தொகுப்பு

Posts Tagged ‘கிரீன் சுண்டல்’

30 வகை சுண்டல்-புட்டு சுவையரசி சாந்தி விஜயகிருஷ்ணன்


சுண்டல், புட்டு என்று அசத்தியிருக்கும் ‘சுவையரசி’ சாந்தி விஜயகிருஷ்ணன், ”விதம்விதமான… அதேசமயம், சத்து நிறைந்த சுண்டல், புட்டுகள் இவை. இதையெல்லாம் தினம் ஒன்றாக சமைத்துக் கொடுத்து… குட்டீஸ்களை மட்டுமல்ல… பெரூஸ்களையும் நீங்கள் குஷிப்படுத்தலாம்” என்று உற்சாகம் பொங்கச் சொல்கிறார்.

தொடரட்டும் இந்த உற்சாகம்… உங்கள் இல்லங்களிலும்!

சம்பா கோதுமை சுண்டல்

தேவையானவை: சம்பா கோதுமை – அரை கப், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், எண்ணெய் – தலா ஒரு டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு – 2 டீஸ்பூன், கடுகு, பெருங்காயத்தூள் – தலா கால் டீஸ்பூன், உளுத்தம்பருப்பு – அரை டீஸ்பூன், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, தேங்காய் துருவல் – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: சம்பா கோதுமையை முதல் நாள் இரவே நன்றாகக் களைந்து ஊற வைக்கவும். மறுநாள், குக்கரில் உப்பு சேர்த்து வேக விட்டு, தண்ணீரை வடித்துவிடவும். கடாயில் எண்ணெய் விட்டு… கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, பச்சை மிளகாய், கொத்தமல்லி, தேங்காய் துருவல், பெருங்காயத்தூள் சேர்த்து வறுக்கவும். பிறகு, வேக வைத்த சம்பா கோதுமையை அதில் போட்டுக் கிளறவும். கடைசியாக எலுமிச்சைச் சாறு விட்டுக் கிளறி, இறக்கி பரிமாறவும்.

சிவப்பரிசி புட்டு

தேவையானவை: கைக்குத்தல் அரிசி மாவு – ஒரு கப், நெய் – 2 டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன், பூரா சர்க்கரை (பெரிய மளிகை கடைகளில் கிடைக்கும்) – கால் கப், கொப்பரை துருவல் – ஒரு டேபிள்ஸ்பூன், பச்சைக் கற்பூரம் – ஒரு சிட்டிகை.

செய்முறை: மாவில் மிதமான சுடுநீரைத் தெளித்துப் பிசிறி, வெள்ளைத் துணியில் மூட்டை கட்டி, ஆவியில் வேக வைக்கவும். 10 நிமிடம் கழித்து எடுத்து, ஒரு தட்டில் ஆறவிட்டு, கைகளால் நன்றாக தேய்த்து விடவும். இந்த மாவில் கொப்பரைத் துருவல், பூரா சர்க்கரை, ஏலக்காய்த்தூள், பச்சைக் கற்பூரம், நெய் சேர்த்து நன்றாகக் கலந்து வைக்கவும்.

பூரா சர்க்கரை கிடைக்கவில்லையெனில் சாதா சர்க்கரையிலும் இந்த புட்டை செய்யலாம்.

நட்ஸ் சுண்டல்

தேவையானவை: முந்திரித் துண்டுகள், பாதாம், வேர்க்கடலை, பிஸ்தா, பனீர் துண்டுகள் – தலா கால் கப், எண்ணெய் – 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 1, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: முந்திரி, பாதாம், வேர்க்கடலை, பிஸ்தா ஆகியவற்றை தனித்தனியே வெறும் கடாயில் வறுத்து எடுத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு… மிளகாயைக் கிள்ளிப் போடவும். காரம் எண்ணெயில் இறங்கியதும், மிளகாயைத் தனியே எடுத்து விடவும். அந்த எண்ணெயில் பனீர் துண்டுகளைப் போட்டு மிதமான தீயில் வறுக்கவும். பிறகு, வறுத்து வைத்துள்ள நட்ஸ்களை ஒவ்வொன்றாகச் சேர்த்து, உப்பு போட்டு நன்கு கிளறி இறக்கவும்.

மிளகாய் காரத்துக்குப் பதிலாக மிளகுத்தூள் சேர்த்தும் செய்யலாம்.

சீரகசம்பா புட்டு

தேவையானவை: சீரக சம்பா அரிசி – ஒரு கப், சர்க்கரை – கால் கப், நெய் – 2 டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன், உப்பு – ஒரு சிட்டிகை, வறுத்த முந்திரித் துண்டுகள் – சிறிதளவு.

