இல்லம் > சிரிக்க, சிரிக்க சிந்திக்க > சிரிக்க சிந்திக்க

சிரிக்க சிந்திக்க


மாத்தி யோசி

அமெரிக்காவின் நாசா,விண்வெளியில்  மனிதர்களை அனுப்ப ஆரம்பிக்கும்  போது,அவர்களுக்கு ஒரு பிரச்சினை வந்தது.வானத்தில் புவி ஈர்ப்பு விசை  இல்லாததால் அங்கு பேனாவால் எழுத முடியவில்லை.ஆனால் பார்த்த விசயங்களை எழுதி ஆக வேண்டுமே!என்ன செய்வது?அதற்கான வழியைக் கண்டு பிடிக்கும் பொறுப்பை ஒரு பெரிய நிறுவனத்திடம் ஒப்படைத்தார்கள். அவர்களும் பத்துஆண்டுகள் ஆராய்ச்சி செய்து,ஒரு கோடி டாலர் செலவழித்து  புவி ஈர்ப்பு விசை இல்லாத இடத்திலும்.நீருக்கு அடியிலும்,கடுமையான வெப்ப நிலையிலும் மேலிருந்து கீழும்,கீழிருந்து மேலும் எந்த நிலையிலும் எழுதக் கூடிய ஒரு பேனாவைக் கண்டுபிடித்தனர். ஒரு ஆர்வத்தினால் ரஷ்யர்கள் இந்தப் பிரச்சினையை எப்படி சரி செய்தார்கள் என்று விசாரித்த போதுதெரிய வந்தது; ”அவர்கள் பென்சிலை உபயோகித்தார்கள்!”

மோதிரம்

ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்ட போது, ஒரு ஆங்கிலேய பிரபு மன்னர்  ஒருவரை விருந்துக்கு அழைத்தார். மன்னர் அழகான விலை உயர்ந்த வைர மோதிரம் அணிந்திருந்தார். ஆவலுடன் அதை பிரபு பார்த்ததைக் கண்ட மன்னர்  அதை கழற்றி அவரிடம் காண்பித்தார். பிரபு அதைத் தன விரலில் போட்டுப் பார்த்தார். பின் மன்னர் புறப்படும் வரை கழற்றவில்லை. தயங்கியபடியே மன்னர் அதைக் கேட்ட போது பிரபு சொன்னார், ”எங்கள் கைக்கு வந்த எதையும் திரும்பக் கொடுக்கும் பழக்கம் எங்களுக்கு இல்லை.”
சில நாட்கள் கழித்து மன்னர் பிரபுவையும் அவர் மனைவியையும் விருந்துக்கு அழைத்தார். அவர்கள் வந்தவுடன் மன்னரின் மனைவி பிரபுவின்  மனைவியை அந்தப்புரத்திற்கு அழைத்துச் சென்றார். விருந்து முடிந்து பிரபு புறப்படும் போது தன் மனைவியை அழைத்தார். அப்போது மன்னர் சொன்னார்,’ ‘எங்கள் அந்தப்புரம் வந்த எந்தப் பெண்ணையும் திரும்ப அனுப்பும் பழக்கம் எங்களுக்கு இல்லை.” பிரபுவின் கை மோதிரத்தைக் கழட்டியது.

எடை

காட்டுவழி சென்ற ஆசிரியர் ஒருவரை பிடித்துக் கொண்டனர் கொள்ளைக் கூட்டத்தினர். அவர் கணித ஆசிரியர் என்று தெரிந்து கொண்டஅக்கூட்டத்தின் தலைவன் ஆசிரியருக்கு ஒரு சோதனைவைத்தான். தன கையில் இருக்கும் பூசணிக்காயின் எடையை அவர் சரியாகக் கூறினால் விடுதலை என்றும்,சரி பார்க்கையில் தவறாக இருந்தால் தலையை எடுத்து விடுவதாகவும் கூறினான். ஆசிரியர் சொன்னார்,” பூசணிக்காய் உன் தலையின் எடையளவு இருக்கும்” என்று கூறினார். எப்படி சரி பார்ப்பது?’ நீங்கள் சொன்ன விடை சரிதான்,’ என்று கூறி விடுதலை செய்தான்.

