தொகுப்பு

Posts Tagged ‘முஸ்லீம் உணவு பழக்கம்’

பணியாளர்களும் பாசமிகு நேசர்களே – மு.அ. அபுல் அமீன் நாகூர்


தொழில் புரட்சியால் தோன்றிய தொழிற்சாலைகளில் தொழிற்சாலை தோன்றிய பகுதிகளில் பிறரைத் தொழுதறியாது உழுது உண்டு உயர்வாய் வாழ்ந்த பழங்குடி மக்களை அடிமைகளாக ஆக்கி அல்லும் பகலும் அயராது ஓய்வின்றி தேய்ந்து மாயும்வரை வேலை செய்ய வைத்து கோலூன்றி கொழுத்த கோடீஸ்வர முதலாளிகளின் கொட்டத்தை அடக்க கொதித்து எழுந்து போராடி தொழிலாளர் உரிமை பெற உயிர் நீத்த உத்தம தொழிலாளர்களை நித்தமும் நினைவில் நிறுத்தி பெற்ற உரிமைகளை உலகமய ஏகபோக முதலாளிகள் பறித்திடாது காக்க தொழிலாளர்கள் உறுதி ஏற்கும் ஏற்புடைய நாளே மே முதல் நாளாம்

தொழிலாளர் நாள்.

ஜக்கரியா நபி ஒரு சுவரைக் கட்டி கொண்டு இருந்தார்கள். பகல் உணவு வந்தது. சாப்பிட்டு முடிக்கும் தறுவாயில் நபி அவர்களைப் பார்க்க சிலர் வந்தனர். வந்தவர்கள்

கேட்குமுன்னரே ஜக்கரியா நபி கூலி வேலை செய்வதாகவும் கூலிக்கு வந்த உணவை உண்டு முடித்ததால் பகிர்ந்து கொள்ள இயலாததையும் இயம்பினார்கள். உழைத்து உண்டு உழைத்து பிழைக்க வழி காட்டினார்கள் ஜக்கரியா நபி அவர்கள்.

கையிலிருந்த சாட்டை கை நழுவி கீழே விழுந்தால் அதைக் குனிந்து எடுப்பது கௌரவ குறைவு என்று எண்ணி இறுமாந்திருந்த அரபி நாட்டவரை உழைத்து உண்ணவைத்து உழைப்பின் பெருமையை உணர வைத்தார்கள் உத்தம நபி (ஸல்) அவர்கள். கூலிக்கு ஒருவரை அமர்ந்து அவரிடம் வேலை வாங்கிக் கொண்டு கூலி கொடுக்காமல் இருப்பவனுக்கு எதிராக கியாமத் நாளில் நான் வழக்குரைப்பேன் என்று அல்லாஹ் அறிவிப்பதாக அண்ணல் நபி (ஸல்) அவர்கள் எண்ணத்தில் பதித்ததைப் பகர்கிறார்

அபூஹுரைரா (ரலி) நூல்- புகாரி. உங்களில் ஒருவருடைய பணியாளர் வெப்பத்தையும் புகையையும் தாங்கிக்கொண்டு வந்த மா நபி (ஸல்) அவர்களின் மணிமொழியை அறிவிப்பவர் – அபூஹுரைரா (ரலி)நூல் – முஸ்ஸிம். அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தங்களின் கையால் எந்த பெண்ணையும் எந்த ஊழியரையும் அடித்தது இல்லை என்று

இயம்புகிறார் ஆயிஷா (ரலி) நூல்- முஸ்லிம்.

திருக்கையில் மாவரைப்பது வீட்டைக் கூட்டி பெருக்கி சுத்தப்படுத்துவது துணிகளைத் துவைப்பது தோல் பையில் நீர் கொணர்வது முதலிய வேலைகளை பாச நபி (ஸல்) அவர்களின் நேச மகள் பாத்திமா (ரலி) பணிப்பெண்ணுடன் பகிர்ந்து கொள்வார்கள். இப்படி பணி பெண்ணை மட்டும் வேலை வாங்காது அவர்களும் அதே வேலையை முறை வைத்து செய்வார்கள். தோல் பையின் கனத்தால் பாத்திமா (ரலி) அவர்களின் உடம்பில் தழும்பு ஏற்படும்.

பாத்திமா (ரலி) அவர்கள் கடைக்குச் சென்று சாமான்கள் வாங்கி வரும்பொழுது பணி பெண்ணுக்குத் தனியாக ஏதாவது வாங்கி வந்து கொடுப்பார்கள். பணிபெண்ணின் வேலையில் தவறு கண்டால் பணியாளைச் சுடுசொற்களால் கடுஞ்சொற்களால் கண்டிக்கவோ தண்டிக்கவோ மாட்டர்கள். வேலையை விளக்கிச் சொல்லி துலக்கமாய் செய்யத் தூண்டுவார்கள்.

கிழிந்த ஆடைகளைத் தைப்பது முதுமையான மாமியாருக்கு உதவி செய்வது தணியாத அன்புடன் கணவருக்குப் பணிவிடை புரிவது முதலிட வேலைகளைப் பாத்திமா (ரலி) அவர்கள் மட்டுமே செய்வார்கள். பாத்திமா (ரலி) அவர்கள் பணிப்பெண்ணிடம் ஒப்படைக்க மாட்டார்கள். அவர்களை நாடிவரும் பெண்களுக்குக் கல்வி கற்பிப்பார்கள். நீதி போதனை செய்வார்கள்.

அக்காலத்தில் அரபியாவில் பலர் எழுத்துத் தொழிலை விரும்பிச் செய்தார்கள். அப்துல் வஹ்ஹாப் வர்ராக் என்பவரைச் சந்தித்த இமாம் அஹ்மது பின் ஹன்பல், “” நீங்கள் என்ன செய்கிறீர்கள்?” என்று கேட்டார்கள். அப்துல் வஹ்ஹாப் வர்ராக் – எழுதிக் கொண்டிருக்கிறேன் பெரியோர்களின் பேருரைகளை எழுத்தோவியங்களை எடுத்து எழுதி நகல் எடுக்கிறேன். இது என் தொழில். அஹ்மத் பின் ஹன்பல் -தூய தொழில் தூய வருவாய். நான் தொழில் செய்ய நாடினால் இத்தொழிலையே மேற்கொள்வேன். “”

எடுத்து எழுதும் பொழுது நீங்கள் நடு நிலையில் நின்று உள்ளது உள்ளபடியே எழுத வேண்டும். கூட்டல் குறைத்தல் கூடாது. இந்த உள்ள உறுதியோடு எழுத வேண்டும்”.

இப்படித்தான் பணியாளரைப் பாராட்ட வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டு இந்த  உரையாடல்.

அப்பாசிய கலீபா மன்சூரின் அரசவையில் செவ்வனே செயலாற்றிய ஓர் ஊழியர் ஒட்டுபோட்ட சட்டை அணிந்து இருப்பதைக் கண்ட அரசர் நல்லாடை அணியாத

காரணத்தைக் கேட்டார். அந்த ஊழியரின் இறந்த தந்தை பாக்கி வைத்த கடனை அடைப்பதாகவும் தந்தையின் இரண்டாவது மனைவியான சிற்றன்னையையும்

சிற்றன்னையின் பிள்ளைகளைப் பராமரிப்பதிலும் ஊதியத்தின் பெரும்பகுதி செலவாகி விடுகிறது. அதனால் அந்த ஊழியர் சொந்தச் செலவைச் சுருக்கிக்கொள்வதை அறிந்த அரசர் அந்த ஊழியருக்கு ஆயிரம் பொற்காசுகளை வழங்கி உழைப்பிற்கு உயர்வான மதிப்பளித்தார்.

அலாவுத்தீனின் மகன் ஷம்ஸ் தப்ரேஸ் பெரிய அறிஞர். ரோமில் அவரிடம் பல அறிஞர்கள் சீடர்களாக இருந்து சீரான கல்வி கற்றனர். ஷம்ஸ் தப்ரேஸ் மாணவர்களிடம் எவ்வூதியமும் பெறவில்லை. அவர்கள் இடையணி தயாரித்து விற்று வாழ்ந்தார்கள்.