செய்முறை: அரிசியை வெறும் கடாயில் சிறிது சிறிதாகப் போட்டு சிவக்க வறுத்து, மிக்ஸியில் ரவை போல் பொடித்துக் கொள்ளவும். இதில் உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு பிசிறி ஆவியில் வேக வைக்கவும். சர்க்கரையில் சிறிது தண்ணீர் விட்டு, 2 கம்பி பதத்தில் பாகு காய்ச்சி, வேக வைத்த அரிசி ரவை, நெய், ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரித் துண்டுகளை அதில் போட்டுக் கலக்கினால்… சீரகசம்பா புட்டு தயார்!

பழ இனிப்பு சுண்டல்

தேவையானவை: பச்சைப் பயறு – அரை கப், ஆப்பிள் துண்டுகள் – கால் கப், தேன் – ஒரு டேபிள்ஸ்பூன், மிளகுத்தூள் – கால் டீஸ்பூன், உப்பு – ஒரு சிட்டிகை.

செய்முறை: பயறை முந்தைய நாள் இரவே ஊற வைத்து, மறுநாள் உப்பு சேர்த்து அரை வேக்காடு வேக வைக்கவும். இதனுடன் ஆப்பிள் துண்டுகள், தேன், மிளகுத்தூள் கலந்து பரிமாறவும்.

கேழ்வரகு மாவு புட்டு

தேவையானவை: கேழ்வரகு மாவு – ஒரு கப், தேங்காய் துருவல் – ஒரு டேபிள்ஸ்பூன், ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன், நெய் – 2 டீஸ்பூன், சர்க்கரை – கால் கப், உப்பு – ஒரு சிட்டிகை.

செய்முறை: கேழ்வரகு மாவை வெறும் கடாயில் போட்டு, மிதமான தீயில் வறுத்து, தண்ணீர் தெளித்துப் பிசிறி ஆவியில் வேகவிடவும். பிறகு, நன்றாக கைகளால் தேய்த்து கட்டியில்லாமல் சலிக்கவும். அந்த மாவுடன் தேங்காய் துருவல், ஏலக்காய்த்தூள், உப்பு, நெய், சர்க்கரை சேர்த்து நன்றாகக் கலந்து வைக்கவும்.

நேஷனல் சுண்டல்

தேவையானவை: வெள்ளை சோயா பீன்ஸ், பச்சைப் பட்டாணி – தலா அரை கப், சிவப்பு ராஜ்மா – கால் கப், பச்சை மிளகாய் – 2, சீரகம் – அரை டீஸ்பூன், தேங்காய் துருவல் – ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய் – 2 டீஸ்பூன், கடுகு, பெருங்காயத்தூள் – தலா கால் டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: சோயா பீன்ஸ், ராஜ்மா இரண்டையும் முந்தைய நாள் இரவே தனித்தனியாக ஊற வைக்கவும். மறுநாள் காலையில் இரண்டையும் ஒன்றாக வேக விடவும். பச்சை மிளகாய், சீரகம், தேங்காய் துருவல் மூன்றையும் சேர்த்து அரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு… கடுகு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை தாளித்து, பச்சைப் பட்டாணியை போட்டு மிதமான தீயில் வதக்கவும். அதிலேயே சோயா பீன்ஸ், ராஜ்மா, அரைத்து வைத்திருக்கும் மசாலா, உப்பு ஆகியவற்றை வரிசையாகச் சேர்த்து வதக்கினால், மூவண்ணக் கொடி நிறத்தில்… நேஷனல் சுண்டல் தயார்.

பருப்பு ரவை புட்டு

தேவையானவை: துவரம்பருப்பு – முக்கால் கப், வெல்லம் – கால் கப், ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன், நெய் – ஒரு டேபிள்ஸ்பூன், கீறிய தேங்காய் பல், உப்பு – சிறிதளவு.

செய்முறை: துவரம்பருப்பை சிறு ரவை போல் பொடித்து கடாயில் கொட்டி, மிதமான தீயில் வறுக்கவும். இதில் சிறிது உப்பு சேர்த்து தண்ணீர் விட்டுக் கலந்து ஆவியில் வேக வைத்து எடுத்து, உதிர்த்துக் கொள்ளவும். வெல்லத்தில் சிறிது தண்ணீர் விட்டுக் கொதிக்க வைத்து, தூசு தும்பு இல்லாமல் வடிகட்டி, பாதியாகக் காய்ச்சவும். கீறிய தேங்காய் பல், ஏலக்காய்த்தூள், வேக வைத்து உதிர்த்த துவரம்பருப்பு ரவை ஆகியவற்றை அதில் சேர்த்து, நெய்யை விட்டு நன்றாகக் கலந்து வைக்க… பருப்பு ரவை புட்டு ரெடி!

