தொகுப்பு

Archive for the ‘டாக்டரிடம் கேளுங்கள்’ Category

டாக்டரிடம் கேளுங்கள் 21 [கால்களில் வலி, உள்ளங்கைகள் உள்ளங்கால்களில் வியர்வை, ஜிம்முக்குப் போக சரியான வயசு?]

பிப்ரவரி 22, 2013 5 பின்னூட்டங்கள்

சிவகுமார், தூத்துக்குடி.

 

”எனக்கு வயது 15. ஜிம்முக்குச் சென்று நல்ல உடல்வாகு அடைய வேண்டும் என்று நினைக்கிறேன். ஆனால், ஜிம்முக்குச் சென்றால், உடல் வளர்ச்சி பாதிக்கப்படும் என்று நண்பர்கள் சிலர் பயமுறுத்துகிறார்கள். இது உண்மையா? எந்த வயதில் இருந்து ஜிம்முக்குச் சென்று உடற்பயிற்சி செய்ய ஆரம்பிக்கலாம்?”

 

 

 

”உடலில் உள்ள கலோரிகள் எரிக்கப்பட்டு தசைகள் வலுப் பெறவும் அழகான உடல் அமைப்பு கிடைக்கவும் வழி செய்வதுதான் உடற்பயிற்சி. அதனால், ‘ஜிம்’ செல்வதற்கு வயது வரம்பு எதுவும் கிடையாது. ஆனால், ஒவ்வொரு வயதினரும் அவரவர் உடல்வாகுக்கு ஏற்ற உடற்பயிற்சிகளை மட்டுமே மேற்கொள்ள வேண்டும் என்பது இங்கே முக்கியம்.

உடற்பயிற்சிகளில், கார்டியாக் ஃபிட்னெஸ் (Cardiac fitness), ஏரோபிக்ஸ் (Aerobics), வெயிட் லிஃப்டிங் ட்ரெயினிங் (weight lifting training) என மூன்று விதங்கள் இருக்கின்றன. சைக்கிளிங், ரெகம்பென்ட் பைக் (Recumbent Bike), ட்ரெட் மில் (Treadmill) போன்ற பயிற்சிகள் கார்டியாக் ஃபிட்னெஸ் உடற்பயிற்சிகள். ஏரோபிக்ஸ் பயிற்சிகளில், உடம்பில் உள்ள அனைத்து மூட்டுகளுக்கும் அதன் அதன் அசைவுகளுக்குத் தகுந்தாற்போன்று (எடை எதுவும் இன்றி) பல்வேறு திசைகளில் பயிற்சி மேற்கொள்ளப்படும். வெயிட் லிஃப்டிங் பயிற்சிகளில், அதிகமான எடை தூக்கி உடற்பயிற்சி செய்வார்கள். 18 வயதில் இருந்து 21 வயது வரையிலும் உடம்பில் உள்ள எலும்புகளின் வளர்ச்சி அபரிமிதமாக இருக்கும். எனவே, இத்தகையப் பருவத்தில் இருப்பவர்கள், கார்டியாக் ஃபிட்னெஸ் மற்றும் ஏரோபிக்ஸ் பயிற்சிகளை மட்டுமே மேற்கொள்வது நல்லது!”

 

டி.முருகன், புதுக்கோட்டை.

”நான் போக்குவரத்துக் காவலராகப் பணிபுரிகிறேன். வயது 38. பணிநிமித்தமாக நாள் முழுக்க நின்றுகொண்டு இருக்க வேண்டிய சூழல். கால்களில் வலி இருக்கிறது. வெரிக்கோசிஸ் பாதிப்பாக இருக்கலாம் என்று பயமுறுத்துகிறார்கள். வெரிக்கோசிஸ் யாருக்கெல்லாம் வரும்?”

 

 

 

 

”பயப்பட வேண்டாம் நண்பரே…. இது சாதாரண கால் வலியாகக்கூட இருக்கலாம். பரிசோதனை செய்து பார்க்காமல், தீர்வு சொல்வது சரியான வழிமுறையாக இருக்காது. எனவே, முதலில் மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெறுங்கள்.

வெரிக்கோசிஸ் பாதிப்பு என்பது கெட்ட ரத்த நாளங்களில் ஏற்படும் பிரச்னை. எனவே, இந்தத் துறையில் உள்ள சிறப்பு மருத்துவர்களை நாடும் பொழுதுதான், உடனடியாக உரிய சிகிச்சை கிடைக்கும். பொதுவாகத் தொழில்நிமித்தம் அதிக நேரம் நின்றுகொண்டு இருப்பவர்களுக்கு, வெரிக்கோசிஸ் தாக்குதல் அதிகமாக இருக்கும். சிலருக்கு மரபு ரீதியாகவும் இந்த நோய் வரலாம். ஒரே இடத்தில், அசைவுகள் இல்லாமல் நின்றுகொண்டே இருப்பதைத் தவிர்க்க வேண்டும். உட்கார்ந்த நிலையிலேயே வேலை பார்க்கும் அலுவலகச் சூழலில் அவ்வப்போது கால்களின் நிலையை மாற்றிக் கொண்டு உட்காரப் பழகலாம்.”

 

ம.ராகுல், செருபாலக்காடு.

”என்னுடைய உள்ளங்கைகள் மற்றும் உள்ளங்கால்களில் எல்லா நேரமும் வியர்த்துக்கொண்டே இருக்கிறது. எழுதும்போது பேப்பரே நனைந்துவிடும் அளவுக்கு வியர்க்கிறது. இதனால் எந்த வேலையிலும் என்னால் கவனம் செலுத்த முடியவில்லை. வியர்வையை நிறுத்த ஏதேனும் வழி இருக்கிறதா டாக்டர்?”

 

 

 

 

”உள்ளங்கை மற்றும் உள்ளங்கால்களில் வியர்ப்பதற்கு மூன்று விதமான காரணங்கள் உள்ளன. ஒன்று, பிறப்பிலேயே ஒருவரின் உடல் அமைப்பு அப்படி அமைந்திருக்கலாம். இரண்டாவது, ‘ஹைபர் தைராய்டு’ எனப்படும் தைராய்டு அதிகமாகச் சுரந்தாலும் உள்ளங்கையும் உள்ளங்காலும் எந்த நேரமும் வியர்க்கும். மூன்றாவது, அளவுக்கு அதிகமான கவலை (Anxiety). குறிப்பாக, தேர்வு சமயத்தில் சிலருக்கு அதீதக் கவலை மற்றும் பதட்டத்தால் அளவுக்கு அதிகமாக வியர்த்து, தேர்வு எழுதும் பேப்பரே ஈரமாகிவிடும். மற்றவர்களுடன் கை குலுக்கக்கூட முடியாது. இதைக் கட்டுப்படுத்த மருந்துகள் உள்ளன. இயல்பாகவே இதுபோன்ற உடல் அமைப்புகொண்டவர்கள், மருத்துவரின் ஆலோசனையின் பேரில் தினமும் இரவு படுக்கும் முன்பு உள்ளங்கை மற்றும் உள்ளங்கால்களில் இந்த மருந்துகளைத் தடவிக்கொண்டு படுக்கலாம்.

காலையில் எழுந்ததும் கை, கால்களை சோப்பு போட்டுக் கழுவ வேண்டும். இந்த மருந்துகள் ஓரளவு மட்டுமே நிவாரணம் தரும். இவற்றைப் பயன்படுத்தியும் வியர்வை கட்டுப்படாவிட்டால், ‘அயன்டோபோரேசிஸ்’ (Iontophoresis) என்ற சிகிச்சையை மேற்கொள்ளலாம். உள்ளங்கை மற்றும் உள்ளங்கால்களில் குறிப்பிட்ட அளவு மின்சாரத்தைச் செலுத்தி வியர்வைத் துளைகளை அடைப்பதுதான் இந்தச் சிகிச்சை. மொத்தம் 40 நிமிடங்கள் மேற்கொள்ளப்படும் இந்தச் சிகிச்சையைத் தினமும் எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு மாதத்தில் ஓரளவு
வியர்வை குறைய ஆரம்பித்ததும், வாரத்துக்கு இரண்டு முறை மட்டும் சிகிச்சை எடுத்துக்கொண்டால் போதும். இந்தச் சிகிச்சை எடுக்க முடியாதவர்களுக்கு ‘போடோக்ஸ்’ (Botox) என்ற மருந்து உள்ளது. இதை ஊசி மூலம் கையில் செலுத்த வேண்டும். ஒரு முறை இந்த ஊசி போட்டால் சுமார் ஆறு மாதம் வரை வியர்வைத் தொந்தரவு இருக்காது. ஆனால், இதற்கான செலவு சற்று அதிகம். தைராய்டு, பதட்டம் மற்றும் கவலையால் இந்தத் தொந்தரவுக்கு ஆளானவர்கள், முதலில் இந்தப் பாதிப்புகளுக்கான சிகிச்சையை எடுத்துக்கொண்டாலே,  பிரச்னையைச் சரி செய்து விடலாம்!’

நன்றி:- 

நன்றி:- டாக்டர் விகடன்.

 

 

பகுதி-19 டாக்டரிடம் கேளுங்கள் -[விடாது துரத்தும் சைனஸ்… தப்பிக்க என்ன வழி ?]

பிப்ரவரி 9, 2011 1 மறுமொழி


”நவம்பர் முதல் பிப்ரவரி வரையிலான காலத்தின் சீதோஷ்ணம், வருடா வருடம் என்னை படுத்தி எடுத்து விடுகிறது. 38 வயதாகும் எனக்கு சைனஸால் தலைவலி, தலைபாரம், சளி, தும்மல் என இந்த
மாதங்களில் தொந்தரவுகள் நீள்கின்றன. நிரந்தரத் தீர்வுக்கு வழி ஏதும்
இருக்கிறதா?”

டாக்டர் ந.கிருபானந்த், காது, மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சை நிபுணர், செங்கல்பட்டு:

 

”மூளையின் எடையை பேலன்ஸ் செய்ய, தகவமைப்பாக முகத்தில் காற்று அறைகள் இருக்கின்றன. இவை, சைனஸ் அறைகள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த சைனஸ் காற்றறைகள் ஒவ்வாமையினால் தொற்றுக்கு உள்ளாகும்போது அழற்சி அடைவதுதான் ‘சைனஸைடிஸ்’ நோயாக அறியப்படுகிறது.

சுற்றுச்சூழல் காரணத்தினாலோ, தனிப்பட்ட மனித உடல் இயல்பினாலோ உடலுக்கு ஒவ்வாமை
ஏற்படும்போது, காற்றறைகள் வீக்கம்அடைகின்றன. இந்த வீக்கத்தால் காற்றறையின் உள்சுவர் பாதிப்படைந்து எதிர்வினையாக ஒரு வகை நீரை சுரக்க ஆரம்பிக்கின்றன. எதிர்ப்புச் சக்தி குறைவால் நாளடைவில் அந்த நீர் சளியாக மாறத் துவங்கும். உப உபத்திரவமாக தும்மல், தலைவலி, தலைபாரம் போன்றவையும் தோன்றும். இந்த நிலை வரை எழும் தொந்தரவுகள் சைனஸைடிஸ் வரையறைக்குட்பட்டவை. இதே தொந்தரவுகள் தொடர்ந்து நீடிக்கும்போது, அது ஆஸ்துமாவாக உருவாகலாம்.