அல்லாஹ்வின் கட்டளைப்படி கருணை நபி (ஸல்) அவர்கள் காட்டிய வழியில் பணியாளர்களைப் பாசத்தோடு நேசித்து போஷித்து போற்றி தொழிலாளி உயர

உற்றுழி உதவுவோம். உலகம் உய்யும்.

 

நன்றி:- தினமணி 11/10/2013 வெள்ளிமணி

நன்றி:- மு.அ. அபுல் அமீன் நாகூர். அஞ்சலக அதிகாரி(ஓய்வு), செல்பேசி:-00919943469691

தலைவர்:- ‍பெற்றோர் ஆசிரியர் கழகம் நாகூர், கௌதிய்யா துவக்கப்பள்ளி நாகூர், கிராம கல்விக்குழு நாகப்பட்டினம்.

துணைதலைவர்:- மத்தியஅரசு ஓய்வூதியர் சங்கம் நாகப்பட்டினம்,  ஜாமியா மஸ்ஜித் செய்யது பள்ளி நாகூர்.

பொருளர்:- நாகூர் தமிழ் சங்கம் நாகூர்.

உறுப்பின‌ர்:‍‍‍‍‍‍- த‌மிழ்நாடு நுக‌ர்வோர் இய‌க்க‌ம்.

இவர்களின் படைப்புகளில் சில

பத்தில் பத்து

ஹிஜ்ரத்

சிட்டுக்குருவி – கூடிவாழ்ந்தால் கோடி நன்மை

மனித நேயம்

ஆஷூரா நாளில் ஆரம்பம்

புளிச்சேப்பக்காரர் விருந்து

சாலை விதிகள் போற்றுவோம்

வரவுக்கு வரம்பு

ஆண்டவன் நீதி

பசுமை தேநீர் Green Tea

தானத்தின் பொருள்

யார் யாருக்கு வழங்கலாம்?

இரக்கம் காட்டுகிறவன்!

நாமே வழங்குவோம்

இரக்கம்

நற்பலனைப் பெறுவோம்

அளப்பரிய அருள்

அவசியம் ஓத வேண்டும்

உணவு அரசியல்! – நியாண்டர் செல்வன்


புனிதமான தொழிலாக இருந்த மருத்துவத் துறை இன்று பன்னாட்டு நிறுவனங்களின் கைக்குள் இருக்கிறது. சுயநல சக்திகள் அறிவியலை வைத்து மக்களை ஆட்டிப்படைத்து வருகின்றன. நிறுவனங்களின் நிதியுதவியுடன் விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்வதால் இறுதியில் எது அறிவியல், எது அரசியல் என்று தெரியாமல் போய்விடுகிறது. உணவு அரசியல் இங்கிருந்துதான் தொடங்குகிறது.

 

நம் மருத்துவர்களை மட்டும் குறைகூற முடியாது. அமெரிக்க இதய அமைப்பு (American Heart Association) குறைந்த கொழுப்பு உணவைப் பரிந்துரைக்கிறது. அதற்குப் பதிலாக உயர்கொழுப்பு உணவை ஒரு மருத்துவர் பரிந்துரைத்தால் என்ன ஆகும்? தடுக்கி விழுந்தால் வழக்கு போடும் மனப்பான்மையுள்ள அமெரிக்க மக்கள், நாளை வேறொரு காரணத்தால் மாரடைப்பு வந்தாலும், மருத்துவர் மேல் வழக்கு போடுவார்கள், இல்லையா? அறிவியல் பின்புலன் இல்லாத நீதிபதிகள், நீங்கள் ஏன் அமெரிக்க இதய அமைப்பு பரிந்துரைத்த டயட்டை கொடுக்கவில்லை?’ எனக் கேட்டு கோடிக்கணக்கான டாலர் நஷ்ட ஈடு கொடுக்கச் சொல்லி தீர்ப்பளிப்பார்கள்.

பன்னாட்டு நிறுவனங்களும் அவர்களின் லாபியும் மருத்துவர்களை அணுகுவதை விட இதுபோன்ற அதிகாரபீடங்களை அணுகினாலே போதும் என்பதை எளிதில் உணர்ந்து விட்டன. இதற்குச் சில உதாரணங்களை காண்போம்.

அமெரிக்க அரசின் புள்ளி விவரத்தின்படி, 60% அமெரிக்கர்கள் அதிக எடையுடன் இருக்கிறார்கள். 25% அமெரிக்கர்கள் உடல் பருமனாக (Obesity) உள்ளார்கள். எனவே, இயல்பான எடையுடன் இருக்கும் அமெரிக்க மக்களின் சதவிகிதம் வெறும் 15% மட்டுமே!

மீதமுள்ள 85% பேரும் என்ன செய்வார்கள்? எடையைக் குறைக்க உடற்பயிற்சி நிலையங்களில் சேர்வார்கள், மருந்து, மாத்திரைகளை எடுத்துக்கொள்வார்கள், எடையைக் குறைக்கும் உணவுகளை (சீரியல்கள், புரோட்டீன் பார்கள்) நாடுவார்கள். நல்ல உடல்நிலையில் இருக்கும் பலரையும் கூடுதல் எடை, உடல் பருமன் என சொல்லியதால் ஏற்பட்ட விளைவு இது. இதன் அரசியல் மிகவும் மோசமானது.

 

உடல் பருமன், அதிக எடை என்பதைக் கணக்கிடும் பி.எம்.ஐ. (Body Mass Index, BMI) எனும் முறை 1830-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இதன்படி பி.எம்.ஐ. 25-க்கும் அதிகமாக இருந்தால் ஒருவர் அதிக எடை, 30 என்றால் உடல் பருமன் என்று கூறப்பட்டது. ஆனால் பி.எம்.ஐ. அளவீடே அடிப்படையில் அறிவியல் ஆதாரம் அற்றது. இந்த முறை ஜோசியத்தை அடிப்படையாகக் கொண்டது. ஆம், பி.எம்.ஐ. கணக்கீட்டு முறையை உருவாக்கிய க்விட்லட் (Adolphe Quetelet) என்பவர் ஒரு ஜோதிடர். கிரகங்களை வைத்து மனித எடையைக் கணிக்க முடியுமா என்று அறியவே பி.எம்.ஐ. கணக்கீட்டை உருவாக்கினார்.

 

BMI அளவை எப்படிக் கணக்கிடுவது?

பி.எம்.ஐ. = உடல் எடை / உயரம் (மீ.) * உயரம் (மீ.)

உங்கள் எடை 72 கிலோ. உயரம் 1.72 மீ. (172 செ.மீ)

எனில், உங்கள் பி.எம்.ஐ. = 24

பி.எம்.ஐ. அளவால் எவ்வித மருத்துவரீதியான பலனும் கிடையாது. பி.எம்.ஐ. சொல்கிறபடி சரியான எடையுடன் உள்ளவர் அதிக பி.எம்.ஐ. உள்ளவரை விடவும் அதிகநாள் உயிர்வாழ்வார் என்று எந்த ஓர் அறிவியல் ஆய்வும் கூறவில்லை. அறிவியல் கூறுவது என்னவென்றால், மிக ஒல்லியாக இருப்பவர்களும், மிக குண்டாக இருப்பவர்களும் அதிக அளவில் மரணமடைகிறார்கள் என்பதே. இதன்படி பி.எம்.ஐ. 35 என்கிற அளவை விட அதிகமாக உள்ளவர்களே அதிக அளவில் மரணம் அடைகிறார்கள். இவர்களின் எண்ணிக்கை மக்கள் தொகையில் 10% மட்டுமே.

 

அறிவியல் இப்படி இருக்கிறது. ஆனால் மருத்துவப் பரிந்துரைகளோ வேறு மாதிரி உள்ளது. பி.எம்.ஐ. 25-ஐ தாண்டினால் ஆபத்து, 30 என்றால் பேராபத்து என ஊடகங்களும், அரசு அமைப்புகளும் மக்களை அச்சம் கொள்ள வைக்கின்றன. முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ், அதிக எடை கொண்டவர் என்று நாம் கருத முடியுமா? ஆனால் பி.எம்.ஐ. அளவீடுகளின்படி அவர் அதிக எடை உடையவர்.