சேனை சுண்டல்

தேவையானவை: சிறிய துண்டுகளாக நறுக்கிய சேனை – ஒரு கப், புளி – கொட்டை பாக்களவு, மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள், மஞ்சள்தூள் – தலா கால் டீஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: புளியை 2 கப் தண்ணீரில் கரைத்துக் கொள்ளவும். இதில் மஞ்சள்தூள், உப்பு, பெருங்காயத்தூள், மிளகாய்த்தூள் சேர்த்துக் கொதிக்க வைத்து, சேனைத் துண்டுகளை போட்டு வேகவிடவும். முக்கால் பதத்தில் வெந்ததும், வடிதட்டில் கொட்டி, தண்ணீரை வடிய விடவும். இந்த சேனைத் துண்டுகளை எண்ணெயில் போட்டு மொறுமொறுப்பாக பொரித்தெடுக்கவும்.

“இதென்ன… ‘[பொரியலை’ப் போய் ‘சுண்டல்’ங்கிறாங்களே” என்கிறீர்களா? நவராத்திரி சமயத்தில் இதை ‘சுண்டல்’ என்றே விநியோகிப்பார்கள்.

புழுங்கலரிசி புட்டு

தேவையானவை: புழுங்கலரிசி – ஒன்றரை கப், வெல்லம் – அரை கப், நெய் – ஒரு டேபிள்ஸ்பூன், துவரம்பருப்பு – ஒரு டீஸ்பூன், பொடியாக நறுக்கிய தேங்காய் துண்டுகள் – ஒரு டேபிள்ஸ்பூன், ஏலக்காய்த்தூள், மஞ்சள்தூள் – தலா கால் டீஸ்பூன், உப்பு – ஒரு சிட்டிகை, முந்திரித் துண்டுகள் – சிறிதளவு.

செய்முறை: புழுங்கலரிசியை சிறிது சிறிதாக கடாயில் போட்டு சிவக்க வறுத்து, மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும். இதனுடன் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து லேசான சூட்டில் தண்ணீர் விட்டு தளர்வாகக் கலந்து, துணியில் போட்டு மூட்டை கட்டி, ஆவியில் வேகவிடவும். துவரம்பருப்பை முக்கால் பதத்துக்கு வேக வைத்து, கைகளால் கட்டியில்லாமல் மசிக்கவும். கடாயில் வெல்லத்தைப் போட்டு, சிறிது தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து, கொதித்ததும் தூசு, தும்பு இல்லாமல் வடிகட்டவும். இதைத் திரும்பவும் கொதிக்க வைத்து, கெட்டிப் பாகாகக் காய்ச்சி, மசித்து வைத்திருக்கும் துவரம்பருப்பு, பொடித்து வேக வைத்துள்ள புழுங்கல் அரிசி மாவு, ஏலக்காய்த்தூள் ஆகியவற்றைப் போட்டு நன்றாகக் கிளறவும். முந்திரி, தேங்காய் துண்டுகளை நெய்யில் வறுத்து, அதில் கொட்டிக் கிளறவும். புழுங்கலரிசி புட்டு தயார்!

இது, இரண்டு நாட்களானாலும் கெடாமல் இருக்கும்.

நாட்டு சோள சுண்டல்

தேவையானவை: நாட்டு சோளம் – அரை கப், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, தனியா – தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 3, கடுகு, பெருங்காயத்தூள் – தலா கால் டீஸ்பூன், எண்ணெய் – 2 டீஸ்பூன், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: சோளத்தை முந்தைய நாள் இரவே ஊற வைத்து, மறுநாள் உப்பு சேர்த்து குக்கரில் வேக விடவும். ஒரு டீஸ்பூன் எண்ணெயில் கடலைப்பருப்பு, தனியா, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் போட்டு வறுத்து பொடித்துக் கொள்ளவும். மீதமுள்ள எண்ணெயை கடாயில் விட்டு… கடுகு, பெருங்காயத்தூள் தாளிக்கவும். வேக வைத்த சோளத்தை அதில் சேர்த்து, சிறிது உப்பு போட்டு, பொடித்த மசாலாவை சேர்க்கவும். கடைசியில் கொத்தமல்லி தூவி இறக்கவும்.

