தொகுப்பு

Posts Tagged ‘குழம்பு’

நண்டு(Crab) – நண்டு வறுவல் – கேரளா நண்டு குழம்பு


இன்று நம்ம வீட்லே நண்டு கறிங்க. நான் ஒரு நண்டுப் பிரியன். குழந்தைகளுடன் அமர்ந்து அவர்களுக்கு நண்டினை உடைத்து, சதையை தனியாக எடுத்து கொடுத்து, அதை அவர்கள் சாப்பிடுவதை(கண்ணில் நீர் வர,வர)பார்த்து மகிழ்வது ஒரு தனி சுகம். தான். இதை உங்களுடனும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற ஆசையினால் வந்தது தான் இப் பதிவு.

எப்படி சமைப்பது என்பது பற்றியும் இரண்டு குறிப்புகள் இணைத்துள்ளேன். சைவப் பிரியர்கள் மன்னிக்க.. சாப்பிடவில்லையென்றாலும் நண்டைப் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ளலாமே! பயப்படாமல் வாங்க! நண்டு கடித்து விடாமல் பார்த்துக் கொள்கிறேன்.

உலகின் கடல் நீரிலும் தரையிலும் உயிர் வாழும் நண்டுகளின் ரகத்தை அளவிட முடியாது என்கிறார் ஒரு கடல் வாழ் உயிரின அறிஞர். அத்தனை ரகங்கள் பல ஆயிரங்களைத் தாண்டும் என்கிறார்கள். அமெரிக்காவைச் சுற்றியிருக்கும் கடல்களில்  மாத்திரம் ஆறாயிரத்திற்கும் கூடுதலான ரக நண்டுகள் வாழ்கின்றன.

உலக மக்களால் உண்ணப்படும் எல்லா வகைக் கடல் உணவுகளில் நண்டுகள் இருபது (20) விகிதமாக இருக்கின்றன. உலக மக்களால் வருடம் ஒன்றுக்கு உண்ணப்படும் நண்டுகளின் எடை ஒன்றரை மில்லியன் தொன் என்று உலக வங்கி அறிக்கை கூறுகிறது.

நண்டுத் தசை உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இது உலக சுகாதார நிறுவனத்தின்  செய்தி. அதில் புரதம் மிகச் செறிவாக இருக்கிறது. மேலும் பொட்டாசியம், துத்த நாதம் (சின்க்) ஒமேகா அமிலங்கள் என்பனவும் இருக்கின்றன. நிறை உணவாக நண்டுத் தசை கருதப்படுகிறது.

நண்டு ஒரு ஏற்றுமதித் பொருள். பதனிடப்பட்ட நண்டு பல நாடுகளின் பொருளாதார மேம்பாட்டிற்கு உதவுகின்றன. மிகக் கூடுதலான நண்டை ஏற்றுமதி செய்யும் நாடு அமெரிக்கா. அடுத்ததாகச் சீனா, கனடா, ஐக்கிய இராச்சியம், பிரான்சு, ருஸ்சியா என்பனவும் ஏற்றுமதி செய்கின்றன.

நண்டு மனித உணவாக மாத்திரமல்லச் செல்லப் பிராணியாகவும் பயன்படுகிறது. நண்டுகளால் நீந்த முடியும். தரையில் பக்கவாட்டாக நடக்கவும் ஓடவும் முடியும். அத்தோடு நிலத்தில் தனது பருமனுக்குப் பொருத்தமான குழி தோண்டி அதில் வாழவும் முடியும்.

அவை நீரில் வாழும் போது மீனைப் போல் சுவாசிக்கின்றன. தரையில் வாழும் நண்டுகள் தரைவாழ் உயிரினங்களைப் போல் காற்றைச் சுவாசிக்கின்றன. மிகக் கூடுதலான நண்டுகள் நீரில் தான் வாழ்கின்றன.

மிகக் குறைந்த எண்ணிக்கையிலானவை தரையில் வாழ்கின்றன. வானத்தில் ஒரு நட்சத்திரக் கூட்டம் நண்டின் பெயரால் அழைக்கப்படுகிறது. கடகம் என்றால் நண்டு என்று பொருள். பன்னிரு ராசிகளில் ஒன்றாகக் கடக ராசி இடம் பெறுகிறது.  புற்று நோயை ஆங்கிலத்தில் கான்சர்  (Cancer) என்பார்கள்.