ஒற்றுமை

சாகும் தருவாயில் இருந்த தந்தை தன் பிள்ளைகளைக் கூப்பிட்டு, தான் இறந்த பின் அவர்கள் ஒற்றுமையாய் இருக்க வேண்டும் என வலியுறுத்தினார். மூத்தவனைக் கூப்பிட்டு ஒரு கம்பைக் கொடுத்து, இது உடைப்பது எவ்வளவு இலகுவானது என்று உன் தம்பிகளுக்குக் காட்டு   என்றார்.
அவனும் உடைக்க முயன்று அது வலுவாக இருந்ததால் உடைக்க முடியாமல் திணறினான். தந்தை உடனே,’ ‘பரவாயில்லை. இதோ பல கம்புகள் உள்ள கட்டு. இதை உடைப்பது எவ்வளவு கடினம் என்று உன் தம்பிகளுக்குக் காட்டு,”என்றார். அவனும் அதை உடைக்க முயற்சிக்க,அது எளிதாக உடைந்து விட்டது.தந்தை முகம் வாடிவிட்டது. உடனே மூத்தவன் தன் தம்பிகளிடம் சொன்னான்,” அப்பா என்ன சொல்ல வருகிறார் என்பது தெரிகிறதா? தரமற்ற பல கம்புகளை விட தரமான ஒரு கம்பு சிறந்தது என்று தெரிகிறது. அதே போல் தந்தையை பல டாக்டர்களிடம் காண்பிப்பதை   விடுத்து,ஒரு நல்ல டாக்டரிடம் மட்டும் நம்பிக்கை வைப்போம்,என்று சொல்கிறார்.”

உடனே குடும்ப டாக்டர் வரவழைக்கப்பட்டார்.சில நாட்களில்  தந்தையும் குணமடைந்தார்.

தண்டனை ஏன்?

ஒரு முனிவர் ஒரு அரசனிடம் மரணத்தை வெல்லும்  அபூர்வக் கனி ஒன்றைக் கொடுத்தார். அப்போது அருகிலிருந்த காவலாளி அதை அவரிடமிருந்து பறித்துச் சாப்பிட்டு விட்டான். கோபமுற்ற அரசர் அவனுக்கு மரண தண்டனை விதித்தார்.’ ‘இறவாக்கனியை உண்டஎன்னை உங்கள் தண்டனை ஒன்றும் செய்ய முடியாது. ”என்றான் காவலாளி.’ தவறு செய்தவனுக்குத் தண்டனை என்பதை யாராலும் மாற்ற முடியாது. இது சாதாரண பழம்.எப்படி உன் உயிரைக் காக்கும்?’ என்று அரசன் கேட்டான்.” சாதாரணமான பழம் என்றால் அதைத் தின்ற எனக்கு நீங்கள் ஏன் மரண தண்டனை அளிக்க வேண்டும்?” என்று காவலாளி வினவினான். அவனது புத்திக் கூர்மை அரசனை வியக்க வைத்தது. அவனைத் தன மந்திரியாக்கிக் கொண்டான்.

பண்டிதர்கள்

ஒரு செல்வந்தர் இரண்டு ஞான பண்டிதர்களை விருந்துக்கு அழைத்தார். ஒருவர் முகம் கழுவச் சென்றபோது அவரைப்பற்றி புகழ்ந்து பேசினார். ஆனால் கூட இருந்த பண்டிதரோ மற்றவரை ஒரு கழுதை என்றார். பின் முகம் கழுவப் போனவர் வந்ததும் இவர் முகம் கழுவச் சென்றார். இரண்டாமவரைப் பற்றி முதல்வரிடம் பெருமையாகப் பேச ‘அவர் ஒன்றும் தெரியாத மாடு, ”என்றார்.பின்னர் இரண்டு பண்டிதர்களும் உணவு அருந்த அமர்ந்தனர். ஒருவர் தட்டில் புல்லும், மற்றவர் தட்டில் தவிடும் வைக்கப் பட்டபோது இருவரும் கூச்சலிட்டனர். தங்களை அவமானப் படுத்தி விட்டதாகக் கூறி கோபப்பட்டனர். செல்வந்தர் சொன்னார்,”நான் உண்மையில் உங்களை மகா பண்டிதர்கள்என்று கருதித் தான் விருந்துக்கு அழைத்தேன். ஆனால் நீங்கள் யாரென்று உங்கள் மூலமாகவே தெரிந்த பின் அதற்கேற்றாற்போல் உணவு படைத்தேன். என் மீது ஏன்வீணாய்க் கோபப் படுகிறீர்கள்?” பண்டிதர்கள் முகம் கவிழ்ந்து வெளியே சென்றனர்.

