசுறுப்பு, வேலையில் திறமை, சுத்த உணர்வு இவற்றை நாங்கள் எதிர்பார்ப்பது தவறா? உங்கள் நன்மைக்குத்தானே? நாங்கள் வேலையிலிருக்கும்போது நீங்கள் அருகில் வந்து இதை அடுக்கவா, இதை நறுக்கித் தரவா, இதைக் கொண்டுபோய் வைக்கவா என்று கேட்டு உதவிசெய்யலாமே ! உங்கள் அன்பை இப்படியும் வெளிப்படுத்துங்கள் ! உங்கள் ஆற்றலை நாங்கள் புரிந்து கொள்ளுமாறு உங்களுக்கு எந்தத் துறையில் ஆர்வம் உள்ளது என்பதை எங்களிடம் சொல்லுங்கள்.

வாய்ப்புகளையும் வசதிகளையும் நாங்கள் செய்து தருகிறோம். எல்லாம் செய்து கொடுத்துவிட்டு, உங்களிடமிருந்து சாதனைகளை நாங்கள் எதிர்பார்ப்பதில் தவறல்லவே !

நீங்கள் பெரியவர்களான எங்களை கேலி செய்வதாகவோ அவமானப் படுத்துவதாகவோ தோன்றும்படி கூட நடந்து விடாதீர்கள் எங்களால் தாங்கிக்கொள்ள முடியாது. எங்கள் கவலைகளையெல்லாம் நாங்கள் உங்களிடம் சொல்வதில்லை. பிஞ்சுகளான உங்களிடம் பிரச்சனை, கவலை என்று திணித்து உங்களை வருத்தப்பட வைக்க நாங்கள் விரும்பவில்லை. இது பெருந்தன்மை என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

உங்களோடு விளையாட ஆசைதான். சமயம் கிடைக்கும்போது ஆடுவோம். எங்களுக்கு பல வேலைச் சுமைகள் இருக்கின்றபோது எங்களால் வர இயலவில்லை என்றால் எங்கள் நிலைமையை அனுசரித்து நடந்துகொள்வதுதான் உங்களின் புத்திசாலித்தனம்.

உங்களுக்கு தந்த வாக்குறுதிகளை நிறைவேற்றத்தான் பெற்றோர்களாகிய நாங்கள் பாடுபடுகின்றோம். நிறைவேற்றமுடியாது என்றால் வாக்குறுதி தரத் தயங்குவோம். எங்கள் நிதிநிலைமை மற்றும் சந்தர்ப்பம் இவற்றை அறிந்து நடந்து கொள்ளுங்களேன்.

எங்களுடன் சிறிது நேரம் அமர்ந்து எங்கள் பழைய கதைகளைக் கேட்டால் என்ன? அதில் எங்கள் உள்ளம் பூரிக்குமே ! போங்கள் உங்களுக்கு வேறு விஷயமே இல்லை என்று சொல்லிவிட்டு ஓடாதீர்கள் ! உங்கள் நண்பர்களைப் பற்றி நாங்கள் அறிந்து கொள்வது மிக அவசியம். உங்கள் வாழ்க்கையை அமைத்துக்கொள்வதில் நட்புக்கு மிகுந்த பங்குண்டு. எனவே உங்கள் நண்பர்களை எங்களிடம் அழைத்து வந்து அறிமுகப்படுத்துங்கள்.

முடி அமைப்பு, உடை இவற்றில் உங்களுக்கு ஏற்றதை நாங்களும் தேர்வு செய்ய அனுமதியுங்கள்.
நாங்கள் தரும் அன்பளிப்பு ரூபாய்களைச் சேமித்து அதிலிருந்து என்றாவது ஒரு நாள் எங்களுக்கும் ஒரு சிறு அன்புப்பரிசு தாருங்கள். அப்போது எங்கள் உள்ளத்தின் களிப்பு கடலைவிடப் பெரிதாகுமே !

உங்களை முழுமையாக நம்புகிறோம். நம்பிக்கை சிதறாமல் நீங்கள் நடந்துகொள்ளுங்கள். நாங்கள் உங்களிடம் சிறு குறைகள் கண்டால் கூட சுட்டிக் காட்டுகிறோம். ஏன் தெரியுமா? குறை நீங்கி நீங்கள் முழுமையான நல்லவர்கள் ஆகத்தான்.

இன்றைய உலகம் போட்டி நிறைந்தது. திறமை இருப்பவனே முன்னுக்கு வரமுடியும். எங்கள் பிள்ளைகள் திறமைசாலியாகத் திகழ வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்ப்பதால் மதிப்பெண்ணுக்கும் மதிப்புக் கொடுக்கிறோம். தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள்.

ஒரு வேளையாவது எங்களுடன் சேர்ந்து அமர்ந்து சாப்பிடுங்கள். வயது வளரும்போது இந்த வாய்ப்புகள் குறையலாம். வேலை, திருமணம், என்று ஆகி வெளியே பிரிந்து செல்ல நேரிடலாம். இப்போதாவது அந்த இனிய அனுபவத்தைப் பெற முயற்சி செய்யுங்கள்.

உங்களுக்கு நாங்கள் சிறந்த பாதுகாவல். எங்களிடம் உங்கள் மனப் புழுக்கத்தைக் கொட்டிவிடுங்கள். மனதில் வைத்து வேகாதீர்கள்.

உங்கள் நண்பர்களிடம் எங்கள் பெற்றோர் பாசமானவர்கள் ; நல்லவர்கள் என்பதைச் சொல்லி வையுங்கள்.

நாங்கள் கோபத்தில் ஏதாவது வார்த்தைகளைப் பேசிவிட்டால் சூழ்நிலையை மனதில் வைத்துக்கொண்டு மன்னித்துவிடுங்கள். பின்னர் நீங்கள் அப்படிப் பேசியிருக்க வேண்டாமே என்று எடுத்துச் சொல்லுங்கள்.

காய்கறி வாங்குவது, அஞ்சலகம் செல்வது, வங்கிக்குச் செல்வது போன்ற சிறுசிறு உதவிகளைச் செய்து பெரும் பெரும் மகிழ்ச்சியை எங்களுக்குத் தரலாமே ! அதனால் வரைவோலை (டி.டி) எடுப்ப்பது, விண்ணப்பங்களை நிரப்புவது, பணவிடை (எம்.ஓ) அனுப்புவது இவற்றைப் பற்றிய அறிவும் உங்களுக்குக் கிடைக்குமே ! உங்கள் தகுதியை நிரூபிக்கவும் வாய்ப்புக் கிடைக்குமே. புத்தகப்புழுவாக மட்டும் இருக்காதீர்கள்.

நண்பர்களுடன் நீங்கள் எங்கும் செல்லலாம்; பேசலாம். நாங்கள்
அதற்கு அனுமதி தருகிறோம். அது தீய நட்பா, நல்ல நட்பா என்று சோதித்து அறிய எங்களுக்கு வாய்ப்புத்தாருங்கள்.

நல்ல சமையல் செய்து பரிமாறினால் அம்மாவைப் பாராட்டுங்கள். அழகான ஓர் ஆடையை வாங்கித் தந்தால் அப்பாவுக்கு அன்புடன் ஒரு முத்தம் தரலாமே ! நோட்டைத் தைத்துத் தந்த தங்கைக்கு ரோஜாப்பூ ; பட்டன் தைத்துத் தந்த பாட்டிக்கு ஒரு சபாஷ், இப்படி உங்களால் இயன்றதைச் செய்து நன்றியை வெளிப்படுத்தலாமே !

உங்கள் பள்ளியில் சிறுசிறு பிரச்சனைகள் வந்தால் நாங்கள் தலையிட மாட்டோம். அது குடும்ப கண்ணியத்தைக் குலைக்காத அளவு பார்த்துக்கொள்ளுங்கள். பெரிதானால் எங்களிடம் சொல்லித் தீர்வு காணுங்கள்.

எங்களுடையது என்று நாங்கள் வைத்துள்ளது எல்லாம் உங்களுக்காகத்தான். அவற்றை உடைத்துப் பழுது செய்து அவற்றின் அருமையை உணராமல் வீசிவிடாதீர்கள். கவனமாகக் கையாளுங்கள்.

உங்கள் எதிர்காலம் குறித்து எங்களுக்கும் அக்கறை, தொலைநோக்கு உண்டு. பத்திரமாக இருப்பதாக உணருங்கள். எங்கள் பாதுகாப்பு வளையம் உங்களைச் சுற்றியே இருக்கும்.

எங்களுக்குக் கிடைக்காத வசதிகளை உங்களுக்கு நாங்கள் வழங்கி இருக்கிறோம். அதை நினைத்து முகமலர்ச்சியும் மனமகிழ்ச்சியும் கொள்ளுங்கள்.

எங்களைக்குறித்து …..

அன்பும் ஆர்வமும் பாசமும் பரிவும் எதிர்பார்ப்பும் நிறைந்துள்ள பெற்றோர்கள் நாங்கள். இவற்றின் காரணமாக சில சமயம் அதிகத் தலையீடு, அதிகக் கண்டிப்பு, அதிகச் செல்லம், அதிகம் குற்றம் குறைகூறல், அதிக அறிவுரை, அதிக எச்சரிக்கை செய்ய நேரலாம். அதனால், நாங்கள் பொல்லாதவர்கள் அல்லர். நாங்கள் கொடுமைக்காரர்கள் அல்லர். நாங்கள் பிடிவாதக்காரர்களோ, கட்டுப் பாடுகள் விதிப்பவர்களோ சுயநலவாதிகளோ அல்லர். நாங்கள் சர்வாதிகளோ பழமைவாதிகளோ அல்லர்.

எங்கள் கண்மணிகளே !

உங்களை நல்ல பிள்ளைகளாக, வல்லவர்களாக, ஒழுக்க  மானவர்களாக, வீரம் மிக்கவர்களாக, விவேகம் உள்ளவர்களாக, கண்ணியமானவர்களாக, புகழத்தக்கவர்களாக ஆக்குவதே எங்கள் வாழ்வின் நோக்கம். எங்கள் பிரார்த்தனைகள் உங்களுக்காகவே. எங்கள் வாழ்வே உங்களுக்காகத்தானே !

புரிந்துகொண்டு மதித்து வாழ்ந்தால் போதும் ! வேறென்ன வேண்டும் எங்களுக்கு ?

நன்றி : இனிய திசைகள் மாத இதழ்

நன்றி:-nri-indians.blogspot

நன்றி:-.mudukulathur.com

30 வகை அதிசய சமையல் – கிருஷ்ணகுமாரி ஜெயக்குமார் இரத்தின சக்திவேல்


30 வகை அதிசய சமையல்

”எப்பப் பாரு… ‘சமையல், சமையல்’னு அடுப்புல கெடந்தே வேக வேண்டியிருக்கு. அட்லீஸ்ட், வாரத்துல ஒரு நாளாவது இந்த அடுப்புக்கு ஓய்வு கொடுத்துட்டு, பச்சையா அரிசியை அள்ளி தின்னுட்டு ‘அக்கடா’னு உக்கார்ந்துடலாம் போல இருக்கு…”

– இப்படி பல சமயங்களில் தோன்றும்தானே!

ஆனால், ”அடுப்பையே பத்த வைக்காம, வாய்க்கு ருசியான சாப்பாட்டை தயாரிக்கற வழி இருக்கறப்ப, எதுக்காக இப்படியெல்லாம் யோசிக்கறீங்க?” என்று கேட்கும் ‘இயற்கை வழி சமையல்’ நிபுணர் இரத்தின சக்திவேல்… லட்டு, சாம்பார், ரசம், இட்லி, பிரியாணி எனறு வரிசையாக ரெசிபிகளை அள்ளிவிட… எல்லாமே மேஜிக் போல நம்மை அதிசயத்தில் ஆழ்த்தின!

”நம்ம முன்னோர்கள், ‘மருந்தே உணவு, உணவே மருந்து’னு உலகத்துக்கே முன்னோடியா வாழந்துட்டு இருந்தவங்க. இடையிலதான் பீட்ஸா, பர்கர், பாக்கெட்டுல அடைச்சு விக்கிற சாப்பாடுனு சேர்த்துக்க ஆரம்பிச்சு, விதம்விதமான நோய்களுக்கும் விருந்து வச்சுட்டோம். நான் சொல்ற இயற்கை ரெசிபிகளை அடிக்கடி செஞ்சு சாப்பிடுங்க. உடம்பும் மனசும் எப்பவும் ஆரோக்கியமா இருக்கும்” என்று உத்தரவாதமும் கொடுத்தார் இரத்தின சக்திவேல்.