இலத்தீன் மொழியில் கான்சர் என்றால் நண்டு என்று பொருள். இலத்தினிலிருந்து ஆங்கிலத்திற்கு வந்த போது கான்சர் என்ற சொல் நண்டு என்ற அர்த்தத்தைக் கொண்டிருக்கிறது.

நண்டுகள் பொதுவாக தட்டையான ஓடும் ஐந்து சோடி கால்களும் கொண்டவை. இவற்றில் முதற்சோடிக் கால்கள் கவ்விகளாக மாற்றமடைந்துள்ளன.

நண்டுகள் மேல் ஓட்டினை உடையன. ஆண்டுக் கொருமுறை மேலோடுகள் களன்று புதுப்பித்துக் கொள்கின்றன. நண்டுகள் கூட்டுக்கண்கள் இரண்டைக் கொண்டவை.

பெண் நண்டுகள் ஆண் நண்டுகளிலும் பார்க்க அகலமான வயிற்றுப்பகுதியைக் கொண்டுள்ளன. வயிற்றின் கீழேயே அவை தம் முட்டைகளைக் கொண்டுள்ளன.

நண்டின் காலை மாத்திரம் சுவைத்து உண்பதற்காகச் சில நண்டு வகைகள் விற்பனையாகின்றன. நண்டு உணவாக்கப்படும் போது அதனுடைய உடற் சதை மாத்திரம் முதலிடம் பிடிக்கிறது. பத்துக் கால்களில் பெரியதான முன்பக்க இரண்டு கால்களும் சதைப் பிடிப்பாகவும் ருசியாகவும் இருக்கின்றன. இவை இரண்டாம் இடத்தைப் பிடிக்கின்றன.

ஆனால் இந்தக் கால்களுக்காக மாத்திரம் கடலில் பிடிக்கப்படும் நண்டின் பெயர் (Stone Crab) இதைத் தமிழல் பாறை நண்டு எனலாம். தமிழீழக் கடலிலோ, இந்து மாகடலிலோ இதைக் காணமுடியாது. அத்திலாந்திக் மாகாடலின் மேற்கில் அமெரிக்கப் புளொரிடா மாநிலத்திற்குரிய கடலில் இந்த வகை நண்டைக் காணலாம்.

அமெரிக்கர்கள் இந்த நண்டை விரும்பி உண்பார்கள் இந்த நண்டின் உடல் மிகச் சிறியது. கால்கள் மிகப் பெரியவை. கால்கள் மிகப் பலமானவை. சிப்பி போன்றவற்றை இந்த நண்டு காலால் உடைத்துத் தின்பதால் கால்களுக்குப் பலம் தேவைப்படுகிறது. சிப்பிகள் (Oyster) தான் இந்த நண்டின் பிரதான உணவு.

பாறை நாண்டின் இரண்டு கால்களில் ஒன்று அடுத்ததிலும் பார்க்க மிகப் பெரியது. இது சிப்பி ஓட்டை உடைப்பதற்கு உதவுவதால் உடைப்பான் (Crusher) என்றும் இரையைப் பிடித்து வைத்திருப்பதற்கு அடுத்தது உதவுவதால் பிடிப்பான் (Pincer) என்றும் அழைக்கப்படுகின்றன.

நல்ல வளர்ச்சி அடைந்த பாறை நண்டின் எடை ஒரு கிலோ அளவு இருக்கும். இது கடல் வாழ் உயிரினம். பெயர்தான் பாறை நண்டு. மற்றும் படி அதற்கும் பாறைக்கும் தொடர்பு இல்லை.

உலகின் மிக நீளமான நண்டுக் காலின் நீளம் 12 அடி 6 அங்குலம். இந்த அதிசய நண்டு ஜப்பான் தீவுகளைச் சுற்றியுள்ள கடலில் காணப்படுகிறது, இதன் பெயர் ‘ஜப்பான் ஸ்பைடர் கிராப்” (Japan Spider Crab) ஸ்பைடர் என்றால் சிலந்தி என்று அர்த்தம். ஆகையால் இந்த நண்டைச் சிலந்தி நண்டு என்று அழைக்கலாம் இந்தப் பெயர் எப்படி வந்தது என்று தெரியவில்லை.நண்டுக் குடும்பத்தில் மிக நீளமான கால்களை உடைய ரகம் என்று இது ஏற்றுக் கொள்ளப்படுகிறது. கால்கள் இரண்டும் மிக நீளமாக வளர்கின்றன. 12 அடி 6 அங்குலம் (3.8 மீற்றர்) வரை நீள்கின்றது. ஆண் நண்டின் கால்கள் பெண் நண்டின் கால்களிலும் பார்க்கக் கூடுதல் நீளமானது.