 

பி.எம்.ஐ.-க்கும் மரணத்துக்கும் உள்ள தொடர்பை ஆராய்ந்த ஆய்வுகள், எவ்வித தெளிவான முடிவையும் அளிக்கவில்லை. 2004-ல் ஜாமா (JAMA) எனும் மருத்துவ ஆய்விதழில் வெளியான ஆய்வு, உடல் பருமனும், உடற்பயிற்சியின்மையும் ஆண்டுக்கு 4 லட்சம் மரணங்களை ஏற்படுத்துவதாக கூறி அனைவரையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியது. ஆனால் அந்த ஆய்வு முடிவுகளை வெளியுலகில் கிடைக்கும் புள்ளிவிவரங்களுடன் ஒப்பிட்டபோது நிலைமை தலைகீழாக இருந்தது.

 

உதாரணமாக ஒவ்வொரு ஆண்டும் சுமார் 20 லட்சம் அமெரிக்க மக்கள் மரணமடைகிறார்கள் (2010- 2011 வருடப் புள்ளிவிவரம்). இதில் 75% பேர் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள். இந்த 75% பேரில் அதிக எடை மற்றும் உடல் பருமன் (பி.எம்.ஐ. 25-க்கு மேல்) என்று கூறப்படுபவர்கள் இயல்பான எடை என்று சொல்லக்கூடிய பி.எம்.ஐ. அளவு 25-க்குக் கீழ் இருப்பவர்களை விட அதிக ஆண்டு உயிர் வாழ்ந்துள்ளார்கள்.

 

இவர்களைக் கழித்துவிட்டுப் பார்த்தால் சுமார் 6 லட்சம் மரணங்கள் ஆண்டுதோறும் அமெரிக்காவில் நிகழ்கின்றன. இந்த 6 லட்சம் மரணங்களில் அதிக அளவிலான மரணங்களுக்கு முக்கிய காரணங்களாக இருப்பவை – விபத்து மற்றும் புற்றுநோய். மூன்றாம், நான்காம் இடங்களில் தான் மாரடைப்பு, சர்க்கரை நோய் போன்றவை வருகின்றன. ஆக, இந்த 6 லட்சம் மரணங்களில் 4 லட்சம் மரணங்களுக்கு காரணம் உடல் பருமன் எனக் கூறுவது எப்படி என விவரமறிந்த விஞ்ஞானிகள் கேள்விகளை எழுப்பினாலும் ஊடகங்கள் அவற்றைக் கண்டுகொள்ளவில்லை. உடல் பருமனைக் கட்டுப்படுத்தினால் ஆண்டுக்கு 4 லட்சம் மரணங்களைத் தடுக்கலாம் எனப் பிரசாரம் செய்யப்பட்டது.

 

இதன்பின் நடந்ததுதான் காமெடி. இந்தச் செய்தியின் பரபரப்பு எல்லாம் அடங்கி ஒரு சில ஆண்டுகள் கழித்து சாவகாசமாக ‘4 லட்சம் என்பது தவறு. 2 லட்சமாக இருக்கலாம். அதையும் கூடத் தோராயமாகத்தான் சொல்ல முடியும்’ என ஒரு திருத்தத்தை தம் வலைத்தளத்தில், யார் கண்ணுக்கும் தென்படாத ஒரு பகுதியில் பதிப்பித்துவிட்டு இந்த ஆய்வை செய்த சி.டி.சி (center for disease control) எனும் அமைப்பு தன் பொறுப்பிலிருந்து நழுவிக்கொண்டது.

 

இது அனைத்துக்கும் சிகரம் வைத்தாற்போல 1990-களில் ஒரு சம்பவம் நிகழ்ந்தது. 1985-ல் அமெரிக்கச் சுகாதார மையம், பி.எம்.ஐ. அளவு 27.8 இருந்தால் ஒருவர் அதிக எடை கொண்டவர் எனக் கருதலாம் என நிர்ணயித்தது. இதன்படி ஐந்தடி ஏழு அங்குலம் (168 செ.மீ.) உயரம் உள்ள ஒருவர் 77 கிலோ எடை இருந்தால் அவர் இயல்பான எடை என்னும் வகையைச் சேர்ந்தவராகக் கருதப்படுவார். ஆனால் 1990-களில் திடீரென இதில் மாற்றம் கொண்டுவரப்பட்டது. பி.எம்.ஐ. 25-க்கு கீழே இருந்தால்தான் இயல்பான எடை என்று அறிவிக்கப்பட்டது. இதனால் ஒரே நாளில் சுமார் 3.7 கோடி அமெரிக்கர்கள் அதிக எடை கொண்டவர்கள் ஆனார்கள். அதாவது, இரவில் 77 கிலோ எடையுடன், பி.எம். ஐ அட்டவணைப்படி இயல்பான எடையுடன் உறங்கச் சென்றவர், அடுத்தநாள் காலையில் அதே 77 கிலோ எடையில் பி.எம்.ஐ. அட்டவணைப்படி அதிக எடை கொண்டவராக மாறினார்! (பழைய பி.எம்.ஐ. முறைப்படி 168 செ.மீ. உயரம் உள்ள ஒருவர் 77 கிலோ வரை எடை இருந்தால் எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால் புதிய முறைப்படி அவரது எடை 69 கிலோவுக்குள் இருக்கவேண்டும்.)

 tablet

ஸ்டாடின்

இதனால் உண்டான விளைவுகள்? பி.எம்.ஐ. அட்டவணைப்படி அதிக எடை என்று முத்திரை குத்தப்பட்டவர்களை மருத்துவர்கள் உடற்பயிற்சி செய்யவும், உணவுக்கட்டுப்பாட்டில் இருக்கவும் பரிந்துரை செய்தார்கள். நோயாளிக்கு கொலஸ்டிரால் இருந்தால், கொலஸ்டிரால் மருந்தான ஸ்டாடின் பரிந்துரைக்கப்பட்டது. இதனால் அமெரிக்கர்களின் இன்சூரன்ஸ் கட்டணங்கள் உயர்ந்தன.

 

எதனால் இந்த பி.எம்.ஐ. அளவு குறைக்கப்பட்டது? இதுபோன்ற முடிவுகளை எடுப்பவர்கள் – அரசு அதிகாரிகளும், அரசியல்வாதிகளுமே. இவர்கள் அனைவரும் தங்களுடைய தேர்தல் நிதிக்கு மருந்து நிறுவனங்களையும் பிற உணவு நிறுவனங்களையுமே மிகவும் நம்பியிருக்கிறார்கள். மேலும் பி.எம்.ஐ. பரிந்துரைகளைச் செய்யும் மருத்துவ அமைப்புகள் பலவும் அந்த நிறுவனங்களிடம் நன்கொடை பெறுபவை. இவற்றில் பணிபுரியும் விஞ்ஞானிகள் பலரும் அந்த நிறுவனங்களிடம் நிதி பெற்று ஆராய்ச்சி செய்பவர்கள். அரசியல்வாதிகள் ‘விஞ்ஞானிகளே சொல்லிவிட்டார்கள்’ எனச் சொல்லி இதுபோன்ற முடிவுகளைச் சட்டமாக்கி விடுவார்கள். இது மருத்துவப் பாடப் புத்தகங்களிலும் இடம்பெறும். மருத்துவக் கல்லூரியில் ‘பி.எம்.ஐ. 25-க்கு கீழே இருந்தால் தான் இயல்பான எடை’ என்கிற பாடமே கற்றுத் தரப்படும். இத்தனை நெருக்கடிகளுக்கு மத்தியில் அதிக எடை என்று முத்திரை குத்தப்பட்டவர் என்ன செய்வார்? நைக்கி ஷூவும், கெல்லாக்ஸ் சீரியலும், காடரேடும் வாங்குவார் (காடரேட் (Gatorade) என்பது நடைப்பயிற்சி, ஓட்டப்பந்தயம், ஜாக்கிங் மேற்கொள்ளும்போது பருகும் பானம். இந்தியாவிலும் விற்பனைக்கு உள்ளது. அமெரிக்காவில் இது இல்லாமல் யாரும் ஜாக்கிங் செல்ல மாட்டார்கள். http://www.gatorade.co.in/). பிறகு, வெயிட் வாட்சர்ஸ் (weight watchers) நிறுவனத்தின் எடைக்குறைப்புத் திட்டத்திலும் பணம் கட்டுவார்.