அவர் கொடுத்த ரெசிபிகளை வைத்து, 30 வகையான உணவுகளை தயாரித்த பிரபல சமையல் கலை நிபுணர் கிருஷ்ணகுமாரி ஜெயக்குமார், ”நம்மள சுத்தி கிடைக்கற பொருட்கள வச்சே, எளிமையா இந்த ரெசிபிகள தயாரிக்க முடியும். கேஸ், எண்ணெய்னு பலதுக்கும் நாம செலவழிக்கற காசு மிச்சமாகறதோட, சமையல் அறை டென்ஷனும் போயே போச்சு” என்று சந்தோஷம் பொங்கச் சொல்கிறார்.

பிறகென்ன தோழிகளே..? இயற்கையா சமைங்க… இளமையாவே இருங்க!

பப்பாளிபழ பாயசம்

தேவையானவை: பப்பாளிபழம் (நறுக்கியது) – ஒரு கப், தேங்காய்ப்பால் – அரை கப், வெல்லம் (பொடித்தது) – அரை கப், முந்திரி, திராட்சை – தலா 20, ஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை.

செய்முறை: நறுக்கிய பப்பாளியை மிக்ஸியில் போட்டு, குறைந்த அளவு வேகத்தில் வைத்து அரைத்துக் கொள்ளவும். அரைத்த பழக் கலவையை பாத்திரத்தில் விட்டு, அதில் தேங்காய்ப்பால், பொடித்த வெல்லம் (வெல்லத்துக்கு பதில் தேன் சேர்த்துக் கொள்ளலாம்), முந்திரி, திராட்சை, ஏலகாய்த்தூள் சேர்த்து நன்கு கலந்தால்… பப்பாளிபழப் பாயசம் ரெடி!

ஆப்பிள், மாம்பழம், அன்னாசி, வாழைப்பழம் ஆகிய பழங்களிலும் இதே முறையில் பாயசம் செய்யலாம்.

குறிப்பு: மலச்சிக்கல், தொப்பை, பசியின்மை, குடல்புண், உடல் சூடு போன்ற உடல் பிரச்னைகளைக் கட்டுப்படுத்தும் குணம் இந்த பழ பாயசத்துக்கு இருக்கிறது. நீரிழிவு நோய் உள்ளவர்கள் இதைத் தவிர்க்கவும்.

ஃப்ரூட்ஸ்\அவல் மிக்ஸ்

தேவையானவை: அவல் – அரை கிலோ, திராட்சை – 50 கிராம், நறுக்கிய கொய்யா, ஆப்பிள், பேரீச்சை, முந்திரி – ஒரு கப், பொடித்த வெல்லம் – 200 கிராம், ஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை, தேங்காய் துருவல் – ஒரு கப்.

செய்முறை: அவலை கல் நீக்கி சுத்தம் செய்து தண்ணீரில் கழுவிக் கொள்ளவும். திராட்சைப் பழத்தை நீரில் ஊற வைத்துக் கழுவிக் கொள்ளவும். பேரீச்சையை கழுவி கொட்டை நீக்கி நறுக்கிக் கொள்ளவும். கழுவிய அவலுடன் நறுக்கிய பழங்கள், திராட்சை, பொடித்த வெல்லம், ஏலக்காய்த்தூள், தேங்காய் துருவல் சேர்த்து நன்கு கலந்து பரிமாறவும்.

குறிப்பு: இது, அசிடிட்டி மற்றும் நெஞ்சு எரிச்சலை சரிசெய்யும்.

நேச்சுரல் லட்டு

தேவையானவை: முந்திரி – 200 கிராம், பாதாம், திராட்சை – தலா 100 கிராம், பிஸ்தா – 50 கிராம், பேரீச்சை – 250 கிராம் (கொட்டை நீக்கியது), ஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை.

செய்முறை: பேரீச்சை, திராட்சையை நன்கு கழுவிக் கொள்ளவும். முந்திரி, பாதாம், பிஸ்தாவை மிக்ஸியில் போட்டு, நன்றாக அரைத்து… கடைசிச் சுற்றில் பேரீச்சை, திராட்சை, ஏலக்காய்த்தூள் சேர்த்து அரைக்கவும். அரைத்த இந்தக் கலவை லேசான சூடுடன் இருக்கும்போதே, சிறு சிறு உருண்டைகளாகப் பிடிக்க… நேச்சுரல் லட்டு தயார். ஒரு வாரம் வைத்திருந்து சாப்பிடலாம்.

குறிப்பு: நீண்ட நேரம் பசி தாங்கும் இந்த லட்டு, உடல் ஆரோக்கியத்துக்கு ஏற்றது. குழந்தைகளுக்கு, மாலை நேர டிபனாக கொடுக்கலாம்.

நெல்லிக்காய் சிப்ஸ்

தேவையானவை: முழு நெல்லிக்காய் – 100

செய்முறை: முழு நெல்லிக்காய்களை கழுவி, சிறு சிறு துண்டுகளாக நறுக்கவும். பிறகு, அவற்றை மிதமான வெயிலில் 5-6 நாட்கள் காய வைத்து எடுக்கவும். காய்ந்ததும், காற்றுப்புகாத டப்பாவில் போட்டு பத்திரப்படுத்தவும். இதனுடன் உப்பு, மிளகாய்த்தூள் எதுவும் சேர்க்காமல் சாப்பிடுவது நல்லது.

குறிப்பு: இளமையாக இருக்க வேண்டும் என்பவர்கள் இதைத் தினமும் சாப்பிடலாம்; மூட்டு வலி, உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் தவறாமல் சாப்பிட… நல்ல பலன் கிடைக்கும்.

கோலா லட்டு

தேவையானவை: பச்சைப்பயறு, வேர்க்கடலை, கொண்டைக்கடலை, சோயா பீன்ஸ், கோதுமை, கம்பு – தலா 100 கிராம், பொடித்த வெல்லம் – ஒரு கப், முந்திரி – 20, ஏலக்காய்த்தூள் – சிட்டிகை.

செய்முறை: கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தானியங்களையும் 8 மணி நேரம் ஊற வைத்து, தண்ணீரை வடிகட்டவும். பிறகு, ஈரத்துணியில் கட்டி முளைகட்டவும். அந்த முளைகட்டிய தானியங்களை வெயிலில் உலர வைத்து. அரைக்கவும். வெல்லத்தை தண்ணீரில் கரைத்து, வடிகட்டி அதில் அரைத்த மாவு, முந்திரி, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலந்து உருண்டைகளாகப் பிடிக்க.. கோலா லட்டு தயார்!.

குறிப்பு: உடலில் வலுவில்லாதவர்கள் இதனை தொடர்ந்து சாப்பிட… சக்தி பெறுவார்கள்.

கோவைக்காய் ஊறுகாய்

தேவையானவை: கோவைக்காய் – கால் கிலோ, இஞ்சி – 100 கிராம், எலுமிச்சம்பழம் – 5, இந்துப்பு (நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்) – தேவையான அளவு.

செய்முறை: கோவைக்காயை கழுவி, சிறிய துண்டுகளாக நறுக்கவும். இஞ்சியைத் தோல் சீவி, நறுக்கி மிக்ஸியில் அரைத்து சாறு பிழியவும். எலுமிச்சம்பழத்தை நறுக்கி, கொட்டை நீக்கி, சாறு பிழிந்தெடுக்கவும். இரண்டு சாறுகளையும் ஒன்றாகக் கலந்து, நறுக்கிய கோவைக்காய், இந்துப்பு சேர்த்து பத்து நிமிடங்கள் ஊற வைக்க… எண்ணெய் இல்லாத கோவைக்காய் ஊறுகாய் ரெடி!

குறிப்பு: இது சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்த நோய் உள்ளவர்களுக்கு ஏற்றது.

கேரட் கீர்

தேவையானவை: கேரட் – அரை கிலோ, தேங்காய் துருவல் – அரை கப், பொடித்த வெல்லம் – 200 கிராம், ஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை.

செய்முறை: கேரட்டை கழுவி, நறுக்கி மிக்ஸியில் போட்டு, கொஞ்சம் தண்ணீர் விட்டு அரைக்கவும். அரைத்த கலவையை வடிகட்டி சாறு எடுத்துக் கொள்ளவும். தேங்காய் துருவலையும் அரைத்து வடிகட்டி, தேங்காய்ப்பால் எடுக்கவும்.

வடிகட்டிய கேரட் ஜூஸ், தேங்காய்பால், பொடித்த வெல்லம், ஏலக்காய்த்தூள் எல்லாவற்றையும் ஒரு பாத்திரத்தில் விட்டு நன்றாகக் கலந்து பரிமாறவும்.

குறிப்பு: கண் பார்வை குறைபாடு உள்ளவர்கள், குடல் புண், வயிற்றுப்புண் உள்ளவர்கள் சாப்பிட… நல்ல பலன் கிடைக்கும்.

வொண்டர் ஃபுட்

தேவையானவை: பாசிப்பயறு – 200 கிராம், பொடித்த வெல்லம் – 250 கிராம்.

செய்முறை: பாசிப்பயறை 8 மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு தண்ணீரை வடித்து ஈரத் துணியில் கட்டி வைக்கவும். அடுத்த எட்டு மணி நேரத்தில் நன்கு முளை விட்டிருக் கும். முளைவிட்ட பாசிப்பயறை, மிக்ஸியில் போட்டு தண்ணீர் விட்டு அரைத்து, பாலெடுக்கவும். பொடித்த வெல்லம் சேர்த்துக் கலந்து பரிமாறவும்.

குறிப்பு: இதனை, நீரழிவு நோயாளிகள் வெல்லம் சேர்க்காமல் சாப்பிடலாம். உடம்பில் சக்தியும், நல்ல அழகும் வேண்டும் என்று எதிர்பார்ப்பவர்கள், காலை உணவாக தினமும் எடுத்துக் கொள்ளலாம். முளைகட்டிய பயிர்களை ஆங்கிலத்தில் வொண்டர் ஃபுட் என்கிறார்கள்.

நெல்லி ஜாமூன்

தேவையானவை: பெரிய நெல்லிக்காய் – 50, தேன் – ஒன்றரை கிலோ, பனங்கற்கண்டு – அரை கிலோ.

செய்முறை: நெல்லிக்காயை நன்கு கழுவவும். பிறகு, சுத்தமான ஊசியால்… ஒவ்வொரு நெல்லிகாய் முழுவதிலும் சிறு சிறு துளைகள் இடவும். கண்ணாடி பாட்டிலில் தேனை விட்டு, அதில் துளையிட்ட நெல்லிக்காய், பனங்கற்கண்டு போட்டு ஊற விடவும். கண்ணாடிப் பாட்டிலின் மேல் பகுதியில், மெல்லிய காட்டன் துணியைக் கட்டி.. வெயிலில் ஒரு வாரம் வரை வைத்தெடுத்தால், நெல்லி ஜாமூன் ரெடி!

குறிப்பு: முதுமையை விரட்டும் அற்புத மருந்து இது. தினம் தவறாமல் சாப்பிட… உயர் ரத்த அழுத்தம், ஒபிஸிட்டி போன்ற பிரச்னைகளுக்குத் தீர்வாக அமையும். சளி, இருமல், தலைவலி விலகும்; கண்பார்வை மேம்படும்.

மேட்ச் ஸ்டிக் சாலட்

தேவையானவை: கேரட் – 2, தக்காளி – 2, வெள்ளரிக்காய், வெங்காயம் – தலா ஒன்று, முட்டைகோஸ் – 200 கிராம், வெண்பூசணி, புடலை, பீர்க்கங்காய், சௌசௌ, முள்ளங்கி, சுரைக்காய்… இவற்றில் எதாவது ஒன்று – 200 கிராம், தேங்காய் துருவல் – அரை கப், எலுமிச்சம்பழம் – ஒன்று, மிளகுத்தூள், சீரகத்தூள் – ஒரு டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை – சிறிதளவு, பொடித்த வெல்லம் – தேவையான அளவு, பிளாக் சால்ட் (டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் கிடைக்கும்) – தேவையான அளவு.

செய்முறை: கொடுத்துள்ள எல்லா காய்கறிகளையும் நன்றாகக் கழுவி, தீக்குச்சி போல் நறுக்கிக் கொள்ளவும். எலுமிச்சம்பழத்தை நறுக்கி சாறு எடுக்கவும். நறுக்கிய காய்கறிகளுடன் மிளகுத்தூள், சீரகத்தூள், எலுமிச்சைச் சாறு, நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை, தேங்காய் துருவல், பொடித்த வெல்லம், பிளாக் சால்ட் சேர்த்துக் கலக்க… மேட்ச் ஸ்டிக் சாலட் தயார்!

