தொகுப்பு

Posts Tagged ‘ஷரியா வங்கி’

வங்கி மைனஸ் வட்டி (இஸ்லாமிய வங்கி) Part-04 இரா. முருகன்


முஷாரகா  (Musharakah) என்னன்னு கேட்கறீங்களா? நிதி முதலீடு செஞ்சு தொழில் நடத்தி லாபத்தைப் பங்கு பிரிச்சுக்கறது.

அட போப்பா, இதான் முதரபான்னு முன்னாடி சொன்னியே.

இல்லீங்க. ஒரு வித்தியாசம் இருக்குது. முதரபாவிலே, பேங்குக்காரங்க தான் முழுசு முச்சூடும் காசு முதலீடு செய்வாங்க. நீங்க உங்க தெறமையை, ஒழைப்பை முதலீடு செய்வீங்க. ரெண்டு பேரும் பங்காளி.

சரி முஷாரகாவிலே?

முஷாரகாவிலே ரெண்டுக்கு மேல்பட்ட பங்குதாரங்க இருக்கலாம். ஒவ்வொருத்தரும் ஆளுக்குக் கொஞ்சம் காசு கொண்டாந்து தொழில்லே முடக்கணும்.

இது நாம இங்கனக்குள்ள செய்யறதுதானே.

கொஞ்சம் பொறுமையாத்தான் கேளுங்களேன். தொழில் தொடங்க முந்தி,  முதரபா மாதிரியே, முஷாரகாவிலேயும் லாபத்தை என்ன விகிதத்திலே பங்கு பிரிச்சுக்கலாம்கிறதை பங்காளிங்க முடிவு செய்வாங்க. இங்கே கவனிக்க வேண்டிய முக்கியமான ஒரு விஷயம் உண்டு.

‘என்ன பெரிசா சொல்லப்போறே. நானு ஒரு லட்சம் ரூபாய் முதல் போட்டிருக்கேன். நீ  ஐம்பதாயிரம் போட்டிருக்கே. தம்பி இன்னொரு ஐம்பதாயிரம் போட்டிருக்காரு. ஆக, என் பங்கு 50%, உன் பங்கு 25%, தம்பி இன்னொரு 25%. லாபம் வந்துச்சுன்னா, வராம விட்டுடுவோமா என்ன, வந்துடும் மாப்ளே.. வந்ததும் இதே விகிதத்திலே அதை பங்கு பிரிச்சுக்குவோம், சரிதானே?’

சரிதான் ஆனா சரியில்லை.

என்னத்தக் கன்னையா மாதிரி சொல்றியேப்பா.

லாபம் வந்துச்சுன்னா அதை என்ன விகிதத்தில் பங்கு போட்டுக்கலாம் என்கிறதுக்கு முதலீட்டு விகிதம் அடிப்படையா இருக்கணும்னு கட்டாயம் இல்லே. அது வேறே விகிதத்திலே கூட இருக்கலாம்.

சரி வேணாம் மாப்ளே, அமோகமாத் தொழில் நடத்தி, எனக்கு மாசா மாசம் ஐயாயிரம் ரூபா கொடுத்திடு. அதுக்கு மேலே ஒரு காசு வேணாம்.

இது சரியில்லே. இம்புட்டுப் பணம் எனக்குத் திருப்பி வரணும்னு முன்கூட்டியே முடிவு பண்ணி ஒப்பந்தம் போட்டுக்க முடியாது. அதான் சொன்னேனே, வர்ற லாபத்தை வச்சுத்தான் பங்கு பிரிச்சுக்கறது அமையணும். மத்த எதுவும் சரிப்படாது.

லாபம் சரி, நஷ்டம் வந்துச்சுன்னா? போகுது போ. லாபத்தை பங்கு வைச்சுக்க என்ன விகிதமோ அதே படிக்கு நட்டத்தையும் சுமந்துப்போம். ஆண்டவன் கைவிட்டுடுவாரா என்ன?

நிச்சயம் மாட்டார். இது ஷரியா படி சரிதான்.

ஏம்பா, என்னாலே காசு தரமுடியும். ஆனா, நானும் உன் கூட வந்து ஒர்க் ஷாப்புலே ஸ்பானர் பிடிச்சு வேலை பார்க்கணும்னா முடியாதே. குத்த வச்சா வவுத்துலே வலிக்குது எளவு. வாயுப் பிடிப்பு.

முடக்கத்தான் கீரை கறி வெச்சுச் சாப்பிடுங்க, வாயுப் பிடிப்பு எல்லாம் துண்டக் காணோம், துணியக் காணோம்னு ஓடிடும். இல்லாட்டாலும் முஷாரகாவிலே எல்லா பங்காளிங்களும் தொழில்லே ஈடுபடணும்னு கட்டாயம் ஒண்ணும் இல்லே. நிதியை மட்டும் முதலீடு செஞ்சுட்டு அக்கடான்னு இருக்கலாம். sleeping partner. என்ன, லாபத்தில் குறைந்த பட்ச விகிதம் தான் அப்போ உங்களுக்கு வரும். நிச்சயம் உங்க முதலீட்டு விகிதத்துக்கு குறைஞ்சதா இருக்காது அது.

சரி, முஷாரகாவிலே பேங்குக்காரங்க எப்படி உள்ளாற புகுந்தாங்க?

ஏழெட்டு பங்காளியிலே அவங்களும் ஒரு பங்காளி. அம்புட்டுத்தான். பேங்குக்காரங்க மொத்தமா இருக்கப்பட்ட நிதியை நாலஞ்சு முதரபாவிலே முடக்காம, சின்னதும் பெரிசுமா நூறு முஷாரகாவிலே முடக்கினா நிறையப் பேர் முன்னேறி வர முடியுமில்லியா?

முஷாரகா கூட்டணி எம்புட்டு நாள் வச்ச்சிருக்கலாம்னு ஷரியாவிலே ஏதாச்சும் சொல்லி இருக்கா?

அப்படி கால அளவுல்லாம் கிடையாதுங்க. வருஷக் கணக்கா நிதானமா நடத்தி லாபத்துக்கு மேலே லாபம் பார்க்கிற ஸ்டடியான முஷாரகா – permanent musharakah ஒரு வகை. வருஷா வருஷம் லாபத்தோட கூட, முதலீட்டிலே இருந்தும் லாபத்தைப் பொறுத்து திரும்ப வாங்கிக்கிட்டு சீக்கிரம் கூட்டணியை கலாஸ் பண்ணிக்கற diminishing musharakah இன்னொரு வகை.

