தொகுப்பு
மாத்திரை, #மருந்துகள் உட்கொள்ளும்போது தவிர்க்கவேண்டிய உணவுகள்! – ஜி.லட்சுமணன் #HealthTips
ஆன்டிபயாடிக் மாத்திரைகள் – பால் பொருள்கள்
பாக்டீரியா தொற்றுக்காக உட்கொள்ளும் பென்சிலின் (Penicillin) டெட்ராசைக்லின் (Tetracycline), சிப்ரோஃப்ளாக்ஸின் (Ciprofloxacin) போன்ற ஆன்டிபயாடிக் மருந்துகளுடன், பால் மற்றும் பால் பொருள்களைச் சாப்பிடக் கூடாது. இவை மருந்து செயல்படும் தன்மையை குறைத்துவிடக்கூடியவை.
வலி நிவாரணி மருந்துகள் – குளிர்ப்பானங்கள்
தலைவலி, தசைபிடிப்பு, தசை வீக்கத்துக்காக உட்கொள்ளும் இபுப்ரோஃபென் (Ibuprofen) மருந்தை உட்கொள்ளும்போது, கண்டிப்பாக சர்க்கரை சேர்க்கப்பட்ட குளிர்ப்பானங்களைத் தவிர்க்க வேண்டும். இவற்றில் கார்பன் டை ஆக்ஸைடு மற்றும் அமிலங்கள் சேர்க்கப்பட்டுள்ளதால், மருந்தை உடல் உறிஞ்சுக்கொள்ளும் தன்மையைப் பாதிக்கும். மேலும், நச்சுச்தன்மை அதிகம் இருப்பதால், சிறுநீரகத்தையும் பாதிக்கக்கூடும்.
நுரையீரல் பாதிப்பு தொடர்பான மருந்துகள் – காஃபின் பானங்கள்
ஆஸ்துமா, மூச்சுக்குழாய் அழற்சி (Broncities) மற்றும் நுரையீரல் பிரச்னைக்கு தியோபைலின் (Theophylline), அல்புட்ரால் (Albuterol) போன்ற மருந்துகளை உட்கொள்ளும்போது, குளிர்ப்பானங்களை குடிக்கக் கூடாது. இவற்றில் உள்ள ‘காஃபின்’ நச்சுத்தன்மையை ஏற்படுத்தக்கூடியது.
சிறுநீரகக் கோளாறு மருந்துகள் – வாழை, கீரை, தக்காளி, சோயா
சிறுநீரகக் கோளாறுகளுக்காக உட்கொள்ளும் கேட்டோப்ரில் (Captopril), எனாலாப்ரில் (Enalapril), ராமிப்ரில் (Ramipril) போன்ற மாத்திரைகளுடன் வாழைப்பழம், சோயா, தக்காளி, கீரைகளைச் சாப்பிடக்கூடாது. இவற்றில் பொட்டாசியம் அதிகம் என்பதால், ரத்தத்தில் பொட்டாசியம் அதிகரித்து பாதிப்பை ஏற்படுத்திவிடும். மருத்துவர் ஆலோசனையுடன் மருந்துகளை உட்கொள்வது நல்லது.
இதயநோய் தொடர்பான மருந்துகள் – மதுப்பழக்கம்
ஐசோசோபைடு டினிட்ரேட் ( Isosorbide dinitrate), நைட்ரோகிளிசரின் (Nitroglycerine) போன்ற மாத்திரைகளை, கார்டியாக் அரெஸ்ட், இதயத் துடிப்பில் பாதிப்பு போன்ற இதயநோய் பிரச்னைகளுக்காக கொடுக்கப்படுபவை. ‘ஆன்டி ஆர்த்திமிக் மருந்து’ என்னும் இந்த வகை மருந்துகளை மது அருந்திய பிறகு உட்கொண்டால், குறைந்த ரத்த அழுத்த நிலையை உருவாகும். இந்த நிலை ஆபத்தான சூழ்நிலைகளை உருவாக்கலாம். இந்த மாத்திரைகள் மட்டுமல்ல எந்த மாத்திரையை உட்கொண்டாலும் மது அருந்துவதை அவசியம் தவிர்க்க வேண்டும். நார்ச்சத்து உணவுகளையும் சாப்பிட்டிருந்தாலும், மருந்தின் செயல்படும் தன்மையைக் குறைக்கும். எனவே, நார்ச்சத்துள்ள உணவுகளை சாப்பிடுவதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்னதாகவோ அல்லது பின்னரோ சாப்பிடலாம்.
கொழுப்பைக் குறைக்கும் மருந்து – திராட்சைப்பழம்
கொழுப்பைக் குறைப்பதற்கு உட்கொள்ளும் ஆட்ரோவாஸ்டேட்டின்,(Atorvastatin) ஃப்ளூவாஸ்டட்டின் (Fluvastatin) லோவஸ்டட்டின் (Lovastatin), சிம்வஸ்ட்டட்டின் (Simvastatin), ரோசுவஸ்டட்டின் (Rosuvastatin), ப்ராவஸ்டாட்டின் (Pravastatin) போன்ற மருந்துகளை உட்கொள்ளும்போது, அவற்றுடன் திராட்சைப்பழ ஜூஸ் சாப்பிடக் கூடாது; சிட்ரஸ் பழங்களைத் தவிர்ப்பது நல்லது. இந்த மருந்துகளை உட்கொள்ளும்போதும் மருத்துவர் ஆலோசனை அவசியம்.
தைராய்டு ஹார்மோன் சுரக்கும் மருந்துகள் – சோயா, நார்ச்சத்துகள்
தைராய்டு பிரச்னைகளுக்காக உட்கொள்ளும் லிவோதைராக்ஸின் (Levothyroxine) போன்ற உணவுகளுடன் சோயா மற்றும் நார்ச்சத்துள்ள உணவுகளைச் சாப்பிட்டால், உடல் மருந்தை உறிஞ்சிக்கொள்ளும் தன்மையை பாதிக்கும்.