குறிப்பு: உடல் சூடு, மூலம், மாதவிடாய் கோளாறுகளை இது கட்டுப்படுத்தும். தொடர்ந்து சாப்பிட… இந்த உபாதைகள் நீங்கும்.

காலிஃப்ளவர் கொத்சு

தேவையானவை: காலிஃப்ளவர் – 400 கிராம், தேங்காய் துருவல் – ஒரு கப், வறுத்துப் பொடித்த வேர்க்கடலைத்தூள், பொட்டுக்கடலைத்தூள் – தலா 200 கிராம், மிளகுத்தூள், சீரகத்தூள் – தலா ஒரு டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு – 2 டேபிள்ஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை – சிறிதளவு, இந்துப்பு – தேவையான அளவு.

செய்முறை: காலிஃப்ளவரை சிறு சிறு பூக்களாக்கி, கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். சுத்தம் செய்தவற்றை குச்சி போல் நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். தேங்காய் துருவலை, கொஞ்சம் தண்ணீர் விட்டு, துவையல் போல் மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். நறுக்கிய காலிஃப்ளவர், தேங்காய் விழுது,பொடித்த வேர்க்கடலைத்தூள், பொட்டுக்கடலைத்தூள், மிளகுத்தூள், சீரகத்தூள், நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை எல்லாவற்றையும் ஒரு பாத்திரத்தில் போட்டு நன்கு கலக்கவும். பிறகு, எலுமிச்சைச் சாறு, இந்துப்பு சேர்த்துக் கலந்து பரிமாறவும்.

குறிப்பு: நார்ச்சத்து நிறைந்த இந்த உணவு, ரத்தத்தை சுத்தப்படுத்தும். வயிற்று உபாதைகளை சரிசெய்யும்.

வெண்பூசணிக் கூட்டு

தேவையானவை: வெண்பூசணி – 500 கிராம், பாசிப்பருப்பு – 50 கிராம், தேங்காய் துருவல் – ஒரு கப், வறுத்துப் பொடித்த பொட்டுக்கடலைத்தூள் – முக்கால் கப், வறுத்துப் பொடித்த வேர்க்கடலைத்தூள் – ஒரு டேபிள்ஸ்பூன், முளைகட்டிய தானியம் (ஏதாவது ஒருவகை பயறு) – கால் கப், நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை – சிறிதளவு, மிளகுத்தூள், சீரகத்தூள் – ஒரு டீஸ்பூன், இந்துப்பு – தேவையான அளவு.

செய்முறை: பாசிப்பருப்பை ஊற வைக்கவும். வெண்பூசணியைக் கழுவி தோல், கொட்டை நீக்கி தீக்குச்சி போல் நறுக்கிக் கொள்ளவும். நறுக்கிய காய் உட்பட கொடுக்கப்பட்டுள்ள எல்லா பொருட்களையும், ஒரு பாத்திரத்தில் ஒவ்வொன்றாகச் சேர்த்து நன்கு கலந்து பரிமாறவும்.

இதேபோல் சுரைக்காய், பீர்க்கங்காய், வெள்ளரி, வாழைத்தண்டு, புடலங்காய் போன்ற அனைத்து நீர்சத்து காய்களிலும் செய்யலாம்.

குறிப்பு: இதை ரெகுலராக செய்து சாப்பிட்டு வர… மூலவியாதி, அதனால் உண்டாகும் எரிச்சல் போன்றவை நீங்கும். முகம் பொலிவு பெறும்.

நேச்சுரல் தயிர்

தேவையானவை: தேங்காய்ப்பால் – ஒன்றரை கப், எலுமிச்சைச் சாறு – 2 டேபிள்ஸ்பூன்

செய்முறை: தேங்காய்ப்பாலுடன் எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலக்கவும். அதனை ‘ஹாட் பேக்’கில் விட்டு நன்கு மூடி வைக்க.. தயிர் போல் உறைந்து விடும். இந்த நேச்சுரல் தயிரை நறுக்கிய பழங்களுடன் கலந்து சாப்பிடலாம்.

குறிப்பு: இது, அடுப்பில் வைக்காத பால் என்பதால் கொழுப்பு உண்டாகாது. நீரழிவு நோயைக் கட்டுப்படுத்தும். ஆஸ்துமா, சளி தொந்தரவை நீக்கும்.

வெண்பூசணி அல்வா

தேவையானவை: வெண்பூசணி – அரை கிலோ, தேன் (அ) வெல்லம் – 250 கிராம், பேரீச்சை – 100 கிராம், முந்திரி, திராட்சை – தலா 50 கிராம், ஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை, தேங்காய் துருவல் – அரை கப்.

செய்முறை: வெண்பூசணியை தோல் சீவி, கழுவி, துருவிக் கொள்ளவும். பேரீச்சையை நன்கு கழுவி, கொட்டை நீக்கி, சிறிதாக நறுக்கவும். வெண்பூசணி துருவலுடன் நறுக்கிய பேரீச்சை, தேன் (அ) பொடித்த வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய்த்தூள், தேங்காய் துருவல் சேர்த்து நன்கு கலந்து பரிமாறவும். இதேபோல், கேரட்டிலும் தயார் செய்யலாம்.

குறிப்பு: இது ஒபிஸிட்டி, அல்சர், மூலம், நீரிழிவு நோய், கொலஸ்ட்ரால், தொப்பை, மூட்டுவலி பிரச்னைகளை சரி செய்யும். பித்தத்தை சரிசெய்யும். சிறுநீரகக் கல் உள்ளவர்கள் இதை சாப்பிட்டால், பலன் கிடைக்கும்.

எள்ளுருண்டை லட்டு

தேவையானவை: வறுத்த எள் – 400 கிராம், திராட்சை – 100 கிராம், பேரீச்சை – 300 கிராம், முந்திரி – 50 கிராம், ஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை.

செய்முறை: எள்ளை நன்கு சுத்தம் செய்து கொள்ளவும். பேரீச்சையின் கொட்டையை நீக்கவும். திராட்சை, பேரீச்சையைக் கழுவவும். எள்ளை, மிக்ஸியில் பொடித்து.. திராட்சை, பேரீச்சை சேர்த்து மீண்டும் அரைக்கவும். பிறகு, அதனுடன் ஏலக்காய்த்தூள், முந்திரி சேர்த்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டவும்.

குறிப்பு: பாலூட்டும் தாய்மார்களுக்கும், உடல் இளைத்து இருப்பவர்களுக்கு இது மிகவும் நல்லது.

நொறுக்ஸ் அவல்

தேவையானவை: அவல் – அரை கிலோ, வறுத்த வேர்க் கடலை – 50 கிராம், பொட்டுக்கடலை – 100 கிராம், பொடித்த வெல்லம் – 100 கிராம்.

செய்முறை: அவலை கல் நீக்கி சுத்தம் செய்துகொள்ளவும். கொடுக்கப்பட்டுள்ள அனைத்துப் பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் ஒன்று சேர்த்து, கலந்து பரிமாறவும். காரம் வேண்டுபவர்கள், நறுக்கிய குடமிளகாய், மிளகுத்தூள், சீரகத்தூள், இந்துப்பு சேர்த்தும் சாப்பிடலாம்.

குறிப்பு: குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் மாலை நேர டிபனாக சாப்பிடக் கொடுக்கலாம்.

சீரியல்ஸ்\பல்ஸஸ் ஹெல்த் டிரிங்க்

தேவையானவை: கேழ்வரகு, கோதுமை – தலா 250 கிராம், கம்பு – 150 கிராம், பச்சைப்பயறு – 100 கிராம், கொண்டைக்கடலை – 100 கிராம், கொள்ளு – 50 கிராம், வெல்லம் (அ) தேன் – தேவையான அளவு, ஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை.

செய்முறை: தானியங்கள் அனைத்தையும் சுத்தம் செய்து, 8 மணிநேரம் ஊற வைக்கவும். நீரை வடித்து, துணியில் கட்டி வைக்க, முளைவிடும். முளைவிட்டதும், அவற்றை நன்கு உலர வைத்து அரைக்கவும். அரைத்த மாவை ஈரமில்லாத பாட்டிலில் பத்திரப்படுத்தவும்.

தேவைப்படும்போது, ஒரு டம்ளர் தண்ணீரில் ஒன்று அல்லது இரண்டு டீஸ்பூன் மாவு கலந்து… வெல்லம் அல்லது தேன், ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்கு கலந்து பரிமாறவும். காரம் வேண்டும் என்பவர்கள், வெல்லத்துக்கு பதிலாக மிளகுத்தூள், பிளாக் சால்ட் கலந்து பருகலாம். சூடாக சாப்பிட விரும்புபவர்கள்… தண்ணீரில் மாவைக் கரைத்து நன்கு சூடு செய்து வெல்லம் அல்லது மிளகுத்தூள் கலந்து பருகலாம்.

குறிப்பு: இந்த பானம் உடலை வலுவடைய செய்யும். சத்து இல்லாத குழந்தைகளுக்கு இதனை ரெகுலர் உணவாகத் தர… சக்தி கிடைக்கும்.

அவல் மிக்ஸர்

தேவையானவை: அரிசி அவல் (அ) சோள அவல் – அரை கிலோ, தேங்காய் துருவல் – அரை கப், நறுக்கிய குடமிளகாய் – ஒன்று, வறுத்து, தோல் நீக்கிய வேர்க்கடலை – 50 கிராம், பொரி – 100 கிராம், பொட்டுக்கடலை – 100 கிராம், பொடித்த வெல்லம் – 250 கிராம், மிளகுத்தூள், சீரகத்தூள் – தலா ஒரு டீஸ்பூன், இந்துப்பு – தேவையான அளவு.

செய்முறை: அவலை கல் நீக்கி சுத்தப்படுத்தவும். சுத்தப்படுத்திய அவலை, ஒரு பாத்திரத்தில் போட்டு… அதனுடன் வறுத்து, தோல் நீக்கிய வேர்க்கடலை, பொரி, நறுக்கிய குடமிளகாய், பொட்டுக்கடலை, பொடித்த வெல்லம், தேங்காய் துருவல், மிளகுத்தூள், சீரகத்தூள், இந்துப்பு சேர்த்து நன்கு கலந்து பரிமாறவும்.

குறிப்பு: மாலை நேர டிபனாகவும் பயணத்தின்போது நொறுக்குத் தீனியாகவும் சாப்பிடலாம். மணிபர்சுக்கும், உடல் நலத்துக்கும் சேஃபானது இது!

வெஜிடபிள் இட்லி

தேவையானவை: அவல் – அரை கிலோ, முளைகட்டி, உலர வைத்த கோதுமை – 200 கிராம், தேங்காய் துருவல் – ஒன்றரை கப், பிளாக் சால்ட் – தேவையான அளவு.

செய்முறை: முளைகட்டி, உலர வைத்த கோதுமையை மிக்ஸியில் அரைக்கவும். அவலை கல் நீக்கி சுத்தம் செய்து, தண்ணீரில் ஊற விடவும். ஊறியதும் மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.

அரைத்த கோதுமை, அவலுடன் தேங்காய் துருவல், பிளாக் சால்ட் சேர்த்து இட்லி மாவு பதத்தில் கலந்து கொள்ளவும். இட்லித் தட்டில் மெல்லிய துணி விரித்து, இந்த மாவை இட்லி போல் விடவும். 10 நிமிடம் கழித்து… துணியிலிருந்து மெதுவாக இதனைப் பிரித்தெடுக்க… நேச்சுரல் இட்லி தயார். இதனுடன் காய்கறிகள் சேர்த்தும் செய்யலாம்.

குறிப்பு: இதற்குத் தொட்டுக்கொள்ள இயற்கை சாம்பார் ஏற்றது.

ஸ்டஃப்டு பேரீச்சை

தேவையானவை: பேரீச்சை – அரை கிலோ, முந்திரி – 250 கிராம், தேன் – 200 கிராம்.

செய்முறை: முந்திரியை தேனில் ஒரு நாள் முழுவதும் ஊற விடவும். பேரீச்சையைக் கழுவி உலர விடவும். பிறகு, நீளவாக்கில் கீறி கொட்டையை மெதுவாக நீக்கி விடவும். கொட்டை நீக்கப்பட்ட பேரீச்சைக்குள் தேனில் ஊற வைத்த முந்திரியை ஸ்டஃப் செய்யவும். இதுபோல் ஒவ்வொரு பேரீச்சை யிலும் ஸ்டஃப் செய்ய வும்.