உடலின் ஒவ்வாமைக்கு தனிப்பட்ட மற்றும் பொதுவான காரணிகள் ஏராளமாக இருக்கின்றன.
ஒருவருக்குக் குறிப்பிட்ட பதார்த்தம் ஒவ்வாமையைத் தரலாம். மேற்படி உணவைத் தவிர்ப்பதன் மூலம் அவர் நிவாரணம் பெற முடியும். ஆனால், மழை, பனி போன்ற சீதோஷ்ண மாறுத
ல்கள்
ஒருவரின் ஒவ்வாமை இயல்பை அதிகரிக்கும்போது சமாளிப்பது சற்று சிரமம்தான். உதாரணமாக, காற்றில் பரவும் மாசுகளை மழையும் பனியும் ஈர்த்து, நம்
சுவாசப்பரப்பிலே
யே நிலைநிறுத்துகின்றன. கூடவே, இந்தக் காலங்களில் பூச்செடி, மரங்கள் என்று அதிகரிக்கும் மகரந்தச் சேர்க்கையும் சைனஸைத் தூண்டும். இந்தப் பொதுக் காரணங்களை தவிர்க்க முடியாது. எனினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம் ஓரளவு பாதுகாப்பு பெறலாம்.

சைனஸைடிஸை எதிர்கொள்ள மருத்துவ சிகிச்சைகளை விட, லைஃப் ஸ்டைல் ஒழுங்குகளே நல்ல ரிசல்ட் தரும். தூய பருத்தி ஆடைகள், கம்பளி ஆடையெனில் அவை தூசு இல்லாதிருப்பது, பூக்கள், தூசுக்கள் சூழலைத் தவிர்ப்பது, மாஸ்க் அல்லது கர்ச்சீஃப் உபயோகிப்பது என ஆயத்தமாக இருக்கலாம். பனி, மழை காலங்களில் பாக்டீரியா தொற்றுக்கு அதிக வாய்ப்புள்ளதால் உடல் எதிர்ப்பு சக்தி சீர்குலையாதிருக்க ஆரோக்கியத்தில் தனி கவனம் செலுத்த வேண்டும்.

சைனஸ் அறைகளின் ஆரம்பகால பாதிப்புக்கு சாதாரண ஆன்டிபயாடிக் மருந்துகள் போதுமானது. இறுகியும், மஞ்சள் நிறத்திலும் சளி இருக்குமானால் மருத்துவ ஆலோசனையுடன் கூடுதல் மருந்துகள் எடுத்துக்கொள்ள வேண்டும். தற்போது மாத்திரை வடிவில் கிடைக்கும் மருந்துகளை கொண்டு ‘வேது’ பிடிப்பது பக்கவிளைவுகளற்ற சிறப்பான வழி. நாள்பட்ட சைனஸ் பாதிப்பு, காற்றறை சுவரை தடிப்பாக்கி, அதன் வாயை அடைக்க முற்படும். இதற்கு எண்டோஸ்கோப்பிக் அறுவை சிகிச்சை மூலம் நிவாரணம் பெறலாம். போதிய கவனிப்பு, சிகிச்சைகளின்றி இந்த பிரச்னை ஆஸ்துமாவாக உருவெடுக்காமல் தடுக்கப்பட வேண்டும் என்பதில் கவனம் இருக்கட்டும்!”

நன்றி:- டாக்டர் ந.கிருபானந்த், காது, மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சை நிபுணர், செங்கல்பட்டு

நன்றி:- அ.வி

பகுதி-18 டாக்டரிடம் கேளுங்கள் -[முதல் முறையா கர்ப்பமா..? இதையெல்லாம் முக்கியமா கவனிங்க!


முதல் கர்ப்பம் உறுதி செய்யப்பட்டு, ஒரு மாதம் ஆகிறது. ‘அக்கறை காட்டுகிறோம்… ஆலோசனை சொல்கிறோம்’ என்ற பெயரில் உறவிலும், நட்பிலும் ஆளாளுக்குக் குழப்புகிறார்கள். உண்மையில் கர்ப்பம் தரித்தலுக்கும் பிரசவத்துக்கும் இடையே கர்ப்பவதிகள் புதிதாக சந்திக்கும் உடற் சலனங்கள் என்னென்ன? அவற்றை எதிர்கொள்வது எப்படி என்று விளக்குங்கள் டாக்டர்…”

டாக்டர் வீணா, மகப்பேறு மற்றும் மகளிர் நலமருத்துவர், திருச்சி:

”கடைசி மாதவிடாய் துவங்கி, பிரசவமாகி குழந்தைக்கு பால் புகட்டும் காலம் வரை தாய் மற்றும் சேய் நலத் துக்காக கர்ப்பிணியின் உடலில் பல மாற்றங்கள்

தோன்றுவது இயற்கையே. கர்ப்பம் வயிற்றில் நிலையாக தங்குவது, சிசுவுக்கான உண வூட்டம், பிரசவத் துக்கு தாயின் தேகத்தை தயார் படுத்துவது போன்ற காரணங்களுக்காக இவை அவசிய மாகின்றன. அவற் றில் முக்கியமானவற்றை மட்டும் இங்கே பட்டியலிடு கிறேன். கவனமாக குறித்து வைத்துக் கொள்ளுங்கள்! அவை…

வாந்தியற்ற குமட்டல்: கர்ப்பத்தை தக்க வைத்துக் கொள்ளும் நடவடிக்கைக்காக நஞ்சுக்கொடியில் இருந்து சுரக்கும் ‘கொரியானிக் கொனடோட்ராபன் (Chorionic gonadotrophin)என்ற ஹார்மோனால் ஏற்படும் இந்தக் குமட்டல் (மார்னிங் சிக்னஸ்), பொதுவாக 6-வது வாரம் துவங்கி 12-வது வாரம் வரை இருக்கும். காலை வேளையில் அதிகமாக இருக்கும். உடல் எடை இழப்போடு… சாப்பிடவே முடியாத அளவுக்கு குமட்டல் இருந்தால் மருத்துவரை அணுக வேண்டும்.

அடிக்கடி சிறுநீர்: கருத்தரிப்பு முதல் பிரசவம் வரை அளவில் பெரிதாகும் கர்ப்பப்பை, மூத்திரப்பையை அழுத்துவதால், சிறுநீர் கழிப்பு வழக்கத்தைவிட அதிகமாக இருக்கும். இரவு உறக்கத்தை அதிகம் பாதிப்பதாக இருந்தால், எட்டு மணிக்கு மேல் அதிக நீர் அருந்துவதை குறைத்துக் கொள்ளலாம்.

மார்பகத்தில் வலி: முதல் முறையாக கர்ப்பம் தரிப்பவர்கள், மூன்றாவது மாதம் வரை மார்பகத்தில் வீக்கத்தையும், தொட்டாலே வலியையும் உணர்வார்கள். தாய்ப்பாலுக்கான இயற்கையான தகவமைப்புக்காக இந்த மாற்றங்கள். மேலும், கர்ப்ப காலத்தில் உடலில் நீர் அதிகம் சேகரமாவது காரணமாகவும் மார்பிலும் வீக்கம் இருக்கும். ஏதேனும் கட்டிகள் உணரப்பட்டாலோ, மார்புக் காம்பில் ரத்தம் வந்தாலோ டாக்டரை அணுக வேண்டும்.

அடிவயிற்று வ லி: கர்ப்பப்பை வளர்ச்சி, கர்ப்பப்பை இணைப்புகளின் இழுவை… இவையெல் லாம் அடிவயிற்றில் வலியாக உணரப்படுகிறது. முதல் மாதத்தில் இருந்து பிரசவம் வரை பொறுத்துக் கொள்ளக்கூடிய அளவுக்கு இந்த வலி இருக்கும். சிலருக்கு வலி கூடுதலாக உணரப்படலாம். ரத்தப் போக்கு தென்பட்டாலோ… வலி தாங்க முடியாததாக இருந்தாலோ மருத்துவப் பார்வை அவசியம்.

வெள்ளைப்படுதல்: கர்ப்பத்தையட்டி கர்ப்ப உள்ளுறுப்புகளில் ரத்த ஓட்டம் அதிகமாவது, கர்ப்பவாய் சுரப்பிகளை அதிகம் சுரக்கச் செய்வது… இவையெல்லாம் கர்ப்பவதிகளின் வெள்ளைப்படுதலுக்கு காரணமாகிறது. துர்வாடை மற்றும் அரிப்பு இல்லாதவரை இதைப் பொருட்படுத்த தேவையில்லை. தானாகவே சரியாகிவிடும்.

வரி விழுதல்: உடல் எடை கூடுவதால் மார்பகம், வயிறு, தொடை போன்ற இடங்களில் தோல் விரிந்து, வரி வரியாக விழுவதைத் தவிர்க்க முடியாது. இது பிரசவத்துக்குப் பிறகு 75% மறைய வாய்ப்புண்டு. க்ரீம்களும் ஓரளவுக்கு உதவும்.

எடை எகிறுவது: பத்து மாதத்துக்குள் அதிகபட்சமாக 12.5 கிலோ வரை எடை அதிகரிப்பது இயல்பானது. அதிகரிக்கும் ரத்த நாளங்களாலும், குழந்தை, நஞ்சுக்கொடி, பனிக்குடம் இவற்றின் எடையாலும் கர்ப்பவதிகளின் எடை மேலும் அதிகமாகும். தாய்ப்பால் புகட்டல் காலத்துக்குப் பின் எடை குறைப்புக்கான ஆலோசனைகளைப் பின்பற்றலாம்.

மேல்மூச்சு வாங்குவது: ஹார்மோன்களின் செயல்பாட்டாலும், உள்ளுக்குள் பெருக்கும் கர்ப்பப்பை காரணமாக நுரையீரலுக்கான இடம் குறைவதாலும் இப்படி மூச்சு வாங்குகிறது. ஆஸ்துமா இருந்தால் தவிர, இதைப் பொருட்படுத்தத் தேவையில்லை.

மலச்சிக்கல் மற்றும் பைல்ஸ்: கர்ப்பவதிகளின் மலச்சிக்க லுக்கு முதல் காரணம், கருச்சிதைவை தடுப்பற்காக செயல்படும் ‘ப்ரோஜெஸ்டிரோன்’ (றிக்ஷீஷீரீமீstமீக்ஷீஷீஸீமீ) ஹார்மோனால் செரிமானத் திறன் குறையலாம். மற்றொரு முக்கிய காரணம், இரும்புச்சத்து மாத்திரைகளின் பக்கவிளைவு. அதிகரிக்கும் மலச்சிக்கலால் ‘பைல்ஸ்’ ஏற்படலாம். இது பிசவத்துக்குப் பின் சரியாகக் கூடியது என்றாலும் கர்ப்பக்கால மலச்சிக்கலை ‘பைல்ஸ்’ அளவுக்கு முற்றவிடாது… நீர் அருந்துவது, நார்ச்சத்து உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்வது நல்லது. இரும்புச்சத்து மாத்திரைகள் காரணமெனில்… அவற்றைக் குறைத்துக்கொண்டு, அதை ஈடுகட்ட இயற்கை உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ளலாம்.

நெஞ்செரிச்சல்: கர்ப்பப்பை அழுத்தத்தால் வயிற்றில் இருக்கும் அமிலம் உணவுக் குழாய்க்குள் செல்வதால் உணரப்படுவது இது. சாப்பிட்டதும் படுப்பதை தவிர்ப்பது, வாக்கிங் செல்வது, படுக்கையில் தலைக்கு இரண்டு தலையணைகள் வைத்துக்கொள்வது போன்றவற்றால் இதை தவிர்க்கலாம்.

மூச்சடைப்பு: உடல் முழுக்க ரத்த ஓட்டம் அதிகமாவது இயல்பு. மூக்குக்குள்ளும் ரத்த ஓட்டம் அதிகமாகி மூக்சடைப்பு தென்படும். பெரும்பாலானவர்கள் இதை ‘சளி’ என்றே தப்பாக அர்த்தம் கொள்வார்கள். எளிய சொட்டு மருந்துகள் இதற்கு போதும்.