அதிகமோ, குறைவோ, எடைக்குறைப்பு நல்லதுதானே? அதனால் ஏதோ சில விஷயங்களை மிகைப்படுத்திச் சொன்னால்தான் என்னவாம் என்று கேட்கலாம்.

உடல் பருமனை மரணத்துக்குக் காரணமாக காட்டி மிகைப்படுத்துவதால் மக்கள் உடல்நலனை விட்டுவிட்டு வெயிட் வாட்சர்ஸ் போன்ற நிறுவனங்களில் பணம் கட்டி உடலை இளைக்க வைக்க மெனக்கெடுகிறார்கள். இந்தியாவிலும் இதுபோன்று உடலை இளைக்க வைக்க எத்தனை பேர் பணத்தையும் நேரத்தையும் இஷ்டத்துக்குச் செலவு செய்கிறார்கள்? ஒரு போலியான பயத்தை உண்டு பண்ணி எதற்காக அதைவைத்து நம் பணத்தையும் நேரத்தையும் பறிக்கவேண்டும்?

இதனால் சீரியல், ஓட்மீல் மாதிரியான உணவுகள் அதிகம் விற்பனையாகின்றன. எந்த வியாதியும் இல்லாமல், ஆனால் உடல் பருமனுடன் இருக்கும் சிலர் மருத்துவமனைக்குச் சென்று உடல் பருமனைக் குறைக்க அறுவைசிகிச்சையும் செய்து கொள்கிறார்கள். இன்சூரன்ஸ் நிறுவனங்கள் உடல் பருமனாக இருப்பவர்களிடம் அதிகச் சந்தா தொகையை வசூலிக்கின்றன. மெக்டானல்ட்ஸ், கோகோ கோலா போன்ற நிறுவனங்களும் இதைப் பயன்படுத்தி ‘மாட்டிறைச்சி பர்கருக்குப் பதில் சிக்கன் பர்கரைச் சாப்பிடுங்கள், வழக்கமான கோக் வேண்டாம், கலோரி இல்லாத கோக்கைக் குடியுங்கள்’ என்று விளம்பரம் செய்து ஆரோக்கிய உணவு என்கிற பெயரில் குப்பை உணவுகளை விற்கின்றன. உடல் எடையைக் குறைக்கும் மருந்துகள் பல்லாயிரம் கோடி டாலர்களைச் சந்தையில் ஈட்டுகின்றன. அமெரிக்காவில் இடி இடித்தால் இந்தியாவில் மழை வரும் எனும் கதையாக அங்கே நடக்கும் இந்தக் கூத்துக்கள் அனைத்தும் இந்தியாவிலும் நடக்கின்றன. உலகெங்கும் இந்த உடல் பருமன் வணிகம் களைகட்டுகிறது.

ஒருபக்கம் உடல் பருமனை உருவாக்கும் குப்பை உணவுகளை பன்னாட்டு நிறுவனங்கள் கூவிக்கூவி விற்கின்றன. இதனால் உலகெங்கிலும் உள்ள மக்கள் தங்கள் பாரம்பரிய உணவுகளை விட்டுவிட்டு பன்னாட்டு உணவுகளுக்கு மாறுகிறார்கள். மறுபக்கம் இந்த உணவுகளால் ஏற்படும் உடல் பருமனைக் குறைக்க அதே பன்னாட்டு நிறுவனங்கள் ‘டயட் கோக் (Diet Coke), சப்வே சாண்ட்விச் (Subway Sandwich)’ போன்ற அதே குப்பை உணவுகளின் மறுவடிவங்களையும் விற்பனை செய்கின்றன. ஒரு நிறுவனத்தின் உணவுகளைக் கெடுதல் என்று அறிகிற மக்கள், அதேபோன்ற குப்பை உணவுகளை விற்கும் இன்னொரு நிறுவனத்தை நம்பி ஆரோக்கியம் என்கிற பெயரில் பணத்தை வீண் செய்கிறார்கள். இப்படிக் குப்பை உணவுகளால் வியாதிகள் வந்தபின் அவற்றைக் குணப்படுத்த மருந்துகளை நாடுகிறார்கள்.

இந்தச் சூழலில், கற்பனையான வியாதிகளை புதிதாக உருவாக்கி கல்லா கட்டும் விந்தையை என்னவென்று நொந்துகொள்வது?

இப்படிக் கற்பனையாக கண்டுபிடிக்கபட்ட வியாதிகளில் ஒன்று உயர் கொலஸ்டிரால் என்பது. கொலஸ்டிரால் அளவு 200-ஐ தாண்டினால் ஆபத்து, மாரடைப்பு வரும் எனப் பீதியூட்டப்படுவதால் பலரும் அச்சமடைந்து கொலஸ்டிரால் கட்டுப்பாட்டு மருந்துகளை (ஸ்டாடின்) எடுத்துக்கொள்கிறார்கள்.

ஸ்டாடின்கள், பல மருந்து நிறுவனங்களின் கற்பக விருட்சம். இவை கொலஸ்டிரால் அளவைக் குறைக்குமே ஒழிய மரணத்தைத் தடுக்காது. மேலும் இவற்றின் பின்விளைவுகள் ஏராளம். இந்திய ஜனத்தொகையில் சுமார் 8% பேர் ஸ்டாடின்களை உட்கொண்டுவருவதாக ஆய்வுகள் கூறுகின்றன. இது குறித்து நிகழ்த்தப்பட்ட ஆய்வு ஒன்று ‘8% இந்தியர்கள் மட்டுமே ஸ்டாடினை உட்கொள்கிறார்கள். இந்த எண்ணிக்கை அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்’ எனக் கூறுகிறது. (இணைப்பு: http://www.ncbi.nlm.nih.gov/pubmed/24493771)

ஆனால் Open Journal of Endocrine and Metabolic Diseases எனும் அறிவியல் ஆய்விதழில் கட்டுரை எழுதிய மருத்துவப் பேராசிரியர்களான சுல்தான் மற்றும் ஹைம்ஸ் ஆகியோர் ஸ்டாடின்களைக் குறித்து கீழ்க்கண்டவாறு எழுதுகிறார்கள்:

ஸ்டாடின் விற்பனை சுமார் 200 கோடி டாலர் (சுமார் 12,000 கோடி ரூபாய்). மருத்துவ வரலாற்றில் மிகப்பெரிய கறை, ஸ்டாடின்களே. கோடிக்கணக்கான எண்ணிக்கையில் உள்ள ஆரோக்கியமான மனிதர்களை நோயாளிகளாக்கி, ஊட்டச்சத்துப் பற்றாக்குறையை ஸ்டாடின் மூலம் ஏற்படுத்தியது பன்னாட்டு மருந்து நிறுவனங்களே.

நாம் (மருத்துவர்கள்) மருந்து நிறுவனங்களின் பொய்களில் மயங்கி ஸ்டாடின்களின் பின்விளைவுகளைச் சரியாக ஆராயாமல் விட்டுவிட்டோம்.

ஸ்டாடின்களால் நன்மையடைபவர்கள் யார் என்றால், ஏற்கெனவே மாரடைப்பு வந்த நடுத்தர வயது ஆண்கள்தான். வேறு யாருக்கும் ஸ்டாடினால் நன்மை கிடையாது. ஆனால், மாரடைப்பு வந்த நடுத்தர வயது ஆண்களுக்குக்கூட ஸ்டாடின் அளிக்கும் நன்மை என்பது தினம் ஆஸ்பிரின் சாப்பிடுவதை விட குறைவான அளவு நன்மைதான்!