நண்டு வறுவல்

தேவையான பொருள்கள்:

வெங்காயம் – 3

தக்காளி – 3

இஞ்சி, பூண்டு – தேவையான அளவு

எண்ணெய் – தேவையான அளவு

மஞ்சள் தூள் – சிறிதளவு

மிளகாய் தூள் – ஒரு டீஸ்பூன்

தனியா தூள் – 2 டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

மிளகு – 1 டீஸ்பூன்

சீரகம் – 1 டீஸ்பூன்

பச்சை மிளகாய் – 2

செய்முறை:

நண்டை கால்கள் தனியாகவும், உடல் பாகம் தனியாகவும் எடுத்து விட்டு சுத்தம் செய்து கொள்ளவேண்டும்.

ஒரு வெங்காயம் மிளகு, சீரகம், பச்சை மிளகாய் சேர்த்து விழுதாக அரைத்து கொள்ளவேண்டும்.

எண்ணெய் விட்டு காய்ந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை போடவும். பிறகு இஞ்சி, பூண்டு விழுது போடவும்.

வதங்கியதும் தக்காளி மஞ்சள் தூள், தனியா தூள், மிளகாய் தூள், அரைத்து

வைத்துள்ள விழுதை சேர்த்து நன்கு வதக்கி நண்டுகளை போட்டு மசாலா

கலந்து வரும்படி கிளறி ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றவும்.

நண்டு வெந்து கிரேவியாக வரும் போது இறக்கவும்.

கேரளா நண்டு குழம்பு

தேவையான பொருட்கள்:

நண்டு – 1/2 கிலோ

சின்ன வெங்காயம் – 1/4 கிலோ

தக்காளி- 100

இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 ஸ்பூன்

பச்ச மிளகாய் – 2

மஞ்சள்த்தூள் – 1/2 ஸ்பூன்

தனி மிளகாய்த்தூள் – 3ஸ்பூன்

தனியாத்தூள் – 1/2 ஸ்பூன்

சீரகத்தூள் – 1/2 ஸ்பூன்

பெருஞ்சீரகத்தூள் -1/2ஸ்பூன்

பட்டை -1

கிராம்பு -1

ஏலக்காய் – 1

தயிர் – 1/2கப்

கறிவேப்பிலை

அரைத்த தேங்காய் விழுது – 3ஸ்பூன் அல்லது தேங்காய் பால் -1/2 கப்

உப்பு – தேவைக்கு

தேங்காய் எண்ணெய் – தேவைக்கு

முதலில் நண்டை சுத்தமாக அலசி வைக்கவும். அதில் மிளாய்த்தூள்,மஞ்சள்த்தூள்,தனியாத்தூள், சீரகத்தூள்,பெருஞ்சிரகத்தூள், சிறிது தயிர், சிறிது இஞ்சி பூண்டு பேஸ்ட், உப்பு போட்டு விரவி 1/2 மணி நேரம் ஊறவைக்கவும்.

காடாயில் நன்றாக எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் கிராம்பு,பட்டை,ஏலக்காய் போட்டு தாளிக்கவும் பிறகு வெங்காயம் போட்டு பொன்னிறமாக வதக்கவும் அதில் இஞ்சிபூண்டு பேஸ்ட், பச்சமிளகாய், கறிவேப்பிலை, தக்களி சேர்த்து நன்றாக வதக்கவும்

பிறகு விரவி வைத்த நண்டு கலவையினை சேர்த்து வதக்கவும். அதில் அரைத்த தேங்காய் விழுதினை சிறிது தண்ணீர் சேர்த்து இதில் சேர்க்கவும். தேவைக்கு உப்பு சேர்த்து நன்றாக வேக வைக்கவும். விருப்பபட்டால் மேலே கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

