தொகுப்பு

Archive for the ‘எந்தெந்த மருந்து எமனாகும்’ Category

எந்தெந்த மருந்து எமனாகும்? – ப.திருமாவேலன்

ஏப்ரல் 4, 2010 பின்னூட்டம் நிறுத்து

சென்னை கொடுங்கையூர் குப்பைமேட்டில் கிடக்கும் மாத்திரைகளை கிலோகணக்கில் நிறுத்து வாங்கி வந்து விற்பனை செய்ததாகச் சிக்கியது ஒரு கும்பல். வேலூர் புறவழிச் சாலையில் திடீரென்று தீப் புகை. லட்சக்கணக்கான மதிப்புள்ள போலி மாத்திரைகளை யாரோ எரித்துவிட்டு ஓடுகிறார்கள். காஞ்சி மாவட்டம் புழுதிவாக்கம் மருந்துக் கடையைக் கிளறினால் பழைய, போலியான மருந்துக் குவியல்கள். நெல்லை வீரவநல்லூர் மருந்துக் கடைக்கு ரெய்டு போனால் சிக்கிய இரண்டு பேர், ‘எட்டாம் வகுப்பு’ வரை படித்து இருக்கும் போலி டாக்டர்கள். கடலூரில் போலி மருந்துகளை வைத்திருந்து கைதான சாமியப்பன், ‘நேற்றுதான் 40 ஆயிரம் போலி பாட்டில்களை சுடுகாட்டில் எரித்துவிட்டேன்’ என்று சொல்லிப் பதறவைக்கிறார்!

இப்படி தமிழ்நாட்டின் நாலா பக்கமும் நீக்கமற நிறைந்துகிடக்கிறது போலி மருந்து மாத்திரைகள். மனிதப் போலிகளைப் பார்த்துச் சலித்த மக்களுக்கு மருந்துப் போலிகளைப் பார்க்கப் பார்க்கப் பதறுகிறது. இப்படி உயிரோடு விளையாடும் கும்பலுக்கு இதுவரை எந்தத் தடையும் இல்லை. ஜாக்கிரதையாக இருக்க வேண்டியது பொதுமக்கள்தான்.

பொதுநலத்தில் அக்கறைகொண்ட மருத்துவர்கள், நுகர்வோர் அமைப்பு கள், தன்னார்வலர்கள், மருந்துக் கடை உரிமையாளர்கள் எனப் பலதரப்பட் டவர்களிடமும், இது குறித்து கேட்ட போது கிடைத்தவை இவை…

டி.பார்ம் அல்லது பி.பார்ம் படித்த ஃபார்மசிஸ்ட்டுகளின் சான்றிதழ்படிதான் மருந்துக் கடைகளுக்கான அனுமதி தரப் படுகிறது. அதாவது, மருத்துவப் படிப்பு படிக்காதவர் மருந்துக் கடை வைக்கக் கூடாது என்பது விதி. ஆனால், இன்று பல கடைகளில் அப்படி ஒரு மனிதர் இல்லை. கடை அனுமதி வாங்குவதற்கு ஏதாவது ஒரு பார்மசிஸ்ட் கையெழுத்து வாங்கிக்கொள்வது, வாரத்துக்கு ஒரு தடவையோ அல்லது மாதம் ஒருமுறையோ வந்து கையெழுத்துப் போட்டுவிட்டு பணத்தை வாங்கிச் செல்வதுதான் பெரும்பாலான கடைகளில் நடைமுறையாக இருக்கிறது. பார்மசிஸ்ட் இல்லாத கடைகளில் மருந்து மாத்திரைகளை வாங்காதீர்கள்!