புரிதல்

அநாதை விடுதியில் ஒரு பிச்சைக்காரி அழுது கொண்டிருந்தாள்.”ஏன் அழுகிறாய்?”என்று அங்கே இருந்த பார்வையற்ற மூன்று பெண்கள் கேட்டனர்.

‘என் குழந்தைக்குப் பால் கொடுத்துக் கொண்டிருந்தேன்.தி டீரென இறந்து விட்டது.’ என்றாள் பிச்சைக்காரி.”பால் எப்படியிருக்கும்?” எனக் கேட்டாள் ஒரு பார்வையற்ற பெண்.’வெள்ளையாக  இருக்கும்,’என்றார் அங்கிருந்த ஒருவர்.வெள்ளை எப்படி இருக்கும் என அடுத்த பார்வையற்ற பெண் கேட்டாள்.கொக்கு மாதிரி இருக்குமென இன்னொருவர் சொன்னார்.கொக்கு எப்படி இருக்குமென  மூன்றாவது பார்வையற்ற பெண் கேட்டாள்.உடனே ஒரு கொக்கைப் பிடித்து கொண்டு வந்து அந்தப் பெண்களின் கைகளில் கொடுத்தார்கள்.அதைத் தொட்டுப் பார்த்தஅந்த பார்வையற்ற பெண்கள் ”இவ்வளவு பெரிய ஒரு பொருளை குழந்தையின் வாயில் திணித்தால் குழந்தை சாகாமல் என்ன செய்யும்?” இதைப் போலத் தான் பல சமயங்களில்  பல விசயங்களை சரியாகப் புரிந்து கொள்ளாமல் நம் கருத்துக்களை அள்ளி வீசுகிறோம்.

நீ பாதி நான் பாதி

பக்த துக்காராமின் குடும்பம் மிக வறுமையில் வாடியது.ஒரு நாள் சாப்பாட்டுக்கு ஒன்றும் இல்லை.அவருடைய மனைவி வண்டி நிறைய கரும்புகளை ஏற்றி,சந்தையில் விற்று வரும்படி சொன்னார்.துக்காராமோ சந்தைக்கு செல்லும் வழியிலேயே யார் யார் எல்லாம் கேட்டார்களோ அவர்களுக்கெல்லாம் கரும்பை இனாமாகக் கொடுத்து விட்டு ஒரே ஒரு கரும்புடன் வீடு திரும்பினார்.

அதைக் கண்டு அவர் மனைவிக்குக் கடும் கோபம் வந்தது.அவர் அந்தக் கரும்பை பிடுங்கி அவரை ஒரு அடி அடித்தார்.கரும்பு இரண்டாக உடைந்து விட்டது.உடனே துக்காராம் சொன்னார்,”நல்லதாய்ப் போயிற்று.எனக்கு ஒரு பாதி;உனக்கு ஒரு பாதி.சாப்பிடலாம் வா.”

ஏமாற்றுக்காரன்

பைத்தியம் பிடித்த ஒருவன் ஒரு மின் கம்பத்தைச் சுற்றிக்கொண்டே,’ ‘ஆண்டவனே,  எனக்கு பத்து ரூபாய் கொடு,” என்று திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருந்தான். அவ்வழியே போன ஒருவர் அவன் மீது இரக்கப்பட்டு ஐந்து ரூபாய் கொடுத்துச் சென்றார். மறுநாள் மீண்டும் அவர் அப்பாதை வழியாக வரும்போது அந்தப் பைத்தியக்காரன் முன்போலவே,”ஆண்டவனே,எனக்குப் பத்து ரூபாய் கொடு,”என்று சொல்லிக் கொண்டிருந்தான்.இவரைப் பார்த்தவுடன் அவன் உரக்க,”ஆண்டவனே, இம்முறை நீயே நேரடியாக பத்து ரூபாய் கொண்டு வந்து கொடு. நேற்று நீ பத்து ரூபாய் கொடுத்து அனுப்பிய ஆள் ஐந்து ரூபாய் எடுத்துக் கொண்டு ஐந்து ரூபாய் தான் என்னிடம் கொடுத்தான். மகா திருடன்.” என்று கூவினான். இதனால் தான் பாத்திரம் அறிந்து பிச்சையிடு என்று முன்னோர் கூறியுள்ளனர்.