நாலு பேர் கூட்டு முயற்சியிலே முஷாரகா ஏற்படுத்தி ரெண்டு வருஷம் நடக்குது. அஞ்சாவதா ஒருத்தர் நானும் புதுசா கூட்டு சேரட்டுமான்னு கேட்கறார். ஷரியா என்ன சொல்லுது? அவரையும் ஆட்டத்துலே சேர்த்துக்கலாமா?

தாராளமா சேர்த்துக்கலாம். இருக்கப்பட்ட எல்லா பங்குதாரங்களும் முழு மனசோடு ஒப்புக்கிட்டா போதும்.

லாபத்தை பங்கு போடறது பத்தி சொன்னே. அதெல்லாம் சரிதான். நாலுலே ஒரு பாகஸ்தர் நாள் முச்சூடும் உழைக்கறார். மத்தவங்க அப்பப்ப கௌரவ நடிகர் மாதிரி வந்து போறாங்க. மெயின் ஆக்டருக்கு எக்ஸ்ட்ராவா சம்பளம், பேட்டான்னு ஏதாச்சும் அதிக வருமானம் வருமா?

கிடைக்க வழி இருக்கு. முஷாரகா ஒப்பந்தம் போடும்போதே இந்த விஷயத்தையும் அதில் போட்டு வச்சுக்கணும். அவ்வளவுதான்.

எல்லா முஷாரகா ஒப்பந்தமும் எந்திரன் கடைசியிலே  ஏகப்பட்ட  ரஜனி வருவாரே, அது மாதிரி அச்சு அசலா ஒரே போலதானே?

இங்கே மூணு விதம் இருக்குங்க. நாம் இதுவரை சொல்லிட்டு வந்தோமே, பொதுவா நடப்பிலே இருக்கற இதை ஷிர்கத் உல் அம்வல் முஷாரகா Shirkat-ul-amwal  அப்படீன்னு சொல்வாங்க. நாலஞ்சு பேர் முதலீடு செஞ்சு கம்ப்யூட்டர், டிவி, வாஷிங் மிஷின் ரிப்பேர் செய்யற சர்வீசிங் தொழில் நடத்தறாங்கன்னு வச்சுக்குங்க. ஒவ்வொரு முறை இப்படி சர்வீஸ் செஞ்சு கிடைக்கற ஃபீஸை ஒப்பந்த விகிதத்துலே பங்கு பிரிச்சுக்கறது ஷிர்கத் உல் அமல் முஷாரகா Shirkat-ul-Amal . நிதி முதலீடு இல்லாம வேறே யாரோ உற்பத்தி செஞ்ச பொருளை வித்துக் கொடுக்கற கமிஷன் ஏஜன்சி நடத்தி, வரவை பங்கு போடறது ஷிர்கத் உல் ஊஜா Shirkat-ul-wujooh.

முஷாரகா கூட்டணியிலே இருந்து வெளியே வரணும்னா?

ஏங்க, இதென்ன தேர்தல் கூட்டணியா, நினைச்ச போது வெளியே வர்றதுக்கும் உள்ளே போறதுக்கும். முன்னறிவிப்போட, மத்த பார்ட்னர்களுக்குப் போதுமான அவகாசம் கொடுத்து அப்புறம் வெளியே வர வழி இருக்கு. வெளியே வர்றவரோட பங்கை அவர் போட்ட முதலுக்கு மேலே கொடுத்தோ குறைச்சுக் கொடுத்தோ மத்தவங்க வாங்கிக்கலாம். இல்லே, முஷாரகாவையே முடிவுக்குக் கொண்டு வரலாம். பொதுவா கோடி கோடியா நிதி முடக்கி தொடங்கின தொழில்லே திடீர்னு ஒருத்தர் அம்போன்னு விட்டுட்டுப் போனா கஷ்டமாச்சே. அதுக்காக ஒப்பந்தம் போடற போதே இதைப் பத்தி யோசிச்சு, விலகறது எப்படீன்னு பதிஞ்சு வச்சுக்கிட்டா பிரச்சனை இல்லே.

யாராவது ஒரு பாகஸ்தர் திடீர்னு மூச்சு விட மறந்து போய்ட்டார்னா?

இதுவும் பிரச்சனை இல்லே. அவரோட வாரிசுகள் கூட்டணியை தொடரலாம். இல்லே அவங்களுக்கு உண்டான தொகையை வாங்கிக்கிட்டு வெளியே வரலாம்.

மத்தபடிக்கு முஷாரகா அதும்பாட்டுக்கு ஓடிக்கிட்டே இருக்கும் போல.

ஆமா. ஒரு சின்ன விஷயம். யாராவது ஒரு பார்ட்னர் திடீர்னு மனநோய் கண்டு சுத்தி இருக்கறது, நடக்கறது யார் என்னன்னே தெரியாத அளவு பரிதாபமா ஆகிட்டார்னா, முஷாரகா நின்னு போயிடும்.

இன்ஷா அல்லாஹ், நமக்கு அப்படி எதுவும் நடக்காது. வாங்க, காய்கறி, கடல் வாழைக்காய் ஹோல்சேல் பிசினஸ் நடத்த ஒரு முஷாரகா ஆரம்பிக்கலாம்.

இருப்பா. வீட்டுலே காய்வெட்டா ரெண்டு கிலோ தக்காளி வாங்கிட்டு வரச் சொன்னா. வாங்கிக் கொடுத்துட்டு மீதிக் காசு தேறிச்சுன்னா வரேன்.

நன்றி:- இரா. முருகன்

நன்றி:-http://www.tamilpaper.net/?category_name=%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF

நன்றி:- http://onameen.blogspot.com/

வங்கி மைனஸ் வட்டி (இஸ்லாமிய வங்கி) Part-01 இரா. முருகன்

வங்கி மைனஸ் வட்டி (இஸ்லாமிய வங்கி) Part-02 இரா. முருகன்

வங்கி மைனஸ் வட்டி (இஸ்லாமிய வங்கி) Part-03 இரா. முருகன்

வங்கி மைனஸ் வட்டி (இஸ்லாமிய வங்கி) Part-04 இரா. முருகன்

வங்கி மைனஸ் வட்டி (இஸ்லாமிய வங்கி) Part-05 இரா. முருகன்

வங்கி மைனஸ் வட்டி (இஸ்லாமிய வங்கி) Part-06 இரா. முருகன்

வங்கி மைனஸ் வட்டி (இஸ்லாமிய வங்கி) Part-07 இரா. முருகன்

வங்கி மைனஸ் வட்டி (இஸ்லாமிய வங்கி) Part-08 இரா. முருகன்

வங்கி மைனஸ் வட்டி (இஸ்லாமிய வங்கி) Part-03 இரா. முருகன்


முதரபா (Mudarabah) என்பது கடன் இல்லை, சமூக நோக்கு கொண்ட உதவி என்று சொன்னோமே, அதைக் கொஞ்சம் விரிவாகப் பார்க்கலாம்.