சாதாரண காய்ச்சல், தலைவலியாக இருந்தாலும் மருத்துவ ரிடம் செல்லாமல் உங்களுக்குத் தெரிந்த மாத்திரையைச் சொல்லி, மருந்துக் கடைகளில் மாத்திரைகள் வாங்காதீர்கள். சிலர், ‘எங்க அம்மாவுக்கு வயிறு வலிக்குது. அதுக்கு ஏதாவது ஒரு மாத்திரை கொடுங்க’ என்பார்கள். ‘வயசு என்ன?’ என்று கடைக்காரர் கேட்பார். சொன்னதும் மாத்திரையைக் கொடுப்பார். எதனால் அந்த வலி வந்தது, தொடர்ந்து வருகிறதா, சாதாரண உடற்சூடு காரணமாக வந்த வலியா என்றெல்லாம் எந்தச் சோதனையும் இல்லாமல் இப்படி மருந்துகள் வாங்காதீர்கள்!

எந்த மருந்து, மாத்திரை வாங்கினாலும் பில் தாருங்கள் என்று கேட்டு வாங்குங்கள். பில் போட்டால் வரியையும் சேர்த் துப் போட வேண்டும், இதனால் கூடுதல் தொகை தர வேண்டி இருக்கும் என்று கடைக்காரர் காரணம் சொன்னாலும் பரவா யில்லை. எம்.ஆர்.பி. விலைக்குக் கூடுதலாக நீங்கள் எந்த மருந்துக்கும் விலை தர வேண்டியது இல்லை. சில மருந்துகளில் லோக்கல் டேக்ஸ் எக்ஸ்ட்ரா என்று போட்டிருந்தால் மட்டும் கூடுத லாகத் தர வேண்டியிருக்கும். வாங்கிய மருந்துகள் மூலமாக எந்தப் பிரச்னைகள் வந்தாலும் நிரூபிப்பதற்கு உங்கள் கைவசம் இருக்கக்கூடிய ஒரே ஆதாரம் இந்த பில்கள் மட்டும்தான்!

டாக்டர்கள் எழுதித் தரும் மருந்துச் சீட்டில் உள்ள மருந்து மாத்திரைகளைத்தான் கடைக்காரர் தருகிறாரா என்று கவனியுங்கள். பெரும்பாலும் பல மாத்திரைகளின் பெயர்கள் ஒரு சில எழுத்துகள்தான் வித்தியாசமாக இருக்கும். டாக்டர் எழுதித் தரும் மாத்திரை இல்லாத நிலையில், அதைப்போன்ற வேறு கம்பெனி மாத்திரையைக் கடைக்காரர் தந்துவிடக்கூடும். அப்படித் தரும்போது வாங்காதீர்கள். அல்லது அங்கே இருந்து டாக்டருக்கே போன் செய்து கேட்டு குறிப்பிட்ட மாத்திரையை வாங்கலாமா என்று ஆலோசனை செய்த பிறகு வாங்குங்கள்!

அனைத்து மருந்து மாத்திரைகளிலும் தயாரிக் கப்பட்ட நாள் மற்றும் எதுவரை பயன்படுத்தலாம் என்று சொல்லப்படும் எக்ஸ்பயரி தேதி நிச்சயம் இருக்கும். அதைக் குறிப்பிட வேண்டியது முக்கியமான சட்டவிதி. அந்தத் தேதியைத் திருத்தி அச்சிட்டு விற்பனை செய்த குரூப்தான் இப்போது மாட்டிக்கொண்டு இருப்பது. காலாவதியான மருந்துகளை மொத்தமாகக் கிலோ கணக்கில் வாங்கிச் சென்று, அதில் எக்ஸ்பயரி தேதியை மட்டும் அழித்து மாற்றி, மீண்டும் ரீ- சப்ளை செய்து பல ஆண்டுகளாகச் சம்பாதித்து வந்திருக்கிறார்கள். எந்த மருந்தாக இருந்தாலும் எக்ஸ்பயரி தேதி முடிவதற்கு மூன்று மாதங்கள் இருக்கிறது என்றாலே, அதை வாங்காமல் தவிர்ப் பது நல்லது!