விருப்பப்பட்டால், எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கொள்ளலாம்.

பழ புட்டு

தேவையானவை: அரிசி – ஒரு கப், தேங்காய் துருவல் – அரை கப், சர்க்கரை – ஒரு டேபிள்ஸ்பூன், நேந்திரம் பழம் – 2, ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன், உப்பு – சிறிதளவு.

செய்முறை: அரிசியை ஒரு மணி நேரம் ஊற வைத்து, பத்து நிமிடம் நிழலில் உலர்த்தி மிக்ஸியில் மாவாக அரைக்கவும். இதில் கொதிநீர் விட்டு, உப்பு போட்டுப் பிசிறி, ஏலக்காய்த்தூள், தேங்காய் துருவல், சர்க்கரை சேர்த்துக் கலக்கவும். பிறகு, புட்டுக் குழாயில் அழுத்தமாக அடைத்து, ஆவியில் வேக வைத்து எடுக்கவும். நேந்திரம் பழத்தைப் பொடியாக நறுக்கி, இந்தப் புட்டுடன் கலந்து சாப்பிடவும்.

ஜவ்வரிசி சுண்டல்

தேவையானவை: நைலான் (பெரிய) ஜவ்வரிசி – ஒரு கப், வறுத்த – வேர்க்கடலை – கால் கப், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, தேங்காய் துருவல் – சிறிதளவு, கீறிய பச்சை மிளகாய் – 2, எண்ணெய் – 2 டீஸ்பூன், கடுகு, பெருங்காயத்தூள் – தலா கால் டீஸ்பூன், உளுத்தம்பருப்பு – அரை டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: ஜவ்வரிசியை 24 மணி நேரம் நன்றாக ஊற வைக்கவும். வேர்க்கடலையை மிக்ஸியில் ஒன்றிரண்டாக பொடிக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு… கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, பச்சை மிளகாய், பெருங்காயத்தூள், தேங்காய் துருவல் சேர்த்து வதக்கி, ஊறிய ஜவ்வரிசி, உப்பு, பொடித்த வேர்க்கடலை, கொத்தமல்லி ஆகியவற்றைச் சேர்த்து வதக்கி, கிளறி எடுக்கவும். விருப்பப்பட்டால் சிறிது காராபூந்தி சேர்த்துக் கொள்ளலாம்.

சிவப்பு அவல் புட்டு

தேவையானவை: சிவப்பு அவல் – ஒரு கப், அச்சு வெல்லம் – கால் கப், தேங்காய் துருவல் – ஒரு டேபிள்ஸ்பூன், நெய் – 2 டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன்.

செய்முறை: அவலை நெய்யில் நன்றாக வறுக்கவும். அச்சு வெல்லத்தைத் தூளாக்கி, அவலுடன் சேர்த்து, மிக்ஸியில் பொடிக்கவும். இதனுடன், தேங்காய் துருவல், ஏலக்காய்த்தூள் சேர்த்து மீண்டும் ஒரு முறை சுற்றி எடுக்கவும்.

விருப்பப்பட்டால், முந்திரியை வறுத்துச் சேர்க்கலாம்.

காராமணி மசாலா சுண்டல்

தேவையானவை: காராமணி – ஒரு கப், துருவிய கேரட், துருவிய மாங்காய் – தலா கால் கப், அரைத்த இஞ்சி, பச்சை மிளகாய், கொத்தமல்லி விழுது – ஒரு டீஸ்பூன், சாட் மசாலாத்தூள் – அரை டீஸ்பூன், பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி – சிறிதளவு, எண்ணெய் – 2 டீஸ்பூன், கடுகு, சீரகம் – தலா கால் டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: காராமணியை முந்தைய நாள் இரவே ஊற வைத்து, மறுநாள் குக்கரில் வைத்து குழையாமல் வேகவிடவும். கடாயில் எண்ணெய் விட்டு… கடுகு, சீரகம் தாளித்து துருவிய கேரட், மாங்காய், போட்டு வதக்கி, வேக வைத்த காராமணி, அரைத்த இஞ்சி, பச்சை மிளகாய், கொத்தமல்லி விழுது, சாட் மசாலாத்தூள், உப்பு சேர்த்து வதக்கவும். பிறகு, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, வெங்காயத்தை தூவி எடுக்கவும்.