எந்த நேர்மையான தொழிலுக்கும் நிதியும் உழைப்பும் அவசியம். நிதியை மேல்படியில் மெத்தை போட்டு உட்கார்த்தி, உழைப்பை வாசலில் கூனிக் குறுகி நிற்கவைப்பது அநீதி. ஆக, ஒருவர் தொழில் திறமையையும் உழைப்பையும் மூலதனமாகப் போட, இன்னொருவர் பணத்தை மூலதனமாக முடக்கவேண்டும்.

நஷ்டம் வரலாம் என்ற சவாலை எதிர்பார்த்து உழைப்பாளரின் திறமையில் நம்பிக்கை வைத்து பண முதலீடு செய்வதாலேயே முதலாளிக்கு லாபத்தில் பங்குபெற கன கம்பீரமான உரிமை ஏற்படுகிறது.

உழைப்பு சரிவர இருந்தும், லாபம் வராமல் போனால், உழைப்பாளி பண நஷ்டத்துக்குப்  பொறுப்பாக மாட்டார். முதலாளி தொழிலில் முதலீடு செய்த பணம் நஷ்டத் தொகையின் அளவுக்குக் குறைக்கப்படும். உழைப்பாளி பெற உரிமை உள்ள, ஆனால் கிடைக்காமல் போன உழைப்பின் ஊதியம் இந்தப் பண நஷ்டத்துக்கு ஈடாகும்.

ஏன் வழமையான கடன் வழங்குதல்–வாங்குதல் உறவை விட முதரபா மேலானது என்பதற்கு மூன்று காரணங்களைச் சொல்லலாம்.

1)    தொழில் தொடங்கும் முன்பே முதலாளியும் உழைப்பாளியும் லாபம் வரும்போது எந்த விகிதத்தில் அதைப் பங்கு போட்டுக்கொள்ளலாம் என்று முடிவு செய்து ஒப்பந்தம் செய்துகொள்கிறார்கள். இந்த லாபப் பிரிவினை, பண முதல் தரும் வருமானத்தை (return on capital) அடிப்படையாகக் கொண்டதில்லை. முழுக்க முழுக்கத் தொழிலில் கிட்டும் லாபத்தைச் சார்ந்தது (profit sharing agreement).

‘நான் இவ்வளவு பணம் தருவேன். நீங்கள் இவ்வளவு உழைப்பீர்கள். நிர்வகிப்பீர்கள். தொழில் முன்னேற்றம், பிரச்சனைகள் பற்றி என்னோடு தகவல் பகிர்ந்து கொள்வீர்கள். நான் அதிகம் பணம் உதவவேண்டி வந்தாலோ, நீங்கள் இன்னும் திறமையாக, இன்னும் கடுமையாக உழைக்கவேண்டி வந்தாலோ, மனமுவந்து அதைச் செய்வோம்’ என்று அந்த ஒப்பந்தம் தெளிவாக்கும்.

முதலீடு செய்பவருக்கு நிர்வாகத்தில் குறுக்கிட உரிமை இல்லை. அதேபோல் தேவையில்லாமல், பணம் கொடுங்க என்று விடாப்பிடியாக அதிக நிதி கேட்டு நச்சரிக்க மற்றவருக்கு உரிமை இல்லை.

2)    இப்படி ஒருவருக்கு ஒருவர் இணக்கமான அக்கறையோடும் முழு முனைப்போடும் தேவையான நிதி அடிப்படையோடும் நடக்கும் தொழிலில் நஷ்டம் வந்தால் இருவருமே பாகுபாடு இன்றி வெவ்வேறு வடிவத்தில் அந்த இழப்பைத் தாங்கிக் கொள்கிறார்கள். இழப்பையும் கடந்து முன்சென்று ஒப்பந்தப்படி வெற்றி கண்டு லாபத்தைப் பங்கு வைப்பது என்ற லட்சியம் தொடர சாத்தியக்கூறுகள் நிறைய உள்ளன.

நேர்மையான உழைப்புக்கும், பொறுப்பான நிதியுதவிக்கும், திறமையான நிர்வாகத்துக்கும், தர்ம நியாயத்துக்கு உட்பட்ட தொழில் நடப்புக்கும் கிடைக்கும் வெகுமதியே லாபம். அந்த லாபத்துக்கு வானமே எல்லை. அதைப் பங்கு வைக்கும் விகிதத்தையும் ஷரியா இவ்வளவு என்று கட்டுப்படுத்தவில்லை.

3)    முதரபா ஒப்பந்தத்தை இருவரில் எவர் மீறினாலும்,  இஸ்லாமிய வங்கிச் சட்டத்தின் கண்களில் ஒரே மாதிரி நடத்தப்படுகிறார். அவர் மற்றவருக்குத் தரவேண்டிய நஷ்ட ஈடு விவரமும் ஒப்பந்தத்தில் இருக்கும்.

உழைக்கவேண்டியவர் உழைக்காமல் அல்லது தவறாகச் செயல்பட்டு நஷ்டத்தை உண்டாக்கினால், முதல் போட்டவருக்கு அவர் முடக்கிய தொகையை கேள்வி கேட்காமல் இவர் கொடுத்துவிடவேண்டும்.

முதலாளி திடீரென்று பண உதவியை நிறுத்தினாலோ, ஒப்பந்ததுக்கு மாறாக, போட்ட பணத்தை உடனே திரும்பக் கேட்டாலோ, அல்லது ஒப்பந்தப்படி பணம் தர மறுத்தாலோ நஷ்டம் ஏற்படலாம். அப்போது அந்த உழைப்பாளி இதே தொழிலை வேறு யாருடனாவது ஒப்பந்தம் செய்துகொண்டு வெற்றிகரமாக நடத்தி இருந்தால் குறைந்தபட்சமாக என்ன லாபம் பெற்றிருப்பாரோ அதை நிதியாளர் கட்டாயம் செலுத்தியாகவேண்டும்.

நிதியை முதலீடு செய்பவர் ராப்-உல்-மால் ( rabb-ul-maal.) என்று அழைக்கப்படுவார். உழைப்பை முதலீடு செய்கிறவர் முதரிப் (mudarib) எனப்படுகிறார்.