குதிரைக்காரன்

ஒரு குரு இருந்தார். முற்றும் துறந்தவர். எல்லாம் கற்றவர். அவரை பிரசங்கம் செய்ய ஒரு ஊரில் கூப்பிட்டிருந்தார்கள். கூட்டத்திற்கு ஆயிரம் பேர் வருவார்கள் எனச் சொன்னார்கள். குறிப்பிட்ட தேதியில் குருவும் அவ்வூருக்கு வந்தார். அன்று நல்ல மழை.கூட்டத்திற்கு வந்தவர்களும் கலைந்து சென்று விட்டார்கள். குரு வந்த போது யாருமில்லை. பேசுவதற்கு நிறைய தயார் பண்ணி வந்திருந்ததால் அவருக்கு ஏமாற்றம்.அங்கு இருந்ததோ அவரை அழைத்து வந்த குதிரை வண்டிக்காரன் மட்டும் தான். என்ன செய்யலாம் என்று அவனையே கேட்டார். அவன் சொன்னான்,”ஐயா,நான் குதிரைக்காரன். எனக்கு ஒன்றும் தெரியாது. அனால் ஒன்றே ஒன்று மட்டும் தெரியும். நான் முப்பது குதிரை வளர்க்கிறேன். புல்லு வைக்கப் போகும் போது , எல்லாக் குதிரைகளும் வெளியே சென்றிருக்க , ஒரே ஒரு குதிரை மட்டும் இருந்தாலும் , நான் அந்தக் குதிரைக்குப் புல்லை வைத்து விட்டுத்தான் வருவேன்.” படாரென்று அறைந்தது போல் இருந்தது குருவுக்கு. அந்தக் குதிரைக் காரனைப் பாராட்டி விட்டு, அவனுக்கு மட்டும் தன பிரசங்கத்தை ஆரம்பித்தார். தத்துவம், மந்திரம், பாவம், பு ண்ணியம், சொர்க்கம், நரகம் என்று சரமாரியாகப் பேசிப் பிரமாதப் படுத்தி விட்டார். பிரசங்கம் முடிந்ததும், எப்படி இருந்தது என்று அவனைப் பார்த்துப் பெருமையாகக் கேட்டார்.

‘ஐயா,நான் குதிரைக்காரன்.எனக்கு ஒன்றும் தெரியாது. ஆனால் ஒன்று மட்டும் தெரியும்.நான் புல்லு வைக்கப் போன இடத்தில் ஒரே ஒரு குதிரை தான் இருந்தது என்றால், அதற்கு மட்டும் தான் புல் வைப்பேன். முப்பது குதிரைக்கான புல்லையும் அந்த ஒரு குதிரைக்கே கொட்டி விட்டு வர மாட்டேன்,”என்றான் அவன். அவ்வளவு தான்!குரு அதிர்ந்து விட்டார்.

லஞ்சம்

ஒரு ஊரில் எலித்தொல்லை. அதைப் பார்த்த ராஜா,”ஒரு செத்த எலி கொண்டு வந்தால் பத்து ரூபாய் தரப்படும்,”என்று அறிவித்தார்.மக்களும் நிறைய எலிகளைக் கொன்று பையில் போட்டு அரண்மனையில் கொடுத்துப் பணம் பெற்றுச்சென்றனர்.அரண்மனை துர்நாற்றம் எடுக்க ஆரம்பித்தது.அரசன் உடனே செத்த எலியின் வாலைக் கொண்டு வந்தால் போதும் என்று அறிவித்தார்.வாலைக் கொண்டு வந்து பரிசு வாங்கும் மக்களின் எண்ணக்கை நாளுக்கு நாள் கூடிக் கொண்டே இருந்தது.அனால் எலித்தொல்லை குறையவில்லை.இது பற்றி அரசன் தீவிரமாக விசாரித்ததில்தெரிய வந்தது;

பணம் கிடைக்குமே என்றுமக்களே வீட்டில் எலி வளர்க்க ஆரம்பித்து விட்டார்கள்!

கழுதை லாயம்

ஒரு அரசன் சில கவிதைகளைப் புனைந்து தன அமைச்சரிடம் காட்டினான்.அமைச்சர் சொன்னார்,”இவை மோசமான கவிதைகள்.உங்களால் முடியாத காரியத்தில் ஏன்தலையிட வேண்டும்?”இது கேட்டு மன்னன் கடுங்கோபம் அடைந்து அமைச்சரைக் கழுதை லாயத்தில் அடைக்க உத்தரவிட்டான்.