காரசார புட்டு

தேவையானவை: புழுங்கல் அரிசி – ஒரு கப், காய்ந்த மிளகாய் – 4, தனியா – 2 டீஸ்பூன், புளி – கொட்டைப்பாக்களவு, எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன், கடுகு, பெருங்காயத்தூள் – தலா கால் டீஸ்பூன், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு – தலா அரை டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: புழுங்கலரிசியை இரண்டு மணி நேரம் ஊற வைத்து, காய்ந்த மிளகாய், உப்பு, தனியா, புளி சேர்த்து கரகரப்பாக அரைக்கவும். இதை, வெள்ளைத் துணியில் மூட்டைக் கட்டி, ஆவியில் வேக வைத்து உதிர்த்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு… கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை தாளிக்கவும். வேக வைத்து உதிர்த்த கலவையை அதில் சேர்த்துக் கிளறி இறக்கினால் காரசார புட்டு தயார்.

ராஜ்மா இனிப்பு சுண்டல்

தேவையானவை: ராஜ்மா – ஒரு கப், சர்க்கரை சேர்த்த கோவா – கால் கப், கொப்பரை துருவல் – ஒரு டேபிள்ஸ்பூன், ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன், நெய் – 2 டீஸ்பூன், உப்பு – சிறிதளவு.

செய்முறை: ராஜ்மாவை முந்தைய நாள் இரவே ஊற வைத்து, மறுநாள் உப்பு சேர்த்து, குக்கரில் வேக விடவும். கடாயில் நெய் விட்டு, வேக வைத்த ராஜ்மா, கோவா, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறி, கொப்பரைத் துருவலைத் தூவி இறக்கவும்.

சாக்லேட் சுண்டல்

தேவையானவை: நான்கு மணி நேரம் ஊற வைத்து, முக்கால் பதத்தில் வேக வைத்த ஏதேனும் ஒரு வகைப் பயறு – ஒரு கப், சாக்லேட் பவுடர், பால் பவுடர் – தலா ஒரு டேபிள்ஸ்பூன், வெண்ணெய் – ஒரு டீஸ்பூன், வறுத்த கசகசா – 2 டீஸ்பூன், வறுத்த பாதாம், முந்திரி – சிறிதளவு.

செய்முறை: கடாயில் வெண்ணெயைப் போட்டு, அதில் சாக்லேட் பவுடரை சேர்க்கவும். லேசாக உருகியதும்… வேக வைத்த தானியத்தை அதில் சேர்க்கவும். இரண்டும் நன்றாக கலந்து வரும்போது, பால் பவுடர் சேர்த்துக் கிளறவும். கடைசியாக… வறுத்த கசகசா, பாதாம், முந்திரி சேர்த்துக் கலந்து இறக்கவும்.

கருப்பட்டி புட்டு

தேவையானவை: பச்சரிசி – ஒரு கப், கருப்பட்டி – கால் கப், தேங்காய் துருவல் – ஒரு டீஸ்பூன், ஏலக்காய்த்தூள், மஞ்சள்தூள் – தலா கால் டீஸ்பூன், நெய் – ஒரு டீஸ்பூன், உப்பு, முந்திரி துண்டுகள் – சிறிதளவு.

செய்முறை: பச்சரிசியை சிவக்க வறுத்து மிக்ஸியில் பொடிக்கவும். இதனுடன் உப்பு, மஞ்சள்தூள்சேர்த்து தண்ணீர் விட்டுக் கலந்து, ஆவியில் வேக வைத்து உதிர்த்துக் கொள்ளவும். கருப்பட்டியை கடாயில் போட்டு, சிறிது தண்ணீர் விட்டுக் கொதிக்க விடவும். கெட்டியானதும் இறக்கி… தேங்காய் துருவல், ஏலக்காய்த்தூள், நெய் சேர்த்து, வேக வைத்த பச்சரிசி மாவை அதில் போட்டு நன்றாகக் கலந்து, முந்திரி துண்டு களைத் தூவி பரிமாறவும்.

சிக்கி முக்கி சுண்டல்

தேவையானவை: வறுத்துப் பொடித்த வேர்க்கடலை, வறுத்த எள், ஒன்றிரண்டாகப் பொடித்த பொட்டுக்கடலை, கோதுமை மாவு, வறுத்த ரவை – தலா கால் கப், கடுகு, மிளகுத்தூள், பெருங்காயத்தூள் – தலா கால் டீஸ்பூன், எண்ணெய் – 2 டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கடாயில் தண்ணீரைக் கொதிக்க வைத்து, கோதுமை மாவு, எள், வேர்க்கடலைப் பொடி, ரவை, பொட்டுக்கடலைப் பொடி, மிளகுத்தூள், உப்பு ஆகியற்றை அதில் சேர்த்து… ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டுக் கெட்டியாகக் கிளறவும். பிறகு, சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். இன்னொரு கடாயில் எண்ணெய் விட்டு… கடுகு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை தாளித்து, உருட்டி வைத்துள்ள கலவையைப் போட்டு நன்றாக வறுபடும் அளவுக்குக் கிளறி இறக்கினால்… சிக்கிமுக்கி சுண்டல் தயார்.