நன்றி:-என் இனிய இல்லம்.blogs

நன்றி:-http://en-iniyaillam.blogspot.com/

பகுதி-09 கிராமத்து கைமணம் பச்சை மொச்சை-பரங்கிக் குழம்பு பிரண்டை துவையல் வெந்தய இட்லி துருவல் சேனை புளிப்பொரியல்


பச்சை மொச்சை – பரங்கிக் குழம்பு

மொச்சைப்பயறு பச்சையா ஒரு கப் எடுத்துக்குங்க. ஒரு கீத்து பரங்கிக்காயை சின்ன துண்டுகளா நறுக்கிக் குங்க. மூணு கட்டு வெந்தயக் கீரையை அலசிக் கழுவிட்டு, இலைகளாக ஆய்ஞ்சுக்குங்க. ஒரு கப் சின்ன வெங்காயத்தையும் அரை கப் பூண்டையும் தோல் உரிச்சு, பொடியா நறுக்கிக்குங்க. நாலு தக்காளியை நறுக்கி எடுத்துக் குங்க. எலுமிச்சை அளவு புளியை, ரெண்டு கப் தண்ணில கரைச்சு, வடி கட்டி வச்சுக்குங்க. ஆறு சின்ன வெங்காயம், அரை டீஸ்பூன் சீரகம், ஒன்றரை டீஸ்பூன் பொட்டுக் கடலை, கறிவேப்பிலை சேர்த்து, விழுதா அரைச்சு வைங்க.

வாணலியை அடுப்பில் வச்சு, தாளிக்கத் தேவையான எண்ணெய் ஊத்தி, அது காய்ஞ்சதும், கடுகு, சீரகம், வெந்தயம் மூணையும் தலா அரை டீஸ்பூன் போட்டுப் பொரியவிடுங்க. அப்புறம், நறுக்கி வச்சிருக்கற வெங்காயம், பூண்டு போட்டு, ஆய்ஞ்சு வச்சிருக்கற கீரையை யும் சேர்த்து வதக்குங்க. அதோட தக்காளி, மொச்சை, பரங்கிக் காய்த் துண்டுகளைப் போட்டு, தேவையான உப்பு சேர்த்து, தக்காளி கரையறவரைக்கும் நல்லா வதக்குங்க. அதுல கரைச்சு வச்சிருக்கற புளித்தண்ணி, ரெண்டு டீஸ்பூன் மிளகாய்த்தூள், கால் டீஸ்பூன் மஞ்சள் தூள், அரைச்சு வச்சிருக்கற விழுது… எல்லாத் தையும் சேர்த்து, பச்சை வாசனை போகக் கொதிக்க விடுங்க. காய் வெந்ததும், இறக்குங்க. பொங்கலுக்கு சூப்பர் காம்பினேஷன் இந்தக் குழம்பு!

வாய்ப்பிருந்தா மண்சட்டியில இந்தக் குழம்பை செஞ்சு பாருங்க. பிரமாதமான வாசத்தோட, அபார ருசியும் சேர்ந்துக்கும்!

பிரண்டை துவையல்

கிராமத்துப் பக்கம் வேலிகள்ல படர்ந்து கிடக்கும் பிரண்டை, இப்போ நகரங்கள்லயும் மார்க்கெட்ல கிடைக்குது. நல்ல பிஞ்சா பார்த்து வாங்கிக்குங்க. விரல் நீளத்துக்கு ஆறு துண்டுகளை எடுத்து பொடியா நறுக்கிக்குங்க. எட்டு சின்ன வெங்காயத்தையும் ரெண்டு தக்காளியையும் அதேமாதிரி பொடியா நறுக்கி வச்சுக்குங்க. நாலு பூண்டு பல்லை உரிச்சு வச்சுக்குங்க.