முதரபாவில் இரண்டு வகை உண்டு. நிதி கொடுக்கிற தொழில் பங்காளியான ராப்-உல்-மால், அந்த நிதியைப் பயன்படுத்தி எந்தத் தொழில் செய்யவேண்டும் என்று நிபந்தனை விதிக்கலாம். உழைக்கும் பங்காளி முதரிப் இந்த நிபந்தனைக்குக் கட்டுப்பட்டவர் ஆவார். நிபந்தனையோடு கூடிய முதரபா என்ற பொருள் தரும் ‘அல்-முதரபா அல்-முகய்யதா’ (al-mudarabah al-muqayyadah) எனப்படும் இது.

நிதியாளர் எந்தத் தொழில் என்று நிபந்தனை விதிக்காதபோது, உழைக்கும் பங்காளி அந்த முதலை நிதி மூலதனமாக வைத்து விரும்பிய தொழிலில் ஈடுபடலாம். இது நிபந்தனையற்ற முதரபா – ‘அல்-முதரபா அல்-முதலகா’ (al-mudarabah al-mutalaqah) எனப்படும்.

இரண்டு பங்காளிகளில் யார் விரும்பினாலும் மேலே தொடராமல் முதரபாவை விலக்கிக்கொள்ளலாம். ஒப்பந்த முறிவுக்கான முன்னறிவிப்புக் காலம், வழிமுறை இரண்டும் ஒப்பந்தத்திலேயே தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கும். அதைக் கடைப்பிடித்து முதரபாவிலிருந்து விலகிக்கொள்ளத் தடை ஏதும் இல்லை.

எத்தனை வருடம் முதரபா செயல்படலாம் என்று ஒப்பந்தத்திலேயே இருப்பதும் உண்டு. அதற்குப்பிறகு தானாகவே ஒப்பந்தம் ரத்தாகிவிடும். இது ஒரு பிரிவு இஸ்லாமிய வங்கியியல் அறிஞர்களின் கருத்து. அப்படி அதிக பட்சக் காலத்தை நிர்ணயிக்க முடியாது என்று இன்னொரு பகுதியினர் கருதுகிறார்கள். இருவரும் ஒன்றுபடுவது ஒரு விஷயத்தில் – முதரபாவுக்கு குறைந்தபட்ச நடப்புக் காலம் என்று எதையும் நிர்ணயம் செய்ய முடியாது.

இஸ்லாமிய வங்கியியலில் முதரபா இரண்டு கட்டமாகச் செயல்படுத்தப்படுகிறது.

முதல் கட்டமாக, வங்கியில் பணம் போடுகிற வாடிக்கையாளர்கள் (depositor customers) செலுத்திய பணம் வங்கியின் முதலீட்டுக் கணக்கில் (Investment Account) வரவாகிறது. இந்த முதலீடு ஈட்டும் லாபத்தில் பங்குபெற அந்த வாடிக்கையாளர்கள் உடன்படுகிறார்கள். முதலீட்டு நிதியைத் திறமையாக நிர்வகிக்கும் ஒரு நிர்வாகியாக (Manager of funds) வங்கி செயல்படுகிறது.

முதரபாவின் இரண்டாவது கட்டம் வங்கியின் தொழில்முனைவர்களான வாடிக்கையாளர்கள் (Entrepreneurial customers) பங்குபெறுவது. தொழில் தெரியாமல் ஆர்வக் கோளாறு காரணமாக வெற்று உற்சாகத்தோடு   இப்படியானவர்களில் சிலர் நிதி உதவிக்காக வந்து நிற்கலாம். வங்கி, இவர்களை ஜாக்கிரதையாக அலசி ஆராய்ந்து, வேண்டுமென்றால் நிராகரித்து, ‘தொழில் கத்துக்கிட்டு வாங்கப்பா’ என்று அனுப்பி விடும்.

நிதித்துறை பரிபாஷையில் வட்டியை மூலதனத்தின் விலை (cost of capital) என்பார்கள். இந்த வட்டி சர்வதேச, உள்நாட்டுப் பணச்சந்தை (money market) நிலவரங்களால் தீர்மானிக்கப்படுகிறது.

வழமையான தொழில் கடன் வழங்கும் வங்கி, அந்தத் தொழிலில் என்ன லாபம் வந்தாலும் இப்படிச் சந்தை நிர்ணயித்த அடிப்படையில் வட்டியை வசூலித்து வருமானம் ஈட்டுகிறது. பெரும்பாலும் அது நிலையான வட்டி விகிதத்தில் (fixed interest rate) இருக்கும். ‘மிதக்கும் வட்டி’யை (floating interest rate) சாவகாசமாகப் பார்ப்போம்.

வட்டியை விலக்கிய இஸ்லாமிய வங்கியோ, முதரபா ஒப்பந்தம்மூலம் தகுதியான தொழில் முனைவர்களுக்கு நிதி உதவி செய்து, லாபத்தில் கணிசமான பங்கை அவர்களின் முழு ஒப்புதலோடு பெற்றுக்கொள்கிறது. வட்டி மூலம் பெறக்கூடிய வருமானத்தைவிட இது அதிகமாக இருக்க வாய்ப்பு உண்டு.

முதரபா போல் முக்கியமான இன்னொரு நிதி, உழைப்பு முதலீட்டு முறையான முஷாரகா (Musharakah). இது என்ன என்று அடுத்து அறிமுகப்படுத்திக் கொள்வோம், இன்ஷா அல்லாஹ்.

நன்றி:- இரா. முருகன்

நன்றி:-http://www.tamilpaper.net/?category_name=%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF

நன்றி:- http://onameen.blogspot.com/

வங்கி மைனஸ் வட்டி (இஸ்லாமிய வங்கி) Part-01 இரா. முருகன்

வங்கி மைனஸ் வட்டி (இஸ்லாமிய வங்கி) Part-02 இரா. முருகன்

வங்கி மைனஸ் வட்டி (இஸ்லாமிய வங்கி) Part-03 இரா. முருகன்

வங்கி மைனஸ் வட்டி (இஸ்லாமிய வங்கி) Part-02 இரா. முருகன்


வட்டி (ரிபா) பற்றிய இஸ்லாமிய நோக்கை இன்னும் கொஞ்சம் விரிவாகப் பார்க்கலாம். கோடி கோடியாகப் பணம் புரளும் சர்வதேச வங்கித் துறையையே புரட்டிப் போடும் கோட்பாடு அது. மாற்றம் நல்லதுக்குத்தான் வழிவகுக்கும்.

பணம் என்பது ஒரு சொத்து என்று நினைத்தால் மகா தப்பு. அது ஒரு மதிப்பீடுதான் (value). வீடு, நிலம், நகை, படி அரிசி என்று உலகத்தில் விற்பனைக்குக் கிடைக்கிற எத்தனையோ பொருட்களை மதிப்பிடப் பணம் ஓர் அளவுகோல்.