குறிப்பு: ரத்தசோகையை நீக்கும் நல்ல மருந்து இது. உடல் எடையை அதிகரிக்க விரும்புவர்கள் இதனை தினமும் சாப்பிடலாம்.

கொத்தமல்லி\அவல் மிக்ஸ் மீல்ஸ்

தேவையானவை: அவல் – 600 கிராம், தேங்காய் துருவல் – அரை கப், கொத்தமல்லி – ஒரு கட்டு, கறிவேப்பிலை – இரண்டு கைப்பிடியளவு, வெங்காயம், குடமிளகாய் – தலா 2, மிளகுத்தூள், சீரகத்தூள் – ஒரு டீஸ்பூன், முந்திரி – 100 கிராம், இந்துப்பு – தேவையான அளவு.

செய்முறை: அவலை கல் நீக்கிச் சுத்தம் செய்து கழுவி தண்ணீரை வடிக்கவும். சுத்தம் செய்த கொத்தமல்லி, கறிவேப்பிலையை மிக்ஸியில் போட்டு அரைத்து… கெட்டியாக சாறு எடுக்கவும். குடமிளகாயை சிறிய துண்டுகளாக நறுக்கவும்.

கழுவிய அவலுடன் அரைத்தெடுத்த கொத்தமல்லி – கறிவேப்பிலை சாறு சேர்த்துக் கலக்கவும். அதனுடன் முந்திரி, நறுக்கிய வெங்காயம், குடமிளகாய், மிளகுத்தூள், சீரகத்தூள், தேங்காய் துருவல், இந்துப்பு சேர்த்து, நன்கு கலந்து பரிமாறவும்.

நேச்சுரல் பிரியாணி

தேவையானவை: அரிசி அவல் – 250 கிராம், முளை கட்டி, உலர வைத்த கோதுமை – 250 கிராம், வெங்காயம் – 2, கேரட், தக்காளி – தலா 3, முட்டைகோஸ், பீன்ஸ், வெண்பூசணி, புடலங்காய், சௌசௌ – தலா 100 கிராம், வெள்ளரி – 2, உருளைக்கிழங்கு, குடமிளகாய் – தலா 1, மாதுளை முத்துக்கள் – அரை கப், முளைகட்டிய பாசிப்பயறு – 50 கிராம், முளை கட்டிய வேர்க்கடலை – 100 கிராம், முளைகட்டிய எள் – 50 கிராம், முந்திரி, திராட்சை – தலா 100 கிராம், மிளகுத்தூள், சீரகத்தூள் தலா ஒரு டீஸ்பூன், பட்டை – 2, கிராம்பு – 3, ஏலக்காய் – 4, நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா – சிறிதளவு, எலுமிச்சைச் சாறு- 2 டேபிள்ஸ்பூன், தேங்காய் துருவல் – ஒரு கப், இஞ்சி – 50 கிராம், இந்துப்பு – தேவையான அளவு.

செய்முறை: அவலை கல் நீக்கி சுத்தம் செய்து, மிக்ஸியில் ரவையாக அரைக்கவும். முளைகட்டி உலர வைத்த கோதுமையையும் ரவையாக அரைக்கவும். ரவையாக அரைத்த அவல், கோதுமையை தண்ணீரில் கழுவி, தண்ணீரை வடித்து… ஊற வைக்கவும். இஞ்சியைத் தோல் சீவி பொடிப் பொடியாக நறுக்கவும். முந்திரி, திராட்சையைக் கழுவி 10 நிமிடம் ஊற விடவும்.

ஒரு பாத்திரத்தில், ஊற வைத்த ரவையாக அரைத்த அவல், கோதுமையுடன் நறுக்கிய காய்கறிகள், நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா, பொடிப் பொடியாக நறுக்கிய இஞ்சி, முளை கட்டிய தானியங்கள், தேங்காய் துருவல், முந்திரி, திராட்சை, மாதுளை முத்துக்கள், மிளகுத்தூள், சீரகத்தூள், பட்டை, கிராம்பு, ஏலக்காய், எலுமிச்சைச் சாறு, இந்துப்பு அனைத்தையும் ஒவ்வொன்றாகச் சேர்த்து நன்கு கிளற… நேச்சுரல் பிரியாணி ரெடி!

எலுமிச்சை\அவல் மிக்ஸ் மீல்ஸ்

தேவையானவை: அவல் – 600 கிராம், எலுமிச்சைச் சாறு – 3 டேபிள்ஸ்பூன், தேங்காய் துருவல் – ஒரு கப், வெங்காயம், குடமிளகாய் – தலா 2, பொடியாக நறுக்கிய இஞ்சி – ஒரு டீஸ்பூன், பூண்டு – 5 பல், வறுத்த வேர்க்கடலை – 200 கிராம், மிளகுத்தூள், சீரகத்தூள் – தலா ஒரு டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை – சிறிதளவு, இந்துப்பு – தேவையான அளவு.

செய்முறை: அவலை கல் நீக்கி சுத்தம் செய்து, கழுவி தண்ணீரை வடித்து ஊற வைக்கவும். வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். பூண்டு, இஞ்சியை தோல் நீக்கி, பொடியாக நறுக்கவும்.

ஊற வைத்த அவலுடன் எலுமிச்சைச் சாறு, தேங்காய் துருவல், வறுத்துத் தோல் நீக்கிய வேர்கடலை, நறுக்கிய வெங்காயம், குடமிளகாய், இஞ்சி, பூண்டு, கொத்தமல்லி, கறிவேப்பிலை, மிளகுத்தூள், சீரகத்தூள், இந்துப்பு கலந்து நன்கு கிளறி பரிமாறவும்.

பீட்ரூட் ஊறுகாய்

தேவையானவை: பீட்ரூட் துருவல் – ஒரு கப், இஞ்சி – 100 கிராம், எலுமிச்சம்பழம் – 10, இந்துப்பு – தேவையான அளவு.

செய்முறை: இஞ்சியைத் தோல் சீவி, சிறு துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் போட்டு அரைத்து சாறு எடுத்துக் கொள்ளவும். எலுமிச்சம்பழத்தை நறுக்கி, கொட்டை நீக்கி சாறு எடுத்துக் கொள்ளவும். இரண்டு சாறுகளையும் ஒன்றாகக் கலந்து, அதில் பீட்ரூட் துருவல், இந்துப்பு சேர்த்துக் கலந்து… 10 நிமிடம் ஊற வைக்கவும். இதே முறையில் கேரட்டிலும் செய்யலாம்.

குறிப்பு: இந்த ஊறுகாய்… ஜீரணக் கோளாறு, வயிற்று வலி, வயிற்றுப் பொருமல் போன்ற உபாதைகளை சரிசெய்யும். கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்தும் என்பது கூடுதல் சிறப்பு.

இயற்கை சாம்பார்

தேவையானவை: பாசிப்பருப்புப் பொடி, துவரம்பருப்புப் பொடி – தலா 100 கிராம், நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி – கைப்பிடியளவு, சாம்பார் பொடி – ஒரு டீஸ்பூன், தக்காளி – 200 கிராம், குடமிளகாய் – 2, எலுமிச்சைச் சாறு – ஒரு டேபிள்ஸ்பூன், வெங்காயம் – ஒன்று, தேங்காய் துருவல் – ஒரு கப், முட்டைகோஸ், வெண்பூசணி – தலா 100 கிராம், கேரட் – 200 கிராம், குடமிளகாய் – 2, சீரகத்தூள் – அரை டீஸ்பூன், பூண்டு – 3, இஞ்சி – சிறிய துண்டு, பிளாக் சால்ட் – தேவையான அளவு.

செய்முறை: கொடுக்கப்பட்டுள்ள காய்கறிகளை சுத்தம் செய்து துருவிக் கொள்ளவும். அல்லது தீக்குச்சி போல் நறுக்கிக் கொள்ளவும். தக்காளியை அரைத்து சாறு எடுத்துக் கொள்ளவும். குடமிளகாய், பூண்டு, நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை, இஞ்சியை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும். தேங்காய் துருவலையும் தனியே அரைத்துக் கொள்ளவும். பாசிப்பருப்புப் பொடி, துவரம்பருப்புப் பொடியை தேவையான அளவுத் தண்ணீரில் கரைத்துக் கொள்ளவும். அதனுடன் காய்கறி துருவல், அரைத்த தேங்காய் விழுது, சாம்பார் பொடி, அரைத்த கொத்தமல்லி, கறிவேப்பிலை விழுது, சீரகத்தூள், எலுமிச்சைச் சாறு, பிளாக் சால்ட் போட்டு கலக்கினால் இயற்கை சாம்பார் தயார்.

குறிப்பு: இதனை அவல் சாதம், நேச்சுரல் இட்லிக்குத் தொட்டுக் கொள்ளலாம்.

இயற்கை ரசம்

தேவையானவை: தக்காளி – அரை கிலோ, ரசப்பொடி – ஒன்றரை டீஸ்பூன், மிளகுத்தூள், சீரகத்தூள் – தலா ஒரு டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை – சிறிதளவு, தோலுரித்த பூண்டு – 5 பல், பிளாக் சால்ட் – தேவையான அளவு.

செய்முறை: தக்காளியை நன்கு கழுவி, அரைத்து சாறு எடுத்து தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.

நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை, தோலுரித்த பூண்டு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். அரைத்த கலவையுடன் ரசப்பொடி, சீரகத்தூள், மிளகுத்தூள், பிளாக் சால்ட் எல்லாவற்றையும் சேர்த்து நன்கு கலக்கவும். இந்தக் கலவையை தக்காளிச் சாறுடன் சேர்த்து மீண்டும் ஒருமுறை கலக்க… இயற்கை ரசம் ரெடி!

குறிப்பு: தக்காளிக்குப் பதிலாக எலுமிச்சைச் சாறு அல்லது புளிக்கரைசல் உபயோகித்தும் செய்யலாம்.

தக்காளி\அவல் ஜீமிக்ஸ் மீல்ஸ்

தேவையானவை: அவல் – 600 கிராம், தக்காளி – 2 கிலோ, தேங்காய் துருவல் – ஒரு கப், வெங்காயம் – 2, மிளகுத்தூள், சீரகத்தூள் – ஒரு டீஸ்பூன், முந்திரி – 100 கிராம், நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு, பூண்டு – 3 பல், பொடியாக நறுக்கிய இஞ்சி – ஒரு டீஸ்பூன், பிளாக் சால்ட் – தேவையான அளவு.

செய்முறை: அவலை கல் நீக்கி சுத்தம் செய்து.. தண்ணீர் விட்டுக் கழுவி வடிகட்டவும். தக்காளியை நன்றாகக் கழுவி மிக்ஸியில் போட்டுக் கெட்டியாக அரைத்து… சாறு எடுத்துக் கொள்ளவும். அல்லது தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கவும்.

ஒரு பாத்திரத்தில் கழுவிய அவல், தக்காளிச் சாறு அல்லது தக்காளித் துண்டுகள், தேங்காய் துருவல், நறுக்கிய வெங்காயம், நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி, நசுக்கிய பூண்டு, இஞ்சி சேர்த்து நன்கு கலக்கவும். பிறகு மிளகுத்தூள், சீரகத்தூள், முந்திரி, பிளாக் சால்ட் சேர்த்துக் கலந்து பரிமாறவும். இதற்குத் தொட்டுக் கொள்ள பச்சடி ஏற்றது.

குறிப்பு: மதிய உணவாக இதனை எடுத்துக் கொள்ளலாம். குறைந்த கலோரி உணவு இது.

இஞ்சி ஜாம்

தேவையானவை: தேன் – அரை கிலோ, இஞ்சி – அரை கிலோ, பேரீச்சை – 250 கிராம், பனங்கற்கண்டு – 200 கிராம்.

செய்முறை: இஞ்சியை தோல் நீக்கிக் கழுவி, பொடிப் பொடியாக நறுக்கவும். ஒரு பாட்டிலில் தேன் விட்டு அதில் நறுக்கிய இஞ்சியை ஊற வைக்கவும். பேரீச்சையைக் கழுவி, கொட்டை நீக்கி, பொடியாக நறுக்கவும். நறுக்கிய பேரீச்சை, பனங்கற்கண்டு ஆகியவற்றை தேனில் ஊறும் இஞ்சியுடன் கலக்கவும். அந்த பாட்டிலின் வாயை மெல்லிய காட்டன் துணியால் கட்டவும். இதனை, ஒருவாரம் வெயிலில் வைத்து எடுத்து, சாப்பிடவும்.