அடுப்புல வாணலியை வச்சு, ரெண்டு டேபிள் ஸ்பூன் எண்ணெயைக் காயவச்சு, பிரண்டையை நல்லா வதக்கி, எடுத்துடுங்க. அதே எண்ணெய்ல அரை டீஸ்பூன் கடுகு போட்டு பொரியவிடுங்க. அதோட, ஒரு டேபிள் ஸ்பூன் உளுத்தம்பருப்பை சேர்த்து, அது சிவந்ததும், ஆறுலேர்ந்து எட்டு (உங்க ருசிக்கேற்ப) காய்ஞ்ச மிளகாயைப் போட்டு, வறுத்துக்குங்க. அதோடு, நறுக்கி வச்சிருக்கற வெங்காயத்தை யும் பூண்டையும் சேர்த்து, ஏற்கெனவே வதக்கிய பிரண் டையையும் போட்டு அஞ்சு நிமிஷம் வதக்கி, நறுக்கிய தக்காளி, கொஞ்சம் கறிவேப்பிலை, மல்லி, சின்ன நெல்லிக்காய் அளவு புளி, தேவையான உப்பு சேர்த்து, மேலும் அஞ்சு நிமிஷம் வதக்கி, இறக்கி, ஆறினதும், துவையலா அரைச்சு எடுங்க.

குறிப்பு: வயிறு மந்தம், வாயுத் தொல்லைக்கெல்லாம் கைகண்ட மருந்து இந்தத் துவையல். ஆனா ஒண்ணு, பிரண்டை முத்தலா இருந்தாலோ, சரியா வதக்காம இருந்தாலோ, நாக்கு அரிக்கும், ஜாக்கிரதை!

வெந்தய இட்லி

ஒரு டேபிள் ஸ்பூன் வெந்தயத்தையும் ஆறு ஆமணக்கு விதையையும் (நாட்டுமருந்துக் கடைகள்ல கிடைக்கும்) ஒண்ணா ஊற வைங்க. ரெண்டு கப் புழுங் கல் அரிசியைக் கழுவி, தனியா ஊறவைங்க. ஒரு மணி நேரம் ஊறினப்புறம், முதல்ல வெந்தயத்தையும் ஆமணக்கு விதை யையும் நல்லா பஞ்சு போல அரைச்சுக் கிட்டு, ஊறின அரிசியையும் அதோட சேர்த்து, கொஞ்சம் கரகரப்பா அரைச்சுக்குங்க. தேவையான உப்பு சேர்த்து, நல்லாக் கரைச்சு வைங்க. எட்டுலருந்து பத்து மணி நேரம் புளிக்கவிடுங்க. புளிச்ச துக்கு அப்புறம் இட்லிகளா ஊத்தி வேகவிட வேண்டியதுதான். இந்த வெந்தய இட்லி, உடம்புக்குக் குளிர்ச்சியைக் கொடுக்கக் கூடியது. அதிக உஷ்ணத்தால அவதிப்படறவங்களுக்கு ஏத்த கிராமத்து உணவு.

துருவல் சேனை புளிப்பொரியல்

‘‘கால் கிலோ சேனைக்கிழங்கை மண் போகக் கழுவி, தோலைச் சீவிக்கொள்ளுங்கள். கேரட் துருவி யால், சேனைக்கிழங்கைத் துருவிக்கொள்ளுங்கள். எலுமிச்சையளவு புளியைக் கரைத்து, தேவையான உப்பு, பெருங்காயம் சேர்த்துக் கலந்துவையுங்கள். இரண்டு டீஸ்பூன் மல்லி, நான்கு காய்ந்த மிளகாய் ஆகியவற்றை வெறும் வாணலியில் வறுத்துப் பொடித் துக்கொள்ளுங்கள். பின், வாணலியில் ஒன்றரை டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கிழங்கு துருவலைப் போட்டு வதக்குங்கள். பின், அதில் புளிநீரைச் சேர்த்து, நன்கு வேகும் வரை வதக்குங்கள். கிழங்கு வெந்ததும், பொடித்து வைத்துள்ள மல்லிப் பொடி, ஒரு டீஸ்பூன் வெல்லப்பொடி சேர்த்து ஒரு கிளறு கிளறிஇறக்குங் கள். செம டேஸ்ட்டாய் இருக்கும் இந்தப் பொரியல்’’ என்கிறார் கோவையைச் சேர்ந்த தாரா.

‘‘வழக்கமா வாழைக்காய், உருளைக்கிழங்கு, கருணைக்கிழங்கில்தான் இந்த மாதிரிப் பொரியல் செய்வோம். ஒரு மாறுதலுக்கு சேனையில் செய்யும் இந்தப் பொரியல் கூட சுவையாகத்தான் இருக்கிறது’’ என்கிறார் இக் குறிப்பைத் தேர்வுசெய்த ரேவதி சண்முகம்.