முதுகுவலி மற்றும் கால்வீக்கம்: இடுப்பு எலும்பு விரிவடையத் துவங்குவதாலும், உட்காரும்போது அது பிசகு செய்வதாலும் முதுகுவலி ஏற்படும். கர்ப்பப்பை பெரிதாவதால், இடுப்புப் பகுதியின் ரத்தக் குழாய்களில் அழுத்தம் பாய்வதால் கால்களில் வீக்கம் தெரியும்.

போதுமான ஓய்வு, கால்களை சற்று உயரமாக இருத்திக் கொள்வது போன்றவை மூலம் வீக்கத்தை மட்டுப்படுத்தலாம். தொடர்ந்தால், உடனடியாக உயர் ரத்தம் அழுத்தம் இருக்கிறதா என்று மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ளலாம்.’’

நன்றி:- டாக்டர். வீணா, மகப்பேறு மற்றும் மகளிர் நலமருத்துவர், திருச்சி:

நன்றி:- அ.வி

பகுதி-17 டாக்டரிடம் கேளுங்கள் -[குழந்தைப் பேறின்மைக்கு டி.பி-யும் ஒரு காரணமா?]


குழந்தைப் பேறின்மைக்கு டி.பி-யும் ஒரு காரணமா?


”என் தோழிக்குத் திருமணமாகி ஆறு வருடங்களாகியும் குழந்தை இல்லை. அவள் கணவருக்கு விதைப் பையில் காசநோயைக் கண்டறிந்து, அதுதான் குழந்தைப் பேறின்மைக்கு காரணம் என்றிருக்கிறார்கள். காசநோய் என்றால், நுரையீரல் மட்டுமே இலக்கு என்றிருந்த எங்களுக்கு, இத்தகவல் மிகவும் அதிர்ச்சியாகவும், ஆச்சர்யமாகவும் இருக்கிறது. மேலும் விளக்கம் கிடைக்குமா ப்ளீஸ்..?” 

டாக்டர் வெங்கடேஸ்வரபாபு, நுரையீரல் மற்றும் காசநோய் சிறப்பு மருத்துவர், புதுச்சேரி:

”மைக்கோபேக்டீரியம் (Mycobacterium)   என்ற பாக்டீரியாதான் டி.பி. எனப்படும் காசநோய்க்கு காரணமாகிறது.


இந்தியர்கள் தங்கள் வாழ்நாளில் ஒரு முறையேனும் இந்தத் தொற்றுக்கு உட்படுகிறார்கள். பாக்டீரியாவின் தீவிரம் மற்றும் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியைப் பொறுத்து அவர்களின் பாதிப்பு மட்டும் மாறுபடுகிறது.

காசநோய் உள்ளவர்கள் இருமும் போது காற்றின் மூலம் பரவி அருகிலுள்ளவர்களைத் தொற்றும் இந்த பாக்டீரியா, நுரையீரலை மட்டுமே பாதிக்கும் என்றில்லை. அங்கிருந்து ரத்தத்தின் மூலமாக உடலெங்கும் பரவுகிறது. குறிப்பாக, ரத்த ஓட்டம் அதிகமுள்ள உறுப்புகளைப் பாதிக்க வாய்ப்புள்ளது. இந்த வகையில் சிறுநீரகம் மற்றும் சிறுநீரகப் பாதை, எலும்புகள், வயிற்றுப்பகுதி என பல இடங்களையும் பாதிக்கிறது. இவை தவிர, டி.பி. தாக்கும் மற்றொரு பிரதான அவயம்… ஆண், பெண் இருவரின் ஜனன உறுப்புகள்.

ஆண்களின் விரையின் மேல் இருக்கும் எப்பிடிடைமிஸ் Epididymis என்ற சிறு குழல்தான், விரையிலிருந்து வெளிப்படும் உயிரணுக்களை அவற்றின் இயக்கத்துக்கான தகுதியை மேம்படுத்தும் தளமாக செயல்படுகிறது. விரை, எப்பிடிடைமிஸ் ஏதேனும் ஒன்றோ அல்லது இரண்டுமோ டி.பி-யால் பாதிக்கப்படும்போது விந்தணுவின் நீந்தும் திறன் மட்டுப்பட்டு, குழந்தையின்மைக்கு காரணமாகிறது. வலியுடனோ அல்லது வலியில்லாமலோ விரையில் தோன்றும் வீக்கம் இதற்கு அறிகுறி. உங்கள் தோழியுடைய கணவரின் பிரச்னை இதுவாகத்தான் இருக்க வேண்டும்.

பெண்களுக்கும் அவர்களின் கர்ப்ப உறுப்புகளான கர்ப்பப்பை, சினைப்பை, ஃபெலோப்பியன் குழாய் போன்ற இடங்களில் காசநோய் தாக்கலாம். இதிலும் ஃபெலோப்பியன் அதிக இலக்காகிறது. எனவே, குழந்தையின்மைக்காக பரிசோதனை மேற்கொள்ளும் தம்பதிகள் டி.பி. பரிசோதனையிலும் தெளிவு பெறுவது நல்லது.

85% பாதிப்புக்குள்ளாகும் நுரையீரல் மட்டுமே சுலபத்தில் டி.பி-யை வெளியே அடையாளம் காட்டும். மற்ற உறுப்புகளில் பெரும்பாலும் முற்றும் வரை டி.பி. தன்னை அடையாளம் காட்டாது. நீண்ட நாட்களாக சளித் தொந்தரவு, இருமலில் ரத்தத் துளிகள் தென்படுவது, பசியில்லாத்தன்மை, மூச்சுவாங்குதல்… இவற்றோடு மாலையில் மட்டுமே வரும் ஜுரம் போன்றவை காசநோயின் அறிகுறிகள். பரிசோதனைக்குப் பின் சிகிச்சைக்காக மருத்துவர் பரிந்துரைக்கும் மாத்திரைகளை அதற்கான திட்டவட்ட கால எல்லை வரைக்கும் தொடர்ந்து உட்கொள்ள வேண்டியது அவசியம். இதில் அலட்சியம் காட்டுவது, மருந்து எடுத்துக் கொண்டதும் மட்டுப்பட்டதாக நினைத்து சிகிச்சையை நிறுத்திவிடுவது போன்ற காரணங்களால் டி.பி. மறுபடியும் தனது வேலையைக் காட்டலாம். அதேபோல ஒரு முறை டி.பி வந்தவருக்கு மறுபடியும் வராது என்ற உத்தரவாதம் கிடையாது!”

நன்றி:- டாக்டர் வெங்கடேஸ்வரபாபு, நுரையீரல் மற்றும் காசநோய் சிறப்பு மருத்துவர், புதுச்சேரி:

நன்றி:- அ.வி

மருத்துவம்

பகுதி-16 டாக்டரிடம் கேளுங்கள் -[கர்ப்பப்பை கட்டிகள், குளியல் மயக்கம்]


“கர்ப்பப்பையை கலங்கடிக்கும் கட்டிகள்… கரையுமா?”

“என் மருமகளுக்கு கர்ப்பப் பையில் ஃபைப்ராய்டு (Fibroid) கட்டிகள் இருப்பதாகவும், இதனால் கருவுறுதல் பதிப்புக்குள்ளாகும் என்றும், உடனடியாக அறுவை சிகிச்சை செய்து அகற்றாவிட்டால், கர்ப்பப்பையையே அகற்ற வேண்டியிருக்கும் என்றும் சொல்கிறார்கள் மருத்துவர்கள். இந்த விஷயத்தில் சமயோசிதமாக நாங்கள் செய்யவேண்டியது என்ன?”

டாக்டர் சாமுவேல் தேவகுமார், பொது மற்றும் லேப்ராஸ்கோப்பி அறுவை சிகிச்சை நிபுணர், பெரம்பலூர்:

“பெரியளவுக்குப் பிரச்னை தராத சாதாரண கட்டிகள், கேன்சர் போன்ற அசாதாரண கட்டிகள் என்று கட்டிகளை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ஃபைப்ராய்டு கட்டிகள், இதில் முதல் ரகத்தில் அடங்கும்.

வயது வந்த எந்தப் பெண்ணும் இந்தக் கட்டிகளுக்கு இலக்காக நேரிடலாம். அதிகப்படியான அடிவயிற்று வலி, மிகையான மாதப்போக்கு, அதிக நாட்களுக்கு மாதவிடாய் நீடிப்பது போன்றவை ஃபைப்ராய்டு கட்டிகள் இருப்பதற்கான அறிகுறிகள். ஸ்கேன் மூலம் இவை உறுதிபடுத்தப்படும்.

கர்ப்பப்பையை பொறுத்தவரை பொதுவாக மூன்று இடங்களில் இந்தக் கட்டிகள் தோன்றலாம். முதலாவதாக, கர்ப்பப்பை வெளி சுவரில் தோன்றும். இவை வளரும்போது கருவுறுதலுக்கு பாதிப்பு ஏற்படுவதில்லை. இரண்டாவதாக, கருப்பைக்குள்ளிருக்கும் ‘எண்டோமீட்ரியம்’ (Endometrium) உறைக்கும், கருப்பை உள்சுவருக்கும் இடையே இந்தக் கட்டிகள் தோன்றும். கட்டியின் வடிவத்தைப் பொறுத்து, கருவளர்ச்சியில் பாதிப்பு ஏற்படக்கூடும். மூன்றாவதாக, ‘எண்டோமீட்ரிய’ உறைக்குள் இவை தோன்றும். இவை, அளவில் பெரிதாகும்போது கருவளர்ச்சியை ஒரு கட்டத்துக்கு மேல் வளரவிடாமல் தடுத்து, அபார்ஷன்கூட ஏற்படலாம்.

எனவே கட்டியின் அளவு, வளர்ச்சி, கருவளர்ச்சிக்கு இவை இடைஞ்சலாக இருப்பது போன்ற எல்லா விஷயங்களையும் அலசி, அவற்றை அகற்ற வேண்டியதன் அவசியத்தை மருத்துவர் முடிவு செய்வார். இந்த ஆபரேஷனும் தற்போது லேப்ராஸ்கோப்பி முறையில் செய்யப்படுவதால் கர்ப்பப்பைக்கோ, கருவுறுதலுக்கோ எந்த பாதிப்பும் இல்லை. கருப்பையே தாங்காத அளவுக்கு அதிகப்படியாக இதன் வளர்ச்சி அமைந்தால் மட்டுமே கருப்பை அகற்றம் செய்யலாம். அரிதாக மட்டுமே இந்தக் கருப்பை அகற்றம் பரிசீலிக்கப்படுகிறது.

எனவே, உங்கள் மருமகளின் கர்ப்பப்பைக்கு எந்த இடையூறுமின்றி லேப்ராஸ்கோப்பி மூலம் ஃபைப்ராய்டு கட்டிகளை நீக்கி, கருவளர்ச்சிக்கான தடைகளை களையலாம்… கவலை வேண்டாம்!”

“எட்டு வயதாகியும் என் மகன் குளியல் என்றாலே அழுது அழிச்சாட்டியம் செய் கிறான். அதிலும் சமீபகாலமாக தலையில் தண்ணீர் ஊற்றினாலே ஓரிருமுறை மயக்கம் வந்து விழுந்துவிட்டான். அதிலிருந்து அவனை குளிப்பாட்டுவது என்றாலே பயமாக இருக்கிறது. இதற்கு எப்படித் தீர்வு காண்பது?”