மாவு மசாலா சுண்டல்

தேவையானவை: கடலை மாவு, ராகி மாவு, பயத்தம் மாவு – தலா கால் கப், பதப்படுத்தப்பட்ட பச்சரிசி மாவு – அரை கப், கடுகு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள் – தலா கால் டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் – அரை டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு – ஒரு டீஸ்பூன், தேங்காய் துருவல், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு, எண்ணெய் – 2 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கடாயில் தண்ணீர் விட்டுக் கொதித்ததும்… மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு சேர்க்கவும். கொடுக்கப்பட்டுள்ள மாவுகளை ஒன்றாகக் கலந்து, அதில் போட்டுக் கிளறி இறக்கவும். இந்த மாவை மெல்லிய நீள உருளை வடிவில் உருட்டி ஆவியில் வேகவிடவும். ஒவ்வொன்றாக எடுத்து, சிறு பட்டன் வடிவில் வெட்டிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு… கடுகு, பெருங்காயத்தூள் தாளித்து… தேங்காய் துருவல் சேர்த்து, மாவு பட்டன்களைப் போட்டு வதக்கி, எலுமிச்சைச் சாறு விட்டுக் கிளறி, கொத்தமல்லி தூவி இறக்கவும்.

சோள ரவை புட்டு

தேவையானவை: சோள ரவை – முக்கால் கப், சர்க்கரை – கால் கப், ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன், நெய், தேங்காய் துருவல் – தலா ஒரு டேபிள்ஸ்பூன், வறுத்த முந்திரி – சிறிதளவு.

செய்முறை: கடாயில் ஒரு டீஸ்பூன் நெய் விட்டு, சோள ரவையை சிவக்க வறுத்து, கொதிக்கும் நீரை விட்டு பிசிறி மூடி வைக்கவும். சிறிது நேரம் ஊறியதும் நன்றாகத் தேய்த்து, ஏலக்காய்த்தூள், தேங்காய் துருவல் சேர்த்துக் கலந்து வைக்கவும். சர்க்கரையைப் பாகாகக் காய்ச்சி, அதில் நெய் சேர்த்து, கலந்து வைத்துள்ள ரவையைப் போட்டுக் கிளறி, வறுத்த முந்திரியைச் சேர்த்தால்… சோள ரவை புட்டு ரெடி!

ஓட்ஸ் புட்டு

தேவையானவை: ஓட்ஸ் – ஒரு கப், சர்க்கரை – கால் கப், நெய் – ஒரு டேபிள்ஸ்பூன், ஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை, முந்திரித் துண்டுகள் – சிறிதளவு, தேங்காய் துருவல் – ஒரு டீஸ்பூன்.

செய்முறை: நெய்யில் ஓட்ஸ்ஸை போட்டு சிவக்க வறுத்து, ஆறியதும் மிக்ஸியில் பொடித்து, தேங்காய் துருவல், ஏலக்காய்த்தூள், சர்க்கரை சேர்த்து மேலும் இரண்டு முறை சுற்றி எடுக்கவும். சிறிது நெய்யில் முந்திரித் துண்டுகளை வறுத்து தூவவும்.

ஐந்து நிமிடத்தில் செய்யக் கூடிய அசத்தல் புட்டு இது.

சோயா நக்கெட் சுண்டல்

தேவையானவை: சோயா உருண்டைகள் – 10, கறுப்பு உளுந்து – அரை கப், எண்ணெய் – 2 டீஸ்பூன், கடுகு, பெருங்காயத்தூள் – தலா கால் டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.

வறுத்துப் பொடிக்க: துவரம்பருப்பு, தனியா – தலா ஒரு டீஸ்பூன், மிளகு – அரை டீஸ்பூன், வெந்தயம், சீரகம் – தலா கால் டீஸ்பூன்.