குறிப்பு: வயிற்று வலி, வயிற்று பூச்சி, ஜீரணக் கோளாறு, மலச்சிக்கல், சளி, இருமல் தொல்லைகளுக்கு சிறந்தது இஞ்சி ஜாம்.

ஸ்டஃப்டு டமாட்டர்

தேவையானவை: தக்காளி – 10, பொட்டுக்கடலை – 50 கிராம், வறுத்து தோல் நீக்கிய வேர்க்கடலை – 50 கிராம், தேங்காய் துருவல் – கால் கப், நறுக்கிய கொத்தமல்லி, புதினா, மிளகுத்தூள், சீரகத்தூள், பிளாக் சால்ட் – சிறிதளவு

செய்முறை: பொட்டுக்கடலை, வேர்க்கடலை, தேங்காய் துருவல், மிளகுத்தூள், சீரகத்தூள், பிளாக் சால்ட் எல்லவற்றையும் மிக்ஸியில் போட்டு கொஞ்சம் நீர் விட்டுக் கெட்டியாக அரைக்கவும். தக்காளியை நன்கு கழுவி, அதன் மேல் பக்கத்தில் கீறவும். அதற்குள் அரைத்த கலவையை வைத்து, மேலே நறுக்கிய கொத்தமல்லி, புதினா தூவி பரிமாறவும்.

குறிப்பு: இதை அடிக்கடி செய்து சாப்பிட ரத்த சோகை விலகி, இளமை மேம்படும். உடல் தொப்பை, கொலஸ்ட்ரால், அதிக உடல் எடையை சரிசெய்யும்.

முட்டைகோஸ் பொரியல்

தேவையானவை: முட்டைகோஸ் துருவல் – ஒன்றரை கப், கேரட் துருவல் – கால் கப், தேங்காய் துருவல் – அரை கப், வறுத்து, தோல் நீக்கிய வேர்க்கடலை – 200 கிராம், முந்திரி – 50 கிராம், மிளகுத்தூள், சீரகத்தூள், நறுக்கிய கொத்தமல்லி, புதினா, இந்துப்பு – சிறிதளவு.

செய்முறை: ஒரு பாத்திரத்தில் முட்டைக்கோஸ் துருவல், கேரட் துருவல், தேங்காய் துருவல், முந்திரி, வேர்க்கடலை, மிளகுத்தூள், சீரகத்தூள், நறுக்கிய கொத்தமல்லி, புதினா எல்லாவற்றையும் ஒவ்வொன்றாகச் சேர்த்து நன்கு கலக்கவும். பிறகு, இந்துப்பு சேர்த்து மீண்டும் ஒருமுறை நன்கு கலந்து பரிமாறவும்.

குறிப்பு: உடல் எடை, வியர்வை நாற்றம், வாயுத்தொல்லை, அல்சர், குடல் புண், முகப்பரு போன்ற பிரச்னை உள்ளவர்கள் இதைத் தொடர்ந்து சாப்பிட்டு வர… குணமடைவார்கள்.

நன்றி:- சமையல் கலை நிபுணர் கிருஷ்ணகுமாரி ஜெயக்குமார்

நன்றி:- சமையல் கலை நிபுணர் இரத்தின சக்திவேல்

நன்றி:- அ.வி

மற்ற சமையல் படைப்புக்கள்

அட்டகாசமான சுவையில் 30 நாள்… 30 மசாலா குருமா! – ரேவதி சண்முகம்

30 நாள் 30 பொரியல் வாவ்! கலக்கல் வெரைட்டிங்க! – ரேவதி சண்முகம்.

30 வகை டயட் சமையல் வெரைட்டியா சாப்பிடலாம். வெயிட்டையும் குறைக்கலாம்.- கா.கதிரவன்

கோடையை குளிர்ச்சியாக்கும் ஜூஸ், ஸ்குவாஷ் மில்க் ஷேக்!-சமந்தகமணி

30 நாட்களுக்கும் தினம் ஒரு கலந்த சாதம் – சமையல் திலகம் ரேவதி சண்முகம்

PART-1 கிராமத்து கைமணம்! சோளச்சோறு சுக்கு மோர்க்குழம்பு கொள்ளு துவையல் – ரேவதி சண்முகம்

PART-2 கிராமத்து கைமணம்! நவதான்ய உருண்டை கம்புரொட்டி எள்ளுப்பொடி காராமணி கீரைத்தண்டு குழம்பு- ரேவதி சண்முகம்

PART-3 கிராமத்து கைமணம்! மாங்காய் பாசிப் பருப்பு பச்சடி பால் கொழுக்கட்டை காப்பரிசி – ரேவதி சண்முகம்

PART-4 கிராமத்து கைமணம்! முள் முருங்கை அடை, பாசிப்பருப்பு சீயம், சீம்பால் திரட்டு- ரேவதி சண்முகம்

PART-5 கிராமத்து கைமணம்! மரவள்ளிக் கிழங்கு புட்டு, தட்டைப் பயிறு அடை,கருப்பட்டி பணியாரம், உளுந்து பலகாரம் – ரேவதி சண்முகம்

பகுதி-06 கிராமத்து கைமணம்! பருப்பிட்ட பணியாரம், சர்க்கரைவள்ளிக் கிழங்கு சீயம், புழுங்கல் அரிசி கொழுக்கட்டை, பப்பாளிக்காய் வடை

பகுதி-07 கிராமத்து கைமணம் நவரத்தின குருமா, கருப்பட்டி ஆப்பம், ஜவ்வரிசி பொரி, நீர் கொழுக்கட்டை

30 வகை எண்ணெய் இல்லாத சமையல் – சமையல் கலை நிபுணர் ரேவதி சண்முகம்

ஜூன் 24, 2010 1 மறுமொழி

”எதுக்குத்தான் இப்படி எண்ணெயைக் கொட்டி கத்திரிக்காயைச் சமைப்பியோ..?!” என்று தெறித்து ஓடும் அளவுக்கு பலரையும் பாதித்துக் கொண்டிருக்கிறது, உணவில் மிதமிஞ்சி பயன்படுத்தப்படும் எண்ணெய்!

எண்ணெய் என்றால் என்னவென்றே தெரியாத காலத்தியே விதம்விதமான சமையல் இருக்கத்தான் செய்தது. எள்ளு தாத்தா-எள்ளு பாட்டியிடம் (உயிரோடு இருந்தால்) கேட்டுப் பாருங்கள்… பல தலைமுறைகளாக தாங்கள் சப்புக்கொட்டி, ரசித்து, ருசித்து சாப்பிட்டு, நோய் நொடியில்லாமல் வலம் வந்த அந்த ரகசியத்தைச் சொல்வார்கள்!

அப்போதெல்லாம், பண்டிகைகளுக்கு மட்டுமே எண்ணெய் என்பது வீடுகளை எட்டிப் பார்க்கும். இன்றைக்கோ… தோசை, பூரி, வடை என்று பொழுதுவிடிந்தால்… பொழுதுபோனால், எண்ணெயோடுதான் வாழ்க்கை! விளைவு… கொலஸ்ட்ரால், பிளட் பிரஷர், சர்க்கரை என டாக்டரிடம் ஓடிக் கொண்டிருக்கிறோம். அவர் சொல்கிற முதல் வார்த்தையே “சாப்பாட்டுல எண்ணெயைக் குறைச்சுடுங்க” என்பதுதான்.

”எண்ணெய் இல்லாமல் சமைக்க முடியுமா?” என்று அலறாதீர்கள். இங்கே, பிரபல ‘சமையல் கலை நிபுணர்’ ரேவதி சண்முகம் உங்களுக்கு பரிமாறிஇருக்கும் 30 வகை சமையலுமே ‘ஆயில் ஃப்ரீ’தான்! கூடவே அவர் சொல்லும் ஓர் எச்சரிக்கைக் குறிப்பு …

“இந்த வகை சமையலுக்காக தாளிக்கறப்ப, அடுப்பை மிதமான தீயில வச்சுருக்கணும். அப்பதான் கடுகு, உளுத்தம்பருப்பு, சோம்பு மாதிரியான பொருட்கள் கருகாம பொரிஞ்சு வரும்.”

எண்ணெய் செலவுக்கு மட்டுமல்ல… மருத்துவச் செலவுக்கும் குட்பை சொல்வோமா?!

டயட் சாம்பார்

தேவையானவை: துவரம்பருப்பு – அரை கப், ஏதேனும் ஒரு வகை காய் (நறுக்கியது) – ஒரு கப், நறுக்கிய வெங்காயம் – 1, தக்காளி – 2, சாம்பார் பொடி – 2 டீஸ்பூன், புளி – 50 கிராம், மஞ்சள்தூள், பெருங்காயத்தூள், கடுகு, வெந்தயம், சீரகம் – தலா கால் டீஸ்பூன், உளுத்தம்பருப்பு – அரை டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: குக்கரில் துவரம்பருப்பு, மஞ்சள்தூள், தண்ணீர் சேர்த்து வேகவிட்டு, 3 விசில் வந்ததும் இறக்கவும். புளியை ஒரு கப் தண்ணீரில் ஊற வைத்து, கரைத்து, வடிகட்டவும். வெந்த பருப்புடன் நறுக்கிய காய், வெங்காயம், தக்காளி, சாம்பார் பொடி, புளிக் கரைசல், பெருங்காயத்தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து, குக்கரை மூடி… 2 விசில் வந்ததும் இறக்கவும்.

வெறும் கடாயில் கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், வெந்தயம் சேர்த்து மிதமான தீயில் நன்கு பொரிய விட்டு, சாம்பாரில் சேர்க்கவும். நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை தூவி இறக்கினால்… டயட் சாம்பார் ரெடி!

வாழைத்தண்டு கூட்டு

தேவையானவை: பாசிப்பருப்பு – அரை கப், வாழைத்தண்டு (மீடியம் சைஸ்) – ஒன்று, வெங்காயம் (நறுக்கிக் கொள்ளவும்) – 1, பச்சை மிளகாய் – 3, காய்ச்சிய பால் – கால் கப், சீரகம் – அரை டீஸ்பூன், பூண்டு – 2 பல், கறிவேப்பிலை – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: பாசிப்பருப்பை நன்கு வேக வைத்துக் கொள்ளவும். வாழைத்தண்டை நார் நீக்கி, பொடியாக நறுக்கவும். நறுக்கிய வாழைத்தண்டு, வெங்காயம், கீறிய பச்சை மிளகாய், உப்பு ஆகியவற்றை குக்கரில் சேர்த்து, ஒரு கப் தண்ணீர் ஊற்றி வேக வைத்து, 2 விசில் வந்ததும் இறக்கவும். ஆறியதும் திறந்து, அதனை வேக வைத்த பாசிப்பருப்புடன் சேர்த்து, சில நிமிடங்கள் கொதிக்க விடவும். பிறகு, நசுக்கிய பூண்டு, சீரகம், கறிவேப்பிலை, பால் சேர்த்துக் கிளறி பரிமாறவும்.

உசிலி

தேவையானவை: கடலைப்பருப்பு – முக்கால் கப், துவரம்பருப்பு – கால் கப், பச்சை மிளகாய் – 3, பெருங்காயத் தூள் – அரை டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு – ஒரு டேபிள்ஸ்பூன், ஏதாவது ஒரு வகை காய் (பொடியாக நறுக்கியது) – ஒரு கப், கடுகு – அரை டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கடலைப்பருப்பு, துவரம்பருப்பு இரண்டையும் கலந்து, ஒரு மணி நேரம் ஊற விடவும். பிறகு, தண்ணீரை வடித்து, அவற்றுடன் பச்சை மிளகாய், உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து, கொஞ்சம் கரகரப்பாக அரைக்கவும். அரைத்த மாவை உருண்டைகளாகப் பிடித்து, இட்லி பாத்திரத்தில் போட்டு 10-15 நிமிடம் வேக வைத்து, இறக்கவும். ஆறியதும், அந்த உருண்டைகளை, சிறு துண்டுகளாக்கி மிக்ஸியில் போட்டு ஒருமுறை சுற்றி எடுத்தால்… உதிராக வரும். நறுக்கிய காய்கறியுடன் உப்பு சேர்த்து (தேவைப்பட்டால்), குக்கரில் வேக விட்டு, ஒரு விசில் வந்ததும் இறக்கவும். உதிர்த்த பருப்புடன் வேக வைத்த காய்கறி, எலுமிச்சைச் சாறு சேர்த்து நன்கு கிளறவும். வெறும் கடாயில், கடுகு பொரித்து சேர்த்து, நன்கு கலந்து பரிமாறவும்.