நன்றி:- அ.வி

மற்ற சமையல் படைப்புக்கள்

அட்டகாசமான சுவையில் 30 நாள்… 30 மசாலா குருமா! – ரேவதி சண்முகம்

30 நாள் 30 பொரியல் வாவ்! கலக்கல் வெரைட்டிங்க! – ரேவதி சண்முகம்.

30 வகை டயட் சமையல் வெரைட்டியா சாப்பிடலாம். வெயிட்டையும் குறைக்கலாம்.- கா.கதிரவன்

கோடையை குளிர்ச்சியாக்கும் ஜூஸ், ஸ்குவாஷ் மில்க் ஷேக்!-சமந்தகமணி

30 நாட்களுக்கும் தினம் ஒரு கலந்த சாதம் – சமையல் திலகம் ரேவதி சண்முகம்

PART-1 கிராமத்து கைமணம்! சோளச்சோறு சுக்கு மோர்க்குழம்பு கொள்ளு துவையல் – ரேவதி சண்முகம்

PART-2 கிராமத்து கைமணம்! நவதான்ய உருண்டை கம்புரொட்டி எள்ளுப்பொடி காராமணி கீரைத்தண்டு குழம்பு- ரேவதி சண்முகம்

PART-3 கிராமத்து கைமணம்! மாங்காய் பாசிப் பருப்பு பச்சடி பால் கொழுக்கட்டை காப்பரிசி – ரேவதி சண்முகம்

PART-4 கிராமத்து கைமணம்! முள் முருங்கை அடை, பாசிப்பருப்பு சீயம், சீம்பால் திரட்டு- ரேவதி சண்முகம்

PART-5 கிராமத்து கைமணம்! மரவள்ளிக் கிழங்கு புட்டு, தட்டைப் பயிறு அடை,கருப்பட்டி பணியாரம், உளுந்து பலகாரம் – ரேவதி சண்முகம்

பகுதி-06 கிராமத்து கைமணம்! பருப்பிட்ட பணியாரம், சர்க்கரைவள்ளிக் கிழங்கு சீயம், புழுங்கல் அரிசி கொழுக்கட்டை, பப்பாளிக்காய் வடை

பகுதி-07 கிராமத்து கைமணம் நவரத்தின குருமா, கருப்பட்டி ஆப்பம், ஜவ்வரிசி பொரி, நீர் கொழுக்கட்டை

PART-2 கிராமத்து கைமணம்! நவதான்ய உருண்டை கம்புரொட்டி எள்ளுப்பொடி காராமணி கீரைத்தண்டு குழம்பு- ரேவதி சண்முகம்


கிராமத்து சமையல்னாலே, நொறுக்குத் தீனியோ, பலகாரமோ எதுவானாலும் நிச்சயமா சத்துள்ள ஆகாரமாத்தான் இருக்கும். தேவையான பொருட்களும் நமக்கு சுலபமா கிடைக்கறதா, விலை குறைஞ்சாத்தான் இருக்கும். இங்க நாம பார்க்கப்போறதும் அந்த ரகம்தான்..

நவதான்ய உருண்டை

சோளம், கம்பு, கொள்ளு, பாசிப் பயிறு, சோயாப்பயிறு, காராமணி, கோதுமை, பொட்டுக்கடலை, எள்ளு.. இந்த ஒம்பது வகையான தானியங்களை யும் வகைக்கு கால் கப் அளவுக்கு எடுத்து, ஒவ்வொண்ணையும் தனித்தனியா, வெறும் வடை சட்டில போட்டு சிவந்து, வாசனை வர்ற வரைக்கும் வறுத்து எடுத்துக்குங்க. ஆறினதும் மெஷின்ல கொடுத்து மாவா நைஸா அரைச்சுக்குங்க.