செய்முறை: உளுந்தை 4 மணி நேரம் ஊற வைத்து, குக்கரில் ஒரு விசில் வரும் வரை வேகவிடவும். வறுக்கக் கொடுத்துள்ளவற்றை வறுத்துப் பொடிக்கவும். சோயா உருண்டைகளை கொதிநீரில் போட்டு, மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு… கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் தாளித்து, பொடித்த சோயாவை சேர்க்கவும். வேக வைத்த உளுந்து, பொடித்து வைத்திருக்கும் மசாலா மற்றும் உப்பு ஆகியவற்றையும் அதில் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

குயிக் எனர்ஜி சுண்டல்

தேவையானவை: பச்சை பயறு – அரை கப், துருவிய நெல்லிக்காய் – ஒரு டீஸ்பூன், பொடியாக நறுக்கிய பப்பாளி, வெள்ளரிக்காய் மற்றும் தக்காளி – சிறிதளவு, துருவிய இஞ்சி – அரை டீஸ்பூன், பொடியாக நறுக்கிய கொத்த மல்லி, புதினா, காய்ந்த மிளகாய் (பொடித்தது) – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: பச்சை பயறை முந்தைய நாள் இரவே ஊற வைத்து மறுநாள் உப்பு சேர்த்து அரை வேக்காடு வேக வைக்கவும். அதனுடன் துருவிய நெல்லிக்காய், நறுக்கிய பப்பாளி, வெள்ளரி, தக்காளி, இஞ்சி, கொத்தமல்லி, புதினா, காய்ந்த மிளகாய் சேர்த்துக் கலக்கினால்… குயிக் எனர்ஜி சுண்டல் ரெடி!

கிரீன் சுண்டல்

தேவையானவை: பச்சைநிற கொண்டைக் கடலை (டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் கிடைக்கும்) – ஒரு கப், பொடியாக நறுக்கிய ஏதேனும் ஒரு கீரை – கால் கப், பச்சை மிளகாய் – 2, எண்ணெய் – 2 டீஸ்பூன், கடுகு, பெருங்காயத்தூள் – தலா கால் டீஸ்பூன், சீஸ் – ஒரு துண்டு, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: பச்சைநிற கொண்டைக் கடலையை முந்தைய நாள் இரவே ஊற வைத்து, மறுநாள் குக்கரில் வேக விடவும். பச்சை மிளகாயைக் கீறி வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு… கடுகு, பச்சை மிளகாய் தாளித்து, கீரையை சேர்த்து, பெருங்காயத்தூள் போட்டு வதக்கவும். வேக வைத்த கடலையை அதில் சேர்த்து, உப்பு போட்டுக் கிளறி, துருவிய சீஸ் தூவி இறக்கவும்.

மிக்சட் புட்டு

தேவையானவை: கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு, கேழ்வரகு, கம்பு, சோளம், நாட்டு சோளம், புழுங்கல் அரிசி எல்லாவற்றையும் தனித்தனியே வறுத்து சேர்த்த கலவை – ஒரு கப், வெல்லம் – மாவின் அளவில் மூன்றில் ஒரு பங்கு, தேங்காய் துருவல் – சிறிதளவு, ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன், நெய் – 2 டீஸ்பூன், உப்பு, முந்திரி – சிறிதளவு.

செய்முறை: அரிசி உள்ளிட்ட அனைத்து தானியங்களையும் மிக்ஸியில் மாவாக அரைத்துக் கொள்ளவும். இதில் உப்பு போட்டு, கொதி தண்ணீர் விட்டு கலந்து ஆவியில் வேக விடவும். வெல்லத்தை அடுப்பில் வைத்து பாகாகக் காய்ச்சி, தேங்காய் துருவல், ஏலக்காய்த்தூள், வேக வைத்த மாவு ஆகியவற்றை சேர்த்துக் கலக்கவும். நெய்யில் முந்திரியை வறுத்து, அதில் சேர்த்தால் மிக்சட் புட்டு ரெடி!

உக்காரை

தேவையானவை: கடலைப்பருப்பு, பாசிபருப்பு – தலா கால் கப், தேங்காய் துருவல் – ஒரு டீஸ்பூன், வெல்லம் – முக்கால் கப், ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன், நெய் – 2 டீஸ்பூன், உப்பு – சிறிதளவு.

செய்முறை: பருப்புகளை அரை மணி நேரம் ஊற வைத்து, உப்பு சேர்த்து கரகரப்பாக அரைத்து, ஆவியில் வேக வைத்து, ஆறியதும் உதிர்த்துக் கொள்ளவும். வெல்லத்தில் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க வைத்து வடிகட்டி, பாகாகக் காய்ச்சவும். இதில் ஏலக்காய்த்தூள், நெய், தேங்காய் துருவல், உதிர்த்த பருப்புக் கலவையை சேர்த்து நன்றாகக் கலக்கவும். சுவையான உக்காரை தயார்!