டாக்டர் சுரேஷ் செல்லையா, குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர், திருச்சி:

“உங்களின் மகனின் குளியல் மயக்கம், பெரும்பாலான குழந்தைகளிடம் அடையாளம் காணப்படுவது தான். குழந்தைக்கு குளியலை குதூகலமூட்டுவதாகவும், சௌகரியமானதாகவும் பழக்க வேண்டும். ஆனால், குழந்தை பொறுக்க முடியாத சூட்டில் வெந்நீரை ஊற்றுவது, வாய்க்குள் கைவிட்டு கோழை எடுப்பது, மூக்கு, கண்களை சுத்தம் செய்கிறோம் என்று விபரீதத்தில் இறங்குவது, குளிப்பாட்டும்போது தாறுமாறாக அழுத்திப் பிடிப்பது போன்றவை தவறானவை.

அதேபோல, எண்ணெய் தேய்த்துக் குளிக்க வைக்கும்போது, எண்ணெய்த் திவலைகள் மூச்சில் கலந்துவிடும் ஆபத்துக்கு வாய்ப்புஇருக்கிறது. குளிப்பாட்டியபின் சாம்பிராணி போடுகிறேன் என்று புகை மண்டலத்துக்குள் சின்ன நுரையீரலை திணறவைப்பதும் கூடாது. இந்த சித்ரவதைப் படலங்களால் குழந்தைகள் பிஞ்சு பருவத்திலேயே குளியலை வெறுக்க ஆரம்பித்துவிடுவார்கள்.

ஒழுங்காக பழக்கிவிட்டால் ஐந்து, ஆறு வயதுக்கு மேல் குழந்தை சுயமாக குளியலை மேற்கொள்ள தயாராகிவிடுவார்கள். அப்போது மேற்பார்வையை மட்டும் தந்தால் போதும்.

இதையெல்லாம் தாண்டியும் குழந்தை குளிப்பதற்கு அடம் பிடிக்கிறது என்றால், ‘ரிஃப்ளெக்ஸ் எபிலெப்ஸி’ (Reflex Epilepsy) வகையைச் சார்ந்த வலிப்பு நோய்கூட காரணமாக இருக்கலாம். உடனடியாக குழந்தை நல மருத்துவர் அல்லது மூளை மற்றும் நரம்பியல் மருத்துவரை அணுகுங்கள். மூளையில் ஏதேனும் பிரச்னை இருக்கிறதா என்று ஸ்கேன் மற்றும் இ.சி.ஜி மூலம் உறுதிபடுத்திக் கொள்ளுங்கள். அதிலெல்லாம் பிரச்னையில்லை என்று தெரிந்தால், கவலையை விட்டுத்தள்ளலாம்.”




நன்றி:- டாக்டர் சாமுவேல் தேவகுமார், பொது மற்றும் லேப்ராஸ்கோப்பி அறுவை சிகிச்சை நிபுணர், பெரம்பலூர்:

நன்றி:- டாக்டர் சுரேஷ் செல்லையா, குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர், திருச்சி:

நன்றி:- அ.வி

பகுதி-01 டாக்டரிடம் கேளுங்கள்

பகுதி-02 டாக்டரிடம் கேளுங்கள்

பகுதி-03 டாக்டரிடம் கேளுங்கள்

பகுதி-04 டாக்டரிடம் கேளுங்கள்

பகுதி-05 டாக்டரிடம் கேளுங்கள்

பகுதி-06 டாக்டரிடம் கேளுங்கள்

பகுதி-07 டாக்டரிடம் கேளுங்கள்

பகுதி-08 டாக்டரிடம் கேளுங்கள்

பகுதி-09 டாக்டரிடம் கேளுங்கள்





பகுதி-15 டாக்டரிடம் கேளுங்கள்

ஒக்ரோபர் 12, 2010 2 பின்னூட்டங்கள்

ஓய்வுக்குப் பின் வரும் உளைச்சல்… உஷார் உஷார்!’
“என் அப்பா, கௌரவமான அரசு உயர் பதவியில் 36 வருடங்கள் பணியாற்றி ஓய்வு பெற்றார். இது நாள் வரை உடல் நலப் பிரச்னைகள் பற்றி அலட்டிக் கொள்ளாதவர், இப்போது ‘அது பண்ணுகிறது… இது படுத்துகிறது’ என்று களேபரம் செய்கிறார். ஏராளமான டெஸ்டுகளுக்குப் பிறகு, ‘உடல்நல பாதிப்பு ஒன்றுமில்லை’ என்று தெரிந்தபோதும், நம்ப மறுக்கிறார். என்ன பிரச்னை அவருக்கு?”

டாக்டர் எஸ்.அருண்குமார், மனநல மருத்துவர், சென்னை:

“வருடக்கணக்கில் பதவி, அந்தஸ்து, மரியாதை என்றே வளைய வந்தவர்கள், அதை இழக்கும்போது ஏற்படும் இயல்பான மனநல பாதிப்புதான் இது. ஓல்ட் ஏஜ் டிப்ரஷன் (Old Age Depression) எனப்படும் இந்த வயதானோரின் மனக்கவலை, அவர்களை பீடித்த அல்லது அப்படி அவர்களாக கற்பித்துக் கொள்ளும் வெறுமையிலிருந்து தப்பிக்கும் முயற்சியில் அவர்களால் உணரப்படுகிறது.

இதுவே… மத்திம வயதுடையவர்கள் தங்களது உடல் அவயங்கள் மற்றும் அவற்றின் செயல்பாடுகள் குறித்து பீதியைக் கிளப்பி, அவற்றைத் தீர்மானமாக நம்பும் மனநல பாதிப்பை, சொமோட்டோபோஃர்ம் டிஸ்ஆர்டர் (Somatoform Disorder) என்கிறோம்.

நம்முடைய கலாசாரத்தில் மனநலப் பிரச்னைகளை உள்ளது உள்ளபடியே சொல்லும் வழக்கம் ஏனோ கிடையாது. சம்பந்தப்பட்டவர்கள் அவற்றை உடல் நலப் பிரச்னைகளாகவே அடையாளம் காண்பார்கள். அதீத மனக்கவலை, சிறிய வேலைக்குக்கூட களைப்பு, எதிலும் ஈடுபாடற்ற போக்கு, கவனக்குறைவு, தூக்கமின்மை, பசியின்மை, தன்னம்பிக்கையின்மை எனத் தொடரும் இவர்களது பாதிப்புகளின் உச்சமாக தற்கொலை முயற்சியும்கூட இருக்கும். இவர்களுக்கு ‘சைக்கோ தெரபி’ எனப்படும் மனநல சிகிச்சைதான் ஒரே வழி.

மரபுசார் காரணங்கள், தனிப்பட்ட ஆளுமை சார்புள்ள காரணங்கள், மூளையில் உள்ள முக்கிய ரசாயனங்களில் ஏற்படும் சீரற்ற மாற்றங்கள் என பல அடிப்படையான விஷயங்களோடு சம்மந்தப்பட்டவரின் குடும்பச் சூழல், உண்மையான உடல்நிலை இவற்றையும் பரிசீலித்து மனநல மருத்துவர் சிகிச்சை அளிப்பார். நான்கு முதல் எட்டு வாரங்களில் குறிப்பிடத்தக்க மாற்றம் கிடைக்கும். இதற்கு குடும்பத்தாரின் பொறுமையான அணுகுமுறை அவசியம்.

சிகிச்சைக்குப் பின்னர்… இசை கேட்பது, வளர்ப்பு பிராணிகள், நண்பர்கள், குடும்பத்தினருடன் நேரம் செலவிடுவது, தனக்குப் பிடித்த பகுதி நேர பணியைச் செய்வது, விரும்பிய பயணங்களை மேற்கொள்வது, பயனுள்ள பொழுதுபோக்கு, பொதுநலன் சார்ந்த சேவைகள் உள்ளிட்ட தன் மதிப்பை உயர்த்தும் செயல்களில் ஈடுபடுவது போன்றவற்றை மேற்கொள்ளலாம். மனநலத்தை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ள குறுக்கெழுத்துப் போட்டி, சுடோகு போன்றவற்றைத் தீர்ப்பது, புதிதாக எதையேனும் கற்பது, பிறருக்கு சொல்லித் தருவது போன்றவற்றை மேற்கொள்ளலாம்.

பொதுவாக, ஓய்வுக் காலத்தை நிதி ரீதியாக எதிர்கொள்ள இளம்வயதிலிருந்தே சேமிப்பதுபோல, மனரீதியாகவும் தயாராகும் பக்குவம் இருப்பின்… இம்மாதிரி பிரச்னை எழ வாய்ப்பிருக்காது!”

‘அடுப்பங்கரை புகை, நெடிகூட ஆஸ்துமாவுக்கு அழைப்பு வைக்கலாம்!’

“நற்பத்திரண்டு வயதாகும் எனக்கு வருடத்தின் மற்ற நாட்களில் வரும் சாதாரண சளிப் பிரச்னை, மழை மற்றும் குளிர் காலங்களில் மட்டும் விபரீதமாகி விடுகிறது. இந்தக் காலத்தில் சளி தீர எந்த மருத்துவம் எடுத்துக் கொண்டாலும் அது உள்ளுக்குள் சளியை இறுகச் செய்து, சதா செருமல் மற்றும் இருமல் மூலமாக வெளியேறுகிறது. இது சாதாரணமானதா… இல்லை, விபரீதமானதா?”

டாக்டர் மஞ்சு, நுரையீரல் நோய் சிறப்பு மருத்துவர், புதுச்சேரி:

“உங்களது அறிகுறிகள் ஆஸ்துமாவை அடையாளம் காட்டுகின்றன. ஆஸ்துமாவால் பாதிக்கப்படுவர்கள் பாதிப்பின் காலத்தைப் பொறுத்து, ஒரு வருடத்தின் சீதோஷண மாற்றம் (Seasonal Variation), ஒரு நாளின் சீதோஷண மாற்றம் (Diurnal Variation) என்று இரண்டு வகையில் அடங்குவார்கள். உங்களுடையது முதலாவதாகும். ஆஸ்துமாவின் பிற அறிகுறிகளான மூச்சிரைப்பு மற்றும் மூச்சுக்குழாய் அடைப்பினால் வரும் விசில் சத்தம், நெஞ்சு இறுக்கம் ஆகியவை உங்களுக்கு இருக்கின்றனவா என்று உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

சிலருக்கு சிறுவயதில் ஆஸ்துமா இருந்து இடையில் அடையாளம் காட்டாது இருந்து பின்னாளில் தீவிரமாக வெளிப்படுவதும் உண்டு. கர்ப்பக் காலத்தின்போது சர்க்கரை நோய் பாதிப்பது போல ஆஸ்துமாவும் பாதிப்பதுண்டு. சிலருக்கு பின்னாளிலும் அது சாவகாசமாக வளர்வதும் உண்டு. ஆஸ்துமாவை உறுதி செய்ய பி.எஃப்.டி. (PFT-Pulmonary Function Test) எனப்படும் நுரையீரல் செயல்பாட்டைக் கண்டு உணரும் பரிசோதனை மூலம் தெளிவு பெறலாம்.

அடையாளம் காணப்பட்ட ஆஸ்துமாவை குணப்படுத்துவதும் எளிது. மாத்திரைகள், இன்ஹேலர்கள், ஐ.வி. எனப்படும் நரம்பூசிகள், மூச்சை சீராக்கும் நெபுலைஸர்கள் போன்றவை நடைமுறையில் உதவுகின்றன. பாதிப்பின் வீரியத்தைப் பொறுத்து சிகிச்சை காலத்தை தொடர வேண்டும்.

ஆஸ்துமா தவிர்த்தும், நுரையீரல் பாதிப்புக்கான பல்வேறு அடையாளங்கள் இருக்கின்றன. சி.ஓ.பி.டி. (COPD-Chronic Obstructive Pulmonary Disease) எனப்படும் மூச்சுக்குழாய் அடைப்பு நோய் இவற்றில் முக்கியமானது.