ஒரு பவுன் தங்கத்தின் விலை மதிப்பு (இதை எழுதும்போதே இன்னும் கொஞ்சம் எகிறி இருக்கும்) நிச்சயம் ஒரு பிளேட் இட்லி சாம்பாரின் விலை மதிப்புக்கு ஈடாக இருக்காது.

ஒரு நானோ காரின் மதிப்பு பணமாகச் சொன்னால் ஒண்ணே கால் லட்சம் ரூபாய். ஒரு முர்ரா எருமையின் பண மதிப்பும் அவ்வளவே. முர்ரா எருமை முப்பது லிட்டர் பால் தரும். நானோ லிட்டருக்கு பதினைந்து கிலோமீட்டர் ஓடும்.  ஒரே பண மதிப்புள்ள ரெண்டு பொருட்களின் சாதக பாதகங்களை ஒப்பு நோக்கி, காரா, எருமையா என்று தீர்மானிப்பது உங்க வீட்டுக்காரம்மா விருப்பம்.

உங்களிடம் ஒரு  கார் இருந்தால் கொடுத்துவிட்டு அதற்குப் பதிலாக அதே மதிப்பில் (சரி, எருமை வேண்டாம்) எது வாங்கலாம் என்று தீர்மானிக்க பணமதிப்பு வழி செய்கிறது. பொருட்களைப் பரிமாறிக் கொள்ள (exchange) உதவுகிறது.

ஆக உருண்டோடிடும் பணம் காசென்னும் உருவமான பொருளுக்கு என்று தனியாக ஒரு மதிப்பு கிடையாது. அமிதாப் பச்சனை ஆறடி என்று இஞ்ச் டேப்பில் அளக்கலாம். அதனால் இஞ்ச் டேப்புக்கு என்று தனி மதிப்பு கிடைக்குமா என்ன?

பணத்துக்கே சொந்த மதிப்பு இல்லாதபோது, அதைக் கடன் கொடுத்து அதுக்குக் கூலியாக வட்டி வாங்கினால், அந்த ரிபாவுக்கு மதிப்பு? ஒரு சுக்கும் இல்லை. அது மட்டுமா? வட்டி சுரண்டலுக்கும் சமூக ஏற்றத்தாழ்வுக்கும்கூட வழி வகுக்கிறது. வியாபாரம் செய்தால் பொருட்கள் கை மாறும். மதிப்பில்லாத பணத்தை வட்டிக்கு விட்டால் ஹராம்தான் (பாவம்) உருவாகும். ரிபா விலக்கப்பட்டது. ஏனெனில் அது அநியாயமானது (ஸுல்ம் – Zulm) என்று சொல்கிறது திருக்குரான் (வசனம் 2:279).

‘நிதி சால சுகமா’ என்று கல்யாணி ராகத்தில் கேட்டார் தியாக ப்ரம்மம். லேது என்கிறது ஷரியா. நிதியைவிட முக்கியமானவை மனித உழைப்பு, முனைந்து செயல்படுதல் (initiative), செய்யும் தொழிலில் சவால்களைச் சமாளித்து வெற்றிக்கு வழி வகுத்தல்  (risk management) ஆகிய மூன்றும். ஷரியா தரும் விளக்கம் இது.

‘அது சரி, சும்மா நிதியை வச்சு அழகு பார்த்துக்கிட்டு இருந்தா அது, தானே உதயநிதி, தயாநிதி, கலாநிதின்னு வளருமா? கைமாற்று கொடுத்து, வட்டிக்கு விட்டு சம்பாதிச்சாத்தானே அது பெருகும்?’ன்னு கேட்டால், ஒற்றை வாக்கியத்தில் பதில் – ‘இஸ்லாமில் கடன் கொடுப்பது என்ற ஒரு வழக்கமே கிடையாது!’

‘இங்கே கடன் கொடுக்கப்படும்’ என்று நியான் விளக்கு போட்டு நிதி நிறுவனம் எதையும் ஷரியாவின்படி திறக்க முடியாது. நீங்கள் பண உதவி செய்யுங்கள். வேண்டாம் என்று சொல்லவில்லை. நண்பரின் தொழிலிலே பணம் முடக்கி இருக்கிறீர்கள் என்று சொல்லிக் கொள்ளுங்கள். சரிதான்.

ஆக, உழைப்பை முதலீடு செய்யும் உங்கள் நண்பரும், பணத்தை முதலீடு செய்யும் நீங்களும் பங்காளிகள். லாபத்தில் பங்கு பெறத் தகுதி உள்ளவர்கள். உங்கள் முதலீடு ஈட்டித் தரும் லாபம் விலக்கப்பட்டது இல்லை. அதை ஷரியாவும் இஸ்லாமிய வங்கியியலும் முழுமையாக ஆமோதித்து வரவேற்கின்றன.

வட்டி வாங்குவதையும், சமுதாயத்துக்குத் தீமை ஏற்படுத்தும் தொழில்களில் நிதி முதலீடு செய்வதையும் ஷரியா தடை செய்திருக்கிறது என்பதை ஏற்கெனவே பார்த்தோம். இவை மட்டுமில்லை, முழுக்க முழுக்க நிச்சயமில்லாத விளைவுகள் கொண்ட தொழில், வியாபாரத்தில் (கரார் – garar) ஈடுபடுவது,  பந்தயங்களில் முதலீடு (மைசீர் –Maysir) இதெல்லாம் கூட ஹராம்தான்.

சரி, வாங்க, வங்கிக்குப் போகலாம். இது நம்ம ஊர் வங்கி.

‘என்ன வேணும்?’ சிரத்தை இல்லாமல் கேட்கிறார் அதிகாரி. நாலு கிளார்க் லீவு. அத்தனை வேலையும் அண்ணாத்தை தலையில் கட்டிவிட்டு மேனேஜர் ரீஜனல் ஆபீசுக்கு பெர்பார்மென்ஸ் ரிவ்யூ மீட்டிங்குன்னு எஸ்கேப் ஆகிட்டார். அங்கே அவரை, செயல்பாடு போதாதுன்னு மேலதிகாரிகள் லாடம் கட்டிட்டு இருப்பாங்க என்பது வேறு விஷயம்.

‘சார், லோன் வேணும்’.

‘என்ன லோன்?’

‘சிறு தொழில் கடன்’.

‘என்ன வேணும்?’  என்ன-வில் ஒரு சின்ன அழுத்தம்.

‘ஸ்மால் ஸ்கேல் இண்டஸ்ட்ரி லோன்’ என்று ஈசியான தமிழில் சொல்கிறோம். ஆபீசர் சார் நிமிர்ந்து உட்கார்கிறார்.