கம்பு மாவு புட்டு

தேவையானவை: கம்பு மாவு – அரை கப், வெல்லம் – கால் கப், ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன், நெய் – 2 டீஸ்பூன், உப்பு – சிறிதளவு.

செய்முறை: கம்பு மாவுடன் உப்பு சேர்த்து கொதிக்கும் நீரை விட்டு நன்றாக பிசிறி, துணியில் மூட்டைகட்டி ஆவியில் வேகவிட்டு உதிர்த்துக் கொள்ளவும். வெல்லத்தில் தண்ணீர் விட்டுக் கொதிக்க வைத்து, வடிகட்டி, மீண்டும் அடுப்பில் வைத்து கொதிக்கவிட்டு பாகு பதம் வந்ததும், ஏலக்காய்த்தூள், நெய், வேக வைத்த மாவு சேர்த்து நன்றாகக் கலக்கவும். விருப்பப்பட்டால் தேங்காய் துருவல் சேர்த்துக் கொள்ளலாம்.

வெஜிடபிள் புட்டு

தேவையானவை: சர்க்கரைவள்ளிக் கிழங்கு (அ) வாழைக்காய் – 2, வெல்லம் – கால் கப், நெய் – ஒரு டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் – அரை டீஸ்பூன், உப்பு – ஒரு சிட்டிகை.

செய்முறை: சர்க்கரைவள்ளிக் கிழங்கு (அ) வாழைக்காயை முக்கால் பதத்தில் வேக வைத்து தோல் உரித்து மசித்துக் கொள்ளவும். வெல்லத்தில் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து வடிகட்டி பாகு காய்ச்சவும். அதில் நெய், உப்பு, ஏலக்காய்த்தூள், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், மசித்த கிழங்கு சேர்த்து நன்றாகக் கலக்க… வெஜிடபிள் புட்டு தயார்.

தொகுப்பு: ரேவதி, படங்கள்: வீ.நாகமணி

நன்றி:- சுவையரசி சாந்தி விஜயகிருஷ்ணன்

நன்றி:- அ.வி

மற்ற சமையல் படைப்புக்கள்

அட்டகாசமான சுவையில் 30 நாள்… 30 மசாலா குருமா! – ரேவதி சண்முகம்

30 நாள் 30 பொரியல் வாவ்! கலக்கல் வெரைட்டிங்க! – ரேவதி சண்முகம்.

30 வகை டயட் சமையல் வெரைட்டியா சாப்பிடலாம். வெயிட்டையும் குறைக்கலாம்.- கா.கதிரவன்

கோடையை குளிர்ச்சியாக்கும் ஜூஸ், ஸ்குவாஷ் மில்க் ஷேக்!-சமந்தகமணி

30 நாட்களுக்கும் தினம் ஒரு கலந்த சாதம் – சமையல் திலகம் ரேவதி சண்முகம்

PART-1 கிராமத்து கைமணம்! சோளச்சோறு சுக்கு மோர்க்குழம்பு கொள்ளு துவையல் – ரேவதி சண்முகம்

PART-2 கிராமத்து கைமணம்! நவதான்ய உருண்டை கம்புரொட்டி எள்ளுப்பொடி காராமணி கீரைத்தண்டு குழம்பு- ரேவதி சண்முகம்

PART-3 கிராமத்து கைமணம்! மாங்காய் பாசிப் பருப்பு பச்சடி பால் கொழுக்கட்டை காப்பரிசி – ரேவதி சண்முகம்

PART-4 கிராமத்து கைமணம்! முள் முருங்கை அடை, பாசிப்பருப்பு சீயம், சீம்பால் திரட்டு- ரேவதி சண்முகம்

PART-5 கிராமத்து கைமணம்! மரவள்ளிக் கிழங்கு புட்டு, தட்டைப் பயிறு அடை,கருப்பட்டி பணியாரம், உளுந்து பலகாரம் – ரேவதி சண்முகம்

பகுதி-06 கிராமத்து கைமணம்! பருப்பிட்ட பணியாரம், சர்க்கரைவள்ளிக் கிழங்கு சீயம், புழுங்கல் அரிசி கொழுக்கட்டை, பப்பாளிக்காய் வடை

பகுதி-07 கிராமத்து கைமணம் நவரத்தின குருமா, கருப்பட்டி ஆப்பம், ஜவ்வரிசி பொரி, நீர் கொழுக்கட்டை

பிரிவுகள்:30 வகை சுண்டல்-புட்டு குறிச்சொற்கள்:, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,