மனஅழுத்த மருந்துகள் – பாலாடைக்கட்டி, மீன், இறைச்சி, கொத்தமல்லி
`மோனோஅமைன் ஆக்சிடேஸ் தடுப்பான்கள்’ (Monoamine oxidase inhibitor) என்றழைக்கப்படும் டிரானில்சைப்ரோமின் (Tranylcypromine), பினில்ஸைன் (Phenelzine), நிலாமைடு (Nialamide) போன்ற மருந்துகளுடன் கொத்தமல்லி, பாலாடைக்கட்டி, மீன், இறைச்சி போன்றவற்றை உண்ணக் கூடாது.
ரத்தம் தொடர்பான நோய்கள் – பூண்டு, இஞ்சி, மசாலா
ரத்தம் உறைதல் போன்ற ரத்தம் தொடர்பான நோய்களுக்கு வார்ஃபாரின் (Warfarin) மருந்துகளை உட்கொள்ளும்போது, பூண்டு, இஞ்சி மற்றும் சில மசாலாப் பொருள்கள் (சிவப்பு மிளகு, பட்டை, மஞ்சள்) சேர்க்கப்பட்ட உணவுகளை உண்ணக் கூடாது.
அதேபோல வைட்டமின் கே சத்துள்ள கீரை, முட்டைக்கோஸ் மற்றும் புரோக்கோலி போன்ற உணவுகளை உட்கொள்ளக் கூடாது. இவை மருந்தின் வீரியத்தை குறைத்துவிடும்.
பொதுவாக நோய்க்காக மருந்து, மாத்திரைகள் உட்கொள்ளும்போது, சாப்பிடக் கூடாதவை…
* பழச்சாறு, சோடா கலந்த பானம், காஃபின் கலந்த குளிர்பானத்துடன் மாத்திரை சாப்பிடுவதைத் தவிர்த்து, தண்ணீரைப் பயன்படுத்த வேண்டும்.
* மருந்து, மாத்திரை உட்கொள்ளும்போது, மது அல்லது புகை பிடித்தல் கூடவே கூடாது.
* மருந்தை, உணவு சாப்பிடும் முன்னர் சாப்பிட வேண்டுமா அல்லது உணவுக்கு பிறகு சாப்பிட வேண்டுமா என்பது குறித்த மருத்துவர்களின் அறிவுரைகளைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்.
நன்றி:- விகடன். & பொதுநல மருத்துவர் எம்.அருணாச்சலம்
- பருமனைக் குறைக்க வெயிட்டான ஐடியா!
- பாராதைராய்டு (Parathyroid) – Dr.கே.ராஜா வெங்கடேஷ்
- புற்றுநோயை விரட்டும் பீட்ரூட் ஜூஸ்
- மஞ்சள் மிளகுப் பாலின் பலனும் மகத்துவமும்
- மது உள்ளே.. மதி வெளியே..
- மருந்தும் மறக்கக்கூடாதவைகளும்
- மறந்துபோன மருத்துவ உணவுகள்
- மழலையில் மலரும் மொட்டுகள்
- மூட்டு வலி
- மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள்
- ரத்த அழுத்தமா கூல் கூலா தண்ணி குடிங்க
- ரத்தசோகைக்கு முடிவு கட்டும் பூசணி பாயசம்
- வாய்ப் புண்
- வாழ வைக்கும் வைட்டமின்கள்
- வெந்நீர் மகத்துவம்(மருத்துவம்)
உடல் எடையை குறைக்க வேண்டுமா?… அப்போ சூப் குடிங்க பாஸ்!…
கைக்குத்தல் அரிசியுடன் சிக்கன் சூப்
-
- பருமனைக் குறைக்க வெயிட்டான ஐடியா!
- பாராதைராய்டு (Parathyroid) – Dr.கே.ராஜா வெங்கடேஷ்
- புற்றுநோயை விரட்டும் பீட்ரூட் ஜூஸ்
- மஞ்சள் மிளகுப் பாலின் பலனும் மகத்துவமும்
- மது உள்ளே.. மதி வெளியே..
- மருந்தும் மறக்கக்கூடாதவைகளும்
- மறந்துபோன மருத்துவ உணவுகள்
- மழலையில் மலரும் மொட்டுகள்
- மூட்டு வலி
- மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள்
- ரத்த அழுத்தமா கூல் கூலா தண்ணி குடிங்க
- ரத்தசோகைக்கு முடிவு கட்டும் பூசணி பாயசம்
- வாய்ப் புண்
- வாழ வைக்கும் வைட்டமின்கள்
- வெந்நீர் மகத்துவம்(மருத்துவம்)
கோடையை குளிர்ச்சியாக்கும் ஜூஸ், ஸ்குவாஷ் மில்க் ஷேக்!-சமந்தகமணி
கோடை வந்தாச்சு. வெயிலில் விளையாடி சோர்ந்து போய் வரும் நம் வீட்டுக் குட்டீஸ்க்கும், வியர்வையை வெளியேற்றியே களைப்படைந்து போகும் பெரியவர்களுக்கும் ஏற்ற.. உற்சாகம் தருகிற.. ஜில் மந்திரங்களை இங்கே வழங்கி இருக்கிறார் பெங்களூருவைச் சேர்ந்த சமையல் கலை நிபுணர் சமந்தகமணி!
_________________________________________________________________________________
அத்திப்பழ மில்க் ஷேக்
தேவையான பொருட்கள்: காய்ந்த அத்திப் பழம்– (ட்ரை ஃப்ரூட்ஸ் விற்கும் கடைகளில் கிடைக்கும்)- 3, ஏலக்காய்ப் பொடி – ஒரு சிட்டிகை, சர்க்கரை – இரண்டு டீஸ்பூன், வெனிலா ஐஸ்கிரீம் – 2 டீஸ்பூன், காய்ச்சிய பால் – ஒரு கப்.