சில தினங்களுக்குப் பிறகு அரசன் மேலும் சில கவிதைகளை எழுதி அமைச்சரைக் கூப்பிட்டனுப்பிக் காட்டினான்.அமைச்சர் கவிதைகளைப் படித்து விட்டு ஒன்றும் பேசாமல் அங்கிருந்து புறப்பட்டார்.”எங்கே போகிறீர்?”என்று அரசன் கேட்டான்.”கழுதை லாயத்திற்கு”என்றார் அமைச்சர்.

முரட்டுத்தனம்

ஒரு காட்டில் இருந்த சிங்கத்திற்கு தன பலத்தின் மீது கர்வம் ஏற்பட்டது. வரிசையாக கரடி,மான்,முயல் முதலிய பிராணிகளைப் பார்த்து ,”இக்காட்டில் யார் பலசாலி?”என்று கேட்டது.அப்பிராணிகளும் பயத்துடன் ,”சந்தேகமில்லாமல் நீங்கள் தான்,”என்று பதிலளித்தன.சிங்கம் பின்னர் மேலும் கர்வத்துடன் அதே கேள்வியை ஒரு யானையிடம் கேட்டது.யானை ஏதும் பேசாமல் சிங்கத்தைத் ஒரேயடியாக தூக்கி எறிந்து விட்டது.சிங்கம் பயத்துடன் ஓடிக்கொண்டே எதிரே வந்த மிருகங்களிடம் சொன்னது,”முட்டாள்,பதில் தெரியாவிட்டால் அவன் பாட்டிற்குப் போக வேண்டியது தானே?இப்படியா முரட்டுத்தனமாக நடப்பது?”

சிரமம்

பிரெஞ்சு நாவலாசிரியர் பால்சாக் வசித்த அறைக்குள் ஓரிரவு திருடன் நுழைந்து மேஜையைத் துளாவிக் கொண்டிருந்தான்.தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்த பால்சாக் இதைக் கவனித்து விட்டு உரக்க சிரித்தார்.” திருடன்

”ஏன் சிரிக்கிறாய்?”என்று மிரட்டினான்.”நான் பகலில் காண முடியாத பணத்தை இரவில் கண்டு விடலாமென இவ்வளவு சிரமப்படுகிறாயே!அதை நினைத்தேன்.சிரிப்பு வந்தது.”என்றார் பால்சாக்.

மரணபயம்

வயதான மனிதன் ஒருவன் காலையிலிருந்து மாலை வரை கஷ்டப்பட்டு விறகு வெட்டி அதைக் கட்டித் தூக்க முயலும் போதுமுடியவில்லை.நொந்து போய் ,”இந்த நிலையிலும் நான் உயிரோடிருக்க வேண்டுமா?எமதர்மனே!இப்போதே என் உயிரைக் கொண்டு போகக் கூடாதா?”என்று கத்தினான்.உடனே அவன் முன் எமதர்மன் தோன்றி,”அப்பனே,என்னை அழைக்கக் காரணம் என்ன?”என்று கேட்டான்.திடுக்கிட்ட பெரியவர் ,”ஒன்றுமில்லை,இந்த விறகுக் கட்டை தூக்கி விட இங்கே யாரும் இல்லை.அதனால் தான் உன்னை அழைத்தேன்.”என்றாராம்.

ஆறுதல்

வேடன் ஒருவன் காட்டில் ஒரு முயல் பிடித்தான்.குதிரை வீரன் ஒருவன் வந்து விலை கேட்டான்.விலை சொல்லு முன்னே முயலைப் பிடுங்கிக் கொண்டு குதிரையில் பறந்தான்.வேடன் பின்னால் ஓடினான்.பிடிக்க முடிய வில்லை.கடைசியில் சப்தம் போட்டுச் சொன்னான்,”ஏய் குதிரைக்காரா,என்னை ஏய்த்துவிட்டு என் முயலை எடுத்துக் கொண்டதாக நினைத்து விடாதே!நான் அதை உனக்கு பரிசாகக் கொடுத்து விட்டேனாக்கும்!”

குதிரைக்காரன் காதில் அது விழுந்ததோ இல்லையோ,வேடனுக்கு ஆறுதல் கிடைத்தது.

பதவி ஆசை

மன்னன் ஒருவன் வேட்டையாடப் போவதற்கு முன் தனது அமைச்சரை அழைத்து ,”மழை வருமா?”எனக் கேட்டான்.”வராது”என்றான் அமைச்சன்.வழியிலே ஒரு கழுதை மேல் வந்து கொண்டிருந்த குடியானவன் ஒருவன் கொஞ்ச நேரத்தில் மழை வரும் என எச்சரித்தான்.அதைப் பொருட்படுத்த்தாமல் போன மன்னன் வேட்டை ஆடிக் கொண்டிருந்த போதுகடும் மழை வந்து நன்றாய் நனைந்து போனான்.