ரிசர்வ் பேங்க்காரனும் ரீஜனல் மேனேஜர் தாதாவும் உயிரை எடுக்கறாங்க. பேங்க் பிராஞ்ச் கொடுக்கற மொத்தக் கடனில் நாற்பது சதவிகிதம் அதி முக்கியமான துறைகளுக்கு (priority sector) கொடுத்தாகணும். சிறு தொழில், விவசாயம், கல்விக் கடன் இதெல்லாம் ப்ரியாரிட்டி செக்டர்லே வர்ற சமாசாரம்.

ஆக, கடன் விண்ணப்பக் காகிதம் கைமாறுகிறது. அதைப் பூர்த்தி செய்ய உங்க பெயர், முகவரி, வயது, கல்வித் தகுதி, செய்யற தொழில் விவரம், உங்ககிட்ட இருக்கப்பட்ட அசையும் பொருள், அசையாப் பொருள் (அதாங்க, movabale property, immovable property) சொத்து விவரம் எல்லாம் பொறுமையா எழுதறீங்க.

நான் அதிகாரியாக இருந்த ஒரு பேங்க் பிராஞ்சில் லோன் அப்ளிகேஷன் இப்படி இருந்தது. சொத்து விவரம் : அசையும் பொருள் – கணவரிடம் உள்ளது. அந்தம்மாவை விசாரிக்க, வீட்டுக்காரரின் பஜாஜ் ஸ்கூட்டரைக் காட்டினார்.

சொத்து பத்து இல்லாவிட்டாலும் பரவாயில்லை. யாராவது கியாரண்டி கொடுப்பாங்களா? அதாவது நீங்க கடனைத் திருப்பிக் கட்டுவீங்கன்னு உத்திரவாதம்?

விவரம் கொடுக்கறீங்க. நடையா நடந்து ஒரு வழியா லோன் சாங்ஷன் ஆகுது.

‘இருபத்து நாலு மாசத்திலே பணத்தைத் திருப்பிக் கட்டணும். பிரதி மாதம் அடைக்க வேண்டிய தொகை இது. தவிர மூணு மாசத்துக்கு ஒரு தடவை வட்டி கட்டணும். எட்டரை சதவிகிதம் கூட்டு வட்டி’ – இதுக்கெல்லாம் சம்மதிச்சுக் கையெழுத்து போடறீங்க. தொழில் நல்லா நடந்தா கட்டாம இருப்போமா என்ன?

ஒரு வருஷம் ஒழுங்காப் போகுது எல்லாம். திடீர்னு ரெண்டு மாசம் தொழிலைக் கவனிக்க முடியாதபடி உடம்பு சுகவீனம். ஆஸ்பத்திரி, அலைச்சல். செலவு.

‘சார், இன்ஸ்டால்மெண்ட், வட்டி ரெண்டையும் கட்ட முடியலே இந்த ரெண்டு மாசமாக. கொஞ்சம் பொறுத்துக்க முடியுமா?’

அதிகாரி நரசிம்மாவதாரம் எடுக்கிறார்.

‘உங்க தொழில்லே, ஆரோக்கியத்துலே, குடும்பத்துலே பிரச்சனைன்னா அதை பேங்குக்கு சொல்லிப் புண்ணியம் இல்லை. பணத்தைக் கட்டலேன்னா என்.பி.ஏ ஆக்கிடுவோம். அப்புறம் எங்களைக் குத்தம் சொல்லாதீங்க.’

அவர் பேங்குமொழி பேசுகிறார். அதாவது உங்க கடனை வராக் கடன் (Non Performing Asset – NPA) முத்திரை குத்தி மேல் நடவடிக்கை எடுப்பாராம். இதுவே தனியார் வங்கியாக இருந்தால், வராக் கடனை வசூலிக்க வீட்டு வாசலுக்கு ஆட்டோகூட வரலாம்.

ஆக, மேலே சொன்னதில் இருந்து பெறப்படும் செய்தி யாதெனில்

  1. வழமையான வங்கித் தொழிலிலோ, தனியார் கொடுக்கல் வாங்கலிலோ, பணத்தை வழங்குகிறவருக்கு (lender) கடன் வாங்கியவர் (borrower) வாங்கிய பணத்தையும், வட்டியையும் திருப்பிச் செலுத்தக் கடமைப்பட்டவர்.
  2. வழங்குகிறவருக்கு, வாங்குகிறவர் அந்தப் பணத்தை வைத்துச் செய்யும் தொழில்மீது ஈடுபாடு இல்லை. அவர் பணத்தை திருப்பித் தருவாரா, தராவிட்டால் என்ன செய்யலாம் என்பதில்தான் அக்கறை.
  3. தொழில் கையைக் கடித்தாலோ, ஷட்டரை இழுத்து மூடவேண்டி வந்தாலோ, வழங்குகிறவருக்கு ‘முடியே போச்சு போய்யா’. சட்டம் இருக்கு. கையெழுத்து வாங்கின டாக்குமெண்ட் இருக்கு. வீட்டை அடமானம் வச்சு லோன் எடுத்துக் கட்டலையா? வீட்டையே ஜப்தி செய்யலாம். சட்டம் வழி செஞ்சிருக்கு.

நேர்மையாக இருந்தாலும், வாங்கிய பணத்தைத் திருப்பிக் கட்டவேணும் என்று பொறுப்பு உணர்ச்சி இருந்தாலும், அதைச் செய்ய முடியாமல் போனால், கடன் கொடுத்த வங்கிக்குக் கரிசனம் வேண்டியதில்லை. வங்கித் தொழிலில் கருணை, கரிசனம் இதுக்கெல்லாம் இடம் இல்லை. இதுதான் நாம் பார்க்கிற வங்கி.

இஸ்லாமிய வங்கி?

‘வாங்க, முதரபா (Mudarabah) தரோம்’ என்கிறது.

கடனில்லை. உங்க மேல் அக்கறை உள்ள, சுக துக்கத்திலே பங்கு எடுத்துக்கற, சமூக நோக்கு கொண்ட உதவி.

முதரபா அப்படின்னா? அடுத்த வாரம் பார்ப்போம், இன்ஷா அல்லாஹ்!