கீரை மசியல்

தேவையானவை: அரைக்கீரை – ஒரு கட்டு, சின்ன வெங்காயம் – 5, பச்சை மிளகாய் – 1, பூண்டு – 5 பல், சீரகம் – அரை டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கீரையை ஆய்ந்து, தண்ணீரில் அலசி சுத்தம் செய்து கொள்ளவும். ஆய்ந்த கீரையுடன் கொடுத்துள்ள எல்லாவற்றையும் சேர்த்து, தண்ணீர் விட்டு குக்கரில் வேக வைக்கவும். ஒரு விசில் வந்ததும் இறக்கவும். ஆறியதும், திறந்து நன்கு மசித்துப் பரிமாறவும். விருப்பப்பட்டால், வேக வைத்த பாசிப்பருப்பு கொஞ்சம் சேர்த்துக் கலந்தும் பரிமாறலாம்.

இதேபோல் முளைக்கீரை, சிறுகீரையிலும் செய்யலாம்.

பருப்பு ரசம்

தேவையானவை: துவரம்பருப்பு வேக வைத்த தண்ணீர் – ஒரு கப், புளிக் கரைசல் – கால் கப், தக்காளி – 2, மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன், கடுகு – வெந்தயம் – தலா கால் டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.

பொடிக்க: மிளகு, சீரகம் – தலா ஒன்றரை டீஸ்பூன், துவரம்பருப்பு – 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 2, பூண்டு – 3 பல்.

செய்முறை: பாத்திரத்தில் துவரம்பருப்பு வேக வைத்த தண்ணீர், புளிக் கரைசல், பெருங்காயத்தூள், தக்காளி, மஞ்சள் தூள், உப்பு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து எல்லாவற்றையும் நன்றாகக் கலந்து… கொதிக்க விடவும். பொடிக்கக் கொடுத்துள்ள பொருட்களை நன்கு பொடிக்கவும். வெறும் கடாயை மிதமான தீயில் வைத்து கடுகு, வெந்தயம் சேர்த்து சிவக்கப் பொரித்து, துவரம்பருப்புத் தண்ணீர் கரைசலில் சேர்க்கவும். ஒரு கொதி வரும்போது, பொடித்த பொடியையும் சேர்க்கவும். கூடவே, கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து இறக்கிப் பரிமாற வும்.

வாழைக்காய் பொடிமாஸ்

தேவையானவை: வாழைக்காய் – ஒன்று, மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், தேங்காய் துருவல் – ஒரு டேபிள்ஸ்பூன், கடுகு – ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.

பொடிக்க: உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு – தலா அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 2, சீரகம் – அரை டீஸ்பூன்.

செய்முறை: வாழைக்காயை இரண்டாக நறுக்கி, வேக வைக்கவும். முக்கால் பதம் வெந்ததும் இறக்கவும். ஆற வைத்து, தோல் நீக்கி, துருவிக் கொள்ளவும். வெறும் கடாயில் பொடிக்க கொடுத்துள்ள பொருட்களை சிவக்க வறுத்து, மிக்ஸியில் கரகரப்பாகப் பொடிக்கவும். மிதமான தீயில் கடாயை வைத்து கடுகு போட்டு பொரித்து, கறிவேப்பிலை சேர்த்து… துருவிய வாழைக்காயை சேர்த்துக் கிளறவும். பொடித்த பொடி, மஞ்சள்தூள், தேங்காய் துருவல், உப்பு சேர்த்துக் கிளறி இறக்கவும்.

எண்ணெய் சேர்க்காததால், அடுப்பை ‘சிம்’மிலேயே வைத்து சமைக்கவும். விருப்பப்பட்டால், எலுமிச்சைச் சாறு சேர்க்கலாம்.

அவல் தோசை

தேவையானவை: பச்சரிசி – ஒன்றரை கப், புழுங்கல் அரிசி, அவல் – தலா அரை கப், உளுந்து – கால் கப், வெந்தயம் – அரை டீஸ்பூன், சர்க்கரை – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: பச்சரி, புழுங்கல் அரிசி, உளுந்து, வெந்தயம் ஆகியவற்றை ஒன்றாக ஊற வைக்கவும். அவலை தனியாக ஊற வைக்கவும். ஒரு மணி நேரம் நன்கு ஊறியதும், எல்லாவற்றையும் ஒன்றாக்கி, நைஸாக அரைத்து, உப்பு சேர்த்துப் புளிக்க விடவும். புளித்ததும், சர்க்கரை சேர்த்துக் கலக்கவும். மிதமான தீயில் தோசைக்கல்லை வைத்து, ஒரு கரண்டி மாவு விட்டு, ஊத்தப்பம் போல் வார்த்து மூடியால் மூடவும். வெந்ததும், திருப்பிப் போடாமல் அப்படியே எடுக்க… அவல் தோசை ரெடி! இதேபோல் ஒவ்வொரு அவல் தோசையையும் தயார் செய்யவும்.

இளந்தோசை

தேவையானவை: இட்லி மாவு – ஒரு கப், தண்ணீர் – சிறிதளவு.

செய்முறை: இட்லி மாவுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து, தோசை மாவு பதத்தில் கலந்து கொள்ளவும். தோசைக்கல்லை மிதமான தீயில் வைத்து, தோசை மாவை விட்டு, மெல்லிய தோசையாக வார்க்கவும். பிறகு, மூடியால் மூடி வைத்து ஒரு நிமிடம் வேக விட்டு எடுக்கவும். இதேபோல், ஒவ்வொரு தோசைகளாக வார்த்தெடுக்கவும்.

இந்த தோசைகள், வெள்ளை நிறம் மாறாமல் மிக மெல்லியதாக இருக்கும்.

பொடி இட்லி

தேவையானவை: இட்லி மாவு – 2 கப், இட்லி மிளகாய்ப் பொடி – 3 டேபிள்ஸ்பூன், கடுகு – கால் டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, உப்பு – சிறிதளவு.

செய்முறை: இட்லி மாவில், மினி இட்லிகளை தயார் செய்து கொள்ளவும். வெறும் கடாயை மிதமான தீயில் வைத்து, கடுகு போட்டு பொரிக்கவும். பிறகு, பொடியாக நறுக்கிய கறிவேப்பிலையைப் போட்டு வறுக்கவும். இட்லி மிளகாய்ப் பொடியுடன் சிறிதளவு உப்பு சேர்த்து ஒரு பாத்திரத்தில் போட்டு… தண்ணீர் விட்டுக் குழைத்து, மினி இட்லிகளைப் சேர்த்துப் புரட்டி எடுக்கவும். பொரித்த கடுகு, கறிவேப்பிலை சேர்த்து, நன்கு கலந்து பரிமாறவும்.

தயிர் சாண்ட்விச்

தேவையானவை: பிரெட் ஸ்லைஸ் – 10, புளிக்காத தயிர் – ஒரு கப், வெள்ளரிக்காய், தக்காளி – தலா 1, புதினா, பச்சை மிளகாய், உப்பு சேர்த்து அரைத்த சட்னி – 3 டேபிள்ஸ்பூன், சாட் மசாலா, சீரகத்தூள் – தலா அரை டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: வெள்ளரிக்காய், தக்காளியை மெல்லிய வட்டமான துண்டுகளாக நறுக்கவும். பிரெட் ஸ்லைஸின் ஓரங்களை நறுக்கவும். ஒரு பிரெட் ஸ்லைஸின் மீது, புதினா – பச்சை மிளகாய் சட்னியைப் பரவலாகத் தடவவும். பிறகு, நறுக்கிய வெள்ளரி, தக்காளித் துண்டுகளை அதன் மேல் வைத்து, மற்றொரு ஸலைஸால் மூடவும். இதேபோல் எல்லா பிரெட் ஸ்லைஸ்களையும் தயார் செய்து கொள்ளவும். தயிருடன், உப்பு சேர்த்து நன்கு கலந்து தயார் செய்து வைத்துள்ள ஸ்லைகள் மேல் கொஞ்சம் கொஞ்சமாக விட்டு, சாட் மசாலா, சீரகத்தூள் தூவி பரிமாறவும்.

மல்டி வெஜிடபிள் குழம்பு

தேவையானவை: நறுக்கிய பரங்கிக்காய், கத்திரிக்காய், அவரை, காராமணி, மொச்சை, வாழை, முருங்கைக்காய் கலவை – 2 கப், வேக வைத்த துவரம்பருப்பு – கால் கப், சின்ன வெங்காயம் – 15, பூண்டு – 8 பல், புளி – 50 கிராம், தக்காளி – 4, மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன், தனியாத்தூள் – ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன், கடுகு, சீரகம், சோம்பு – தலா கால் டீஸ்பூன், வெந்த யம் – அரை டீஸ்பூன். கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: சின்ன வெங்காயம், பூண்டை தோலுரித்து, நசுக்கிக் கொள்ளவும். புளியை ஊற வைத்து கரைத்து, வடிகட்டவும். பிறகு புளிக் கரைசலை கொதிக்க விடவும். கொதிக்க ஆரம்பித்த தும், தோல் உரித்த சின்ன வெங்காயம், பூண்டு, தக்காளி, நறுக்கிய காய்கறி கலவையைச் சேர்த் துக் கலக்கவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து நன்கு கலந்து… காய் வேகும் வரை கொதிக்க விடவும்.

வெறும் கடாயில் கடுகு போட்டு பொரிந்ததும், சீரகம், சோம்பு, வெந்தயம் சேர்த்து வறுத்து, குழம்பில் சேர்க்கவும். வேக வைத்த துவரம்பருப்பை சேர்த்துக் கலந்து, கறிவேப்பிலை, நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து இறக்கவும்.

வெஜ் சூப்

தேவையானவை: பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ், காலிஃப்ளவர், முட்டைகோஸ் – ஒரு கப், வெங்காயம் – ஒன்று, இஞ்சி-பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன், சோள மாவு – 3 டீஸ்பூன், மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன், கொத்தமல்லி – சிறிதளவு, சர்க்கரை – அரை டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: பாத்திரத்தில் மூன்று கப் தண்ணீர் விட்டுக் கொதிக்க வைக்கவும். கொதித்ததும், பொடியாக நறுக்கிய காய்கறிகள், நறுக்கிய வெங்காயம், இஞ்சி-பூண்டு விழுது, மிளகுத்தூள், உப்பு, சர்க்கரை சேர்க்கவும். காய்கள் வேகும் வரை கொதிக்க விடவும். சோள மாவை கால் கப் தண்ணீரில் கரைத்து அதில் விடவும். பிறகு, நறுக்கிய கொத்தமல்லி சேர்த்துக் கலந்து இறக்கி… சூடாகப் பரிமாறவும்.

மசாலா சென்னா

தேவையானவை: வெள்ளை சென்னா – ஒரு கப், மிளகாய்த்தூள், சீரகத்தூள் – தலா அரை டீஸ்பூன், மிளகுத்தூள் – ஒரு சிட்டிகை, சாட் மசாலா – ஒரு டீஸ்பூன், மாங்காய்த்தூள் (டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் கிடைக்கும்) – கால் டீஸ்பூன், பொடித்த வெல்லம் – ஒரு டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: சென்னாவை 6-8 மணி நேரம் ஊற வைக்கவும். ஊற வைத்த சென்னாவுடன் உப்பு சேர்த்து குக்கரில் வேகவிட்டு, 3 விசில் வந்ததும் இறக்கவும். ஆறியதும், மூடியைத் திறந்து, தண்ணீரை வடிக்கவும். கொடுத்துள்ள எல்லாப் பொருட்களையும் ஒவ்வொன்றாகச் சேர்த்து, நன்கு கலக்க… மசாலா சென்னா தயார்!

செட்டிநாட்டு பருப்புத் துவையல்

தேவையானவை: துவரம்பருப்பு அல்லது பாசிப்பருப்பு – கால் கப், காய்ந்த மிளகாய் – 2, புளி – கொட்டைப்பாக்களவு, தேங்காய் துருவல் – ஒரு டீஸ்பூன், பூண்டு – 2 பல், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: வெறும் கடாயில், பருப்பை பொன்நிறமாக வறுக்கவும். பிறகு, காய்ந்த மிளகாய் சேர்த்து வறுக்கவும். ஆறியதும், புளி, தேங்காய் துருவல். உப்பு ஆகியவற்றைச் சேர்த்து, மிக்ஸியில் போட்டு கொஞ்சம் தண்ணீர் விட்டு கெட்டியாகவும், கரகரப்பாகவும் அரைக்கவும். கடைசி யாக, பூண்டு சேர்த்து ஒருமுறை சுற்றி எடுக்க… செட்டிநாட்டு பருப்புத் துவையல் ரெடி!