இவை மட்டுமல்லாது புகை பிடித்தலும் நுரையீரலை இரையாக்கும் பாதிப்புகளில் முதன்மையானது. சதா புகைவிடும் கணவரால் ‘பாஸிவ் ஸ்மோக்கிங்’ என்ற வகையில் மனைவி, குழந்தைகள் நுரையீரல் பாதிக்கப்படும் அபாயமுண்டு. அடுப்பங்கரை புகை மற்றும் நெடியும்கூட நாள் போக்கில் பெண்களின் நுரையீரல் திறனைப் பாதிக்கும்.

எனவே… அடுத்த சளி, இருமல் வரை காத்திராது உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுங்கள்!”

நன்றி:- டாக்டர் எஸ்.அருண்குமார், மனநல மருத்துவர், சென்னை:

நன்றி:-டாக்டர் மஞ்சு, நுரையீரல் நோய் சிறப்பு மருத்துவர், புதுச்சேரி:

பகுதி-01 டாக்டரிடம் கேளுங்கள்

பகுதி-02 டாக்டரிடம் கேளுங்கள்

பகுதி-03 டாக்டரிடம் கேளுங்கள்

பகுதி-04 டாக்டரிடம் கேளுங்கள்

பகுதி-05 டாக்டரிடம் கேளுங்கள்

பகுதி-06 டாக்டரிடம் கேளுங்கள்

பகுதி-07 டாக்டரிடம் கேளுங்கள்

பகுதி-08 டாக்டரிடம் கேளுங்கள்

பகுதி-09 டாக்டரிடம் கேளுங்கள்






பகுதி-14 டாக்டரிடம் கேளுங்கள்

செப்ரெம்பர் 23, 2010 பின்னூட்டமொன்றை இடுக

‘கருத்தரிக்காமல் போவதற்கு கனத்த சரீரமும் காரணமாகலாம்!’

”எனக்குத் திருமணமாகி நான்கு வருடங்கள் ஆகின்றன. முதல் தடவை கருத்தரித்தபோது, மூன்றாம் மாதத்தில் எதிர்பாராதவிதமாக கலைந்து போனது. உடனடியாக டாக்டரிடம் சென்று டி.என்.சி. செய்து கொண்டேன். அதற்குப் பின் கருத்தரிக்கவே இல்லை. 150 செ.மீ. உயரம், 77 கிலோ எடை என்று இருக்கிறேன். இப்படி கனத்த சரீரத்துடன் இருப்பதுதான் கருத்தரிக்காமல் இருப்பதற்கு காரணமாக இருக்குமோ என்று தோணுகிறது. தெளிவுபடுத்துங்களேன்…”

டாக்டர் மாயா மோகன், மகப்பேறு சிறப்பு மருத்துவர், சென்னை:

“உங்களின் பிரச்னைக்கு, அதிகப்படியான பருமனே காரணமாக இருக்கலாம் என்பது உண்மைதான். ஓவர் வெயிட்டின் காரணமாக ‘அவ்யலேஷன்’ (Ovulation) எனப்படும் சினைமுட்டை சீராக உருவாகும் சுழற்சி, தடைபட வாய்ப்புள்ளது. உங்கள் உயரத்துக்கு, நீங்கள் அதிகபட்சமாக இருக்க வேண்டிய எடை 50 கிலோதான். எனவே, டயட் மற்றும் உடற்பயிற்சிகளின் மூலம் உங்கள் எடையைக் குறைக்கும் முயற்சிகளில் இறங்குங்கள். முன்னதாக, ஒரு மகப்பேறு மருத்துவரிடம் சென்று, நீங்கள் கருவுறாமல் இருப்பதற்கான காரணம் இதுதானா என்பதை உறுதி செய்தபின், அவர் வழிகாட்டுதல்களின் கீழ் இந்தப் பயிற்சிகளில் ஈடுபடுங்கள்.

கருத்தரிக்காமல் இருப்பதற்கு… ஹார்மோன் ஏற்ற இறக்கங்கள், பி.சி.ஓ. என்று வேறு காரணங்கள் கண்டறியப்பட்டால் அதற்கான முறையான சிகிச்சையை மருத்துவர் பரிந்துரைப்பார்.

குறிப்பிடப்பட வேண்டிய விஷயம்… கருவுறாததற்கு நீங்கள் மட்டுமே காரணம் என்று நினைத்துக் கொண்டு உங்களுக்கு மட்டுமே சோதனைகளை செய்து கொண்டிருப்பதில் அர்த்தம் இல்லை. உங்கள் கணவருக்கும் தேவையான பரிசோதனைகள் செய்து, அவரிடம் ஏதேனும் குறைபாடுள்ளதா என்பதையும் கண்டறிந்து, தேவையெனில் அவரை சிகிச்சை எடுத்துக் கொள்ளச் செய்யுங்கள்.”

குழந்தைகளின் குடலை நஞ்சாக்கும் ‘கரகர மொறுமொறு’!

“கிண்டர் கார்டன் செல்லும் நான்கு வயது மகன், அடிக்கடி வயிற்றுவலி என்று அரற்றுகிறான். சமயங்களில் சாப்பிட்டதுமே வாயில் எடுத்து விடுகிறான். மருத்துவரிடம் சென்று செக்கப் செய்து பார்த்தபோது எந்தப் பிரச்னையும் இல்லை என்கிறார். குழப்பமாக உள்ளது. தெளிவுபடுத்துங்கள்… ப்ளீஸ்!”

டாக்டர் மைதிலி, குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர், திருச்சி:

“இந்த வயது குழந்தைகள்… அழுக்குப் படிந்த வெளியிடங்களில் கைகளை வைத்து விளையாடுவது, மூக்கினுள் வைப்பது, பின்புறத்தில் வைப்பது, பிறகு.. அதே விரலை வாயில் வைப்பது என இஷ்டத்துக்கு நடந்து கொள்வார்கள். இதெல்லாம் பல்வேறு கிருமித் தொற்றுகளுக்குக் காரணமாகிவிடும். அதுதான் வயிற்றுவலிக்கும் வாந்திக்கும் காரணமாகி விடுகிறது. ஒரு குழந்தைக்கு இருக்கும் தொற்றுகள், அதோடு பழகும் மற்ற குழந்தைகளுக்கும் எளிதில் தொற்றிவிடும்.

இவற்றைத் தவிர்க்க குழந்தைகளுக்கு சிறு வயதில் இருந்தே சுத்தம், சுகாதாரத்தை பயிற்றுவிக்க வேண்டும். கைவசம் கைக்குட்டை வைத்திருத்தல், கைகளை அடிக்கடி கழுவுதல், கண்ட இடங்களில் கை வைக்காதிருத்தல், பாத்ரூம் சென்று வந்ததும் கை, கால் கழுவுதல் போன்ற பழக்கங்களை, வழக்கமாக்க வேண்டும்.

நமது கவனத்தையும் மீறி, வெளியிடங்களில் உள்ள சுகாதாரமற்ற உணவுகளைக் குழந்தைகள் சாப்பிடுவதாலும் வயிற்றில் பல கிருமிகள் ஏற்படலாம். மசாலாவும் காரமும் கலந்து பல்வேறு பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட ‘கரகர மொறுமொறு’ பதார்த்தங்களாலும், ஃபாஸ்ட் ஃபுட் என்ற பெயரில் சிக்கலான உணவு கூறுகளை நாமே வாங்கித் தருவதாலும் குழந்தைகளின் பிஞ்சு குடல், நஞ்சு சேருமிடமாகிறது. எனவே, ‘ஸ்நாக்ஸ்’ என்ற பெயரில் குப்பை உணவுகளை தருவதற்கு பதில்… காய்கறிகள், பழங்கள், சாலட், பருப்பு உணவுகள் போன்றவற்றை தந்து பழக்க வேண்டும்.

இவை தவிர, மனோரீதியான சில விஷயங்களும்கூட வயிற்றுவலிக்கு காரணமாக அமைகின்றன. இவை உடல் ரீதியான மருத்துவ பரிசோதனைகளில் பிடிபடாது.

ஐந்து வயது வரை விளையாட்டு, பாட்டு, நடனம் இவற்றின் மூலமாக கற்றல், கற்பித்தல் இருக்க வேண்டும். அதிகப்படியான எழுத்து பயிற்சியோ, ஹோம் வொர்க் என்ற பெயரில் வீட்டிலும் அதிகப்படியான பாட திணிப்போ அவர்களை மிகுந்த மன அழுத்தத்துக்கு உள்ளாக்கும். எனவே, இவற்றில் இருந்து தப்பிக்க அவர்களாகவே ‘வயிற்றுவலி’, ‘தலைவலி’ என்று காரணம் சொல்வார்கள். எனவே, உங்கள் குழந்தையின் பாடச் சுமைகளில் இருந்து அவனை விடுவிடுத்துப் பாருங்கள்… அவன் கூறும் ‘வயிற்றுவலி’ சரியாகிறதா என்று பார்க்கலாம்!

தவிர, குடற்புழுக்கள், குடல்வால் அழற்சி, வயிற்றுப்புண், சிறுநீரக தொற்று உள்ளிட்ட உடல் பிரச்னைகளும் குழந்தைகளின் வயிற்றுவலிக்கு காரணமாக இருக்கும். எனவே, அவற்றை மருத்துவ பரிசோதனைகள் மூலம் கண்டறிந்து, அதற்கான சிகிச்சையின் மூலம் குணம் பெறலாம்!”

நன்றி:- டாக்டர் மாயா மோகன், மகப்பேறு சிறப்பு மருத்துவர், சென்னை:

நன்றி:-டாக்டர் மைதிலி, குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர், திருச்சி:

நன்றி:- அ.வி

பகுதி-01 டாக்டரிடம் கேளுங்கள்

பகுதி-02 டாக்டரிடம் கேளுங்கள்

பகுதி-03 டாக்டரிடம் கேளுங்கள்

பகுதி-04 டாக்டரிடம் கேளுங்கள்

பகுதி-05 டாக்டரிடம் கேளுங்கள்

பகுதி-06 டாக்டரிடம் கேளுங்கள்

பகுதி-07 டாக்டரிடம் கேளுங்கள்

பகுதி-08 டாக்டரிடம் கேளுங்கள்

பகுதி-09 டாக்டரிடம் கேளுங்கள்




பகுதி-13 டாக்டரிடம் கேளுங்கள்

செப்ரெம்பர் 12, 2010 3 பின்னூட்டங்கள்

‘‘எனது வயது 23. நான் மிகவும் ஒல்லியாக இருக்கிறேன். எடை 45 கிலோ. குண்டாவதற்கு அக்ரூட் பருப்புகளை பாலில் சேர்த்து சாப்பிடச் சொல்கிறார்கள். ஆனால், நிறைய சாப்பிட்டால் ரொம்ப குண்டாகிவிடுவாய் என்று வீட்டில் கூறுகிறார்கள். இரவில் இதைச் சாப்பிடலாமா? எத்தனை பருப்புகளை பாலில் அரைத்து குடிக்க வேண்டும் என்பதைத் தெளிவாகச் சொல்லவும்.

எனது உடல் ஓர் அமைப்பு இல்லாமல் உள்ளது. எனது இடை, அழகாக அமைய உடற்பயிற்சி எதுவும் உள்ளதா? அப்படி செய்து வந்தால் சரியான அளவில் இடை எனக்கு அமையுமா? எனக்கு வழிமுறைகள் கூறுங்கள்.’’