நன்றி:- இரா. முருகன்

நன்றி:-http://www.tamilpaper.net/?category_name=%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF

நன்றி:- http://onameen.blogspot.com/

வங்கி மைனஸ் வட்டி (இஸ்லாமிய வங்கி) Part-01 இரா. முருகன்வங்கி மைனஸ் வட்டி (இஸ்லாமிய வங்கி) Part-02 இரா. முருகன்

வங்கி மைனஸ் வட்டி (இஸ்லாமிய வங்கி) Part-03 இரா. முருகன்

வங்கி மைனஸ் வட்டி (இஸ்லாமிய வங்கி) Part-04 இரா. முருகன்

வங்கி மைனஸ் வட்டி (இஸ்லாமிய வங்கி) Part-05 இரா. முருகன்

வங்கி மைனஸ் வட்டி (இஸ்லாமிய வங்கி) Part-06 இரா. முருகன்

வங்கி மைனஸ் வட்டி (இஸ்லாமிய வங்கி) Part-07 இரா. முருகன்

வங்கி மைனஸ் வட்டி (இஸ்லாமிய வங்கி) Part-01 இரா. முருகன்



நாவலாசிரியராக, சிறுகதை ஆசிரியராக, வசனகர்த்தாவாக உங்களுக்கு முருகனைத் தெரிந்திருக்கும். வங்கியியல் வல்லுநராக ஒரு புதிய அறிமுகத்தை இப்போது செய்துகொள்ளுங்கள். உலகெங்கும் இன்று பிரபலமாகப் பேசப்படும் இஸ்லாமிக் பேங்கிங்கை இக்குறுந்தொடரில் அறிமுகப்படுத்துகிறார் இரா. முருகன்.

அமெரிக்காவிலும், பிரிட்டன் உட்பட பல ஐரோப்பிய நாடுகளிலும் கவர்மெண்ட் செலவில் தேசிய அளவு பயம் ஏற்படுத்தி வைக்கப்பட்டிருப்பது இஸ்லாமிய சமூகத்தைக் குறித்துத்தான்.

கான், ஹசன், முஸ்தபா இப்படிப் பெயரை பாஸ்போர்ட்டில் பார்த்தாலே மேற்படி நாடுகளில் ஏர்போர்ட் இமிகிரேஷன் அதிகாரிகளின் பிளட் பிரஷர் எகிறிப்போகிறது. காது மடல் சிவக்க பாஸ்போர்ட்டை விரித்து பெஸ்ட் செல்லர் லிஸ்ட் புத்தகம்போல் ஒரு பக்கம் விடாமல், ஒரு வரி விடாமல் படிக்கிறார்கள்.

பல சந்தர்ப்பங்களில் உள்ளே தனியறையில் மணிக்கணக்காக விசாரணை செய்து பின் லேடனுக்கு ஒண்ணு விட்ட, எட்டு, எண்பது விட்ட தம்பிக்கு மச்சினன் சம்சாரத்துக்கு மாமா பிள்ளை இல்லை என்று உறுதிப்படுத்திக்கொண்டு, கடனே என்று கதவைத் திறக்கிறார்கள்.

ஓர் இனத்தையே மறைமுகமாக பயங்கரவாதி முத்திரை குத்திவைத்திருக்கும் இந்த நாடுகள் கூட, ‘இஸ்லாமிய வங்கி’ என்றால் இருகரம் நீட்டி வரவேற்று ‘வாங்க, கோக் சாப்பிடுங்க’ என்று உபசரிக்கின்றன.

அப்படி என்ன மந்திரச் சொல் இந்த இஸ்லாமிய வங்கியியல் (Islamic Banking) என்பது?

இட்லிக் கடை வைப்பதுபோல், இம்பாலா கார் கம்பெனி நடத்துவதுபோல், வங்கித்தொழிலும் லாபத்தைக் குறிக்கோளாக வைத்துத்தான் நடத்தப்படுவது. நேர்மையாக, தெய்வத்துக்கு, மனச்சாட்சிக்கு விரோதம் இல்லாமல் வங்கித்தொழிலை சமூக நோக்கில் நடத்த வழி சொல்வது இஸ்லாமிய வங்கியியல். லாபத்தையும் இழப்பையும் பகிர்ந்துகொள்ள வழிசெய்யும் ஒரு சமுதாயவியல்  அது.

ஆசையே துன்பத்துக்குக் காரணம் என்றார் கௌதம புத்தர். வட்டியே வங்கித் துறையில் நேர்மையின்மைக்குக் காரணம் என்கிறது இஸ்லாமிய வங்கியியல். ஆக, இஸ்லாமிக் பேங்கிங்கின் ஆத்திசூடி ‘வட்டி வாங்காதே வழங்காதே’ என்று தொடங்குகிறது. இந்த அரிச்சுவடியை எட்டாம் நூற்றாண்டிலேயே எழுதிவிட்டார்கள் என்பது விசேஷம். ஆமா சார், இஸ்லாமிய வங்கியியல் உலகம் முழுக்கக் கடைப்பிடிக்கப்படுகிற ஐரோப்பிய பேங்கிங்குக்கு மிக மிக மூத்தது.

இஸ்லாமிய வங்கியியலின் ஆதார சுருதி ஷரியா. அல்-ஷரியா என்று புனிதச் சட்டமாகப் போற்றப்படுவது இது.

மனிதன் எப்படி நடக்கவேண்டும் என்ற இறைவனின் விருப்பம்தான் ஷரியா.  பல கோடி இஸ்லாமியர்கள் இப்படித்தான் நம்புகிறார்கள். காசு கொடுத்து வாங்கும் வங்கித் தொழிலா, கையில் ஆயுதம் எடுத்து யுத்தம் புரியும் போர்த் தொழிலா, சுற்றுச் சூழலா, சமுதாய முன்னேற்றமா, ஷரியா தொடாத துறையே இல்லை.

ஷரியாவில் காணப்படும் வர்த்தகம் பற்றிய விதிகள் இஸ்லாமிய வங்கியியலில் முழுமையாகக் கையாளப்பட்டுள்ளன.

இந்த விதிமுறைகள் ஃபிக் அல்-முவாமலத் (Fiqh al-Muamalat) அதாவது, கொடுக்கல் வாங்கல் பற்றிய இஸ்லாம் மார்க்க விதிகள் என்று அழைக்கப்படும்.  இந்த விதிகளில் ஏதாவது ஒண்ணு ரெண்டை சாய்ஸில் விட்டாலும் அது இஸ்லாமிக் பேங்கிங் இல்லை, இல்லை இல்லவே இல்லை.

சரி, ஷரியா எங்கே இருந்து வந்தது?

இஸ்லாமிய மதநூல் புனித குரான் ஷரியாவுக்கு ஊற்றுக்கண். ஷரியாவின் இன்னொரு கண்ணாக விளங்குவது நபிகள் நாயகம் அவர்களின் முழு வாழ்க்கையுமேதான். அவர் பேசியது, போதித்தது, வாழ்ந்து காட்டியது இவை எல்லாவற்றையும் சித்திரிக்கும் ஹடித் (Hadith) என்ற வாழ்க்கைக் குறிப்புகள் இவை.