ஸ்டாடின் உட்கொள்பவர்களில் 10,000 பேரில்…

* 307 பேருக்கு கண்புறை (cataract) வரும். ஸ்டாடின் பயன்படுத்துபவர்களுக்கு கண்புறை வரும் வாய்ப்பு 50% அதிகம்.

* 23 பேருக்கு சிறுநீரகம் பழுதடையும்.

* 40 பேருக்குச் சரிசெய்யவே முடியாத அளவு ஈரல் பழுதடையும்.

* பெண்களுக்கு அதிக அளவில் சர்க்கரை வியாதி வர காரணமாக ஸ்டாடின் அமையும்.

* வயதான பெண்கள் ஸ்டாடின் உட்கொண்டால் சர்க்கரை வியாதி வருவதற்கான சாத்தியக்கூறு 9% அதிகம்.

* பார்கின்சன் வியாதி வரும் வாய்ப்பும் ஸ்டாடினால் உண்டு.

* இதயத்தில் உள்ள சுவர்களில் சுண்ணாம்பு (calcium) படிய ஸ்டாடின்கள் காரணமாக உள்ளன. இது மாரடைப்பு வரும் வாய்ப்பை அதிகரிக்கிறது.

இந்த விளைவுகளால் ஸ்டாடின்கள் கொலஸ்டிராலைக் குறைக்கும் மருந்தே தவிர, இதய அடைப்பைத் தடுப்பதில் அவை துளியும் பயனற்றவை என்கிறது இந்த ஆய்வு.

மருந்து நிறுவனங்கள் உருவாக்கிய அடுத்தக் கற்பனை வியாதி – மன அழுத்தம். உலகில் மன அழுத்தம் அனைவருக்கும் வருவதுண்டு. ஆனால், இதையே ஒரு வணிகமாக்கி கோடிகளில் சம்பாதிக்கின்றன நிறுவனங்கள். மன அழுத்தத்தைக் குறைக்கும் மாத்திரைகளின் விற்பனை, உலக மருந்து விற்பனையில் முதல் பத்து இடங்களில் உள்ளது. ஏதோ தாங்க இயலாத சோகத்தைப் போக்க இந்த மருந்துகள் பரிந்துரைக்கப்படுகின்றன என்று மட்டும் எண்ணவேண்டாம். சோகத்துக்கு மட்டுமல்ல, மாதவிலக்கு சமயங்களில் உண்டாகும் எரிச்சல், விவாகரத்து, பணிச்சுமையால் உண்டாகும் மன அழுத்தம் போன்றவற்றுக்கும் இந்த மருந்துகள் பரிந்துரை செய்யப்படுகின்றன.

சோகமோ, மன அழுத்தமோ ஏற்பட்டால் முன்பு நண்பர்கள், குடும்பம், தியானம், கோயில் என்று பலவழிகளில் அதைச் சரிசெய்யமுடியும். ஆனால், இன்று எல்லாவற்றுக்கும் மருந்தே தீர்வாக எடுத்துச் சொல்லப்படுகிறது. இதற்கு ஏராளமான பின்விளைவுகள் உண்டு.

உடல் பருமன், மன அழுத்தம் போன்றவற்றையெல்லாம் தூக்கிச் சாப்பிடும் இன்னொரு பிரச்னை, பாலியல் சார்ந்த பிரச்னைகள். ஆண்குறி எழுச்சியின்மை (erectile dysfunction) வியாதியும் மருந்து நிறுவனங்களின் கற்பக விருட்சம். வயகராவின் கதையையும் அதன் விற்பனை குறித்தும் நாம் அறிவோம். இந்த வியாதியாவது 40, 50 வயதில் ஆண்களுக்கு வரக்கூடிய ஒரு பிரச்னை. ஆனால் மானுட வரலாற்றில் இல்லாத புதுமையாக, பெண் பாலியல் ஆர்வமின்மை (female sexual dysfunction) எனும் வியாதியைக் கண்டுபிடித்துள்ளன மருந்து நிறுவனங்கள்.

பெண்களுக்குப் பொதுவாக கர்ப்பம், வயது முதிர்தல், மன அழுத்தம், பணிச்சுமை, ஹார்மோன் சமநிலை தவறுதல் போன்ற காரணங்களால் பாலியலில் ஈடுபாடு இல்லாமல் போக வாய்ப்புண்டு. இதைப் பயன்படுத்தி சந்தையில் இதற்கும் மாத்திரைகள் வந்துவிட்டன. மூன்றில் ஒரு பெண் இவ்வியாதியால் பாதிக்கப்படுவதாக மருந்து நிறுவனங்களால் நடத்தப்படும் ஆய்வுகள் கூறுகின்றன.

பொதுவாக மனிதனைத் தவிர பிற உயிரினங்கள் ஆண்டு முழுக்க உறவு கொள்ளாமல் சில மாதங்களே உறவில் ஈடுபடும். மனிதனால் ஆண்டு முழுவதும் உறவுகொள்ள முடியும் என்றாலும் இயற்கையாகச் சிலசமயம் அவனது பாலியல் உணர்வுகள் தூண்டப்பட்டும், சில சமயம் குறைந்தும் காணப்படும். 45 வயதுக்கு பிறகு ஆண்களின் டெஸ்டெஸ்ட்ரோன் (testosterone) ஹார்மோன் சுரப்பு குறைவதால் ஆண்குறி எழுச்சியின்மை, பாலியல் ஈடுபாடு குறைதல் போன்றவை ஏற்படுவது வழக்கம். ஆனால் எந்த வயதிலும், எந்தச் சமயத்திலும் விருப்பம் உண்டாகும்போது உறவுகொள்ள முடியாவிட்டால் அது நிச்சயம் வியாதிதான் என்கிற கண்ணோட்டம் இந்த நிறுவனங்களால் பரப்பப்பட்டுவிட்டது. மக்களும் அதற்காக மாத்திரைகளை வாங்கி உட்கொள்ளத் தொடங்கிவிட்டார்கள். தமிழ்நாட்டின் பத்திரிகைகளில்தான் இதுதொடர்பாக எத்தனை விளம்பரங்கள்!

உணவு, மருத்துவம், ஆரோக்கியம், உடற்பயிற்சி என அனைத்துமே பன்னாட்டு நிறுவனங்களின் கட்டுப்பாட்டுக்கு வந்துவிட்ட காலகட்டம் இது. எதை நம்புவது, யாரை நம்புவது என மக்கள் கடும் குழப்பத்தில் உள்ளதால்தான் மாயவலைகளில் சிக்கிகொண்டு பல லட்சம் ரூபாய்களை இழக்கிறார்கள். பேலியோ டயட்டை முன்னிறுத்தும் ஆரோக்கியம் & நல்வாழ்வுக் குழுவில் இதுபோல எடையைக் குறைக்க பன்னாட்டு நிறுவனத்திடம் ஒரு நண்பர் ரூ. 3 லட்சம் கட்டி ஏமாந்த கதை தெரியவந்து அனைவரும் அதிர்ச்சி அடைந்தோம். அந்த நிறுவனம், காலை உணவாக ஒரு புரோட்டீன் பவுடரைக் கொடுத்துள்ளது. அதை நீரில் கரைத்துக் குடிக்கவேண்டும். புரோட்டீன் உணவு எடுத்துக்கொண்டபோது எடை 10 கிலோ இறங்கியது. ஆனால் அதை நிறுத்தினால் மீண்டும் எடை ஏறியது. ஆயுளுக்கும் அந்த புரோட்டீன் பவுடரையே எடுத்துக்கொண்டு எத்தனை லட்சம் செலவு செய்வது என்று யோசித்து அதிலிருந்து விலகினார் நண்பர். பிறகு பேலியோ டயட்டைப் பின்பற்றி இப்போது நல்ல உடல்நலத்துடன் உள்ளார். அதுபோன்ற நிறுவனங்களின் கைப்பிடிக்குள் சிக்கிக்கொண்டு ஏமாறுபவர்களை நினைத்தால் மிகவும் வருத்தமாக உள்ளது

நன்றி:- நியாண்டர் செல்வன்

நன்றி:-

Din-logo-main

சுவர்க்கத்தின் வாரிசுகள் – மு.அ. அபுல்அமீன் நாகூர்


அந்த விசுவாசிகள் நிச்சயமாக வெற்றி பெற்றுவிட்டனர்” என்று திருக்குர்ஆனின் 23-1வது வசனம் கூறும் உறுதியான வெற்றி பெற்ற அந்த விசுவாசிகள் யார்?