டாக்டர் துஸ்னா பார்க், டயட்டீஷியன், சென்னை:

‘‘உடல் மெலிவாக இருப்பது குறித்து நீங்கள் கவலைப் பட வேண்டியதே இல்லை. சொல்லப்போனால் நீங்கள் மிகவும் கொடுத்து வைத்தவர். குண்டாக இருந்தால்தான் பல கஷ்டங்களை அனுபவிக்க வேண்டியிருக்கும். ஒல்லியாக இருந்தாலும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதும் முக்கியம். உங்கள் எடை 45 கிலோ என்று எழுதியுள்ளீர்கள். உங்களது உயரத்தை குறிப்பிட்டிருந்தால், டயட் சொல்வதற்கு எளிதாக இருந்திருக்கும். 23 வயதிற்கு, 45 கிலோ என்பது அளவுக்கு அதிகமான எடை இல்லை. எனவே, இரவில் அக்ரூட் சாப்பிடுவதால், அதிக எடை போடுவதற்கு வாய்ப்பு இல்லை. பாதி பால், பாதி தண்ணீரில் ஒரு அக்ரூட் பருப்பினை சேர்த்து, தினமும் இரவு நேரங்களில் சாப்பிடலாம்.’’

ஜென்சி ஷாம்னா, மகளிர் யோகா சிறப்பு பயிற்சியாளர், சென்னை:

‘‘சரியான உணவுமுறையோடு கூடிய உடற்பயிற்சி நிச்சயமாக நல்ல உடல் அமைப்பைக் கொடுக்கும். சர்வாங்காசனம், பட்சிமோத்தாசனம், அர்த்த மச்சேந் திராசனம், பாத ஹஸ்த ஆசனம் ஆகிய ஆசனங்களை செய்து வந்தால் அழகிய இடை கிடைக்கும். இந்த ஆசனங்களை மூச்சை இழுத்து, மெதுவாக 15 நிமிடங்கள் வரை செய்ய வேண்டும்.

இந்த ஆசனங்களைத் தொடர்ந்து 12 படி நிலைகள் அடங்கிய சூரிய நமஸ்காரம் செய்வது நல்ல பலனைக் கொடுக்கும். யோகா நிலையத்துக்குச் சென்று, ஓர் ஆசிரியரிடம் முறையான பயிற்சி பெற்ற பிறகே இந்த ஆசனங்களைச் செய்யவேண்டும்.’’

‘‘என் வயது 27. இன்னும் திருமணமாகவில்லை. எனக்குப் பிறவியிலேயே ஒரு கிட்னிதான் அமைந்துள்ளது. கல்யாணத்துக்குப் பின் தாம்பத்ய உறவிலோ, குழந்தைப் பிறப்பிலோ அதிக சிரமத்துக்கு உள்ளாவேனோ என் பயமாக உள்ளது. எனக்குப் பிறக்கும் குழந்தையும் என்னை மாதிரி ஒரு கிட்னியுடன் தான் பிறக்குமா? நான் திருமணம் செய்துகொள்ளலாமா? அப்படி செய்துகொண்டால், எனது பிரச்னை பற்றி மாப்பிள்ளை வீட்டாரிடம் சொல்லலாமா? கொஞ்ச நாளாக எனக்கு அடிக்கடி கை, கால் வீக்கம், தலைசுற்றல் அதிகமாக ஏற்படுகிறது. மிகவும் குழப்பமாக உள்ளது. தெளிவுபடுத்துங்களேன் டாக்டர்!’’

டாக்டர் சிவராமன், சிறுநீரகவியல் நிபுணர், சென்னை:

‘‘உலகில் பத்தாயிரம் பேரில் ஒருவருக்கு பிறப்பிலேயே ஒரு கிட்னிதான் இருக்கிறது. அப்படி ஒரு கிட்னியுடன் வாழ்பவர்கள் பலருக்கு இந்த உண்மை தெரிய வருவதே இல்லை. ஏனெனில், அவர்களும் இரண்டு கிட்னி இருப்பவர்களைப் போல ஆரோக்கியமாக சாதாரண வாழ்க்கை வாழமுடியும். எனக்குத் தெரிந்த சிலர், தங்களுக்கு ஒரு கிட்னிதான் இருக்கிறது என்பது தெரியாமலேயே அறுபது வயதுக்குமேல் வாழ்ந்திருக்கிறார்கள். அவர்கள் இறக்கும் வரையில்கூட, அந்த விஷயம் அவர்களுக்குத் தெரிய வருவதில்லை. காரணம், ஆரோக்கியமாக, சாதாரண மனிதர்கள் போலவே அவர்கள் உடல்நிலை இருப்பதால்தான்.

ஒரு கிட்னி இருப்பது கவலைக்குரிய, பிரச்னைக்குரிய விஷயமே இல்லை. நீங்களும் மற்றவர்களைப் போல திருமணம் செய்து கொள்ளலாம், தாம்பத்ய உறவில் ஈடுபடலாம். குழந்தை பெற்றுக்கொள்ளலாம். பயப்படத் தேவையில்லை. ஆனால், உங்களுக்கு அடிக்கடி தலைசுற்றல், கை, கால் வீக்கம் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். அதனால், உங்கள் கிட்னியில் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டுள்ளதா, அதனால்தான் அவை வருகிறதா என முதலில் மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்து கொள்ளுங்கள். (கை, கால் வீக்கம், தலைசுற்றல் போன்றவை, வேறு ஏதாவது காரணங்களாலும் ஏற்படலாம்). கிட்னியில் பாதிப்பு இல்லாதபட்சத்தில், நீங்கள் தாராளமாக மற்றவர்களைப் போல் செயல்படலாம்.

ஆண்டுக்கு ஒருமுறை, மருத்துவரிடம் சென்று, ரத்தப் பரிசோதனை, சிறுநீர் பரிசோதனை, அல்ட்ராசவுண்ட் ஸ்கேனிங் ஆகியவற்றைச் செய்துகொள்வது நல்லது. உங்களுக்குத் திருமணப் பேச்சு நடைபெறும் சமயத்தில், மாப்பிள்ளை வீட்டாரிடம் இதைப் பற்றிக் கூறவேண்டிய அவசியம் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. அறுவைசிகிச்சை மூலம் ஒரு கிட்னி அகற்றப்பட்டிருந்தால் அதைக் கூற வேண்டியது அவசியம். மற்றபடி, இயற்கையிலேயே ஒரு கிட்னி என்பதில் எவ்வித அபாயமும் இல்லை.’’

‘‘எனக்கு 21 வயதாகிறது. திருமணம் ஆகி நான்கு வருடங்கள் ஆகின்றன. பாவாடை கட்டும் இடத்திலும் மற்றும் வயிற்றுக்குக் கீழ்ப் பகுதியிலும் மிகவும் அரிப்பு எடுக்கிறது. அந்த இடமும் மிகவும் கறுப்பாக உள்ளது. ஐந்தரை வருடங்களாக இந்தப் பிரச்னை இருக்கிறது.

அரிப்பு எடுக்கும் இடம் புண் போல் ஆகி, மருந்து போட்டவுடன் காய்ந்து போகிறது. நான்கைந்து நாட்களில் மறுபடியும் இதே அவஸ்தை! கிரீம், மாத்திரை, மருந்து, ஆயுர்வேதம் என அனைத்தும் உபயோகப்படுத்தினேன். ஒன்றும் சரியாகவில்லை (மருத்துவரிடமும் காண்பித்தேன். ஆனால், தோல் டாக்டர் இல்லை!).

நான் வசிக்கும் இடம் கிராமப்பகுதி. தயவுசெய்து எனக்கு இந்த அவஸ்தையிலிருந்து விடைபெற வழி சொல்வீர்களா?’’

டாக்டர் ரத்னவேல்,தோல் சிறப்பு மருத்துவர், மதுரை:

‘‘நீங்கள் குறிப்பிட்டுள்ள இடங்களில் சருமம் கறுப்பு நிறமாக மாறப் பொதுவான காரணங்கள் மூன்று:

ஒன்று | உராய்வு. பாவாடையை மிகவும் இறுக்கமாகக் கட்டுவதால், அந்த இடத்தில் அதிகப்படியான உராய்வு ஏற்பட்டு, அதனால் கறுப்பு நிறமாக மாறுவதுடன் அரிப்பும் ஏற்படும்.

இரண்டு | படர்தாமரை போன்ற நுண்ணுயிர் தொற்று. காற்றுப் புகாத மற்றும் எப்போதும் ஈரப்பதமாகவே இருக்கும் இடங்களில் இது ஏற்படும்.

மூன்று | வியர்வை. அதிகப்படியான வியர்வையினால் கிருமிகள் உருவாகி, சின்னச் சின்னக் கொப்பளங்கள் தோன்றி, பின் அந்த இடத்தையே கறுப்பாக மாற்றிவிடும்.

இந்தக் காரணங்களில் ஏதேனும் ஒன்றுதான் உங்கள் பிரச்னைக்குக் காரணமாக இருக்கும். அது, எது என்று கண்டு பிடித்து, அதை நிவர்த்தி செய்யுங்கள். மேலும், இந்த மூன்றில் உங்கள் பிரச்னைக்கு எது காரணமாக அமைந்தாலும், அதற்கு ‘Lobate-GM’ என்ற கிரீமை, ஒரு நல்ல தோல் மருத்துவரைக் கலந்தாலோசித்தபின், மூன்று அல்லது நான்கு மாதங்களுக்குத் தொடர்ந்து காலை வேளையிலும், இரவிலும் பயன்படுத்தி வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.

இதனால் எந்தப் பக்கவிளைவுகளும் ஏற்படாது என்பதோடு, அரிப்பும் அடங்கி, உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் கறுப்பு நிறமும் மறைந்துவிடும்!’’

நன்றி:- டாக்டர் துஸ்னா பார்க், டயட்டீஷியன், சென்னை:

நன்றி:-ஜென்சி ஷாம்னா, மகளிர் யோகா சிறப்பு பயிற்சியாளர், சென்னை:

நன்றி:-டாக்டர் சிவராமன், சிறுநீரகவியல் நிபுணர், சென்னை:

நன்றி:- டாக்டர் ரத்னவேல்,தோல் சிறப்பு மருத்துவர், மதுரை:

நன்றி:- அ.வி

பகுதி-01 டாக்டரிடம் கேளுங்கள்

பகுதி-02 டாக்டரிடம் கேளுங்கள்

பகுதி-03 டாக்டரிடம் கேளுங்கள்

பகுதி-04 டாக்டரிடம் கேளுங்கள்

பகுதி-05 டாக்டரிடம் கேளுங்கள்

பகுதி-06 டாக்டரிடம் கேளுங்கள்

பகுதி-07 டாக்டரிடம் கேளுங்கள்

பகுதி-08 டாக்டரிடம் கேளுங்கள்

பகுதி-09 டாக்டரிடம் கேளுங்கள்



பகுதி-12 டாக்டரிடம் கேளுங்கள்


“பற்களை கவனிக்க மறந்தால், மாரடைப்புகூட வரலாம்!”

“என் கணவரின் அலுவலகத்தில் சமீபத்தில் நடைபெற்ற மருத்துவ முகாமில் அவரது பற்களை பரிசோதித்த மருத்துவர்கள், பல் பராமரிப்பில் கவனம் வேண்டும் என்று அறிவுறுத்தியிருக்கிறார்கள். கூடவே, ‘பற்கள் தூய்மை விஷயத்தில் அலட்சியம் காட்டினால் ஹார்ட் அட்டாக்கூட வரலாம்’ என்றும் பயமுறுத்தியிருக்கிறார்கள். ‘மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுகிறார்களே…’ என்று புலம்பிக் கொண்டிருக்கிறார் என் கணவர். உண்மையில் பல் பராமரிப்புக்கும் இதய பாதுகாப்புக்கும் என்ன சம்பந்தம்? கூடவே, அவருக்கு பல் வரிசையானது ஒன்றின் மீது ஒன்றாக அமைந்துள்ளதால் தினசரி ஒழுங்காக பல் துலக்கினாலும் சுத்தமின்றியே இருக்கிறது. என்ன செய்வது..?”