ஷரியா என்றால், ‘தாகம் தீர்க்கும் குளிர்நீர் ஊற்றுக்கு இட்டுச் செல்லும் பாதை’ என்று வெண்தாடியைத் தடவிக்கொண்டு நீண்ட சொல் விளக்கம் தருவார்கள் மார்க்க அறிஞர்கள். மரபு சார்ந்த… என்ன மரபு சார்ந்த வேண்டிக் கிடக்கு… ஐரோப்பிய தொழில் தர்மம்தான் நம் மரபாச்சே, ஐரோப்பிய  வங்கியியல் அண்மைக் காலத்தில், அதாவது கி.பி. 2008-ல் உலக அளவிலே பொருளாதார நெருக்கடிக்கு மூல காரணமாக இருந்தபோது, எத்தைத் தின்னால் பித்தம் தீரும், இந்த நிதிநிலை முடக்குவாதம் குணப்படும் என்று உலக வங்கியியல் அறிஞர்கள் அறிவுத் தாகத்தோடு அலைந்தார்கள். அப்போது அவர்களுக்குக் ‘குளிர்நீர் ஊற்றாக’ தட்டுப்பட்டது ஷரியாவும் இஸ்லாமிய வங்கியியலும்தான். நெஞ்சில் கையை வைத்துச் சொல்லச் சொன்னால் ஜார்ஜ் புஷ்கூட இதை மறுக்காமல், மறக்காமல் சொல்வார். எதுக்கும் இங்கிலீஷில் கேட்டுப் பார்க்கவும்.

ஷரியாவை நாம் புரிந்துகொள்ளும் சௌகரியத்துக்காக ஐந்து பகுதிகளாகப் பிரிக்கலாம்.

1)    மதம் சார்ந்த வழிபாட்டு நெரிமுறைகள் பற்றிய இபாதா (ibadah)

2)    (ஏற்கனவே பார்த்த) முவாமலத் – கொடுக்கல் வாங்கல் விதிகள் (mu’amalat)

3)    நீதி, பண்பாடு பற்றிச் சொல்லும் ஆதாப் (adab)

4)    நம்பிக்கைகள் பற்றிய லிதிகாதத் (i’tiqadat)

5)    ஷரியாவைக் கடைப்பிடிக்காவிட்டால் விதிக்கப்படவேண்டிய தண்டனைகள் பற்றிய உகுபத் (uqubat)

ஒரு நொடியில் இருந்து ஒரு முழு வாழ்க்கை வாழ்ந்து முடித்து அடங்குகிறது வரையான காலத்துக்குத் தேவையான சகல விதிமுறைகளும் ஷரியாவில் உண்டு. இதில் சொல்லப்படாத ஏதாவது சம்பந்தமாக வழிகாட்டுதல் வேண்டியிருந்தால் இஸ்லாம் மூன்று விதங்களில் அதற்குத் தீர்வு காணலாம் என்று வகுத்திருக்கிறது.

1)    அறிஞர்கள் கூடி ஆலோசித்து வழங்கும் பெரும்பான்மைத் தீர்வு

2)    ஒற்றை இஸ்லாமியப் பேரறிஞர் அலசி ஆராய்ந்து வழங்கும் தீர்ப்பு

3)    பழக்க வழக்கத்தின் அடிப்படையில் வழங்கப்படும் தீர்வு

தீர்வு வழங்கும்போது ஒன்றே ஒன்றை மனத்தில் இருத்திக்கொண்டால் போதும் – புனித குரானில் சொல்லியிருப்பதற்கு மாறாக அது இருக்கக்கூடாது.

ஷரியாவில் இருந்து பெறப்பட்ட இஸ்லாமிய வங்கியியல் விதிமுறைகள் பற்றி சிறு குறிப்பு வரைக என்றால் அடுத்த ஆறு பாராவையும் கனகம்பீரமாகச் சொல்லலாம்.

பணத்தைக் கொடுத்து வாங்கி, அதாவது ‘வாடகைக்கு விடும்போது’ (renting of money) அதற்குக் கூலி வாங்குவது பாவம். அந்தக் கூலிதான் வட்டி. இஸ்லாம் மொழிநடையில் வட்டி என்பது ‘ரிபா’ (Riba). பாவம் என்பது ‘ஹராம்’ (Haram).

ரிபா …சாரி’பா, அது ஹராம் நெம்பர் ஒன்.

ஷரியா தடைவிதித்த தொழில்களில் பணத்தை முடக்குவதும், அவற்றை எடுத்து நடத்தி லாபம் பார்ப்பதும்கூட ஹராம். போதைப் பொருள்கள், மது, சூது இப்படி எத்தனையோ இந்த ஹராம் பட்டியலில் உண்டு. அரசியல் இல்லை.

புனித குரான் சொல்கிறது, ‘இறைவன் வணிகம் நடத்த அனுமதித்துள்ளான். ஆனால் ரிபாவுக்குத் தடை விதித்திருக்கிறான்.’

சவாலைச் சமாளிக்காமல் சம்பாத்தியம் இல்லை (There is no reward without taking any risk) – இதுவும் இஸ்லாமிய வங்கியியலின் இன்னொரு அம்சம்தான்.

இந்தச் சவாலும் சம்பாத்தியமும் உழைப்பு, முதலீடு ரெண்டுக்கும் பொருந்தும். உழைத்து, உழைப்பின் வெற்றியை அடைகிற சவாலைச் சந்திக்கும் தொழிலாளியும், நேர்மையாக முதலீடு செய்து லாபம் ஈட்டும் முதலாளியும் ஷரியாவின் கண்களில்  ஒரேபோல!

இன்ஷா அல்லா, அடுத்த வாரம் தொடரலாம்.

நன்றி:- இரா. முருகன்

நன்றி:-http://www.tamilpaper.net/?category_name=%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF

நன்றி:- http://onameen.blogspot.com/

வங்கி மைனஸ் வட்டி (இஸ்லாமிய வங்கி) Part-01 இரா. முருகன்

வங்கி மைனஸ் வட்டி (இஸ்லாமிய வங்கி) Part-02 இரா. முருகன்

வங்கி மைனஸ் வட்டி (இஸ்லாமிய வங்கி) Part-03 இரா. முருகன்

வங்கி மைனஸ் வட்டி (இஸ்லாமிய வங்கி) Part-04 இரா. முருகன்

வங்கி மைனஸ் வட்டி (இஸ்லாமிய வங்கி) Part-05 இரா. முருகன்

வங்கி மைனஸ் வட்டி (இஸ்லாமிய வங்கி) Part-06 இரா. முருகன்

வங்கி மைனஸ் வட்டி (இஸ்லாமிய வங்கி) Part-07 இரா. முருகன்