திரும்பும் வழியில் குடியானவனைச் சந்தித்து ,”மழை வரும் என்று உனக்கு எப்படித் தெரியும்?”எனக் கேட்டான்.அவனோ,”மன்னா,எனக்குத் தெரியாது.ஆனால் என் கழுதைக்குத் தெரியும்.மழை வரும் முன் அது தன காதுகளை முன்னுக்கு நீட்டிக் கொள்ளும்.”என்றான்.
உடனே மன்னன் அமைச்சரைப் பதவியிலிருந்து நீக்கி விட்டு கழுதையை அமைச்சராக்கினான்.
இக்கதையை ஆபிரஹாம் லிங்கன் கூறி விட்டு சொன்னார்,”அதில் தான் மன்னன் ஒரு தவறு செய்து விட்டான்.என்னவெனில் அது முதற்கொண்டு எல்லாக் கழுதைகளும் ஏதாவது பதவி வேண்டும் என அலைகின்றன.”

அப்பாடா

ஒருவன் தன குதிரைக்கு சங்கேத மொழி கற்றுக் கொடுத்தான்.அவன் ‘ஐயோ’ என்றால் குதிரை நிற்கும்.’அப்பாடா’ என்றால் ஓடும்.ஒரு நாள் மலைப் பகுதிக்குச் சென்ற அவன் ஒரு புலியைக் கண்ட பதட்டத்தில் ,குதிரையும் தறி கெட்டு ஓட, ,அதை நிறுத்தச் சொல்ல வேண்டிய வார்த்தையை மறந்து விட்டான்.குதிரை வெகு வேகமாக ஒரு பள்ளத் தாக்கின் முனையை நோக்கி ஓடியது.எதிரே உள்ள ஆபத்தை உணர்ந்து அவன் தன்னை அறியாமல் ,’ஐயோ’என்றான்.உடனே குதிரை நின்றது.மயிரிழையில் உயிர் பிழைத்த அவன் நிம்மதியாக ‘அப்பாடா’ என்றான்.மறு நிமிடம் குதிரை பள்ளத்தாக்கில் பாய்ந்தது.

பைபிள்

ஆப்பிரிக்கா ஆங்கிலேயரின் ஆதிக்கத்தில் வந்ததைப் பற்றி ஜோமோ என்ற முன்னாள் கென்யா நாட்டதிபர் சொன்ன விளக்கம் ;

”வெள்ளைக்காரர்கள் ஆப்பிரிக்காவுக்கு வந்த போதுஎங்கள் கையில் தேசம் இருந்தது.அவர்கள் கையில் பைபிள் இருந்தது.கண்களை மூடிக்கொண்டு ஜெபம் செய்ய எங்களுக்குக் கற்றுக் கொடுத்தார்கள்.கற்றுக் கொண்டோம்.அப்புறம் கண்ணைத் திறந்து நாங்கள் பார்த்த போது எங்கள் கையில் பைபிள் இருந்தது.அவர்கள் கையில் தேசம் இருந்தது.”

குதர்க்கம்

ஒரு எண்ணெய்வியாபாரி செக்கில் எண்ணெய் ஆட்டிக் கொண்டிருந்தார்.அப்போது தர்க்கம் படித்த ஞானி ஒருவர் அங்கே வந்தார்.

ஞானி; செக்கு மாட்டுக் கழுத்தில் ஏன்மணி கட்டியிருக்கிறாய்?
வியாபாரி; வேறு வேலை பார்க்க அப்பப்போ நான் பக்கத்தில் வீட்டிற்குப் போவேன்.மணி சப்தம் கேட்டால் மாடு சுற்றிக்கொண்டிருக்கிறது என்று தெரிந்து கொள்வேன்.
ஞானி; அந்த மாடு சுற்றாமல் ,நின்ற இடத்திலேயே தலையை மட்டும் ஆட்டி சப்தம் கொடுத்தால்……..?
வியாபாரி;அய்யா,எங்க மாடு உங்க அளவுக்கு தர்க்கம் படிக்க வில்லை.அதனாலே அதற்கு குதர்க்கம் தெரியாது.

நன்றி:-  ஜெய ராஜன்


******************************************************

  1. இன்னமும் ஒரு பின்னூட்டமும் இல்லை
  1. No trackbacks yet.

பின்னூட்டமொன்றை இடுக