டாக்டர் என்.குருசரண், பல் சிறப்பு மருத்துவர், திருச்சி:

“உங்கள் கணவருக்கு வழங்கப்பட்டிருக்கும் ஆலோசனை சரியானதுதான். குழாய் வழியாக உப்புத் தண்ணீர் சென்றால், குழாயின் உட்புறத்தில் உப்பு படிவதால், தண்ணீரின் போக்குவரத்து தடுமாறுவதுபோல், ரத்தக்குழாயின் உட்புறமும் லேசான படிமானங்கள் சேரும்போது ரத்தத்தின் போக்கி லும் தடுமாற்றங்கள் எழும். ஃபைபர், கொழுப்பு மற்றும் ரத்தத்திலிருக்கும் சில பொருட்களும் இம்மாதிரியான படிமானங்களுக்குக் காரணமாகும். இதனால் பாதிக்கப்படும் ரத்தக்குழாய், இதய அடைப்புக்கு வித்திடுகிறது. இந்தப் பிரச்னையை ‘அத்ரோஸ்க்ளரோஸிஸ்’ (Atherosclerosis) என்பார்கள். இந்த வகை படிமானங்களுக்கு பல் மற்றும் ஈறில் சேரும் அழுக்குகள் பிரதான காரணமாவதுதான் உங்கள் கணவரை மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதன் பின்னணி.

பல் பராமரிப்பில் அலட்சியம் காட்டும்போது பல்லின் அழுக்கு ஈறில் சேர்ந்து, டார்டர் (Tartar) அல்லது கால்குலஸ் (Calculus) எனப்படும் படிமானங்களாக பற்பரப்பில் உருவெடுக்கின்றன. இதில் தலையெடுக்கும் பாக்டீரியாக்கள் ரத்தத்தில் கலந்து உடலில் விரவும்போது, உடலானது பாக்டீரியாக்களுக்கு எதிர்வினையாற்ற தலைப்படும். இந்த எதிர்வினையின் பக்கவிளைவாக ஃபைபர் கொழுப்பு போல ‘அத்ரோஸ்க்ளரோஸிஸ்’ புதுக் காரணத்தோடு படிகிறது. இதுவே நாள்பட, இதய பாதிப்பை உண்டு பண்ணுகிறது.

மூளைக்கு செல்லும் ரத்தக் குழாய்களிலும் ‘அத்ரோஸ்க்ளோரோஸிஸ்’ படிமானம் நிகழ வாய்ப்புகள் உண்டு. அதுமாதிரியான சந்தர்ப்பங்களில் ‘ஸ்ட்ரோக்’ எனப்படும் பக்கவாதம் வருவதற்கான ஆபத்தும் உண்டு.

இதே பிரச்னை, ஒரு கர்ப்பவதிக்கு வரும்போது எடை குறைவான குழந்தை பிறக்க வாய்ப்பு உண்டு. தவிர, இந்த பாதிப்பு எல்லோருக்கும் பொதுவானதும்கூட. சுமார் 12 வயதில் இந்த படிமான வாய்ப்பு ஆரம்பிக்கிறது.

எனவே, பல் மற்றும் வாய் சுத்தத்தில் கூடுதல் அக்கறை வேண்டும். காலையில் கடமைக்காக பிரஷ் செய்வதே பல் பராமரிப்பு என்று நினைத்துக் கொண்டிருப்பவர்கள், இனியேனும் தினமும் இருவேளை உரிய முறையில் பிரஷ் செய்வதும், என்ன சாப்பிட்ட பிறகும், குறிப்பாக காபி, ஜூஸ் போன்ற திரவ ஆகாரங்களாக இருப்பின் உடனடியாக வாய் கொப்பளிப்பதும் அவசியம்.

இவற்றோடு, ‘டெண்டல் ஃப்ளாஸ்’ எனப்படும், பிளாஸ்டிக் நூலைக்கொண்டு பல் இடுக்குகளையும் சுத்தம் செய்ய வேண்டும். இதற்கு முதல்முறை மட்டும் முறைப்படி பல் மருத்துவரின் ஆலோசனை பெறுவது நல்லது.

உங்கள் கணவரைப்போல ஒழுங்கற்ற வரிசையில் பல் அமையப் பெற்றவர்களின் பல் இடுக்குகளை சுத்தம் செய்ய, இந்த ‘டெண்டல் ஃப்ளாஸ்’ அவசியமானது. பல், ஈறு மட்டுமல்ல… நாக்கு மற்றும் முழு வாய் சுகாதாரத்தையும் மனதில் கொள்ளவேண்டும். ஆறு மாதங்களுக்கு ஒரு முறை பல் மருத்துவரை சந்தித்து, அவசியமெனில் ‘ஸ்கேலிங்’ எனப்படும் பல் தூய்மை பராமரிப்பை பெறவேண்டும். விளைவுகள் விபரீதமானவை என்பதால் வருமுன் காக்கும் இதுபோன்ற எளிய நடவடிக்கைகளே புத்திசாலித்தனமானது!”

“நாற்பத்தி இரண்டு வயதாகும் எனக்கு, தலையில் வட்ட வட்டமாக முடி கொட்டுகிறது. சித்த வைத்தியத்தில் சிகிச்சை எடுத்துக் கொண்டும் பிரச்னை சரியாகவில்லை. நிலைமை இன்னும் மோசமாகி மற்ற இடங்களிலும், புருவங்களிலும் முடி கொட்ட ஆரம்பித்துவிட்டது. இதிலிருந்து மீள்வது எப்படி?”

டாக்டர் செந்தில்குமார், சருமநோய் மருத்துவர், மதுரை:

“உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் பிரச்னை ‘ஆலோபோசியா’. இதை ‘பூச்சிவெட்டு’ என்று நம் ஊர்களில் சொல்வதுண்டு. இந்தப் பிரச்னை ஏற்படுவதற்கான பிரதான காரணங்கள், கிருமிகள் மற்றும் மன அழுத்தம் ஆகியவைதான். மிகவும் அரிதாக பரம்பரையும் சிலசமயங்களில் காரணமாக இருக்கலாம்.

சருமத்தில் மட்டுமல்ல… வயிற்றில், சிறுநீர் வழிப்பாதையில் ஏற்படும் கிருமிகளின் விளைவாககூட தலையில் முடி கொட்டச் செய்யும் இது, நான்கு வயது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எவரையும் தாக்கலாம். பாதிப்படைந்தவர்களுக்கு ஸ்டீராய்டு கலந்த ஊசி அல்லது ஆயின்மென்ட் போன்றவற்றை அவர்களுடைய பிரச்னைகளின் வீரியத்துக்கேற்ப சின்னதாக ஆரம்பித்து, பின்பு படிப்படியாக உயர்த்தி கொண்டே வருவோம். மற்றபடி, சாப்பாட்டு விஷயத்தில் சத்தான உணவுகளை எடுத்துக் கொள்ளச் சொல்வோம். இப்படிச் செய்தாலே மூன்று மாதங்களிலேயே உங்கள் பிரச்னைகள் காணாமல் போய் விடும்.

மன அழுத்தத்தால் இந்தப் பிரச்னை ஏற்பட்டவர்கள், மருந்துகளைப் பயன்படுத்துவதால் மட்டும் குணமடைந்துவிட முடியாது. மன அழுத்தம் ஏற்பட காரணமான பிரச்னைகளிலிருந்தும் விடுபட்டால்தான், உரிய நிவாரணம் காண முடியும்.

நன்றி:- டாக்டர் என்.குருசரண், பல் சிறப்பு மருத்துவர், திருச்சி:

நன்றி:-டாக்டர் செந்தில்குமார், சருமநோய் மருத்துவர், மதுரை:

நன்றி:- அ.வி

பகுதி-01 டாக்டரிடம் கேளுங்கள்

பகுதி-02 டாக்டரிடம் கேளுங்கள்

பகுதி-03 டாக்டரிடம் கேளுங்கள்

பகுதி-04 டாக்டரிடம் கேளுங்கள்

பகுதி-05 டாக்டரிடம் கேளுங்கள்

பகுதி-06 டாக்டரிடம் கேளுங்கள்

பகுதி-07 டாக்டரிடம் கேளுங்கள்

பகுதி-08 டாக்டரிடம் கேளுங்கள்

பகுதி-09 டாக்டரிடம் கேளுங்கள்


பகுதி-11 டாக்டரிடம் கேளுங்கள்

ஓகஸ்ட் 4, 2010 1 மறுமொழி

புளிக்குழம்பு சாப்பிட்டால் கருத்தரிக்காதா?

‘‘எனக்கு 24 வயது. என் மூக்கின் மேலிருந்த ஒரு சிறு கொப்பளத்தைக் கைகளால் தேய்த்துவிட்டேன். அது, சில நாட்களிலேயே கறுப்பாகத் தழும்பு போல பெரிய அளவில் மாறிவிட்டது! கடந்த ஒரு மாதமாக அப்படியேதான் உள்ளது.

அதோடு, உதடுகளும் சுற்றியுள்ள பகுதிகளும் கருமையாக உள்ளன. இந்தக் கருமை மாற நான் என்ன செய்ய வேண்டும்? தயவுசெய்து எனக்கு உதவுங்கள் டாக்டர்…’’


டாக்டர் செந்தமிழ்ச்செல்வி, தோல் சிகிச்சை நிபுணர், சென்னை:

‘‘எப்போதுமே முகப் பரு, கொப்பளம் இதையெல்லாம் கிள்ளவே கூடாது. கிள்ளினால், அதிலிருந்து வெளிப்படும் சீழ், முகம் முழுக்கப் பரவி இன்னும் அதிகமான பருக்களையும் கொப்பளங்களையும் உருவாக்கிவிடும். கிள்ளிவிட்டதால் காயமாகி, அது தழும்பாகிவிட்டதாகக் கூறியுள்ளீர்கள். அந்தத் தழும்பு தட்டையாக, மென்மையாக இருந்தால் இரண்டே மாதத்தில் மறைந்து போய்விடும். வேறு சிகிச்சை தேவையில்லை.

கொப்பளம் இருந்த இடம் காய்ந்து பருமனாக இருந்தால், உடனே டாக்டரிடம் காண்பித்து, பருக்களுக்கு அளிக்கும் சிகிச்சையை மேற்கொள்ளுங்கள்.

இது பனிக்காலம் என்பதால் உலர்ந்த சருமம் இருப்பவர்களுக்கு, உதடுகள் கருத்துப் போகக்கூடும். உதட்டில் தினமும் தேங்காய் எண்ணெய் (அ) ஆலீவ் எண்ணெயை தடவி வாருங்கள். கருமை மறைந்து ரோஜா இதழ்களாகப் புன்னகைக்கலாம்’’

‘‘எனக்கு திருமணமாகி 20 ஆண்டுகள் ஆகின்றன. இப்போது என் வயது 36. இரண்டு குழந்தைகள் பிறந்த பிறகு, குடும்பக் கட்டுப்பாடு ஆபரேஷன் செய்துகொண்டேன். பத்து வருடங்கள் கழித்து குடல் பகுதியில் கரு உருவானது. அது ஆபத்து என்பதால், அறுவை சிகிச்சையின் மூலம் கருவை அகற்றிவிட்டனர். குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்த பிறகும் இப்படி கரு உருவாகுமா?

இப்போது வலப்பக்க மார்பகத்தில் கட்டி போல் உள்ளது. மாத விலக்கு ஆகும் முன்பு வலிக்கிறது. வலது கை அக்குள் பகுதியிலும் வலி இருக்கிறது. விலக்கு முடிந்ததும் வலியில்லை. இது ஏன்?

இதேபோல் வலது காதில் சீழ் வருகிறது. துர்நாற்றமடிக்கிறது. காய்ச்சல் வந்தாலும், சளி பிடித்தாலும், உடலில் வலி ஏற்பட்டாலும் காதில் சீழ் வருகிறது. இதற்கு என்ன காரணம்?