செய்முறை: அத்திப் பழத்தைப் பாலில் ஐந்து நிமிடங்கள் ஊற வைத்து, அதை நன்கு விழுதாக அரைக்கவும். இந்த விழுதுடன் பால், சர்க்கரை, ஏலக்காய்ப் பொடி சேர்த்து, கொதிக்க வைத்து ஆற வைக்கவும். ஐஸ்கிரீமை இதன் மேலே வைத்துப் பரிமாறவும்.
——————————————————–
தர்ப்பூசணி ரசாயணம்
தேவையான பொருட்கள்: தர்ப்பூசணி (பொடியாக நறுக்கியது) – ஒரு கப், தேங்காய் வழுக்கல் (இளநீரில் இருப்பது – பொடிப் பொடியாக நறுக்கவும்) – 1 கப், கெட்டித் தேங்காய்ப் பால் – அரை கப், ஏலக்காய் – ஒன்று, வெல்லம் – அரை கப், உப்பு – ஒரு சிட்டிகை. விருப்பப்பட்டவர்கள், சிறிது சுக்குப் பொடி சேர்த்துக் கொள்ளலாம்.
செய்முறை: தேங்காய்ப் பாலில் வெல்லத்தைக் கரைய விட்டு அடுப்பில் இளம் சூட்டில் வைத்து சிறிது நேரம் ஆன பின், ஏலக்காய்ப் பொடி போட்டு இறக்கவும். சூடு ஆறியதும்இதனுடன் தர்ப்பூசணி, தேங்காய் வழுக்கை, சுக்குப் பொடி, உப்பு சேர்த்து, சிறிது நேரம் கழித்துப் பரிமாறவும் (அரை மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைத்தாலும் போதுமானது.)
—————————————————————————————————–
ஆப்பிள் ஜூஸ்
தேவையான பொருட்கள்: நறுக்கிய ஆப்பிள் – ஒரு கப், சர்க்கரை – இரண்டு டீஸ்பூன், லவங்கப் பட்டைப் பொடி – அரை டீஸ்பூன், குளிர்ந்த தண்ணீர் – ஒரு கப்.
செய்முறை: ஆப்பிளை சிறிது தண்ணீர் சேர்த்து, சர்க்கரையுடன் நன்றாக அரைத்தெடுக்கவும். மீதமுள்ள தண்ணீரில் இந்த விழுதை நன்கு கலக்கி, ஒரு பிளாஸ்டிக் வடிகட்டியில் வடிகட்டி, லவங்கப் பட்டைப் பொடியை மேலே தூவி, அலங்கரித்து பரிமாறவும். விருப்பப்பட்டவர்கள் மிளகுப் பொடியையும் தூவலாம்.
—————————————————————————————————–
இளநீர் டிலைட்
தேவையான பொருட்கள்: பொடியாக நறுக்கிய இளநீர் வழுக்கல் – அரை கப், ஜிலடின் (உணவுப் பொருட்களில் உபயோகமாகிற ஜிலடின், டிபார்ட்மென்ட்டல் ஸ்டோர்களில் கிடைக்கும்) – ஒரு டீஸ்பூன், காய்ச்சின பால் – ஒரு கப், சர்க்கரை, மில்க் மெய்ட், ஃப்ரெஷ் கிரீம் – தலா 2 டீஸ்பூன்.
செய்முறை: ஜிலடினை சிறிது தண்ணீர் விட்டுக் கரைக்கவும். இதைச் சில வினாடிகள் ஸ்டவ்வில் வைத்துக் கிளறி, ஆற விடவும். பின் இதோடு பால், மில்க் மெய்ட், சர்க்கரை, ஃப்ரெஷ் கிரீம் எல்லாவற்றையும் நன்கு கலந்து மேலே இளநீர்த் துண்டுகளைச் சேர்த்து, ஃப்ரிட்ஜில் அரை மணி நேரம் வைத்திருந்து எடுத்து உபயோகிக்கவும்.
—————————————————————————————————–
மேங்கோ லஸ்ஸி
தேவையான பொருட்கள்: மாம்பழத் துண்டுகள் (நறுக்கியது), தயிர் – தலா அரை கப், ஐஸ் கட்டிகள் – சிறிதளவு, தேன் (அல்லது) சர்க்கரை – 4 டீஸ்பூன், உப்பு – ஒரு சிட்டிகை.
செய்முறை: தயிரை மிக்ஸி அல்லது மத்து கொண்டு நன்றாக அடித்துக் கொள்ளவும். அதனுடன் ஐஸ் கட்டிகளையும், உப்பு, மாம்பழத் துண்டுகளையும், தேன் (அல்லது) சர்க்கரையையும் சேர்த்து, நன்றாகக் கலந்து, ஃப்ரிட்ஜில் அரை மணி நேரம் வைத்த பின் பரிமாறவும்.
—————————————————————————————————–
தண்டை
தேவையான பொருட்கள்: பால் – ஒரு கப், கன்டென்ஸ்ட் மில்க் – 2 டீஸ்பூன், பாதாம் பருப்பு – 6, பூசணி விதை, சூரியகாந்தி விதை – தலா ஒரு டீஸ்பூன், ஏலக்காய்ப் பொடி – ஒரு சிட்டிகை, பன்னீர் (ரோஸ் வாட்டர்) – அரை டீஸ்பூன்.
அலங்கரிக்க: ரோஜா இதழ்கள் – 4 (அல்லது) 5.
செய்முறை: பாதாம், சூரியகாந்தி விதை, பூசணி விதையை பன்னீருடன் சேர்த்து அரைத்து எடுக்கவும். இதனுடன், ஏலக்காய்ப் பொடி, பால், கன்டென்ஸ்ட் மில்க் சேர்த்து, நன்கு கலக்கவும். இதனுடன், சிறிதளவு குளிர்ந்த தண்ணீர் அல்லது க்ரஷ்ட் ஐஸ் சேர்த்து, கலக்கி, பரிமாறவும். மேலே ரோஜா இதழ்களைத் தூவி அலங்கரிக்கவும். (வட இந்திய ஸ்பெஷல் பானம் இது!)