இக்கேள்விக்குரிய விடையை அடுத்து வரும் வசனங்கள் விளக்குகின்றன. “”எவர்கள் தங்களுடைய தொழுகையில் உள்ளச்சம் உடையவர்களாக இருக்கின்றார்களோ அவர்கள் (23-2)”

தொழுகையை வழக்கமான நிகழ்வாக தொழுதோம் என்று தொழாமல் அல்லாஹ் பார்த்துக்கொண்டிருக்கிறான், என்ற உள்ளுணர்வோடு தொழுபவர்.

“எவர்கள் தங்கள் தொழுகையை (விடாமல்) பேணிக் கொள்கிறார்களோ அவர்கள் (23-9)”

தொழுகைக்குரிய நேரத்தில் தவறாமல் தாமதிக்காமல் முறையோடு தொழுபவர்கள்.

“எவர்கள் வீணானவற்றை புறக்கணிக்கிறார்களோ அவர்கள்(23-3)”

எதற்கும் உதவாத வீண் பேச்சு பயனற்ற செயல்களைச் செய்து வீண் பொழுது போக்காமல் ஆக்கபூர்வமான வழிகளில் ஊக்கமுடன் செயல்படுபவர்கள்.

“‘எவர்கள் ஜகாத்தை நிறைவேற்றுகிறார்களோ அவர்கள்(23-4)”

கடமையாக்கப்பட்ட ஏழை வரியாம் ஜகாத்தை கணக்கிட்டுக் கொடுத்து இணக்கமான சமுதாய சமத்துவத்திற்கு வழி வகுப்பவர்கள்.

“எவர்கள் தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக் கொள்கிறார்களோ அவர்கள் (23-5)” இழுக்குண்டாக்கும் இழி செயல்களைச் செய்யாது ஒழுக்கம் பேணி உடலின் எந்த அங்கமும் பங்கப்படும் பாவ  காரியங்களில் பங்கு கொள்ளாது காத்துக் கொள்பவர்கள். கண்களால் தீயதைப் பார்ப்பது காதுகளால் தீயதைக் கேட்பது, பிற உறுப்புகளைத் தீயதைத் தீண்டாது பாதுகாப்பவர்கள்.

23-6வது வசனப்படி மனைவியோடு இல்லறத்தை நல்லறமாக்கி வாழ்பவர்கள்.

23-7வது வசனப்படி இல்லறத்திற்குப் புறம்பானதைத் தேடி வரம்பு மீறாதவர்கள்.

“எவர்கள் தங்களின் அமானிதங்களையும் உறுதி மொழிகளையும் பேணுகிறார்களோ அவர்கள் (23-8)’. பிறர் அவரிடம் ஒப்படைக்கும் பொருட்களைப் பொறுப்புடன் பாதுகாத்துக் கொடுத்தவர்,  கேட்கும்பொழுது கொடுத்தபடி திரும்பக் கொடுப்பவர். ஒருவரிடம் வாக்குறுதி செய்ததை உண்மையாக, உறுதியாக நிறைவேற்றுபவர்கள். அவ்வாறே அல்லாஹ்விற்கு இணை வைக்காது வணங்கும்  ஈமானின் ஒப்பந்தத்தை தவறாது நடைமுறைப்படுத்துபவர்கள்.

“அவர்கள்தான் சுவர்க்கத்தின் வாரிசுதாரர்கள்

(23-10)”

முன்னர் கூறப்பட்டவற்றை முறையாக செய்தவர்கள் சுவர்க்கத்திற்கு சொந்தக்காரர்கள் என்று உறுதியளிப்பதோடு “”அவர்கள் பிர்தவ்ஸ் என்னும் சுவர்க்கத்தை சொந்தமாக்கிக்கொண்டு அதில் நிரந்தரமாக  இருப்பார்கள்” என்று 23-11வது வசனம் அவர்கள் அங்கே நிரந்தரமாய் நிலைத்திருப்பதை நிச்சயப்படுத்துகிறது. மேலும் “‘எவருடைய (நன்மைகளில்) எடைகள் கனமாக இருக்கின்றனவோ அவர்கள் தாம்  வெற்றி பெற்றவர்கள் (23-102)” என்று உலகில் வாழும் காலத்தில் நன்மையைச் செய்தவர்களே அவ்வாறு வெற்றி பெற்றவர்கள் என்று மீண்டும் நன்மை செய்யும் நற்பலனைப் போதிக்கிறது.

‘எனக்கு பத்து ஆபத்துகள் அருளப்பட்டன. அவற்றின்படி நடப்பவர் சுவர்க்கம் புகுவார்” என்று எம்பெருமானார் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் கூறி மேற்குறிப்பிட்ட பத்து ஆயத்துகளை ஓதிக் காட்டியதை  இரண்டாம் கலீபா உமர்(ரலி) அவர்கள் எடுத்துரைத்து எல்லோரும் ஏற்று நடக்க அறிவுறுத்தினார்கள்.

நாமும் இவ்வாயத்துகளில் வரையறுக்கப்பட்ட வழிமுறைகளைப் பேணி இறையருளைப் பெறுவோம்.

நன்றி:- தினமணி 24 OCT 2013 வெள்ளிமணி

நன்றி:- மு.அ. அபுல் அமீன் நாகூர். அஞ்சலக அதிகாரி(ஓய்வு), செல்பேசி:-00919943469691

தலைவர்:- ‍பெற்றோர் ஆசிரியர் கழகம் நாகூர், கௌதிய்யா துவக்கப்பள்ளி நாகூர், கிராம கல்விக்குழு நாகப்பட்டினம்.

துணைதலைவர்:- மத்தியஅரசு ஓய்வூதியர் சங்கம் நாகப்பட்டினம்.

பொருளர்:- நாகூர் தமிழ் சங்கம் நாகூர்.

உறுப்பின‌ர்:‍‍‍‍‍‍- த‌மிழ்நாடு நுக‌ர்வோர் இய‌க்க‌ம்.

கலீபாவும் கஜானாவும் – மு.அ. அபுல்அமீன் நாகூர்

நவம்பர் 6, 2013 1 மறுமொழி

கலீபா உமர்(ரலி) அவர்கள் ஆரம்பத்தில் ஊதிய மின்றி கலீபா உத்யோகம் பார்த்தார்கள். கலீபா பணிச்சுமை, வருவாய் தேடும் வாய்ப்பைக் குறைத்த பொழுது குடும்ப செலவிற்கு ஒருநாளைக்கு இரண்டு  திர்ஹங்கள் பெற்றார்கள்.

சலிக்காத மாவில் ஜைத்தூண் எண்ணெயில் சுட்ட சாதாரண ரொட்டியே அவர்களின் குடும்ப உணவு. கலீபாவை காண வருவோர் அவ்வுணவை சாப்பிட சிரமப்படுவர். ஒருமுறை கலீபா உமர்(ரலி) அவர்கள்  உணவு உண்ணும் பொழுது அஜர்பைஜானின் ஆளுனர் ஹழ்ரத் உத்பா இப்னு பர்கத் (ரலி) அவர்கள் கலீபாவை காண வந்தார். கலீபா, ஆளுநருடன் உணவைப் பகிர்ந்துகொண்டார். ஒரு கவளம் வாயிலிட்ட  ஆளுநர் அல்லல்பட்டு அதோடு உண்பதை நிறுத்தினார். கலீபா காரணம் கேட்டவுடன் “”சலிக்காத மாவை ஜைத்தூண் எண்ணெயில் சுட்டு எப்படி சாப்பிட முடிகிறது? மாவைச் சலித்து மணமுள்ள  எண்ணெயில் சமைத்து சாப்பிடக் கூடாதா?” என்று வினவினார்.