நான் குறிப்பிட்டுள்ள பிரச்னைகள் ஒன்றுக்கொன்று தொடர்புடையவையா? என்ன சிகிச்சை எடுக்க வேண்டும்?’’

டாக்டர் என்.சிவராசன், பொது அறுவை சிகிச்சை நிபுணர் மற்றும் ஈ.என்.டி. சிறப்பு மருத்துவர், சென்னை:

‘‘உங்கள் பிரச்னைகளை மூன்று பகுதிகளாகப் பிரித்துக் கொள்கிறேன். முதலாவது பத்து வருடங்களுக்கு முன் உண்டான கர்ப்பம். பொதுவாக, கு.க. அறுவை சிகிச்சைக்குப் பிறகும் சிலருக்கு கர்ப்பம் தரிக்கலாம். இது, கர்ப்பப்பைக்கு முட்டையை எடுத்துச் செல்கிற குழாயில் ஏற்படுகிற கர்ப்பம். இதுதான் பரவலாக ஏற்படுவது. ஆனால், உங்களுக்கு குடல் பகுதியில் கர்ப்பம் உண்டாகியிருக்கிறது. இப்படி குடல் பகுதியில் கர்ப்பம் உண்டாவது மிக மிக அபூர்வமானது. உங்களுக்கு ஏற்பட்ட கர்ப்பத்தை அறுவை சிகிச்சை செய்து அகற்றியது சிறந்ததே.

இரண்டாவதாக, வலப்பக்க மார்பகத்தில் கட்டிபோல் உள்ளது என்றும் மாத விலக்கின்போது மட்டும் வலிப்பதாகவும் கூறுகிறீர்கள். ஹார்மோன் கோளாறினால் இப்படிப்பட்ட பிரச்னைகள் வர வாய்ப்புள்ளது. இதை ‘பைரோ அடினோசிஸ்’ என்பார்கள்.

இது சாதாரணமானதுதான் என்றாலும் அக்குள் பகுதியிலும் வலியுள்ளது என்று நீங்கள் குறிப்பிட்டுள்ளதால், உடனடியாகப் புற்றுநோய் சிறப்பு நிபுணரை அணுகி, ‘புற்றுநோய் இருக்கிறதா?’ என்று பரிசோதித்துக் கொள்ளுங்கள். இது வெறும் பரிசோதனைதான். பயப்பட வேண்டாம். எந்த வியாதியையுமே ஆரம்பகட்டத்தில் கண்டுபிடித்து சிகிச்சையை மேற்கொள்வதுதான் சிறந்தது என்பதை மறந்துவிடாதீர்கள். அதிலும், கேன்சர் போன்றவற்றை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் முழுவதுமாகக் குணப்படுத்திவிடலாம்.

அடுத்தது, காதில் சீழ் வரும் விஷயம்… அநேகமாக உங்களின் நடுக் காதில் இன்ஃபெக்ஷன் ஏற்பட்டு இருக்கலாம். இதனால் செவிப்பறையில் துவாரம் ஏற்பட்டு, உடல் ஆரோக்கியத்தில் பிரச்னை ஏற்படும்போது சீழ் வரலாம். இதற்கு ஈ.என்.டி. மருத்துவரிடம் சிகிச்சை மேற்கொள்வதே சிறந்தது.

உங்களுக்கு ஏற்பட்டிருக்கிற மூன்றுமே மூன்று தனித்தனிப் பிரச்னைகள்தான். அவற்றுக்கிடையே எந்தத் தொடர்பும் இல்லை’’

‘‘என் வயது 20. எனக்கு சில மாதங்களாக மாத விலக்கு பிரச்னை உள்ளது. ஒவ்வொரு மாதமும் வெவ்வேறு தேதிகளில் மாத விலக்கு ஏற்படுகிறது. கடந்த இரண்டு மாதங்களாக நான் விலக்காகவில்லை. எங்கள் குடும்ப டாக்டர் என்னைப் பரிசோதித்து, சில மாத்திரைகளைக் கொடுத்து, சாப்பிடச் சொன்னார். அதன்படி நானும் சாப்பிட்டு வந்தேன்.

இப்போதெல்லாம் மாத்திரை சாப்பிட்டால்தான் மாதவிலக்கு ஏற்படுகிறது. என் வீட்டுக்கு அருகில் உள்ளவர்கள் ‘குண்டாக இருக்கிறவர்களுக்கு இதுபோன்ற பிரச்னை வரும். நீ குண்டுதானே’ என்கிறார்கள். எனது எடை 75 கிலோ. நிஜமாகவே குண்டாக இருப்பதால் இது போன்ற பிரச்னை வருமா?’’

டாக்டர் கீதாஹரிப்ரியா, மகப்பேறு மருத்துவர், சென்னை:

‘‘இருபது வயதில் 75 கிலோ எடை என்பது மிகவும் அதிகம். அதிகமான எடை இருந்தாலே, ஹார்மோன் பிரச்னை தானாகவே வரும். உங்களின் எடையை 60 கிலோவாகக் குறைத்துக் கொள்ளுங்கள்.

இதற்கு உணவுக் கட்டுப்பாடும் உடற்பயிற்சியும் மிகமிக அவசியமானவை. எண்ணெய்ப் பதார்த்தங்கள், வறுவல் போன்றவற்றுக்கு ‘குட் பை’ சொல்லுங்கள். அரிசியால் ஆன உணவைக் குறைத்துக் கொள்ளுங்கள். தினமும் ஒரு மணி நேரமாவது வாக் செல்ல வேண்டும். அதோடு ஏரோபிக்ஸ் போன்ற பிற உடற்பயிற்சிகளையும் முயற்சிக்கலாம். பகல் தூக்கத்தையும் அதிக நேரம் தூங்குவதையும் முதலில் நிறுத்துங்கள். இவற்றோடு மருத்துவரின் அறிவுரையுடன் உடல் எடையைக் குறைக்கிற மாத்திரைகளும் எடுக்கலாம்.

மாதவிலக்கு பிரச்னை பற்றி அறிய நீங்கள் ஹார்மோன் டெஸ்ட் செய்துகொள்ளவேண்டும். முட்டை உற்பத்தியாகிறதா? அப்படி ஆகவில்லையென்றால் ஏன், எதனால் என்பதைப் பரிசோதித்துப் பார்க்க வேண்டும். அதற்கேற்பதான், உங்களுக்குச் சரியான சிகிச்சை அளிக்க முடியும்.

இந்தப் பிரச்னைக்கு எல்லாவிதமான பரிசோதனைகளும் செய்து, சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதால் மூவாயிரம் ரூபாய்வரை ஆகும்.’’

‘‘எங்களுக்குத் திருமணம் முடிந்து ஒரு வருடம் ஆகிறது. இன்னும் கரு உண்டாகவில்லை. என் உறவினர் ஒருவர் ‘உடலின் அதிக சூடு காரணமாக விந்தணுக்கள் இறக்கக்கூடும். சூட்டை அதிகரிக்கிற புளியே உணவில் சேர்க்கக் கூடாது’ என்கிறார். என் வீட்டிலோ புளியோதரை, புளிக்குழம்பு போன்றவற்றை அடிக்கடி செய்கிறார்கள். எங்களைப் பொறுத்தவரை தாம்பத்ய உறவில் எந்தப் பிரச்னையும் இல்லை. மாதவிலக்கான நாளில் இருந்து சரியாக 14\வது நாள் உறவு கொண்டும் பலன் இல்லை.

என் கேள்விகள் இதுதான்…

1. உணவில் புளி சேர்த்தால், உடலின் சூடு அதிகமாகி, விந்தணுக்கள் இறந்துவிடும் என்பது உண்மையா?

2. நாள் கணக்கு பார்த்து உறவுகொண்டும் ஏன் எனக்கு இன்னும் கருத்தரிக்கவில்லை?

3. நாங்கள் மகப்பேறு மருத்துவரை இப்போதே அணுகலாமா? அல்லது இன்னும் சில நாட்கள் காத்திருக்கலாமா?’’

டாக்டர் ஸ்ரீகலா பிரசாத், மகப்பேறு மருத்துவர், சென்னை:

‘‘உங்கள் வயது என்னவென்று நீங்கள் குறிப்பிடவில்லை. 24 வயதுக்குள்தான் என்றால் நீங்கள் தாராளமாக இன்னும் 2 வருடங்கள் காத்திருக்கலாம். மற்றவர்கள், ஸ்பெர்ம் அனலைசஸ் அதாவது விந்தணு, முட்டை பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

30-ஐ நெருங்கியவர்களாகவோ, 30-க்கு மேற்பட்டவர்களாகவோ இருந்தால் இனியும் தாமதிக்காமல் உடனடியாக பரிசோதனை செய்ய வேண்டும்.

சாப்பாட்டில் புளி அதிகம் சேர்ப்பதால் எல்லாம் தாம்பத்ய உறவிலோ, விந்தணுக்கள் உற்பத்தியிலோ எந்த பாதிப்பும் இருக்காது. கவலை வேண்டாம்.

ஆண்களுக்கு, உடம்பில் சூடு அதிகமானால் விந்தணுக்கள் இறந்துவிடும் என்பது உண்மைதான். தொழிற்சாலைகளில், இயந்திரங்களின் அருகில் பணிபுரிகிறவர்களுக்கு உடம்பில் நேரடியாக சூடுபடுவதால், விந்தணுக்களின் எண்ணிக்கை ஓரளவு குறைய வாய்ப்பு இருக்கிறது. சிலருக்கு, ரத்த நாளங்களில் ஏற்படுகிற சில மாற்றங்களால் உடம்புக்குள் சூடு அதிகரித்து, அதனாலும் விந்தணுக்கள் குறையலாம்.

மற்றபடி, பொதுவாக, திருமணம் முடிந்து 5 அல்லது 10 வருடங்களாகியும் குழந்தை இல்லாததால், மருத்துவ சிகிச்சை எடுக்கிறவர்கள் மட்டுமே, மருத்துவரின் அறிவுரைப்படி, நாட்களை கணக்கிட்டு தாம்பத்யத்தில் ஈடுபட வேண்டியிருக்கும். இப்போதுதான் திருமணம் முடிந்திருக்கிறது என்கிறீர்கள். தாம்பத்ய உறவிலும் பிரச்னை இல்லை என்பதால், கருத்தரிக்க இன்னும் கொஞ்ச காலம் காத்திருப்பதில் தப்பே இல்லை!’’

நன்றி:- டாக்டர் செந்தமிழ்ச்செல்வி, தோல் சிகிச்சை நிபுணர், சென்னை:

நன்றி:-டாக்டர் என்.சிவராசன், பொது அறுவை சிகிச்சை நிபுணர் மற்றும் ஈ.என்.டி. சிறப்பு மருத்துவர், சென்னை:

நன்றி:-டாக்டர் கீதாஹரிப்ரியா, மகப்பேறு மருத்துவர், சென்னை:

நன்றி:டாக்டர் ஸ்ரீகலா பிரசாத், மகப்பேறு மருத்துவர், சென்னை:

நன்றி:- அ.வி

பகுதி-01 டாக்டரிடம் கேளுங்கள்

பகுதி-02 டாக்டரிடம் கேளுங்கள்

பகுதி-03 டாக்டரிடம் கேளுங்கள்

பகுதி-04 டாக்டரிடம் கேளுங்கள்

பகுதி-05 டாக்டரிடம் கேளுங்கள்

பகுதி-06 டாக்டரிடம் கேளுங்கள்

பகுதி-07 டாக்டரிடம் கேளுங்கள்

பகுதி-08 டாக்டரிடம் கேளுங்கள்

பகுதி-09 டாக்டரிடம் கேளுங்கள்