—————————————————————————————————–
மாங்காய் பன்னா
தேவையான பொருட்கள்: மாங்காய் (துருவியது) – ஒன்று, சர்க்கரை, தண்ணீர் – தலா அரை கப், ப்ளாக் ராக் சால்ட் (இந்துப்பு), மிளகுத்தூள் – தலா அரை டீஸ்பூன், சோம்புத் தூள் – ஒரு சிட்டிகை, வறுத்துப் பொடித்த சீரகப் பொடி – சிறிதளவு, க்ரஷ்ட் ஐஸ் – சிறிதளவு.
அலங்கரிக்க: புதினா இலை – சிறிதளவு.
செய்முறை: மாங்காய், சர்க்கரையுடன் தண்ணீர் சேர்த்து நன்றாக வேக வைத்துக் கொள்ளவும், ஆறிய பின் மிக்ஸியில் நன்றாக அடித்துக் கொள்ளவும். பின் இதனுடன், ப்ளாக் ராக் சால்ட், மிளகுத் தூள், சோம்புத் தூள், சீரகப் பொடி சேர்த்து, ஐந்து நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். ஆறிய பின், க்ரஷ்ட் ஐஸை சேர்த்து, புதினா தூவி அலங்கரித்து பரிமாறவும்.
(இதுவும் வட இந்தியாவின்.. முக்கியமாக, மகாராஷ்ராவின் தயாரிப்பு! அங்கெல்லாம் இதை ‘ஆம் பன்னா’ என்பார்கள். ஆம் – மாங்காய்)
—————————————————————————————————–
தர்ப்பூசணி சிப்
தேவையான பொருட்கள்: தர்ப்பூசணி ஜுஸ் – ஒரு கப், தயிர் – அரை கப், புதினா விழுது – அரை டீஸ்பூன், தக்காளி ஜுஸ் – அரை கப், மிளகுப் பொடி – ஒரு டீஸ்பூன், உப்பு – ஒரு சிட்டிகை, தேன் – ஒரு டீஸ்பூன், லவங்கப் பட்டை பொடி – ஒரு டீஸ்பூன்.
செய்முறை: எடுத்துக் கொண்டுள்ள எல்லாப் பொருட்களையும் நன்கு கலந்து, ஃப்ரிட்ஜில் அரை மணி நேரம் வைத்து, லவங்கப் பட்டை பொடியைத் தூவி, அலங்கரித்துப் பரிமாறவும்.
—————————————————————————————————–
வெள்ளரி ஷேக்
தேவையான பொருட்கள்: வெள்ளரிக்காய் (துருவியது), பால் – தலா ஒரு கப், தேன் – 2 டீஸ்பூன், சர்க்கரை, நறுக்கிய பாதாம், பாதாம் விழுது – தலா ஒரு டீஸ்பூன், குளிர்ந்த தண்ணீர் – அரை கப்.
செய்முறை: வெள்ளரிக்காய்த் துருவலில் இருக்கும் தண்ணீரை நன்கு பிழிந்து, வடிகட்டி, எடுத்துக் கொள்ளவும். இந்தச் சாறுடன், பாதாம் விழுது, பால், தேன், சர்க்கரை கலந்து, நன்கு அடித்துக் கொண்டு ஃப்ரிட்ஜில் அரை மணி நேரம் வைத்து எடுக்கவும். நறுக்கிய பாதாமால் அலங்கரித்துப் பரிமாறவும். விருப்பப்பட்டவர்கள், 2 டீஸ்பூன் ஐஸ்கிரீமை மேலே வைத்தும் பரிமாறலாம்.
மாறுபட்ட சுவையுடன், மிகவும் ருசியாக இருக்கும் இந்த வெள்ளரி ஷேக்!
—————————————————————————————————–
ரெட் வொண்டர்
தேவையான பொருட்கள்: கேரட் (பொடியாக நறுக்கியது) – ஒன்று, பீட்ரூட் (பொடியாக நறுக்கியது) – பாதி, தக்காளி (பொடியாக நறுக்கியது) – ஒன்று, ஐஸ் கட்டிகள் – சிறிதளவு, எலுமிச்சம் பழச் சாறு – ஒரு டீஸ்பூன், உப்பு – சிறிதளவு, மிளகுத் தூள் – ஒரு டீஸ்பூன்.
அலங்கரிக்க: புதினா இலைகள்.
செய்முறை: கேரட், பீட்ரூட், தக்காளி மூன்றையும் தனித் தனியே மிக்ஸியில் அடித்து, சாறு எடுத்து வடிகட்டவும். இதனுடன், எலுமிச்சம் பழச் சாறு, உப்பு, மிளகுத் தூள், ஐஸ் துண்டுகள் சேர்த்து, நன்கு கலந்து, 10 நிமிடங்கள் வைத்து, புதினாவை மேலே தூவி அலங்கரித்து பரிமாறவும்.
(கேரட், பீட்ரூட், தக்காளி என்று சிவப்பு நிறப் பொருட்களே கலந்திருப்பதால், இதற்கு இந்தப் பெயர்.)
—————————————————————————————————–
ரோஜா சர்பத்
தேவையான பொருட்கள்: ரோஜா இதழ்கள் – அரை கப், சர்க்கரை – கால் கப், ஏலக்காய்ப் பொடி – ஒரு சிட்டிகை, எலுமிச்சைச் சாறு – ஒரு டீஸ்பூன், மாதுளம் பழச் சாறு – அரை கப்.