“”சலித்த மாவையும் தரமான எண்ணெயையும் எல்லா மக்களும் உண்ணும்பொழுது நானும் உண்ணலாம். அந்நிலை வரும் வரை ஏழைகள் எதை உண்கிறார்களோ அதையே நானும் உண்பேன்.  மறுமையின் அச்சம் இல்லாது இருந்தால் என் வீட்டில் உயர்ந்த உணவுகளை சமைப்பேன்”

கலீபாவின் பதிலைக் கேட்டு ஆளுநரின் கண்கள் கலங்கின. உமர்(ரலி) அவர்கள் கலீபா ஆன பிறகு சலித்த மாவில் ரொட்டி தயாரித்து உண்டதே இல்லை என்று உரைக்கிறார் ஹழ்ரத் யஸôர் இப்னு  நுமைர்(ரலி) அவர்கள்.

அஜர்பைஜான் திரும்பிய ஆளுநர் கலீபாவிற்கு அன்பளிப்பு அனுப்பினார். பொதுநிதி பைத்துல்மாலுக்குப் பொருள் வந்திருப்பதாக பிரித்த கலீபா அதில் அஜர்பைஜானில் தயாரிக்கப்படும் நெய்யுடன் கலந்த  பேரீத்தங்கனி பாத்திரங்களில் இருப்பதைக் கண்டார். ஒன்றை எடுத்து வாயிலிட்ட கலீபா அதன் சுவை மிகுதியை உணர்ந்து, “”அஜர்பைஜானின் அத்தனை மக்களும் அதை சாப்பிடுகிறார்களா?” என்று  கேட்டார். இல்லை என்ற பதில் வந்ததும் பொருள் கொண்டு வந்தவர்களைத் திரும்ப எடுத்துச் செல்ல பணித்தார். கலீபாவின் கடுமையான எச்சரிக்கை கடிதம் ஆளுநருக்கு அனுப்பப்பட்டது.

“”நெய்யில் பொரித்த பேரீத்தங்கனி உங்களுடைய சொந்த உழைப்பால் உங்களுக்குக் கிடைத்ததா? உங்களின் பெற்றோர் விட்டுச் சென்று உங்களுக்குக் கிடைத்த உடமைகளிலிருந்து நீங்கள் பெற்றதா?  அப்படியாயின் அதை நீங்கள் உண்ணலாம். இல்லையேல் எல்லா மக்களுக்கும் எளிதில் கிடைக்கும் எளிய உணவையே நீங்கள் உண்ண வேண்டும் என்று எச்சரிக்கப்படுகிறது”.

மகன் ஹழ்ரத் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் உயர்ந்த குதிரை ஒன்றை விற்பனை செய்வதைப் பார்த்த கலீபா உமர்(ரலி) அவர்கள் அக்குதிரையை வாங்கியது, வளர்த்தது பற்றி விசாரித்தார்கள்.  அப்துல்லாஹ்(ரலி) அவர்களின் சொந்தப் பணத்தில் வாங்கப்பட்ட அந்தக் குதிரை அரசு நிலத்தில் மேய்ந்தது என்றறிந்து, அரசு உணவைத் தின்ற அக்குதிரை அரசுக்குச் சொந்தம் என்று கூறி குதிரையை  அரசிடம் ஒப்படைக்கச் செய்தார்.

கஜானாவில் உள்ள பொது நிதி பொது மக்களுடையதே. ஆளும் அதிபதிகளின் ஆடம்பர வாழ்க்கைக்குஉரியதல்ல என்பதை செயல்படுத்திய செம்மல் உமர்(ரலி) அவர்களின் ஆட்சி மிகவும் மதிக்கத்தக்கது.

நன்றி:- தினமணி 18 OCT 2013 வெள்ளிமணி

நன்றி:- மு.அ. அபுல் அமீன் நாகூர். அஞ்சலக அதிகாரி(ஓய்வு), செல்பேசி:-00919943469691

தலைவர்:- ‍பெற்றோர் ஆசிரியர் கழகம் நாகூர், கௌதிய்யா துவக்கப்பள்ளி நாகூர், கிராம கல்விக்குழு நாகப்பட்டினம்.

துணைதலைவர்:- மத்தியஅரசு ஓய்வூதியர் சங்கம் நாகப்பட்டினம்.

பொருளர்:- நாகூர் தமிழ் சங்கம் நாகூர்.

உறுப்பின‌ர்:‍‍‍‍‍‍- த‌மிழ்நாடு நுக‌ர்வோர் இய‌க்க‌ம்.

நல்ல பாடம் – மு.அ. அபுல்அமீன் நாகூர்

செப்ரெம்பர் 25, 2013 1 மறுமொழி

கசடறக் கற்று, கற்றபடி நிற்றலில் வெற்றி உண்டு என்று நிரூபித்தவர் இமாம் அஹ்மதுப்னு ஹன்பல் (ரஹ்) அவர்கள். ஒரு நாள் இமாம் அவர்கள் வெளியில் செல்கையில் அவர்களிடம் பொதுக் கல்வி பயின்று உயர் கல்வி பெறவிருந்த மாணவர், மனிதர்கள் நடந்து செல்லும் பாதையில் குப்பையை கொட்டுவதைக் கண்டார்கள்.LITT

அந்த மாணவரை அழைத்து, “”பொதுச் சொத்தை அபகரிக்கும் உனக்கு உயர்கல்வி கற்றுத் தருவது எனக்குக் கடமையல்ல” என்று கண்டித்து சொன்னார்கள்.

மாணவர், ஆசிரியர் சொன்னதன் பொருள் புரியாது விழித்து நின்றார். அவரை வீதி ஓரத்தில் நிற்க வைத்த இமாம் அவர்கள் “”அசுத்தங்களை வெறுத்து விடுங்கள் என்ற திருக்குர்ஆனின் 74-5வது வசனத்தை மறந்துவிட்டீரா? வெறுத்து விடும் அசுத்தங்களை மனிதர்கள் நடமாடும் சாலையில் கொட்டுவது பொறுத்துக்கொள்ளக் கூடியதா?” என்று கேட்டார். மாணவர் மலைத்து நின்றார்.

இமாம் தொடர்ந்தார்கள், “”செல்லும் வழியில் தீமை பயக்கும் பொருட்களை அப்புறப்படுத்துவது நன்மை பயக்கும் என்று நபி(ஸல்) அவர்கள் அபூபர்ஸத் (ரலி) அவர்களிடம் ஏவியதை முஸ்லிம் நூலில் படித்ததைப் பறிகொடுத்து விட்டீரா? நீர் படித்து என்ன பயன்?”. மாணவர் மௌனமாய் நின்றார்.

LITTT“எவரேனும் ஒரு சாண் அளவு நிலத்தை அபகரிப்பாராயின் அவனுடைய கழுத்தில் அல்லாஹ் (மறுமை நாளில்) ஏழடுக்கு பூமியை வளையமிடுவான்’ என்ற ஏந்தல் நபி(ஸல்) அவர்களின் எச்சரிக்கையை புகாரி, முஸ்லிம் நூல்கள் அபூஸல்மா இப்னு அப்திற்றஹ்மான் (ரலி) அவர்களின் அறிவிப்பாகக் கூறுவதை அறியாமல் செய்யும் அறிவிலியா? அறிந்தும் அடாவடியாய் செய்யும் அநியாயக்காரரா?”.

“நீர் கொட்டிய குப்பையால், பொது மக்களுக்குப் பொதுவான பாதையில் ஒரு பகுதி மனிதர்கள் நடமுடியாதபடி பயனற்றுப் போகிறது. பொதுப் பாதையை பொது சொத்தை இவ்வாறு பயனிழக்கச் செய்வது அந்தச் சொத்தை அபகரிப்பதற்கு ஒப்பாகும்?”.