ரெண்டரையிலிருந்து மூணு கப் அளவுக்கு சர்க்கரையை எடுத்து மிக்ஸில போட்டு பொடிச்சு பவுடராக்குங்க. இதை, அரைச்சு வெச்சிருக்கற தானிய மாவோட கலந்து, கூடவே உருக்கின அரை கப் நெய், அரை கப் தேங்காய்த் துருவல் எல்லாத்தையும் சேர்த்து பிசறி பெரிய நெல்லிக்காய் அளவுக்கு உருண்டை பிடிச்சு வைங்க. உருண்டை பிடிக்க வராம மாவு பொல பொலனு உதிர்ந்தா கவலைப்படாதீங்க. ரெண்டு டேபிள் ஸ்பூன் அளவுக்கு பால் எடுத்து அதை கொஞ்சம் கொஞ்சமா தெளிச்சு உருண்டை பிடிங்க. பதமா இருக்கும்.

புரோட்டீன் சத்து நெறஞ்ச இந்த உருண்டைல மணத்துக்குனு ஏலக்காய் மாதிரி எதையும் சேர்க்க வேண்டாம். வறுபயிறு வாச னையே கமகமனு அத்தனை பிரமாதமா இருக்கும். பசியோட வர்ற பிள்ளைங்களுக்கு ஒரே ஒரு உருண்டை கொடுத்தாப் போதும். வயிறு நெறஞ்சு உற்சாகமாயிடுவாங்க

கம்புரொட்டிஎள்ளுப்பொடி

ரெண்டு கப் அளவுக்கு கம்பு எடுத்து தண்ணிய தெளிச்சு பிசறி, உரல்ல போட்டு குத்தி புடைக்கணும். அதைக் காயவெச்சு மிஷின்ல கொடுத்து மாவா அரைச்சுக்குங்க. இந்த மாவை வேணுங்கற அளவுக்கு எடுத்து உப்பு போட்டு கலக்கி, கொஞ்சம் கொஞ்சமா கொதி நீரை ஊத்தி நல்லா அழுத்தி பிசையணும்.

ஒரு பிளாஸ்டிக் பேப்பர்.. இல்லேன்னா, வாழை இலையை எடுத்து அதுல கொஞ்சங் கொஞ்சமா மாவை எடுத்து வெச்சு தண்ணியத் தொட்டு மெல்லிசு ரொட்டியா தட்டிக்குங்க. சூடான தோசைக் கல்லுல போட்டு சுட்டெடுங்க. ரொட்டியைச் சுத்தி எண்ணெய்விட்டு ரெண்டு பக்கமும் திருப்பிப்போட்டு எடுங்க. மிதமான தீயில சுடணும்.

வேகறதுக்கு கொஞ்சம் நேரம் எடுத்துக்கும். பொறுமையாதான் சுடணும். சத்தான இந்த ரொட்டியை சாப்பிட்டுப் பார்த்தா, அந்த ருசியே சிரமத்தைப் பார்க்காம அடிக்கடி இதைச் செஞ்சு சாப்பிடச் சொல்லும்.

கம்பு ரொட்டிக்கு தொட்டுக்க ஜோரானது எள்ளுப்பொடி. சரி, அதை எப்படி செய்யறது?

எள்ளை கல், மண் நீக்கி, சுத்தப்படுத்தி வெறும் வடை சட்டில போட்டு வாசனை வர்ற வரைக்கும் வறுத்துக்கோங்க. உளுந்து, மிளகாயை அரை டீஸ்பூன் எண்ணெய்ல சிவக்க வறுத்துக்கோங்க. பூண்டு, புளி, உப்பு, எள், உளுந்து, மிளகாய் எல்லாத்தையும் ஒண்ணாச் சேர்த்து அரைச்செடுத்தா போதும், பொடி தயார்! புளிக்காத கெட்டித் தயிர்ல இதைக் கலந்து கம்பு ரொட்டிக்கு தொட்டுகிட்டா.. அட, அட.. அதை நெனச்சாலே எச்சில் ஊறுதே!

இதே மாதிரி கட்டித் தயிர்ல வெல்லத்தைக் கலந்து கம்பு ரொட்டியை அதுல முக்கியெடுத்து கூடவே எள்ளுப் பொடியை தொட்டு சாப்பிட்டுப் பாருங்க. ‘தித்திக்குதே..’னு குஷியாயிடுவீங்க.

காராமணி கீரைத்தண்டு குழம்பு

மணமும் ருசியும் அத்தனை பிரமாதமா இருக்கற இந்தக் குழம்பை கிராமத்து ஆளுங்க அடிக்கடி செஞ்சு சாப்பிடுவாங்க.