செய்முறை: ரோஜா இதழ்களை நன்றாகப் பொடி செய்து, ஒரு பாத்திரத்தில், கொதிக்கும் வெந்நீர் ஒரு கப் சேர்த்து மூடி வைக்கவும். பத்து நிமிடங்களுக்குப் பின், அதை வடிகட்டி சர்க்கரை, ஏலக்காய்ப் பொடி, மாதுளைச் சாறு, எலுமிச்சைச் சாறு சேர்த்து, நன்கு கலக்கி மேலே ரோஜா இதழ்களைத் தூவி அலங்கரித்து, பரிமாறவும்.
—————————————————————————————————–
பரங்கிக்காய் டிலைட்
தேவையான பொருட்கள்: பரங்கிக்காய் (துருவியது) – அரை கப், முந்திரி விழுது – இரண்டு டீஸ்பூன், பால் – ஒரு கப், சர்க்கரை – 3 டீஸ்பூன், ஏலக்காய்ப் பொடி – ஒரு சிட்டிகை.
செய்முறை: பரங்கிக்காய்த் துருவலை கொதிக்-கும் நீரில் போட்டு, ஐந்து நிமிடங்கள் மூடி வைக்கவும். பின் நீரை வடிகட்டி, மிக்ஸியில் அரைத்து, இதனுடன் சர்க்கரை, முந்திரி விழுது சேர்த்து, பாலில் கலக்கி, கொதிக்க விடவும். ஆறிய பின், ஃப்ரிட்ஜில் ஒரு மணி நேரம் வைத்து, பின் பொடித்த முந்திரியை மேலே தூவி பரிமாறவும்.
—————————————————————————————————–
ஃப்ரூட்ஸ் வித் ஓட்ஸ்
தேவையான பொருட்கள்: பால் – ஒரு கப், ஃப்ரெஷ் கிரீம் – 2 டீஸ்பூன், ஆப்பிள் (நறுக்கியது) – அரை கப், பொடித்த லவங்கப் பட்டை – அரை டீஸ்பூன், மாதுளம் பழ முத்துக்கள், ஆரஞ்சு ஜுஸ், பாதாம் (நறுக்கியது), மில்க் மெய்ட் – தலா 2 டீஸ்பூன், வாழைப்பழம் (நறுக்கியது) – சிறிதளவு, ஓட்ஸ் – 3 டீஸ்பூன்,
செய்முறை: பாலில் ஓட்ஸை ஊற வைக்கவும். பால், ஆப்பிள், வாழைப்பழம், ஓட்ஸ் எல்லாவற்றையும் நன்றாக அரைக்கவும். இதனுடன் ஆரஞ்சு ஜுஸ், லவங்கப் பட்டை, ஃப்ரெஷ் கிரீம், மில்க்மெய்ட் சேர்த்து நன்கு கலந்து, மாதுளம் பழம், பாதாம் தூவி அலங்கரித்து பரிமாறவும்.
—————————————————————————————————–
மசாலா மோர்
தேவையான பொருட்கள்: தயிர் – ஒரு கப், இஞ்சி – சிறிய துண்டு, பூண்டு – ஒரு பல், சீரகம் (வறுத்துப் பொடித்தது), தனியாப் பொடி – தலா ஒரு டீஸ்பூன், உப்பு – சிறிதளவு, கொத்துமல்லி – அலங்கரிக்க.
தாளிக்க: எண்ணெய் – ஒரு டீஸ்பூன், கடுகு – சிறிதளவு, பெருங்காயம் – சிறிதளவு, கறிவேப்பிலை – சிறிதளவு.
செய்முறை: இஞ்சி, பூண்டு, சீரகப் பொடி, தனியாப் பொடி, உப்பு சேர்த்து, மிக்ஸியில் நன்கு அடித்து, பின் அதனுடன் தயிரையும் சேர்த்து அடிக்கவும். தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும். கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து, இதில் சேர்த்து, 15 நிமிடங்கள் ஃப்ரிட்ஜில் வைக்கவும். கொத்துமல்லி தூவி பரிமாறவும். அரைக்கும்போது, கொஞ்சம் கறிவேப்பிலை சேர்த்துக் கொண்டால் சுவை கூடும்.
—————————————————————————————————–
முலாம் பழ ஜூஸ்
தேவையான பொருட்கள்: முலாம் பழம் (நறுக்கியது) – ஒரு கப், சர்க்கரை – 3 டீஸ்பூன், ஏலக்காய்ப் பொடி – ஒரு சிட்டிகை, எலுமிச்சைச் சாறு – ஒரு டீஸ்பூன், மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன்.
செய்முறை: முலாம் பழத்தை நன்றாக அடித்துக் கொண்டு, அதனுடன், சர்க்கரை, ஏலக்காய்ப் பொடி, எலுமிச்சைச் சாறு சேர்த்து, நன்கு கலக்கவும். இரண்டு கப் தண்ணீர் சேர்த்து, ஃப்ரிட்ஜில் 15 நிமிடங்கள் வைத்திருந்து, மிளகுத் தூள் சேர்த்துப் பரிமாறவும்.
—————————————————————————————————–
தக்காளி ஜூஸ்
தேவையான பொருட்கள்: தக்காளி – 3, உப்பு – ஒரு சிட்டிகை, மிளகுத் தூள் – ஒரு டீஸ்பூன், தேன் – 3 டீஸ்பூன்.
அலங்கரிக்க: புதினா இலை – 5.
செய்முறை: கொதிக்கும் நீரில் உப்பு சேர்த்து, தக்காளி போட்டு, 10 நிமிடங்கள் மூடி வைக்கவும். பின் தக்காளியை குளிர்ந்த நீரில் ஒரு நிமிடம் போட்டு எடுத்தால், தோலை சுலபமாக உரித்தெடுக்க முடியும். இப்போது, தக்காளியை நன்றாக அரைத்தெடுத்து, இரண்டு கப் தண்ணீர் சேர்த்து வடிகட்டவும். இதனுடன், மிளகுத் தூள், தேன் கலந்து, ஃப்ரிட்ஜில் 15 நிமிடங்கள் வைத்திருந்து, புதினா இலை தூவி அலங்கரித்துப் பரிமாறவும்.