-இமாம் அவர்களின் விளக்கத்தால் தெளிவு பெற்ற மாணவர் கொட்டிய குப்பையை அள்ளி எடுத்து மக்கள் நடமாடாத பகுதியில் கொட்டினார்.

பள்ளியில் நடத்திய பாடத்தை வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டும் என்பதை எடுத்துக் காட்டும் இந்நிகழ்ச்சி இக்காலத்திலும் தெருவில் குப்பையைக் கொட்டுவோருக்கும், கட்டிடம் கட்ட மணல், செங்கல், கருங்கல், ஜல்லிகளை சாலையில் கொட்டி வைத்து கான்கிரீட் கலவை போடுவோருக்கும், தப்பென்று தெரிந்தும் பொது சொத்துக்களை, பிறரின் சொத்துக்களை அடியோடு அபகரித்து நிலப்பறிப்பு மோசடியில் ஈடுபடுவோருக்கும் சூடுகொடுக்கும் நல்ல பாடம்.

நன்றி:- தினமணி 19 SEP 2013 வெள்ளிமணி

நன்றி:- மு.அ. அபுல் அமீன் நாகூர். அஞ்சலக அதிகாரி(ஓய்வு), செல்பேசி:-00919943469691

தலைவர்:- ‍பெற்றோர் ஆசிரியர் கழகம் நாகூர், கௌதிய்யா துவக்கப்பள்ளி நாகூர், கிராம கல்விக்குழு நாகப்பட்டினம்.

துணைதலைவர்:- மத்தியஅரசு ஓய்வூதியர் சங்கம் நாகப்பட்டினம்.

பொருளர்:- நாகூர் தமிழ் சங்கம் நாகூர்.

உறுப்பின‌ர்:‍‍‍‍‍‍- த‌மிழ்நாடு நுக‌ர்வோர் இய‌க்க‌ம்.

உண்ணலில் உயர்வு! – மு.அ. அபுல்அமீன் நாகூர்

ஜூலை 2, 2013 1 மறுமொழி

f2

உண்ணும் உணவே உடலுக்கு வலிவையும் பொலிவையும் தருகிறது. அதற்கொப்ப நோயின்றி வாழ உடலில் வலிவும் மற்றவர்களிடம் மதிப்போடு வாழ பொலிவும் வேண்டும். அதற்கேற்ற உணவை உண்பது உண்ணலின் உயர்வு.

முதலில் நாம் உண்ணும் உணவு சுத்தமானதாக இருக்க வேண்டும். இன்று கண்ட இடங்களில் துண்டு துண்டாக விற்கப்படும் தூய்மையற்ற உணவுகளை உண்ணக்கூடாது என்பதை அல்குர்ஆனின் 2-172வது வசனம் “நாம் உங்களுக்கு அளித்தவற்றில் தூய்மையானதைப் புசியுங்கள்” என்று கூறுகிறது.

பால் ஒரு சுத்தமான இனிய உணவு என்று இயம்புகிறது இறைமறை குர்ஆனின் 16-66வது வசனம். “கால்நடைகளின் வயிற்றில் உள்ள சாணத்திற்கும் இரத்தத்திற்கும் இடையிலிருந்து, அருந்துபவர்களுக்கு இன்பமான தூய பாலை உங்களுக்கு புகட்டுகிறோம்”.

சுத்தத்தின் செயலாக உணவு உண்ணும் முன்னும் உண்ட பின்னும் கை கழுவுவதையும் பாத்திரங்களைக் கழுவி வைப்பதையும் வற்புறுத்தினார்கள் நபி(ஸல்) என்று சல்மான் பார்ஸி(ரலி) அறிவிப்பது அபூதாவூத், திர்மிதீ நூல்களில் காணப்படுகிறது.

உண்ணும் உணவு நேரிய வழியில் ஈட்டியதாக இருக்க வேண்டும். புறம்பான வழியில் பெற்றதைப் புசிக்காதீர்கள் என்கிறது திருக்குர்ஆனின் 2-188வது வசனம். “”உங்கள் பொருட்களை உங்கள் மத்தியில் அநீதியாகப் புசிக்காதீர்கள். இன்னும் நீங்கள் அறிந்துகொண்டே மனிதர்களின் பொருட்களிலிருந்து ஒரு பகுதியைப் பாவமான முறையில் புசிக்கும் பொருட்டு வழக்காடாதீர்கள்”.

ஒருவரின் பொருளை பலவந்தமாகவோ, கொள்ளையிட்டோ, திருடியோ, சூதாடியோ, பந்தயம் வைத்தோ, பொய் வழக்கு தொடுத்தோ தனக்கு உரிமையாக்கிக்கொண்டு சாப்பிடுவது சாபக் கேடானது என்பதையே மேற்குறிப்பிட்ட குர்ஆனின் வசனம் எடுத்துரைக்கிறது.

எம்பெருமானார் (ஸல்) எவ்வுணவையும் எப்பொழுதும் குறை கூறவில்லை. விரும்பும் உணவை உண்பார்கள். விரும்பாததை உண்ண மாட்டார்கள் என்று அபூஹீரைரா (ரலி) அவர்கள் அறிவித்ததை “புகாரி’யில் காணலாம்.

எனினும் ஏந்தல் நபி(ஸல்) அவர்கள் பழம், காய்கறிகளை விரும்பி உண்டதை விளம்புகிறார்கள் உளமொத்த நபிகளாரின் உத்தம தோழர்கள். ஒரு தையல்காரர் அளித்த விருந்தில் தொலிக் கோதுமை ரொட்டியும் தொட்டுக்கொள்ள உப்புக்கண்டமும் சுரைக்காயும் கலந்து காய்ச்சிய குழம்பும் இருந்தன. அண்ணல் நபி(ஸல்) அவர்கள் பாத்திரத்தின் ஓரத்தில் சுரைக்காயைத் தேடி எடுத்துப் புசித்ததைப் பார்த்ததாக அனஸ் (ரலி) அவர்கள் அறிவிப்பது புகாரி, முஸ்லிம், முஅத்தா, அபூதாவூத், திர்மிதீ நூல்களில் காணப்படுகிறது.

சீராய் உண்டால் சிலரின் சாப்பாடு பலருக்கும் பயன்படும். இருவரின் உணவு நால்வருக்கும் நால்வரின் உணவு எண்மருக்கும் போதுமானதென்று போதகர் முஹம்மது (ஸல்) அவர்கள் போதித்ததை ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிப்பது முஸ்லிம், திர்மிதீ நூல்களில் காணலாம்.

உண்ணத் f1துவங்குகையில் உள்ளத்தில் உறையும் இறைவனை எண்ணித் துதித்து, உண்டபின் உணவளித்த இறைவனுக்கு உளமார நன்றி நவின்று நம்மையும் அவ்வாறே நடந்திட பணித்தார்கள் நபி முஹம்மது(ஸல்) அவர்கள்.

ஏந்தல் நபி எடுத்துக் காட்டியபடி எவ்வுணவையும் எள்ளாது ஏற்று எளிய முறையில் பலருக்கும் பயன்படும்படி பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பி அல்லாஹ்வின் நல்லருளைப் பெறுவோம்.

நன்றி:- தினமணி  27 June 2013 வெள்ளிமணி

நன்றி:- மு.அ. அபுல் அமீன் நாகூர். அஞ்சலக அதிகாரி(ஓய்வு), செல்பேசி:-00919943469691

தலைவர்:- ‍பெற்றோர் ஆசிரியர் கழகம் நாகூர், கௌதிய்யா துவக்கப்பள்ளி நாகூர், கிராம கல்விக்குழு நாகப்பட்டினம்.

துணைதலைவர்:- மத்தியஅரசு ஓய்வூதியர் சங்கம் நாகப்பட்டினம்.

பொருளர்:- நாகூர் தமிழ் சங்கம் நாகூர்.

உறுப்பின‌ர்:‍‍‍‍‍‍- த‌மிழ்நாடு நுக‌ர்வோர் இய‌க்க‌ம்.