அரை கப் காராமணியை சுத்தம் பண்ணி, வெறும் வடை சட்டில போட்டு வாசனை வர்ற அளவுக்கு வறுத்து, அளவான உப்பு சேர்த்து வேக வையுங்க. தண்டங்கீரையை ரெண்டு பெரிய தண்டா எடுத்து பொடியா நறுக்கி, உப்பு போட்டு வேகவையுங்க.

2 பெரிய வெங்காயம், 4 தக்காளி இதை பொடியா நறுக்கிக் கங்க. ரெண்டு முழு பூண்டை எடுத்து உரிச்சு வைங்க. வடை சட்டில 3 டேபிள் ஸ்பூன் எண்ணெயை காயவெச்சு, அரை டீஸ்பூன் கடுகு, அரை டீஸ்பூன் உளுந்து, அரை டீஸ்பூன் வெந்தயம் இதையெல்லாம் தாளிச்சு, பூண்டு, வெங்காயத்தை வதக்குங்க. வதங்கினதும் தக்காளியச் சேர்த்து வதக்கணும். காராமணி, கீரை இதையெல்லாம் வேக வெச்ச தண்ணி இருக்குமில்லையா அதுல கொஞ்சமா புளியை ஊறவெச்சு கரைச்சு வடிகட்டி அந்த கரைசலை தக்காளியோட சேர்த்துடுங்க. அதோட ரெண்டரை டீஸ்பூன் மிளகாய்த்தூள், ஒரு டீஸ்பூன் தனியாத்தூள், கொஞ்சம் உப்பு போட்டு கொதிக்க வைங்க. பச்சை வாடை போனதும் மூணு பல் பூண்டை நசுக்கி குழம்புல போடுங்க. கூடவே ஒரு கொத்து கறிவேப்பிலையும் போட்டு மூடி வெச்சு அடுப்பை அணைச்சுடுங்க.

கமகமக்கற இந்த காராமணிக்குழம்பு இட்லி, தோசை, ரொட்டி, சாப்பாடு எல்லாத்துக்கும் ரொம்ப அருமையா இருக்கும்.

நன்றி:-சமையல் திலகம் ரேவதி சண்முகம்

நன்றி:-அ.வி

=======================================================================

மற்ற சமையல் படைப்புக்கள்

அட்டகாசமான சுவையில் 30 நாள்… 30 மசாலா குருமா! – ரேவதி சண்முகம்

30 நாள் 30 பொரியல் வாவ்! கலக்கல் வெரைட்டிங்க! – ரேவதி சண்முகம்.

30 வகை டயட் சமையல் வெரைட்டியா சாப்பிடலாம். வெயிட்டையும் குறைக்கலாம்.- கா.கதிரவன்

கோடையை குளிர்ச்சியாக்கும் ஜூஸ், ஸ்குவாஷ் மில்க் ஷேக்!-சமந்தகமணி

30 நாட்களுக்கும் தினம் ஒரு கலந்த சாதம் – சமையல் திலகம் ரேவதி சண்முகம்

PART-1 கிராமத்து கைமணம்! சோளச்சோறு சுக்கு மோர்க்குழம்பு கொள்ளு துவையல் – ரேவதி சண்முகம்

PART-2 கிராமத்து கைமணம்! நவதான்ய உருண்டை கம்புரொட்டி எள்ளுப்பொடி காராமணி கீரைத்தண்டு குழம்பு- ரேவதி சண்முகம்

PART-3 கிராமத்து கைமணம்! மாங்காய் பாசிப் பருப்பு பச்சடி பால் கொழுக்கட்டை காப்பரிசி – ரேவதி சண்முகம்

PART-4 கிராமத்து கைமணம்! முள் முருங்கை அடை, பாசிப்பருப்பு சீயம், சீம்பால் திரட்டு- ரேவதி சண்முகம்

PART-5 கிராமத்து கைமணம்! மரவள்ளிக் கிழங்கு புட்டு, தட்டைப் பயிறு அடை,கருப்பட்டி பணியாரம், உளுந்து பலகாரம் – ரேவதி சண்முகம்

பகுதி-06 கிராமத்து கைமணம்! பருப்பிட்ட பணியாரம், சர்க்கரைவள்ளிக் கிழங்கு சீயம், புழுங்கல் அரிசி கொழுக்கட்டை, பப்பாளிக்காய் வடை