—————————————————————————————————–
மின்ட் ஐஸ் டீ
தேவையான பொருட்கள்: புதினா இலை – கால் கப், கொதிக்கும் நீர் – ஒரு கப், க்ரீன் டீ – – 1 பாக்கெட், தேன் – ஒரு டீஸ்பூன்.
அலங்கரிக்க: லெமன் க்ராஸ்- (அல்லது) புதினா இலை.
செய்முறை: கொதிக்கும் நீரில் தேன், டீ பாக்கெட், புதினா இலை ஆகியவற்றைப் போட்டு, சிறிது நேரம் மூடி வைக்கவும். பின் அதை வடிகட்டி, ஆற வைத்து, தேன் கலந்து, ஃப்ரிட்ஜில் வைத்திருந்து, எடுத்து, லெமன் க்ராஸ் தூவி அலங்கரிக்கலாம்.
—————————————————————————————————–
சாக்லேட் ஸ்மூத்தி!
தேவையான பொருட்கள்: பழுத்த வாழைப்பழம் (நறுக்கியது) – ஒன்று, ஸ்ட்ராபெர்ரி (நறுக்கியது) – – ஒன்று, மில்க் சாக்லேட் (பெரிய சைஸ்) – ஒன்று, ஃப்ரெஷ் க்ரீம் – – அரை கப், வெனிலா ஐஸ்கிரீம் – தேவையான அளவு.
செய்முறை: சாக்லெட்டை சிறிது சூடு செய்து உருக்கிக் கொள்ளவும். வாழைப்பழம், ஸ்ட்ராபெர்ரி, ஃப்ரெஷ் க்ரீம்.. மூன்றையும் ப்ளெண்டர் அல்லது மிக்ஸியில் அடித்து, உருக்கிய சாக்லேட்டுடன் சேர்த்து நன்கு கலக்கவும். இதனுடன் ஐஸ்கிரீமைச் சேர்த்து பரிமாறவும்.
—————————————————————————————————–
மின்ட் ஜூஸ்
தேவையான பொருட்கள்: புதினா இலை – 10, பச்சை மிளகாய் – ஒன்று, இஞ்சி – ஒரு சிறிய துண்டு, எலுமிச்சைச் சாறு – ஒரு டீஸ்பூன், சர்க்கரை – 4 டீஸ்பூன், அலங்கரிக்க: எலுமிச்சைத் துண்டுகள், புதினா இலைகள்.
செய்முறை: கல் உரலில் புதினா, பச்சை மிளகாய், இஞ்சி, சர்க்கரை எல்லாவற்றையும் நன்றாக நசுக்கி, தண்ணீர் சேர்த்து வடிகட்டி, எலுமிச்சைச் சாறு சேர்த்து, ஃப்ரிட்ஜில் வைத்துப் பரிமாறவும். எலுமிச்சைத் துண்டுகளை ஓரத்தில் செருகி, புதினா இலையை மிதக்க விட்டு அலங்கரிக்கவும்.
—————————————————————————————————–
பீ நட் பட்டர் மில்க் ஷேக்
தேவையான பொருட்கள்: பீ நட் பட்டர் (றிமீணீஸீதt தீதttமீக்ஷீ – நிலக்கடலையிலிருந்து தயாரிக்கப்படும் ஒருவகை வெண்ணெய் – டிபார்ட்மென்ட்டல் ஸ்டோர்களில் கிடைக்கிறது) – ஒரு டீஸ்பூன், மிக்ஸட் ஃப்ரூட் ஜாம் – 2 டீஸ்பூன், பால் – ஒரு கப், வெனிலா ஐஸ்கிரீம் – ஒரு ஸ்க்யூப்.
செய்முறை: பீ நட் பட்டர், மிக்ஸட் ஜாமை நன்றாக அடித்து, பாலுடன் சேர்த்து நன்கு கலந்து, கண்ணாடி டம்ளரில் ஊற்றி, மேலே ஐஸ்கிரீம் வைத்துப் பரிமாறவும்.
—————————————————————————————————–
பானகம்
தேவையான பொருட்கள்: வெல்லம் (பொடித்தது) – அரை கப், தண்ணீர் – 2 கப், எலுமிச்சைச் சாறு – ஒரு டீஸ்பூன், ஏலக்காய்ப் பொடி, சுக்குப் பொடி – தலா ஒரு சிட்டிகை, வெள்ளரிப் பழம் (பொடியாக நறுக்கியது) – 3 டீஸ்பூன்.
செய்முறை: வெல்லத்தை நீரில் கரைத்து, வடிகட்டி, அதனுடன் ஏலக்காய்ப் பொடி, சுக்குப் பொடி, எலுமிச்சைச் சாறு சேர்த்து, நன்கு கலக்கவும். இதைக் கண்ணாடி டம்ளருக்கு மாற்றி மேலே வெள்ளரிப்பழம் தூவி அலங்கரிக்கவும்.
—————————————————————————————————–
லஸ்ஸி
தேவையான பொருட்கள்: தயிர் – ஒரு கப், சர்க்கரை – 2 டீஸ்பூன், ஐஸ் வாட்டர் – ஒரு கப், ஐஸ் துண்டுகள் — சிறிதளவு, ஃப்ரெஷ் க்ரீம் — ஒரு டீஸ்பூன்.
செய்முறை: ஒரு பாத்திரத்தில் தயிர், சர்க்கரை சேர்த்து நன்றாக அடிக்கவும். இதனுடன் ஐஸ் துண்டுகள், ஃப்ரெஷ் க்ரீம் சேர்த்து அடித்துக் கொண்டு, ஐஸ் வாட்டர் கலந்து, கண்ணாடி டம்ளரில் ஊற்றி, மேலே ஃப்ரெஷ் கிரீமால் அலங்கரித்துப் பரிமாறவும்.