எல்லா மருந்துகளிலும் போலிகள் வருவது இல்லை. அதிகப்படியான தேவைகள் உள்ளமருந்து களில் மட்டும்தான். ஜீபர் எக்ஸ்.டி, ரிநெர்வ் கேஸ், சென்ட்னால் சஸ்பென்ஷன், காக்னிக்ஸ் எக்ஸ்.டி, ஈமெர்கெட், ஜெபர் எக்ஸ்டி சஸ்பென்ஷன், டி.எஸ்.ஆர், பேன்டம் டி.எஸ்.ஆர். கேப்சூல்ஸ், காக்னிக்ஸீ பி.டி.சிரப், ரிநெர்வ் கேப்சூல்ஸ் பி.டி ஆகிய மருந்து மாத்திரைகளைத்தான் இந்த கொடிய கும்பல் போலிகளைத் தயாரித்து அதிக மாகக் கையாண்டதாகக் கூறப்படுகிறது. டிஸ்போஸபிள் ஊசிகளும் இதில் அடக்கம். “இவற்றில் ரிநெவ் மாத்திரைகள் விட்டமின் சத்து கொண்டவை. காக்னிக் வகையானவை இருமலைக் குணப்படுத்தப் பயன்படுபவை. தொடர்ச்சியாகஇருமல் இருக்கும் நோயாளிகள் டாக்டரிடம் போகாமலேயே இவற்றை வாங்கி ஸ்டாக் வைத்துக்கொள்கிறார்கள். பேன்டம், வயிற்றுக் கோளாறுகளுக்காகத் தரப்படுவது. இவை எல்லாம் காலாவதி ஆனபிறகு அழிக்கப்படாத தால்தான் அந்தக் கும்பல் புகுந்து விளையாடி இருக் கிறது” என்கிறார் டாக்டர் எழிலன்.

குடும்ப டாக்டர், குடும்ப மெடிக்கல் ஷாப் என ஒவ்வொரு குடும்பத்தினரும் தங்களுக்கு மிக நெருக் கமான, உண்மையான நபரை அடையாளம் கண்டு அவர்களின் வழிகாட்டுதல்படி செயல்படுவதே சரியானது. நெருங்கியவரிடம், பழக்கமானவரிடம், தெரிந்தவரிடம் ஏமாற்றுவது குறைவாக இருக்கும் என்பது பொதுவான விதி. மேலை நாடுகளில் குடும்ப டாக்டரின் பரிந்துரை இல்லாமல் ஸ்பெஷல் டாக்டர்கள் குறிப்பிட்ட நோயாளிகளைப் பார்க்க மாட்டார்களாம். தொடர்ச்சியாக ஒரே டாக்டரிடம் செல்வது, ஒரே கடையில் மருந்துகள் வாங்குவது நல்லது!

தமிழகம் முழுவதும் 45 ஆயிரம் மருந்துக் கடை கள் இருக்கின்றன. 150 சதுர அடி இடம், இடத்தின் உரிமையாளருக்கும் கடை நடத்துபவருக்குமான ஒப்பந்தம், கடை இருக்கும் ரோடு மேப், ஒரு பெரிய குளிர்சாதனப் பெட்டி, பார்மசிஸ்ட் ஒருவரின் கையெழுத்து, அவருக்கு அனுபவம் இருக்கிறதா என்பதற்கான சான்றிதழ் ஆகியவற்றுடன் டெபாசிட் பணம் செலுத்தினால், மருந்துக் கடை வைக்கலாம். மருந்து கம்பெனிகள், வாங்கி விற்பனை செய்யும் ஏஜென்ட்டுகள், விற்பனைப் பிரதிநிதிகள் என இந்தத் தொழிலைச் சுற்றியிருக்கும் கூட்டம் பல்லாயிரக்கணக்கானது. ஆனால், இதைக் கண்காணிப்பதற்காகவே உள்ள அரசாங்க அதிகாரிகளின் எண்ணிக்கை சில நூறுகள்தான். எனவே, அதிகாரிகள் முழுக்கக் கண்காணிப்பார்கள் என்ற நம்பிக்கையோடு மட்டுமே இல்லாமல் மக்களும் விழிப்பு உணர்வோடு தங்களைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்!

இது போலிகள் பஜார்… உங்கள் உயிர் உஷார்!

நன்றி:-ப.திருமாவேலன்

நன்றி:-ஆனந்த விகடன்