பருப்பு சாதம்

தேவையானவை: பாசுமதி அரிசி – ஒரு கப், துவரம்பருப்பு – அரை கப், தக்காளி – 2, மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், பூண்டு – 8 பல், சீரகம் – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: பாத்திரத்தில் தண்ணீர் விட்டுக் கொதிக்க விடவும். கொதித்ததும், கழுவிய துவரம்பருப்பு, நறுக்கிய தக்காளி, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வேக விடவும். பிறகு, அரிசி, தோலுரித்து நசுக்கிய பூண்டு, சீரகம், உப்பு சேர்த்து குழைய வேக வைத்து இறக்கவும்.

இதற்கு மோர்க்குழம்பு, பொடிமாஸ் சிறந்த சைட் டிஷ்.

கலவைக்காய் குருமா

தேவையானவை: பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ், காலிஃப்ளவர், முட்டைகோஸ் கலவை – 2 கப், உப்பு – தேவையான அளவு.

அரைக்க: தேங்காய் துருவல் – கால் கப், பாதாம் – 10, பொட்டுக்கடலை – ஒரு டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் – 4, பூண்டு – 2 பல், இஞ்சி – ஒரு சிறிய துண்டு, சோம்பு – கால் டீஸ்பூன், ஏலக்காய், பட்டை, கிராம்பு – தலா ஒன்று.

செய்முறை: நறுக்கிய காய்கறிகளுடன் உப்பு சேர்த்து குக்கரில் வேகவிட்டு, 2 விசில் வந்ததும் இறக்கவும். அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை ஒரு கடாயில் சேர்த்து, மிதமான தீயில் நன்கு வதக்கி இறக்கவும். ஆறியதும், மிக்ஸியில் போட்டு நைஸாக அரைத்து… வேக வைத்த காய்கறி கலவையுடன் சேர்த்துக் கலக்கி கொதிக்க விடவும். எல்லாம் ஒன்றாகக் கலந்து ஒருமுறை கொதித்ததும் இறக்கிப் பரிமாறவும்.

காய்கறி போளி

தேவையானவை: கேரட் துருவல் – கால் கப், வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு – அரை கப், முள்ளங்கி, முட்டைகோஸ் துருவல் (கலந்தது) – கால் கப், கோதுமை மாவு – ஒன்றரை கப், பால் – அரை கப், பட்டை – 2 துண்டு, சோம்பு – அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு – 2 டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: ஒரு பாத் திரத்தில் கேரட், முள்ளங்கி, முட்டை கோஸ் துருவலுடன் உப்பு சேர்த்து நன்கு கலந்து… அந்தக் கலவையை அழுத்தி வைக்கவும். 10 நிமிடம் கழித்து அதனை எடுத்து, மசித்த உருளைக் கிழங்கு, பட்டை, சோம்பு, மிளகாய்த்தூள், எலுமிச்சைச் சாறு, நறுக்கிய கொத்த மல்லி, உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.

கோதுமை மாவுடன் பால், உப்பு சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு மிருதுவாகப் பிசைந்து கொள்ளவும். பிசைந்த மாவிலிருந்து கொஞ்சம் எடுத்து… உருட்டிக் கிண்ணம் போல் செய்து, அதனுள் காய்கறி கலவையை வைத்து மூடவும். அதனை சப்பாத்திக் கல்லில் இட்டு, சற்று கனமாகத் தேய்க்கவும். இதேபோல் ஒவ்வொன்றையும் தேய்த்து தயார் செய்து கொள்ளவும். அவற்றை தோசைக்கல்லில் போட்டு, மிதமான தீயில் சுட்டெடுக்கவும்.

பனீர் டிக்கா

தேவையானவை: பனீர் – 200 கிராம், இஞ்சி-பூண்டு விழுது – 2 டீஸ்பூன், மிளகாய்த்தூள், சீரகத்தூள் – தலா ஒரு டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் – அரை டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு – 2 டேபிள்ஸ்பூன், காய்ந்த வெந்தயக்கீரை (டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் கிடைக்கும்) – 2 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: பனீரை, மீடியம் சைஸ் சதுரத் துண்டுகளாக நறுக்கவும். அதனுடன், கொடுத்துள்ள மற்ற பொருட்களை ஒவ்வொன்றாகச் சேர்த்து, நன்கு கலந்து… 2-3 மணி நேரம் ஊற வைக்கவும். மிதமான தீயில் தோசைக்கல்லை வைத்து, 4-5 பனீர் கலவை துண்டுகளைப் போட்டு, இருபுறமும் திருப்பி எடுக்க… பனீர் டிக்கா ரெடி!

பாலக் பனீர்

தேவையானவை: பாலக் கீரை (அ) பசலைக் கீரை, வெந்தயக் கீரை – தலா ஒரு கட்டு, பனீர் – 200 கிராம், பச்சை மிளகாய் – ஒன்று, பூண்டு – 2 பல், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கீரைகளை ஆய்ந்து, அலசிக் கொள்ளவும். அதனுடன் பச்சை மிளகாய், தோலுரித்த பூண்டு சேர்த்து வேக வைக்கவும். வெந்ததும், உப்பு சேர்த்துக் கலந்து நன்கு மசித்துக் கொள்ளவும். நறுக்கிய பனீர் துண்டுகளைச் சேர்த்து ஒருமுறை லேசாகக் கொதிக்க வைத்து இறக்கவும்.

காலிஃப்ளவர் மசாலா

தேவையானவை: காலிஃப்ளவர் – 1, வெங்காயம் – 1, தக்காளி – 2, இஞ்சி-பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் – ஒன்றரை டீஸ்பூன், சோம்புத்தூள் – அரை டீஸ்பூன், அரைத்த தேங்காய் விழுது – 2 டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: காலிஃப்ளவரை துண்டுகளாக நறுக்கவும். தண்ணீரில் கொஞ்சம் உப்பு சேர்த்து, அதில் நறுக்கிய காலிஃப்ளவரை நன்கு கழுவவும். வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கவும். நறுக்கிய காலிஃப்ளவர், நறுக்கிய வெங்காயம், தக்காளியை கடாயில் சேர்த்து வேகவிடவும். சில நிமிடங்கள் கழித்து, இஞ்சி-பூண்டு விழுது, மிளகாய்த்தூள், சோம்புத்தூள், தேங்காய் விழுது, கறிவேப்பிலை, உப்பு சேர்த்துக் கிளறவும். கிரேவி பதம் வந்ததும் இறக்கவும்.

மினி ரவா இட்லி

தேவையானவை: ரவை, புளிக்காத தயிர் – தலா ஒரு கப், சேமியா – 1 டேபிள்ஸ்பூன், ஃப்ரூட் சால்ட், மிளகுத்தூள், சீரகத்தூள் – தலா ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன், பச்சை மிளகாய், இஞ்சி விழுது – அரை டீஸ்பூன், கடுகு – கால் டீஸ்பூன், உளுந்து, கடலைப்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: வெறும் கடாயில் கடுகு சேர்த்து பொரிக்கவும். பிறகு உளுந்து, கடலைப்பருப்பு சேர்த்து வறுத்து, ரவை சேர்த்து சிவக்க வறுத்தெடுக்கவும். ஆறியதும், ஃப்ரூட் சால்ட் நீங்கலாக மற்றவற்றை எல்லாப் பொருட்களையும் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். அந்த ரவைக் கலவையில் தண்ணீர் விட்டு, இட்லி மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும். இட்லி பானையில் தண்ணீர் விட்டு, சூடாகும் நேரத்தில், ரவை மாவில் ஃப்ரூட் சால்ட் சேர்த்து அதன் மேல் கொஞ்சம் தண்ணீர் விட, அது பொங்கி வரும். மாவை மீண்டும் நன்கு கலந்து, மினி இட்லிகளாக சுட்டெடுக்கவும்.

முட்டைகோஸ் ரொட்டி

தேவையானவை: கோதுமை மாவு – 2 கப், காய்ச்சிய பால் – அரை கப், உப்பு – அரை டீஸ்பூன்.

ஸ்டஃப் செய்வதற்கு: முட்டைகோஸ் துருவல் – அரை கப், வெங்காயத் துருவல், கேரட் துருவல், பொடியாக நறுக்கிய பசலைக் கீரை – தலா கால் கப், எலுமிச்சைச் சாறு – 2 டீஸ்பூன், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு, கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள் – தலா ஒரு டீஸ்பூன், உப்பு – சிறிதளவு.

செய்முறை: கோதுமை மாவுடன் பால், உப்பு, தண்ணீர் விட்டு மிருதுவாகப் பிசையவும். முட்டைகோஸ் துருவல், கேரட் துருவல், வெங்காயத் துருவல், பசலைக் கீரை ஆகியவற்றுடன் உப்பு சேர்த்துப் பிசறி வைக்கவும். 10 நிமிடம் கழித்து காய்கறிக் கலவையை பிழிந்து கொள்ளவும். அதனுடன் உப்பு, எலுமிச்சைச் சாறு, நறுக்கிய கொத்தமல்லி, மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ள… காய்கறி பூரணம் ரெடி!

பிசைந்த மாவில், கொஞ்சம் மாவை எடுத்து கிண்ணம் போல் செய்து… அதனுள் பூரணம் வைத்து மூடவும். இதேபோல் ஒவ்வொரு ரொட்டியையும் தயார் செய்யவும். அவற்றை சப்பாத்திக் கல்லில் இட்டு சற்று கனமாகத் தேய்த்துக் கொள்ளவும். தோசைக்கல்லை மிதமான தீயில் வைத்து தேய்த்த ரொட்டியை சுட்டெடுக்கவும்.

கிரீன் கொழுக்கட்டை

தேவையானவை: அரிசி மாவு – ஒரு கப், தேங்காய்ப் பால் – ஒரு கப். உப்பு – தேவையான அளவு

அரைக்க: நறுக்கிய கொத்தமல்லி, புதினா – சிறிதளவு, இஞ்சி – ஒரு துண்டு, பூண்டு – 2 பல், பச்சை மிளகாய் – 1.

செய்முறை: அரைக்கக் கொடுத்துள்ள பொருட் களை மிக்ஸியில் போட்டு நைஸாக அரைத்துக் கொள்ளவும். அரைத்த விழுதை, தேங்காய் பாலில் கரைத்து வடிகட்டவும். அந்தப் பாலை அடுப்பில் வைத்து சூடாக்க… நுரை கட்டி வரும். அப்போது அரிசி மாவைக் கொட்டி, உப்பு சேர்த்து கட்டியில்லாமல் கிளறி இறக்கவும். அதிலிருந்து, கொஞ்சம் மாவு எடுத்து சிறு உருண்டைகளாக உருட்டி… ஆவியில் வேக வைக்க, கொழுக்கட்டை ரெடி!

வாழைத்தண்டு கோசம்பரி

தேவையானவை: பொடியாக நறுக்கிய வாழைத்தண்டு – அரை கப், பொடியாக நறுக்கிய வெள்ளரிக்காய், தக்காளி, குடமிளகாய், கொத்தமல்லி – தலா கால் கப், தேங்காய் துருவல் – கால் கப், வேக வைத்த சென்னா (அ) ஸ்வீட் கார்ன் – அரை கப், எலுமிச்சைச் சாறு – 2 டேபிள்ஸ்பூன், சர்க்கரை – 2 டீஸ்பூன், மிளகுத்தூள் – 1 டீஸ்பூன், மாதுளம் முத்துக்கள் – கால் கப், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: நறுக்கிய வாழைத்தண்டை 5 நிமிடம் ஆவியில் வேக வைக்கவும். ஆறியதும், கொடுத்துள்ள எல்லா பொருட்களையும் ஒவ்வொன்றாக சேர்த்து நன்றாகக் கலந்து பரிமாறவும்.

எளியமையான இந்த ரெசிபி, உடல் எடையைக் கட்டுப்படுத்தும்.