—————————————————————————————————–
மலாய் குல்ஃபி
தேவையான பொருட்கள்: கெட்டியான பால் – ஒரு கப், மில்க் மெய்ட், பால் பவுடர் – தலா 2 டீஸ்பூன், ஏலக்காய்ப் பொடி – சிறிதளவு.
செய்முறை: எல்லாவற்றையும் கட்டி இல்லாமல் நன்றாகக் கலந்து, மிதமான தீயில் கெட்டியாகும் வரை கிளறவும். ஆறிய பின், சிறிய மண்ணால் ஆன கப் (அல்லது) கடைகளில் கிடைக்கும் குல்ஃபி மோல்டில் மாற்றி, ஃப்ரீஸரில் ஒரு இரவு முழுவதும் வைக்கவும். மறுநாள் எடுத்து உபயோகிக்கலாம். பரிமாறுவதற்கு ஐந்து நிமிடங்களுக்கு முன், வெளியில் எடுத்து வைத்து விட வேண்டும்.
குறிப்பு: மண் கப்களை கடையிலிருந்து வாங்கி வந்த பிறகு, தண்ணீரில் ஊற வைத்து, சுத்தமாகக் கழுவ வேண்டும். தண்ணீரில் ஊற வைப்பதால் அதிலிருக்கும் மண் வாசனை போய் விடும். சுடு தண்ணீரில் மறுபடியும் கழுவி எடுப்பது மிகவும் சிறந்தது.
—————————————————————————————————–
கஸ்டர்ட்
தேவையான பொருட்கள்: வாழைப்பழம், ஆப்பிள், திராட்சை (இன்னும் வேண்டிய பழங்கள் – துண்டுகளாக நறுக்கியது) – 1 கப், பால் – -150 மி.லி, சர்க்கரை- – 50 கிராம், கஸ்டர்ட் பவுடர் – -2 டீஸ்பூன்
செய்முறை: காய வைத்து ஆற வைத்த நான்கு டீஸ்பூன் பாலில், இரண்டு டீஸ்பூன் கஸ்டர்ட் பவுடரைக் கலந்து தனியே வைத்துக் கொள்ளவும். அடி கனமான ஒரு பாத்திரத்தில் மீதமுள்ள பாலையும் சர்க்கரையையும் சேர்த்துக் கொதிக்க விடவும். சர்க்கரை கரைந்ததும், கலந்து வைத்துள்ள கஸ்டர்ட்- பால் கலவையை மெதுவாகக் கலந்து, அடி பிடிக்காமல் கிண்டவும். மைதா அல்வா பதத்துக்குக் கலவை வந்ததும், இறக்கி ஆற விடவும். நன்கு ஆறிய பின், பழத் துண்டுகளைப் போட்டு, தேவைப்பட்டால் ஏலக்காய்ப் பொடி தூவி, ஃப்ரிட்ஜில் வைத்துப் பரிமாறவும்.
குறிப்பு: பழங்களுக்கு பதில் ட்ரை ஃப்ரூட்ஸ் சேர்த்தும் செய்யலாம். பல வகைப் பழங்களாக இல்லாமல், ஒரே வகைப் பழம் மட்டும் சேர்த்தால், அந்தக் குறிப்பிட்ட ஃப்ளேவர் கஸ்டர்ட் பவுடரைச் சேர்க்கலாம்!
—————————————————————————————————–
எலுமிச்சை ஸ்குவாஷ்
தேவையான பொருட்கள்: எலுமிச்சைச் சாறு, தண்ணீர் – தலா 1 கப், சர்க்கரை – 2 கப், சிட்ரிக் ஆசிட் – கால் டீஸ்பூன்.
செய்முறை: தண்ணீரில் சர்க்கரையை நன்றாகக் கரைத்து, கொதிக்க வைக்கவும். கொதிக்கும்போது சிட்ரிக் ஆசிட் சேர்த்துக் கலக்கவும். சிறிது நேரத்துக்குப் பின் (ஒரு நிமிடத்திலிருந்து, இரண்டு நிமிடங்களில் பிசுக்கென்ற பதம் வரும்போது) அடுப்பை நிறுத்தி, இந்தக் கரைசலை வடிகட்டிக் கொள்ளவும். இதில் எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலந்து, நன்கு கலக்கி, காற்றுப் புகாத பாட்டிலில் வைத்து, ஃப்ரிட்ஜில் வைக்கவும். ஒரு டம்ளர் தண்ணீருக்கு 2 டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு என்ற விகிதத்தில் கலக்கி, பரிமாறவும்.
குறிப்பு: நிறைய ஸ்குவாஷ் தயாரித்து, ஃப்ரிட்ஜில் பத்திரப்-படுத்தினால், வருடம் முழுவதுக்கும்கூட வைத்துப் பயன்படுத்தலாம்.
—————————————————————————————————–
மேங்கோ ஸ்குவாஷ்
செய்ய தேவையான பொருட்கள்: மாம்பழம் – 5, சர்ககரை – அரை கிலோ, சிட்ரிக் ஆசிட் – 2 டீஸ்பூன், மேங்கோ எசன்ஸ் – சிறிதளவு, தண்ணீர் – மாம்பழச் சாற்றைப் போல 5 பங்கு.
செய்முறை: மாம்பழத் தோல், கொட்டை நீக்கி, மாம்பழத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, மிக்ஸியில் போட்டு மாம்பழச் சாறைத் தயாரிக்கவும். சர்க்கரையை நீரில் கரைத்து, பின் கொதிக்க வைத்து, அதில் சிட்ரிக் ஆசிட்டைச் சேர்க்கவும். ஒரு நிமிடத்துக்குப் பின் இதை இறக்கி வடிகட்டிக் கொள்ளவும். ஆறிய பின், மாம்பழச் சாறு, எசன்ஸ் சேர்த்து நன்கு கலக்கி, பாட்டிலில் ஊற்றி, ஃப்ரிட்ஜில் வைக்கவும். தேவைப்படும்போது 1 கப் தண்ணீருக்கு 3 டீஸ்பூன் ஸ்குவாஷ் கலந்து பரிமாறவும்.
—————————————————————————————————–
திராட்சை ஸ்குவாஷ்
செய்ய தேவையான பொருட்கள்: திராட்சைச் சாறு – 2 கப், சர்க்கரை – 4 கப், க்ரேப் எசன்ஸ் – 1 டீஸ்பூன், தண்ணீர் – 2 கப், சிட்ரிக் ஆசிட் – 1 டீஸ்பூன், ஃபுட் கலர் – கால் டீஸ்பூன்.
செய்முறை: சர்க்கரையைத் தண்ணீரில் நன்கு கரைய விட்டு அடுப்பில் வைக்கவும். இது கொதிக்கும்போது சிட்ரிக் ஆசிட் சேர்த்து, ஒரு நிமிடத்துக்குப் பின் நிறுத்தவும். பின் இதை வடிகட்டி, இதனுடன் திராட்சைச் சாறு, எசன்ஸ், ஃபுட் கலர் சேர்க்கவும்.
தயாரான ஸ்குவாஷை சுத்தமான பாட்டிலில் நிரப்பி, ஃப்ரிட்ஜில் வைத்திருந்து, ஒரு டம்ளர் தண்ணீருக்கு 2 டீஸ்பூன் ஸ்குவாஷ் கலந்து கலக்கி, பரிமாறவும். விருப்பப்பட்டால் பாரிமாறுகையில் மிளகுத் தூளைத் தூவலாம். சுவை கூடும்.
—————————————————————————————————–
ஆரஞ்சு ஸ்குவாஷ்
தேவையான பொருட்கள்: ஆரஞ்சுச் சாறு – 2 கப், சர்க்கரை – 6 கப், ஆரஞ்சு எசன்ஸ் – அரை டீஸ்பூன், ஆரஞ்சு ஃபுட் கலர் – கால் டீஸ்பூன், சிட்ரிக் ஆசிட் – 1 டீஸ்பூன், பொட்டாசியம் மெட்டா பை சல்பேட் (டிபார்ட்மென்ட்டல் கடைகளில் கிடைக்கும்) – கால் டீஸ்பூன்.
செய்முறை: தண்ணீரில் சர்க்கரையைக் கரைய விட்டு, ஒரு பாத்திரத்தில் ஊற்றி, ஸ்டவ்வில் வைத்துக் கொதிக்க விடவும். இதனுடன் சிட்ரிக் ஆசிட் சேர்த்து, ஒரு நிமிடம் ஆன பிறகு இறக்கி, வடிகட்டவும். ஆறியவுடன் ஆரஞ்சுச் சாறு, எசன்ஸ், ஃபுட் கலர் கலந்து, பாட்டிலில் ஊற்றி, ஃப்ரிட்ஜில் வைக்கவும். ஸ்குவாஷ் ரெடி! ஒரு டம்ளர் தண்ணீருக்கு 3 டீஸ்பூன் ஸ்குவாஷ் சேர்த்து நன்கு கலந்து பரிமாறவும்.
—————————————————————————————————–
தக்காளி ஸ்குவாஷ்
தேவையான பொருட்கள்: தக்காளி – ஒரு கிலோ, சர்க்கரை – அரை கப், உப்பு – 1 டீஸ்பூன்.
செய்முறை: தக்காளியை கொதிக்கும் நீரில் போட்டு, ஐந்து நிமிடங்கள் மூடி வைக்கவும். ஆறிய பின் தோலை நீக்கி, நன்றாக மசித்து. வடிகட்டவும். இந்தத் தக்காளிச் சாறுடன் சர்க்கரை, உப்பு, தண்ணீர் சேர்த்து நன்கு கிளறவும். ஆறிய பின் இந்த ஸ்குவாஷை பாட்டிலில் அடைத்து, ஃப்ரிட்ஜில் வைக்கவும். ஒரு டம்ளர் தண்ணீருக்கு 3 டீஸ்பூன் ஸ்குவாஷ் கலந்து நன்கு கலக்கி, தேவைப்பட்டால், புதினா, மிளகுத் தூள் தூவி பரிமாறவும்.
நன்றி:-சமையல் கலை நிபுணர் சமந்தகமணி பெங்களூரு
=======================================================================
அட்டகாசமான சுவையில் 30 நாள்… 30 மசாலா குருமா! – ரேவதி சண்முகம்
30 நாள் 30 பொரியல் வாவ்! கலக்கல் வெரைட்டிங்க! – ரேவதி சண்முகம்.
30 வகை டயட் சமையல் வெரைட்டியா சாப்பிடலாம். வெயிட்டையும் குறைக்கலாம்.- கா.கதிரவன்
கோடையை குளிர்ச்சியாக்கும் ஜூஸ், ஸ்குவாஷ் மில்க் ஷேக்!-சமந்தகமணி
30 நாட்களுக்கும் தினம் ஒரு கலந்த சாதம் – சமையல் திலகம் ரேவதி சண்முகம்
PART-1 கிராமத்து கைமணம்! சோளச்சோறு சுக்கு மோர்க்குழம்பு கொள்ளு துவையல் – ரேவதி சண்முகம்
PART-3 கிராமத்து கைமணம்! மாங்காய் பாசிப் பருப்பு பச்சடி பால் கொழுக்கட்டை காப்பரிசி – ரேவதி சண்முகம்
PART-4 கிராமத்து கைமணம்! முள் முருங்கை அடை, பாசிப்பருப்பு சீயம், சீம்பால் திரட்டு- ரேவதி சண்முகம்
அண்மைய பின்னூட்டங்கள்