பேங்கன் கூட்டு

தேவையானவை: பாசிப்பருப்பு – அரை கப், கத்திரிக்காய் – 5, உருளைக்கிழங்கு, வெங்காயம் – தலா 1, தக்காளி, பச்சை மிளகாய் – தலா 2, மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன், புளி – பெரிய நெல்லிக்காய் அளவு, மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, கடுகு, சோம்பு – தலா கால் டீஸ்பூன், உளுத்தம்பருப்பு – அரை டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: பாத்திரத்தில் பாசிப்பருப்புடன் மஞ்சள்தூள் சேர்த்து வேக வைக்கவும். முக்கால் பதம் வெந்ததும், நறுக்கிய வெங்காயம், தக்காளி, உருளைக்கிழங்கு, கத்திரிக்காய், மிளகாய்த்தூள், கீறிய பச்சை மிளகாய், உப்பு சேர்க்கவும். இவை எல்லாம் ஒன்றாகக் கலந்து நன்கு வெந்ததும், புளிக் கரைசல், நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து, ஐந்து நிமிடங்கள் மிதமான தீயில் கொதிக்க விடவும். பிறகு, வெறும் கடாயில் கடுகு, உளுத்தம்பருப்பு, சோம்பு தாளித்து சேர்த்துப் பரிமாறவும்.

தால் இட்லி

தேவையானவை: துவரம்பருப்பு – அரை கப், உளுத்தம்பருப்பு, பாசிப்பருப்பு – தலா ஒரு டேபிள்ஸ்பூன், புழுங்கல் அரிசி – 2 டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் – 4, தேங்காய் துருவல், கேரட் துருவல் – தலா ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: மூன்று வகை பருப்புகள், புழுங்கல் அரிசி எல்லாவற்றையும் ஒன்றாக்கி, ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு, தண்ணீரை வடித்து காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து கரகரப்பாக இட்லி மாவு பதத்தில் அரைக்கவும். அரைத்த மாவுடன், தேங்காய் துருவல், கேரட் துருவல் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். இந்த மாவை, இட்லித் தட்டுகளில் விட்டு இட்லிகளாக வேக வைத்து, சூடாகப் பரிமாறவும்.

இதற்கு கார சட்னி சிறந்த காம்பினேஷன்.

இட்லி சாம்பார்

தேவையானவை: பாசிப்பருப்பு – அரை கப், வெங்காயம், தக்காளி – தலா ஒன்று, மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, எலுமிச்சைச் சாறு – ஒரு டேபிள்ஸ்பூன், கடுகு – கால் டீஸ்பூன், உளுத்தம்பருப்பு – அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் – சிறிதளவு, நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.

அரைக்க: உளுத்தம்பருப்பு – ஒரு டீஸ்பூன், பொட்டுக்கடலை – 2 டீஸ்பூன், சீரகம் – அரை டீஸ்பூன், பச்சை மிளகாய் – 3, தேங்காய் துருவல் – ஒரு டேபிள்ஸ்பூன்.

செய்முறை: பாசிப்பருப்பு, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள், நறுக்கிய வெங்காயம், தக்காளியை பாத்திரத்தில் போட்டு, தண்ணீர் விட்டு உப்பு சேர்த்து நன்கு வேகவிடவும். வெறும் கடாயில் மிதமான தீயில், அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து வதக்கி, ஆறியதும் அரைக்கவும். அரைத்த விழுதை, பருப்புக் கலவையுடன் சேர்த்துக் கலந்து நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து… ஒரு கொதி வந்ததும் இறக்கவும். வெறும் கடாயில் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்துக் கொட்டி, எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலந்து பரிமாறவும்.

மோர்க்குழம்பு

தேவையானவை: புளிப்பில்லாத தயிர் – ஒரு கப், பொட்டுக்கடலை மாவு – 3 டீஸ்பூன், மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன், கடுகு, வெந்தயம், ஓமம் – தலா கால் டீஸ்பூன், பச்சை மிளகாய் – 3, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: தயிரை நன்கு கடைந்து, கொஞ்சம் தண்ணீர், மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், உப்பு, பொட்டுக்கடலை மாவு சேர்த்துக் கரைக்கவும். வெறும் கடாயில், கடுகு, வெந்தயம், ஓமம், கீறிய பச்சை மிளகாய் சேர்த்துத் தாளிக்கவும். பிறகு, மோர்கலவையை சேர்த்து.. கிளறியவாறே இரண்டு நிமிடம் கொதிக்க வைத்து இறக்கவும்.

ஏதாவது காய்கள் சேர்ப்பதாக இருந்தால் தனியே வேக வைத்து சேர்க்கவும்.

மல்டி பருப்பு சாம்பார்

தேவையானவை: துவரம்பருப்பு – அரை கப், கடலைப்பருப்பு – கால் கப், ஏதாவது ஒரு காய் (நறுக்கியது) – ஒரு கப், புளி – பெரிய நெல்லிக்காய் அளவு, தக்காளி – 2, வெங்காயம் – 1, மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, கடுகு – கால் டீஸ்பூன், பெருங்காயம் – தேவையான அளவு, உளுத்தம்பருப்பு – அரை டீஸ்பூன், நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.

வறுத்துப் பொடிக்க: தனியா – ஒன்றரை டேபிள்ஸ்பூன், உளுத்தம்பருப்பு – கடலைப்பருப்பு – தலா 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 6, வெந்தயம், சீரகம் – தலா அரை டீஸ்பூன்.

செய்முறை: பொடிக்கக் கொடுத்துள்ள பொருட்களை வெறும் கடாயில் சேர்த்து வறுத்து, ஆறியதும் மிக்ஸியில் பொடிக்கவும். பாத்திரத்தில் தண்ணீர் விட்டு, கொதித்ததும்… துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வேகவிடவும். பாதி பதத்தில் வெந்ததும் நறுக்கிய வெங்காயம், தக்காளி, காய்கறி சேர்த்துக் குழைய வேகவிடவும். பிறகு, புளிக் கரைசல் விட்டுக் கலந்து கொதிக்க விடவும். பச்சை வாசனை போனதும், வறுத்துப் பொடித்த பொடியை சேர்க்கவும். பெருங்காயம், உப்பு சேர்த்து ஐந்து நிமிடங்கள் கொதிக்க விட்டு, நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்க்கவும். வெறும் கடாயில் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்துக் கொட்டி இறக்கவும்.

இந்த சாம்பார்… சர்க்கரை, ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு ஏற்றது.

பாசிப்பருப்பு டோக்ளா

தேவையானவை: பாசிப்பருப்பு – ஒரு கப், கடலை மாவு – ஒரு டேபிள்ஸ்பூன், தயிர் – கால் கப், பச்சை மிளகாய் விழுது – 2 டீஸ்பூன், சீரகத்தூள் – ஒரு டீஸ்பூன், ஃப்ரூட் சால்ட் (டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் கிடைக்கும்) – 2 டீஸ்பூன், கேரட் துருவல் – ஒரு டேபிள்ஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: பாசிப்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்து, கரகரப்பாக அரைக்கவும். அரைத்த மாவுடன் கடலை மாவு, தயிர், பச்சை மிளகாய் விழுது, சீரகத்தூள், உப்பு, கேரட் துருவல், நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து இட்லிமாவு பதத்தில் கலந்து கொள்ளவும். இட்லி பாத்திரத்தில் தண்ணீர் வைத்து சூடானதும், கலந்து வைத்துள்ள மாவில்… ஃப்ரூட் சால்ட் சேர்த்து, அதன் மேல் கால் கப் தண்ணீர் விட, உடனே அது பொங்கி வரும். அதன் பிறகு, மாவை நன்கு கலக்கவும். இட்லித்தட்டில், ஒரு சொட்டு எண்ணெய் விட்டுத் தடவி, அதில் மாவை விட்டு வேகவைத்து இறக்கவும்.

ஆறியதும், துண்டுகளாக நறுக்கி, தேங்காய் சட்னி, காரச் சட்னியுடன் பரிமாறவும்.

நன்றி:- சமையல் கலை நிபுணர் ரேவதி சண்முகம்

நன்றி:- அ.வி

மற்ற சமையல் படைப்புக்கள்

அட்டகாசமான சுவையில் 30 நாள்… 30 மசாலா குருமா! – ரேவதி சண்முகம்

30 நாள் 30 பொரியல் வாவ்! கலக்கல் வெரைட்டிங்க! – ரேவதி சண்முகம்.

30 வகை டயட் சமையல் வெரைட்டியா சாப்பிடலாம். வெயிட்டையும் குறைக்கலாம்.- கா.கதிரவன்

கோடையை குளிர்ச்சியாக்கும் ஜூஸ், ஸ்குவாஷ் மில்க் ஷேக்!-சமந்தகமணி

30 நாட்களுக்கும் தினம் ஒரு கலந்த சாதம் – சமையல் திலகம் ரேவதி சண்முகம்

PART-1 கிராமத்து கைமணம்! சோளச்சோறு சுக்கு மோர்க்குழம்பு கொள்ளு துவையல் – ரேவதி சண்முகம்

PART-2 கிராமத்து கைமணம்! நவதான்ய உருண்டை கம்புரொட்டி எள்ளுப்பொடி காராமணி கீரைத்தண்டு குழம்பு- ரேவதி சண்முகம்

PART-3 கிராமத்து கைமணம்! மாங்காய் பாசிப் பருப்பு பச்சடி பால் கொழுக்கட்டை காப்பரிசி – ரேவதி சண்முகம்

PART-4 கிராமத்து கைமணம்! முள் முருங்கை அடை, பாசிப்பருப்பு சீயம், சீம்பால் திரட்டு- ரேவதி சண்முகம்

PART-5 கிராமத்து கைமணம்! மரவள்ளிக் கிழங்கு புட்டு, தட்டைப் பயிறு அடை,கருப்பட்டி பணியாரம், உளுந்து பலகாரம் – ரேவதி சண்முகம்

பகுதி-06 கிராமத்து கைமணம்! பருப்பிட்ட பணியாரம், சர்க்கரைவள்ளிக் கிழங்கு சீயம், புழுங்கல் அரிசி கொழுக்கட்டை, பப்பாளிக்காய் வடை

பகுதி-07 கிராமத்து கைமணம் நவரத்தின குருமா, கருப்பட்டி ஆப்பம், ஜவ்வரிசி பொரி, நீர் கொழுக்கட்டை

மருதாணி அழகில் ஒரு ஆபத்து!


மருதாணி அழகில் ஒரு ஆபத்து!

இளம் பெண்கள் தங்கள் அழகை மேலும் மெருகூட்டிக் கொள்ள மருதாணி, டாட்டூஸ் வரைந்து கொள்வதை நவீன நாகரிகமாக கொண்டிருக்கிறார்கள். இப்படி மருதாணி வரைந்து கொள்வது லுக்கேமியா என்னும் ஒருவித புற்றுநோய்க்கு வழிவகுப்பதாக ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பல்கலைக்கழகம் இது தொடர்பான ஆய்வில் ஈடுபட்டது. அந்த நாட்டில் ஆண்களைவிட பெண்கள் இரு மடங்கில் ஏ.எம்.எல். (லுக்கேமியா) என்னும் ஒருவித ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வெளிநாட்டில் வசிக்கும் பெண்களைவிட இங்குள்ள பெண்கள் 63 சதவீதமும், இருபாலரும் 78 சதவீதம் அதிகமாக இந்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கு என்ன காரணம் என்று ஆராயப்பட்டதில் கைகளில் அழகிற்காக வரைந்து கொள்ளும் மருதாணி ஒரு வகையில் காரணமாக இருப்பது கண்டறியப்பட்டது. மருதாணியில் உள்ள ரசாயனங்கள் இந்த நோய் தாக்க வாய்ப்பாக அமைகிறது. மேலும் அவர்களின் உடலில் சூரிய ஒளி படுவது குறைவாக இருப்பதும் காரணம் என்று தெரிகிறது.

ஆய்வாளர் இனாம் ஹசன் கூறுகையில், `ஆண்களும், பெண்களும் ஒரே சூழலில் வசிக்கிறோம். ஒரேவித உணவையே உண்கிறோம். ஆனால் பெண்களுக்கு மட்டும் அதிக அளவில் ஏ.எம்.எல். பாதிப்பு ஏன் என்று புரிந்து கொள்ள முடியவில்லை. இங்குள்ள ஆண்களுக்கும், பெண்களுக்கும் உள்ள ஒரே வித்தியாசம் அவர்கள் மருதாணி வரைந்திருப்பது மட்டுமே’ என்றார்.

நன்றி:-தினத்தந்தி